புகழ்பெற்ற ஆங்கில நாடக ஆசிரியர் வில்லியம் ஷேக்ஸ்பியர்போல இன்னொருவர் இந்திய சினிமாவுக்குப் இத்தனைவிதமான கதைக் கொடைகளை வழங்கியிருப்பாரா என்பது சந்தேகம்தான். நம் சினிமாக்காரர்களுக்கு அள்ள அள்ளக் குறையாத அட்சயபாத்திரம்தான் ஷேக்ஸ்பியர். நம் மண்ணின் கதைகளான புராண - இதிகாசங்களை எடுத்துப் பிழிந்து பிழிந்து கொடுத்துக் கொடுத்து அலுத்துப்போன நிலையில் அவர்களுக்குக் கைகொடுக்கிறவைகளாக ஷேக்ஸ்பியர்போன்ற அயல்நாட்டுச் சரக்குகளே இருந்திருக்கின்றன. ஏதோவொரு மூலக்கரு இல்லாமல் சொந்தமாகக் கற்பனை பண்ணுவதற்கு ஏனோ அத்தனை சிரமம் இருந்திருக்கிறது நம்மவர்களுக்கு. அப்படியானதொரு ஷேக்ஸ்பியரின் மூலக்கதையிலிருந்து உருவி உண்டானதுதான் அறிவாளி (1963) திரைப்படம். அது ஷேக்ஸ்பியரின் நாடகமான “தி டேமிங் ஆஃப் தி ஷ்ரூ” - என்பதுதான். ஏ.டி.கே. என்றழைக்கப்பட்ட ஏ.டி.கிருஷ்ணசாமி ஒரு முன்னணித் திரைக்கதாசிரியர், இயக்குநர், தயாரிப்பாளர் ஆவார். அவர் ஷேக்ஸ்பியரின் இந்தக் கதையை முதலில் “ஓ, என்ன ஒரு பெண்!” - என்ற பெயரில் நாடகமாகத்தான் நடத்தினார். இந்த நாடகத்தில் வித்யா மற்றும் சந்தியா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தார்கள். சந்தியா வேறு யாருமல்ல... நம்முடைய முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அம்மாதான்.
கல்லூரியில் படிக்கிறபோதே ஏ.டி.கே. அந்நாளின் பிரபலமான பம்மல் சம்மந்த முதலியாரின் சுகுணவிலாச சபையோடு தொடர்பிலிருந்தார். சபா நாடகங்களிலும் அவர் நடித்தார். 1930 களில் அவர் ஏ.வி.மெய்யப்ப செட்டியாரிடம் உதவி இயக்குநராகச் சேர்ந்தார். ஏ.வி.எம்.மின் துவக்ககாலத் தயாரிப்பான ரத்னாவளி படத்தில் ஏ.கே.டி. உதவி இயக்குநர். இப்படி நாடகத்தையும் சினிமாவையும் கற்றுக்கொண்டவர் தொடங்கிய நிறுவனம் ஏ.டி.கே. புரொடக்ஷன்ஸ். அதன் முதல் தயாரிப்புதான் இந்த அறிவாளி. அதில் நடிகர்திலகம் சிவாஜி கணேசன், பி. பானுமதி உள்ளிட்டோர் நடித்தார்கள். ஆனால் எடுத்த எடுப்பிலேயே இந்தப் படத்தில் சிவாஜியை நடிக்க வைக்கவில்லை. முதலில் எம்.ஜி.ஆர்.தான் நடித்தார். அவரை நாயகனாக வைத்து சில அடிகள் படமாக்கப்பட்ட நிலையில் எம்.ஜி.ஆர். என்ன காரணத்திற்காகவோ அதிலிருந்து விலகிவிட்டார். அதன் பின்னர்தான் நாடக உலகில் சிரமமான காலங்களில் தன்னுடன் உடனிருந்த சிவாஜிகணேசனை நாயகனாக்கினார் எ.டி.கே. டி.எஸ்.பாலையா, கே.ஏ.தங்கவேலு, கே.சாரங்கபாணி, டி.ஆர்.ராமச்சந்திரன், எஸ்.வி. ராமதாஸ், எம்.சரோஜா, டி.பி.முத்துலட்சுமி, ஜெமினி சந்திரா, என்னத்தக் கண்ணையா ஆகியோரும் நடித்தார்கள். சாயி சுப்புலட்சுமி நடனமாடினார்.
