பீலே: பெர்த் ஆப் எ லெஜண்ட்
இயக்குநர்: ஜெப் ஜிம்பாலிஸ்ட்,
மைக்கேல் ஜிம்பாலிஸ்ட்,
மொழி ஆங்கிலம்/போர்த்துக்கீஸ்,
இசை: ஏ.ஆர்.ரஹ்மான்
நேரம்: 107 நிமிடம்
“என் பெயர் ரொனால்ட் ரீகன், நான் அமெரிக்காவின் ஜனாதிபதி. ஆனால், நீங்கள் உங்களை அறிமுகப்படுத்த வேண்டிய தேவையில்லை. ஏனென்றால், பீலே யார் என்று அனைவருக்கும் தெரியும்”.
இப்படி அவர் சொன்னது சரிதான். இதற்குக் காரணம், இணைய உலக ஆக்கிரமிப்புக்கு முன்பே அந்த இடத்தை முதன் முதலில் ஆக்கிரமித்தவர்கள் இருவர். ஒருவர் குத்துச்சண்டை வீரர் முகமது அலி. அடுத்தவர் கால்பந்தின் மேதை பீலே. பிரேசிலில் பிறந்தவர் பீலே. அது அவரது இயற்பெயர் இல்லை என்றாலும், அந்தப் பட்டப் பெயரே நிலைத்து விட்டது. கடந்த ஆண்டின் இறுதி நாளான டிசம்பர் 31 தனது மூச்சை நிறுத்திக் கொண்ட காலத்தால் அழியாப் புகழுக்கு சொந்தமான அந்த பிதாமகனுக்கு பிரேசில் மட்டுமல்ல, உலகமே கண்ணீருடன் பிரியா விடை கொடுத்தது. மூன்று உலகக் கோப்பைகளைப் பெற்றுத்தந்த அந்த தவப்புதல்வனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு “PELE: Birth of a Legend” பீலே ஒரு காவிய நாயகனின் பிறப்பு என்ற பெயரில் ஆறாண்டுகளுக்கு முன்பு வெளிவந்த திரைப்படத்தை அமேசான் பிரைம் வீடியோ தனது இணையத்தில் வெளியிட்டு புகழ் சேர்த்தது. 8 வயதில் வசதி படைத்தவர்களின் ஷூக்கு பாலிஷ் போடும் தொழிலை செய்த ஒரு சிறுவன், 17 வயதில் கால்பந்து உலகக் கோப்பையில் விளையாடினான். அதிக கோல்கள் அடித்து நாட்டுக்காக முதல் முறையாக கோப்பையை கைகளில் ஏந்தி தனது சபதத்தை நிறைவேற்றி னான். அது வேறு யாருமல்ல நம்ம பீலே தான். உடல் கருப்பாக இருந்தாலும் உள்ளம் வெள்ளையான அந்த விளையாட்டு வீரரின் வாழ்க்கையை மற்றவர் களுக்கு ஊக்கம் கொடுக்கும் வகையில் உணர்ச்சிப்பூர்வ மாகப் சொல்லும் “பீலே: பெர்த் ஆஃப் எ லெஜெண்ட்” படத்தின் முதல் காட்சியே, 1958 ஆம் ஆண்டு உலகக் கோப்பைக்கு அழைத்துச் செல்கிறது.
