பேராசிரியர் அருணன் கைவண்ணத்தில் ‘தமிழ் சினிமாவில் வரலாற்று நாயகர்கள்’ என்ற தலைப்பில் நூல் வெளியாகியுள்ளது. பல்சுவை நிரம்பிய 22 தமிழ் திரைப்படங்களில் மின்னும் பசுமையான காட்சிகளை கட்டுரையாளர் அழகாக படம் பிடித்துக் காட்டியுள்ளார். கலை இலக்கியங்கள் அனைத்தும் மக்களுக்கே என்ற பார்வையில் அன்று நிலவிய சமூக, அரசியல் வரலாறும் அழகிய நடையில் அலசப்படுகிறது. இன்றும் தினசரி தொலைக்காட்சிகளில் பழைய படங்கள் மெருகூட்டப்பட்டு வலம் வருகின்றன. நூலில் காணப்படும் விமர்சனப் பார்வையுடன் அந்தப் படங்களைப் பார்த்தால் தமிழக அரசியல் வரலாறும் நம் கண் முன்னே நிழலாடும். மகாகவி காளிதாஸ் துவங்கி இருவர் திரைப்படம் வரை கலைநயத்தோடு விமர்சனங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. 1966ல் சிவாஜி நடிப்பில் வெளியான படத்தில் கே.பி.சுந்தராம்பாளின் ‘சென்றுவா மகனே சென்று வா, அறிவை வென்றுவா மகனே வென்றுவா’ எனும் வெண்குரல் பாடல் நம் செவிகளில் இன்றும் ரீங்காரமாடுவதை பரவத்துடன் கட்டுரையாளர் குறிப்பிடுகிறார். இப்படி பசுமை நிறைந்த பல பாடல் வரிகள் அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக இன்றும் நமக்கு விருந்து படைத்து வருகின்றன. அன்றைய சினிமாவில் வலம் வந்த வரலாற்று நாயகர்கள் எம்ஜிஆர், சிவாஜி, எஸ்.எஸ்.ராஜேந்திரன், கண்ணதாசன், பானுமதி, பத்மினி, வைஜயந்தி மாலா என பெரும் பட்டியல் இடம்பெற்றுள்ளது. “பழகும் தமிழே, பார்த்திபன் மகனே, அழகிய மேனி சுகமா?” என்று ஜெமினி யைப் பார்த்து வைஜெயந்தி மாலா கண் சிமிட்டும் காட்சியை நம் கண்முன்னே கொண்டு வருகிறார்.
‘அரண்மனைக்குப் போக படிக்கட்டுகள் தேவை. அவை கல்லாக இருந்தால் என்ன? சிலரின் எலும்புக் கூடுகளாக இருந்தால் என்ன’ என சிவகெங்கைச் சீமை படத்தில் கண்ணதாசனின் எழுத்து வன்மையை கட்டுரையாளர் படம்பிடித்துக் காட்டுகிறார். தமிழக அரசியலில் திரைப்படங்கள் நிகழ்த்திய அரசியல் வரலாறு புதுமை யான முறையில் அலசப்படுகிறது. அந்த விமர்சனங்களும் பூ மாலை போல தொகுக்கப்பட்டுள்ளது. 1962 தேர்தலில் சட்டமன்றத்தில் திமுக 50 இடங்களைப் பெற்று ஆட்சி யாளர்களுக்கு பெரும் சவாலாக எழுந்திருந்தது. 1963-ல் எம்ஜிஆர் நடிப்பில் ‘காஞ்சித் தலைவன்’ படம் வெளியானது. அப்போது இந்தி எதிர்ப்பு போராட்டம் அலைவீசி எழுந்தது. அண்ணா கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் ‘காஞ்சித் தலைவன்’ என்ற பிரச்சாரம் சுழன்றடித்தது.
ட்சுமியின் இனிய குரலும், கிறங்கிய விழிகளும் அந்தக் காலத்து ரசிகர்களை எப்படிக் கட்டிப் போட்டிருக்கும்? மதுரை யில் தேவதாசி குலத்தில் பிறந்த அவரை பிராமண குலத்தில் பிறந்த ‘கல்கி’ ஏட்டின் ஆசிரியர் சதாசிவம் மணந்தது அன்றைய நாளில் பெரிய விஷயம் என்பதை கட்டுரையாளர் கோடிட்டுக் காட்டுகிறார். கப்பலோடு வஉசி கம்பீரமாக வருவதும், கரையில் நின்று “வெள்ளிப் பனிமலை மீது உலாவுவோம், அடி மேலைக் கடல் முழுதும் கப்பல் விடுவோம்’ என்று பாரதி பாடுவதும் கப்பலோட்டிய தமிழன் படத்தின் கண்கொள்ளாக் காட்சி. இன்று தேசத்தின் சொத்துக்கள் கூறுபோட்டு விற்றுக் கொண்டிருக்கும் வேளையில் இத்தகைய பாடல் வரிகள் காலத்தின் தேவை என்பதை உணர முடிகிறது. ‘பிராமணர்களும், சாதி இந்துக்களும் ஒடுக்குகிற சேரிக்காரர்கள் கிளம்பினால் வெள்ளைக்காரன் ஓடுவான்’ என்று பாரதி திரைப்படத்தில் வரும் வசனம். சுதந்திரப் போராட்டத்திற்கும் சமூக சீர்திருத்த த்திற்கும் இருந்த உறவை காந்திஜிக்கு முன்பே உணர்த்தியவர் ‘பாரதி’ என்று கட்டுரையாளர் சரியாகவே குறிப்பிடுகிறார். 93 வயதிலும் பம்பரம் போல சுற்றி வந்து சமுதுயப் பணி ஆற்றிய ‘பெரியார்’ படம் 2007இல் வந்தது. பாரதி படத்தை இயக்கிய ஞானராஜசேகரன் தான் பெரியார் படத்தையும் இயக்குகிறார் என்ற தனித்துவமான செய்தியை நமக்குத் தருகிறார். 1975ல் பிறப்பிக்கப்பட்ட அவசர நிலை கண்டு வருந்திய காமராசர் ‘வைரவா, விளக்க அணைச்சிட்டுப் போ’ என்று சொல்லிவிட்டுப் போகிறார். அதற்குப் பிறகு அவர் எழவில்லை. அந்த மரணத்தில் கூட ஒரு கலா அம்சம் இருந்ததை ‘காமராஜ்’ படம் வெளிப்படுத்துகிறது.