இங்கே ஒன்றைக் கவனிக்க வேண்டும். இந்தப் படத்தின் அனுபவத்திற்குப் பிறகு இந்தியாவில் வேறு எந்த நாயக நடிகரும் அடையாததொரு உரிமையை எம்.ஜி.ஆர். பெற்றுக்கொண்டார். அது, படத்தில் ஒப்பந்தமாகிறபோது சேர்க்கப்பட்ட வரிகளின் மூலமாக அவருக்குக் கிடைத்த சிறப்பு உரிமையாகும். பிரபல திரைப்பட ஆய்வாளரும் பத்திரிகையாளருமான ராண்டார் கை எழுதியிருக்கும் கட்டுரை ஒன்றில் இந்தத் தகவல் கிடைக்கிறது. அதன்படி ஒப்பந்தமாகியிருக்கும் ஒரு படத்தின் காட்சிகளையோ, வசன வரிகளையோ சேர்க்கவோ அல்லது நீக்கவோ எம்.ஜி.ஆருக்கு சகல உரிமைகளும் உண்டு என்கிற வாசகங்கள் சேர்க்கப்பட்டன. இப்படியான ஒரு உரிமை இந்தியாவில் வேறு எந்த நடிகருக்கும் வழங்கப்படாததாகும். அறிவாளி படப்பிடிப்பை 1953 ஆம் ஆண்டிலேயே தொடங்கிவிட்டார்கள். சில நாட்கள் எம்.ஜி.ஆரும், அதன் பின்னர் சிவாஜியும் என நாட்கள் நகர்ந்தன. நிதி நெருக்கடிகளும் வந்து சேர படத்தின் தயாரிப்பு இழுத்தடிக்கப்பட்டு 9 ஆண்டுகளைக் கடந்தது. படம் தொடங்கி 10 ஆண்டுகளுக்குப் பின்னர் 1963 ஆம் ஆண்டுதான் வெளியிட முடிந்தது. இதன் காரணமாக துவக்கக் காட்சிகள் ஒருசிலவற்றில் சிவாஜியின் தோற்றம் ஒரு மாதிரியாகவும் பின்னால் வரும் காட்சிகளில் அவரின் தோற்றம் வேறு மாதிரியாகவும் தெரிவதாக கல்கி இதழ் தனது விமர்சனத்தில் எழுதியிருந்தது. சிவாஜியின் நடிப்பு முழுமையாக வெளிக்கொணரப்படவில்லை என்றும் அந்தப் பத்திரிகை எழுதியிருந்தது. டி. ஆர். ராமச்சந்திரன் பேசுவதே சிரிப்பை வரவழைக்கிறது. சாரங்கபாணியைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவில்லை. ஜெமினி சந்திரா பேசுவது என்னவென்றே புரியவில்லை என்றெல்லாமும் காட்டமாக எழுதியிருந்தது கல்கி.
எது எப்படியிருந்தபோதிலும் அறிவாளி படம் வெற்றிபெற்றது. படத்தில் தங்கவேலு - முத்துலட்சுமி இணையின் நகைச்சுவை படத்தின் வெற்றிக்கு உதவியது. அந்த நகைச்சுவைக் காட்சிகள் காலத்தை வென்று இன்றுவரையில் ரசனைக்குரியதாக இருப்பதும் குறிப்பிடத் தக்கது. பானுமதியின் நடிப்பும் பாராட்டப்பட்டது. சிவாஜியும் இயன்றவரை தன் பங்களிப்பைச் செய்திருந்தார். படத்திற்கு எஸ்.வி.வெங்கட்ராமன் இசையமைத்திருந்தார். படத்தில் மொத்தம் 7 பாடல்கள். மருதகாசி 6 பாடல்களையும் பாபநாசம் சிவன் ஒரு பாடலையும் எழுதியிருந்தார்கள். இந்த அறிவாளி வசூலைத் தந்தாலும் அது ஏ.டி.கிருஷ்ணசாமிக்கு பெரியளவுக்குக் கை கொடுக்கவில்லை. அதன் பிறகு அருட்பெருஞ்சோதி என்ற படத்தையும் சோவின் (நாடகமான) மனம் ஒரு குரங்கு படத்தையும் இயக்கினார் அவர். பெண்ணின் திமிரை அடக்கும் ஆண் என்கிற ஆண்டாண்டுகால - புளித்துப்போன அரதப் பழைய கதைதான் இந்த அறிவாளியின் கரு. ஷேக்ஸ்பியரின் தி டேமிங் ஆஃப் தி ஷ்ரூவும் அதே உள்ளடக்கம் கொண்டதுதான். இப்படியான ஆணாதிக்கம் நிறுவும் எத்தனையோ திரைப்படங்கள் வந்தாயிற்று. படத்தின் தலைப்பு அறிவாளி என்பதால் அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே பாடலைச் சேர்த்திருக்கிறார்கள் என ரசிகர்கள் பேசிக்கொண்டார்கள். மக்களைத் திரட்டி, ஜமீந்தாரை எதிர்த்து அவரின் ஆயிரம் ஏக்கர் நிலத்தை வென்று அதில் கூட்டுப்பண்ணையைத் தொடங்கி, கிராமத்தை வாழவைக்கிறார் சிவாஜி. இது ஷேக்ஸ்பியர் சிந்திக்காதது. எம்.ஜி.ஆரை மனதில் கொண்டு உருவாக்கப்பட்ட கதையின் இந்தப் பகுதி சிவாஜிக்கு ஒட்டாமல் போனதாகவும் விமர்சிக்கப்பட்டது. நீண்ட இடைவெளிக்குப்பின் சிவாஜி - ஜெயலலிதா நடிப்பில் உருவாகி, வசூலைக் குவித்த பி. மாதவனின் பட்டிக்காடா பட்டணமாவும் இதே ஷேக்ஸ்பியர் கதையின் உல்டாதான் என்றால் வியப்பாக இருக்கிறதா என்ன?