லட்சக் கணக்கானோர் ஒன்று கூடிய அந்த மைதானத்தில் ஸ்வீடன் அணிக்கே பெரும்பான்மையான ஆதரவு. வர்ணனை யும் பிரேசிலுக்கு எதிராகவே இருக்கிறது. அந்த நேரத்தில், நமது நாயகன் 17 வயது சிறுவனாக மைதானத்திற்குள் நுழைகிறார். ஒரு நிமிடம் மைதானமே அமைதியாகிறது. ஒருவேளை சோற்றுக்கே கஷ்டப்படுகிற குடும்பத்தில் பிறந்த அந்த சேட்டைக்காரச் சிறுவன் டிகோவுக்கு ஷூ கூட வாங்க வழியில்லை. ஆனாலும், தனது நண்பர்களுடன் வீதியில் இறங்கி அவன் விருப்பம் போல் கால்பந்தை உதைக்கிறான். சாகசம் செய்கிறான். அந்த நேரத்தில், உள்ளூரில் ஒரு போட்டி நடக்கிறது. காலுக்குச் செருப்புகூட இல்லாத உங்களுக்கு கால்பந்து விளையாட்டு ஏன்? என்றும் ஏளனம் செய்கிறார்கள். கருப்பு வீரர்கள் என்பதால் வெள்ளை இளைஞர்களிடம் அவமானப் படுகிறார்கள். அப்போது ஏற்படும் ஒரு மோதலில் பீலே.. பீலே... என்று கிண்டல் செய்யும் இளைஞனை ஓங்கி கன்னத்தில் ஓர் அறை விடுகிறான் டிகோ. அது வெறும் அடி மட்டுமல்ல. கருப்பு இன மக்களின் கொந்தளிப்பின் பதிலடியாகும். அழுக்குச் சட்டை, அலங்கோலத்தில் வீட்டுக்குச் சென்ற டிகோ, இந்த உண்மையை அம்மாவிடம் சொன்னால் இனி கால்பந்து விளையாடவே முடியாது என்பதால் பொய் சொல்கிறான். ஆனால், நேரில் பார்த்த தந்தை உண்மை யைப் புரிந்து கொண்டு நிலைமையைச் சமாளிக்கிறார். பிறகு, “நீ இப்படியே விளையாடினால் மிக மட்டமான வீரரான மட்டுமே வர முடியும். அந்த கோபத்தை விளை யாட்டு மீது மட்டுமே காட்ட வேண்டும்” என்று பீலேயின் தந்தை அறிவுரை கூறுகிறார். இதற்குப் பின்னால் ஒரு கதை ஒளிந்திருக்கிறது.
அந்த நேரத்தில் 1950 ஆம் ஆண்டின் உலகக் கோப்பை யின் இறுதி ஆட்டத்தில் உருகுவே- பிரேசில் அணிகள் பலப் பரீட்சை நடத்துகின்றன. அதன் வர்ணனையை ஒரு டீக்கடை முன்பு பிரேசில் ரசிகர்கள் ரேடியோவில் ஆர்வத்து டன் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதில் டிகோ-வின் தந்தையும் ஒருவர். டிகோவும் அவனது நண்பர்களும் பக்கத்து வீட்டு மேல் கூரையின் மேலிருந்து இதை கேட்டுக் கொண்டிருக் கிறார்கள். ஆனால், பிரேசில் தோல்வியடைந்து விடுகிறது. இதனால் சோகத்தில் மூழ்கும் ரசிகர்களில் டிகோ-வின் தந்தையும் ஒருவர். தேம்பித் தேம்பி அழுகிறார். 9 வயது சிறுவனான டிகோ, “நான் உலகக் கோப்பையை வென்று கொடுக்கிறேன்” என்று ஆறுதல் கூறுகிறான். அதே வேகத்தில், உள்ளூரில் புகழ்பெற்ற கால்பந்து தொடரில் டிகோ தலைமையில் களம் இறங்கிய கருப்புச் சிறுவர்கள் இறுதிப் போட்டியில், வயதில் மூத்தவர்களான வெள்ளை இளைஞர்களு டன் வெறும் காலுடன் விளையாடியதால் “ஷூ லஸ் பாய்ஸ்”அணி என்று அழைக்கிறார்கள். முதல் பாதி ஆட்டத் தில் வெள்ளை இளைஞர்கள் 6 கோல் அடிக்கின்றனர். கூட்டம் முழுவதும் வெள்ளை இளைஞர்களுக்கு ஆதரவாகவே குரல் எழுப்புகிறது. ஆனாலும், மனம் தளரவில்லை. ஒரு நிமிடம் தனது தந்தையின் முகத்தை பார்க்கிறான் டிகோ, அடுத்து என்ன? களத்தில் அவனது ராஜ்யம்தான். தொடர்ந்து 5 கோல் அடித்து வெள்ளை இளைஞர்களை அலறவிட்டான். அதுவரைக்கும் ஆதரிக்காதவர்கள்கூட பீலே...பீலே... என்று மைதானத்தையே அதிர வைத்தனர். அந்த சந்தோஷம் ரொம்ப நேரம் நீடிக்கவில்லை. ஒரு ஷூ வாங்குவதற்காக செய்த சேட்டையில் எதிர்பாரா விதமாக நண்பன் ஒருவனை இழந்து விடுகிறார்கள். இந்த சோகத்தை தாயிடம் பகிர்ந்து கொண்ட டிகோ, இனி கால்பந்து விளையாட மாட்டேன். தந்தையுடன் வேலைக்குச் செல்கிறேன் என்கிறான். மகனை மார்பில் அணைத்துக் கொள்ளும் அந்தத் தாய்,“டீகோ எனக்கு கால்பந்து ரொம்பவும் பிடிக்கும். உங்க அப்பா விளையாடியதை பார்த்துத் தான் அவரை காதலித்து திருமணம் செய்து கொண்டேன். ஒரு ஆட்டத்தில், ஐந்து கோல்கள் அடித்து அமர்க்களப் படுத்தினார்.
