உடல்களைப்பும் மனச் சோர்வு மான நாளொன்றின் மாலைப்பொழுதில் வீடடைந்தபோது பழைய பாடல்களை ஒளிபரப்பும் தொலைக்காட்சி சேனல் ஒன்று ஓடிக்கொண்டிருந்தது. அதில் தனது அதிரசக் குரலில், துள்ளாத மனமும் துள்ளும் சொல்லாத கதைகள் சொல்லும்... கிள்ளாத ஆசையைக் கிள்ளும் - இசை இன்பத்தேனையும் வெல்லும்... - என்று பாடிக்கொண்டிருந்தார் ஜிக்கி. உண்மையில் படத்தில் சரோஜாதேவிதான் பாடுவதாக அந்தக் காட்சி இருந்தது. அவ ருக்குப் பின்னணியாக ஒலித்ததுதான் ஜிக்கி யினுடைய குரல். அந்தத் தருணத்தில் டி.வி. யில் ஓடிய அந்தக் காட்சியைவிட முதன்மை யாக இன்பத்தேனை வென்றதென்னவோ அமரத்துவமான அந்தக் குரல்தான்.
முழுக்க முழுக்கத் தனித்துவமான குரல்தான் ஜிக்கியுடையது. அவரது பாடல்களை முதல்முறை கேட்பவர்களுக்கு அவர் வாயை அதிகம் திறக்காமல் பல்லைக் கடித்துக்கொண்டு பக்கத்திலிருப்பவரிடம் ரகசிய தொனியில் பேசுவோமே அது போலப் பாடுவதாகத்தான் தோன்றும். அது அவரது குரலின் தனித்துவம். வேறு எந்த தமிழ் - இந்தியப் பாடகிக்கும் அமைந்திடாத ஒற்றைக் குரல் அது. உச்சத்தாயியில் பாட நேர்ந்தால்கூட அவர் குரலில் அடக்கமான தொரு அமைதி எப்போதும் தவழும். மெலடி என்பதன் அடையாளமாகவே திகழ்ந்த அவரது குரலுக்காக அவர் தென்னிந்திய சினிமாவின் நைட்டிங்கேல் என்றே சிறப்பிக்கப்பட்டார். ஜிக்கியின் மற்ற பல பாடல்களும்கூட இன்பத்தேனை வெற்றிகொள்ளும் ரகத்தினதான். குலேபகாவலியில் அவர் பாடிய, மயக்கும் மாலைப் பொழுதே நீ போபோ இனிக்கும் இன்ப இரவே நீ வாவா இன்னலைத் தீர்க்க வா... - எனும் பாடலும் அதே ரகம்தான். இந்தப் பாடலில் இனிக்கும் இன்பத்தை அந்த இரவு மாத்திரமல்ல... ஜிக்கியின் இறவாத குரலும் தாராளமாக வழங்கியது. அதேபோலத்தான் காலம் மாறிப்போச்சு படத்தில் அவர் பாடிய,
ஏறு பூட்டி போவாயே அண்ணே சின்னண்ணே - உன் துன்பமெல்லாம் தீருமே அண்ணே சின்னண்ணே - பாடலும் இசையால், இனிய குரலால் கேட்போர் மனங்களின் துன்பமெலாம் தீர்த்தது. மந்திரிகுமாரி படத்தில் இடம்பெற்ற வாராய் நீ வாராய்... பாடலிலும் ஜிக்கியின் குரலில் ஆகா மாருதம் வீசுவதாலே ஆனந்தம் பொங்குதே மனதிலே... என்கிற இடம் கேட்போர் மனமெங்கும் ஆனந்தத்தை நிரப்பும். தமிழ் சினிமாவில் பல புதுமைகளுக்குக் கால்கோளிட்ட இசை மேதை ஜி.ராமனாதன் இசையில் வெளிவந்த உத்தமபுத்திரன் படத்தில் இடம்பெற்ற யாரடி நீ மோகினி பாடலை எளிதில் எவரும் மறந்திட இயலாது. மேற்கத்திய இசையின் சாயலில் அமைந்த அந்தப் பாடல்தான் தமிழ் சினிமா வின் முதல் ராக் அண்ட் ரோல் பாணியி லமைந்த இசைப்பாடல். துள்ளல் சுவைமிக்க அந்தப் பாடலை டி.எம்.சௌந்தரராஜனுடன் போட்டிபோட்டுப் பாடியிருப்பார் ஜிக்கி. நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக நீடித்த அவரது இசை எனும் ராஜபாட்டையில் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி மற்றும் சிங்கள மொழி களிலும் பலநூறு பாடல்களைப் பாடியவர் ஜிக்கி. தென்னிந்தியாவிலிருந்து இந்தியில் பாடப்போன முதல் பாடகி ஜிக்கிதான். அது ஜெமினி நிறுவனம் பாதாள பைரவியை இந்தியில் தயாரித்தபோது அதில் தவிர்க்க இயலாதவராக ஜிக்கியும் இந்தியில் அறிமுக மானார்.