‘ஜெய்பீம்’ படம் தொடர்பான அரசியல் சர்ச்சை எழுந்தது.‘நடிகர் சூரியாவை உதைத்தால் ஒரு லட்சம் பரிசு என்று அன்புமணி ராமதாஸ் மிரட்டல் விடுத்தார். சக நடிகரை உதைப்போன் என்ற மிரட்டல் வந்த போது சூப்பர் ஸ்டார்கள், உலக நாயகர்கள், தலைவர்கள், தளபதிகள் எதிர்த்துக் குரல் கொடுக்காமல் இருந்தது ஏன் என்ற கேள்விகணைக்கு இன்றும் விடை கிடைக்கவில்லை. களப்பிரர் காலம் தொட்டு சாம்ராஜ்யம் வரை தமிழகத்தில் பெரும் மதங்களாக இருந்தவை சமணமும், புத்தமுமே என்பதை ஆவணப்படுத்தியுள்ளார். அதனால் தான் புத்த இலக்கியமாகிய மணிமேகலையும், சமண இலக்கிய மாகிய சிலப்பதிகாரமும் தோன்றிய வர லாற்றை குறிப்பிடுகிறார். பொருளியல் வாழ்வில் முதலாளித்துவம் தனது இஷ்டத்திற்கு விளையாடலாம். அது பெரு முதலாளிகளுடன் கைகுலுக்குகிறது. இதன் அரசியல் வெளிப்பாடுதான் அதானி - அம்பானி போன்ற சில பெருமுதலாளி களுக்கும் மோடி தலைமையிலான அரசுக்கும் இடையிலான கள்ளக்கூட்டு என்பன தத்துவார்த்த விவாதங்களோடு திறம்பட விவரித்துள்ளார். மதவெறிக்கு தக்க பதிலடி மதநல்லி ணக்கமே என்ற கட்டுரையில் சைவ சித்தாந்த வாதி சத்தியவேல் முருகனார் பேச்சு மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. ‘இறைவன் எங்கும் நிறைந்தவன் என்கிறோம்’ அப்படி என்றால் அவன் பிற மதத்தவர் தொழும் இடத்திலும் இருக்கத் தானே செய்வான்?அந்த வழிபாட்டுத் தலத்தை இடிக்கலாமா? ராமர் பெயரைச் சொல்லி மசூதியை இடித்த படுபாவிகள் உண்மையில் பக்தர்களே அல்ல’ என்று சத்தியவேல் முருகனார் கூறியதை அழுத்த மாக கட்டுரையாளர் கோடிட்டுக் காட்டு கிறார்.
‘என்று தணியும் எங்கள் சுதந்திர தாகம்’ என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்?’ என்ற பாரதி பாடலை அம்மை யார் பாட, வஉசி உயிர்நீத்த காட்சியை கண்டபோது தனது கண்கள் பனிந்தன என்ற வரி பலரது அனுபவ முத்திரையாகும். கலை வடிவத்தின் காந்த சக்தியை எடுத்துக்காட்டும் பல உதாரணங்கள் நூலில் பரவிக் கிடக்கின்றன. ஷேக்ஸ்பியரின் கதாபாத்திரம் என்று ‘வாழ்வா? சாவா? அதுதான் கேள்வி என்று தனக்குத்தானே கூறிக் கொள்ளும் அப்படித்தான் இந்தியர்கள் ‘ஜனநாயகமா? பாசிசமா? அதுதான் கேள்வி’ என்று தங்களுக்குத் தாங்களே கேட்டுக் கொள்ள வேண்டியிருக்கிறது என்ற கட்டுரையாளரின் பொருள் பொதிந்த வரிகள் இன்றைய தலைமுறையினரின் ஆழ்ந்த சிந்தனைக்குரியது, அது செயல்வடிவம் பெற வேண்டியுள்ளது. பேராசிரியர் அருணனின் கட்டுரைத் தொகுப்பு நூல் புத்தகப் பிரியர்களுக்கு ஓர் இனிய விருந்து.
தமிழில் சினிமாவில் வரலாற்று நாயகர்கள்
ஆசிரியர் : அருணன்
வெளியீடு : வசந்தம் வெளியீட்டகம், பக்கங்கள் : 192, விலை : ரூ.200