அதன் பிறகு, ஏற்பட்ட காயம் அவரது வாழ்க்கையையே மாற்றி விட்டது. இன்றைக்கு ‘டாய்லெட் கழுவுகிறார்’ உனக்கும் அந்த நிலை வந்து விடக்கூடாது” என்கிறார். வசதி படைத்தவர்களின் வீடுகளின் தரைகளை துடைக்கும் தாய், கழிப்பறைகளைச் சுத்தம் செய்யும் தந்தையின் முகங்களைப் பார்க்கும் அந்த சிறுவனின் முகம் இறுக்கமாகவே உள்ளது. இதை உணர்ந்து கொண்ட அவனது தந்தை, உடனடியாக ஒரு தோட்டத்திற்கு அழைத்துச் செல்கிறார். இதற்கிடையில், உள்ளூர் கிளப் ஒன்று முறையான பயிற்சிக்கு அழைப்பு விடுக்கிறது. தந்தையிடம் கிடைத்த அந்த கடிதம், தாயின் கைகளுக்கு வந்து விடுகிறது. அவரோ அதை ஒளித்து வைத்து விடுகிறார். தோட்டத்தின் மாமரத்தில் மேலும் கீழுமாக தொங்கும் மாம்பழங்களை காட்டுகிறார். கால்பந்தை எப்படி உதைக்க கற்றுக் கொண்டேன் என்கிற சாகசங்களையும் வித்தைகளையும் சொல்லிக் கொடுக்கிறார். ஆரம்பத்தில் அமைதியாக இருந்தாலும், அடுத்த நாள், அதே இடத்தில் டீகோ தனியாக பயிற்சி எடுக்கிறான். அவனது தாய் அதை பார்த்து விடுகிறாள். அடுத்த நிமிடமே, மறைத்து வைத்த கடிதத்தை தேடி எடுத்து பயிற்சிக்கு அனுப்பி வைக்கிறார். ஆனாலும், அங்கு ரொம்பவே கஷ்டப்படுகிறான். காரணம், அங்கு சொல்லிக் கொடுத்த பயிற்சி அவனுக்கு பிடிக்க வில்லை. உடனே பெட்டியைத் தூக்கிகொண்டு ரயில் நிலையத்திற்கு வந்துவிடுகிறான். அங்கு வரும் கால்பந்து டான், ஒரு சமூகத்தின் அடிமைத் தனத்தை ஒழிக்க பூர்வகுடி மக்கள் பயன்படுத்திய ஜிங்கா கலை உனக்கு நன்றாகவே தெரிகிறது. அதுதான் உனது ஸ்டைலாக இருக்க வேண்டும். அதை யாருக்காகவும் மாற்றிக்கொள்ள வேண்டாம். எதற்காகவும் விட்டுக் கொடுக்க வேண்டாம் என்கிறார். பிறகு, தனது முடிவை மாற்றிக்கொண்டு மீண்டும் பயிற்சிக்குச் செல்கிறான் டிகோ. அப்பா சொல்லித் தந்த மாம்பழ வித்தைகளை ஜிங்கா ஸ்டைலில் காட்டுகிறான். அந்தரத்தில் பறந்து சூப்பர் கோல் அடிக்கிறான்.