திருப்பதியின் அருகிலுள்ள சந்திரகிரி யைப் பிறப்பிடமாகக் கொண்ட கஜபதி நாயுடு - ராஜகாந்தம்மா தம்பதியின் மகளான பில்ல வாலு கஜபதி கிருஷ்ணவேணி எனும் இயற்பெயருடைய ஜிக்கி பாடிய ஆயிரக் கணக்கான பாடல்களில் ரசிகர்களின் மனங் களைக் கவர்ந்து புகழ்பெற்ற பாடல்களே அதிகம் என்பதால் அவற்றைப் பட்டிய லிட்டுக் காட்டுவது என்பது ஒரு கட்டுரையில் சாத்தியமற்றது. இத்தனைக்கும் தெலுங்குப் படம் ஒன்றில் ஒரு குழந்தை நட்சத்திரமாகவே அவர் திரைத்துறையில் அறிமுகமானார். ஆனால் அவரது குரல்வளம் அவரை மிகச்சிறந்த பாடகியாகவே முன்னிலைப் படுத்தியது. 1948இல் ஞானசௌந்தரி படம் அவரைத் தமிழுக்கு அறிமுகம் செய்தது. அதில் அவர் முதன்முதலில் பாடிய பாடல் ஒரு கிறிஸ்தவ பக்திப்பாடல். அருள் தாரும் தேவ மாதாவே ஆதியே இன்ப ஜோதியே.. என்று தொடங்கும் பாடல் அது. அந்தப் பாடல் அந்த நாளில் மிகவும் பிரபல மடைந்தது.
தனக்குப் போட்டியாக வளர்ந்துவந்த பி.சுசீலாவுடன் இணைந்து பல பாடல்களைப் பாடியிருக்கிறார் ஜிக்கி. களத்தில் போட்டி யாளர்களாக இருந்தபோதிலும் இருவரும் சகோதரிகள்போலவே ஒருவர்மீது ஒருவர் அன்புகொண்டு பழகிவந்தார்கள். பிரபல பின்னணிப் பாடகரும் இசையமைப்பாளரு மான ஏ.எம்.ராஜாவைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார் ஜிக்கி. இரு வரும் சேர்ந்து பல அமரத்துவப் பாடல்களைப் பாடினார்கள். ஆனாலும், அவர்களது வாழ்வில் பல்வேறு ஏற்ற இறக்கங்கள். ரயில் விபத்தொன்றில் கணவர் ஏ.எம்.ராஜாவின் மரணமும், பி.சுசீலாவின் அபார வளர்ச்சி யும் ஜிக்கியின் கலைவாழ்வில் புயலைக் கொண்டுவந்தன. தென்னிந்திய சினிமாவில் கோலோச்சிக்கொண்டிருந்த அந்தத் தனித்துவக் குயில் தனது இரு மகள்களுடன் இசைக் குழு ஒன்றை உருவாக்கி ரசிகர் உலகை ஒரு சுற்று வலம் வந்தது. தனக்கு ஒரே படத்தில் 5 பாடல்களைப் பாட வாய்ப்பளிக்கப்பட்டபோது அந்தப் படத்தின் தயாரிப்பாளர் வலம்புரி சோமநாதனிடம் தனது சம்பளத்தைக் குறைத்துக் கொடுக்கச் சொல்லித் தனது பெருந்தன்மையை வெளிக்காட்டிய ஜிக்கியின் இறுதி நாட்கள் அத்தனை இசைபட இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். 1935 ஆம் ஆண்டு நவம்பர் 3 ஆம் தேதி பிறந்த ஜிக்கி என்ற அந்தக் குர லரசி ஆகஸ்ட் 16, 2004இல் தனது வாழ்வை நிறைவு செய்துகொண்டார். ஆயினும் இன்றும் அவர் தன் தனித்துவக் குரலின்வழியே தான் பாடிய பாடல்களில் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார், அல்லவா?
நவம்பர் 3: பின்னணிப் பாடகி ஜிக்கி பிறந்தநாள்