பயிற்சியாளர் உள்ளிட்ட அனைவரும் அசந்துவிடுகிறார்கள். அதுவே அந்தச் சிறுவனின் வாழ்க்கையை மாற்றிக் காட்டுகிறது. சுவாரஸ்யமாக செல்லும் படம் இறுதிக்கட்டத்தை எட்டுகிறது, “1958 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கான பிரேசில் அணி அறிவிப்பை ரேடியோவில் பீலேவின் தந்தை கேட்டுக் கொண்டிருக்கிறார். வயது குறைவாக இருப்பதால் தனது பெயரை பரிசீலிக்கமாட் டார்கள் என்று பீலே சொல்கிறான். ஆனால், பீலேவின் பெயர் இடம்பெறுகிறது. அந்த குடும்பத்தின் மகிழ்ச்சி எல்லையே இல்லாமல் விரிகிறது. உனக்கென்று தனியாக அடையாளம் கிடைக்க வேண்டும் என்றால், உன்னையும், உனது ஸ்டைலையும் முழுமையாக நம்ப வேண்டும் என்று நம்பிக்கை கொடுத்து வழி அனுப்பி வைக்கிறார் தந்தை. கோப்பை யாருக்கு என்கிற இறுதி கோதாவில் ஸ்வீடனு டன் பிரேசில் மல்லுக்கட்டுகிறது. பிரேசிலின் முன்னணி வீரர்கள் பலரும் காயத்தால் அவதிப்படுகின்றனர். மைதானத்தில் திரண்ட கூட்டமும், வர்ணனையாளர்களும் 1950 இல் பிரேசிலுக்கு ஏற்பட்ட அதே கதி தான் ஏற்படும் என கூச்சலிடுகின்றனர். ஆரம்பக் காலங்களில் கேவலப்படுத்திய வெள்ளை இளைஞன் உட்பட ஒட்டுமொத்த தேசமும் அந்த 17 வயது கருப்பு இளைஞனை நம்புகிறது. 5 அடி உயரமே இருந்தாலும் கனகச்சிதமாக பந்தை கடத்திச் செல்கிறார்.
எங்கிருந்து பாய்ந்து வந்தார்? எப்படி பந்தை உதைத்தார் யாருக்குமே தெரியவில்லை. எப்படி தாவுகிறார்? எப்படி பந்தை பாஸ் செய்கிறார்? எதையும் கணிக்க முடியாமல் எதிரணியினரை கலங்கடித்து. ஜிங்கா ஸ்டைலில் அடித்த அந்த இரண்டு கோல்களால் உலகக் கோப்பை பிரேசில் வசமானது. அந்த ஆட்டத்தை பார்த்த பீலேவின் தந்தையும் தாயும் எல்லையில்லா பரவசம் அடை கிறார்கள். சக வீரர்கள் பீலேவை தூக்கி தோளில் சுமந்து செல் கிறார்கள். நாடே விழாக்கோலம், அந்த வெற்றிக் கொண் டாட்டத் திற்கு பின் ஒளிந்து கொண்டிருக்கும் மிகப்பெரிய வரலாற்றை எடுத்துரைக்கிறது இந்த திரைப்படம். தனி ஒரு இளைஞனுக்கு இத்தகைய ஒடுக்குமுறை பெரும் வலியை கொடுக்கும் என்றால், நூற்றாண்டு காலம் ஒட்டுமொத்தமாக ஒரு சமூகத்தையே நிறவெறி வெளிப்படையாக ஆட்டிப்படைத்தது என்றால் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்! உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து தாய், தந்தைக்கும் மகனுக்கும் இடையே உள்ள உறவை மையமாகக் கொண்ட காலத்தால் அழியாத திரைக் காவியம் இது.