ஒரு திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கும்போது ஏதோவொரு காரணத்தால் பாதியிலேயே அதன் கதாநாயகி முரண்பட்டு விலகி ஓடிவிட்டால் என்ன செய்வது? அந்த நாயகியை வைத்து எடுத்து முடிக்கப்பட்ட படச் சுருளை வீணாக்காமல் என்ன செய்வது? மீதிப் படத்தை நாயகி இன்றி எப்படி எடுத்து முடிப்பது? இப்படியான கேள்விகள் உரு வான சூழல் ஒன்று இன்றைக்கு 74 ஆண்டு களுக்கு முன்னமேயே ஏற்பட்டிருக்கிறது தமிழ்த் திரைப்பட உலகத்தில். அப்படியானதொரு சூழல் நாட்டியராணி (1949) படப்பிடிப்பின்போதுதான் நடந்தது. அந்த சம்பவத்தின் பின்னணியையும், அதனை அந்தப் படத்தின் தயாரிப்பாளர் புத்தி சாலித்தனமாக மாற்றியோசித்துச் சமாளித்த விதத்தையும் இப்போது பார்ப்போம். நடனத்தை முன்னிறுத்திக் கதை சொல்லப்பட்ட படம்தான் இந்த நாட்டிய ராணி. வெற்றிகரமான திரைப்படத் தயாரிப்பாளர் பி.என்.ராவ் 1930 களில், 40 களில் முன்னணி இயக்குநராக வலம் வந்தவர். அவரது இயற்பெயர் பி.என். நாயர்தான். அவர் எப்படி பி.என்.ராவ் ஆனார் என்பதை அறிய இயலவில்லை. அவரது தயாரிப்பில் உருவான இந்த நாட்டியராணி யின் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டு, படப்பிடிப்பு பாதிக் கிணறு தாண்டப்பட்ட நிலையில் காரணம் ஏதோவொன்றினால் முரண்பட்டு படத்திலிருந்து விலகிவிட்ட வர்தான் அந்த நாளின் ரசிகர்களைக் கவர்ந்த வசுந்தரா தேவி. பிரபல நடிகையும் நாட்டியக் கலைஞருமான வைஜெயந்திமாலாவின் தாயார்தான் இந்த வசுந்தரா. அதற்கு முன்னர் அவர் மங்கம்மா சபதம், ரிஷ்யசிருங்கர் போன்ற படங்களில் நாயகியாகத் தோன்றி ரசிகர்களை ஈர்த்தார். நாட்டியராணியின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்த நேரத்தில் அதிலிருந்து வசுந்தரா தேவி விலகிவிட்ட நிலையில் படக்குழு மிகுந்த குழப்பத்தை அடைந்தது. என்ன செய்வதென்று மண்டையைப் பிய்த்துக்கொண்டு நிற்கும் நிலை.
வசுந்தரா தேவியை வைத்து பாடல்களும் நடனங்களும் இடம்பெறும் காட்சிகள் பலவும் உருவாக்கப்பட்டிருந்தன. அதற்காக அப்போதைய பண மதிப்பில் நிறையச் செலவு செய்யப்பட்டிருந்தது. அதையெல்லாம் எப்படி வீணாக்குவது? அதுவரை எடுக்கப்பட்ட படத்திற்கான முதலீடு எப்படி நட்டமாகாமல் தவிர்ப்பது? படக்குழுவினருக்கு ஒன்றுமே தோன்றாத நேரத்தில் படத்தின் கதாசிரியர் கம்பதாசனு க்கு ஒரு புதுமையான யோசனை தோன்றி யது. அந்த யோசனை அந்த நாளில் சினிமா உலகிற்கு மிகமிகப் புதியது. விசித்திரமானது. அதனால் எல்லோரையும் வியப்புக்கொள்ளச் செய்தது அந்த யோசனை. அப்படியென்னதான் புதியது அந்த யோசனை? பார்ப்போம். படத்தில் வசுந்தராவின் பெயர் சாந்தலா. அவர் பாதியிலேயே விலகிவிட்ட நிலையில் கம்பதாசன் சொன்ன யோசனைப்படி அவர் தீ விபத்தில் இறந்துவிடுவதாகக் கதையை மாற்றியமைத்தார்கள். கதையில் புதிதாக சேர்க்கப்பட்ட இரண்டாவது நாயகிக்கும் அதே சாந்தலா என்ற பெயரையே சூட்டினார்கள். தீ விபத்தில் இறந்த சாந்தலாவின் ஆவி அதே பெயரைக்கொண்ட இரண்டாவது நாயகியான சாந்தலாவின் உடலில் புகுந்துகொள்வதாகப் புதுக்கதை சொல்லப்பட்டது. இப்படியொரு ஆவி ஐடியாவை வைத்து கதாநாயகி செய்ய வேண்டியதையெல்லாம் ஆவியை வைத்து முடித்துக்கொண்டார்கள், அதாவது இரண்டாவது கதாநாயகியின் வரவுக்கு இதன்மூலம் நியாயம் சொன்னார்கள். இப்படி இரண்டாவது நாயகி சாந்தலாவாக நடித்தவர் பி.எஸ்.சரோஜா.
முதல் நாயகி சாந்தலா (வசுந்தரா தேவி) ஒரு பால் விற்கும் பெண். அவளுக்குப் புகழ்மிக்கதொரு வாழ்வு கிடைப்பதாக ஒரு விசித்திரமான கனவு வருகிறது. அதை அவளது தோழி வேணியிடம் தெரிவிக்கிறபோது அவள் கேலியாகச் சிரிக்கிறாள். மனம் உடைந்த சாந்தலா தனது மனக்கவலையால் ஊருக்கு வெளியே இருக்கும் சிவன் கோவிலில் போய் அழுது சொல்கிறாள். அவள் முன்னே தோன்றும் சிவபெருமான் அவளது மனக்கவலை தீர ஒரு மந்திரத்தைச் சொல்லிக்கொடுக்கிறார். அவள் வசிக்கும் சிற்றூரில் ஒரு ஆசிரமம் இருக்கிறது. அதை நடத்திச்செல்லும் சுவாமியைச் சந்திக்க ஒருநாள் ஹொய்சாள அரசன் விஷ்ணுவர்த்தனா வருகிறான். அங்கே அவன் ஒரு பாடலைப் பாடுகிறார். அந்த சமயத்தில் அங்கு வரும் சாந்தலா அந்தப் பாடலுக்கு மிகவும் சரியான முத்திரைகளுடன் நடனமாடுகிறாள். அரசன் அதைக் கண்டு அவள்மேல் காதலாகிறான். ஏற்கெனவே தனது அரண்மனையில் ஒரு ராணி இருப்பதை மறைத்து, அவளுக்கு ஒரு கணையாழியை அணிவித்து மணம் செய்துகொள்கிறான். மறுநாள் வந்து அவளை அழைத்துச் செல்வதாகச் சொல்லிச் சென்றவன் வரவில்லை. எனவே, சாந்தலா அரசனைத் தேடி அரண்மனைக்குச் செல்கிறாள்.
அவள் கதையை அறிந்த ராணி அவளைக் கொல்ல விஷம் கொடுக்க முயல்கிறாள். இப்படிப்போகும் கதையின் இறுதியில் சாந்தலா மன்னனுடன் சேர்ந்தாளா என்பதற்கு விடை கிடைக்கிறது. வசுந்தரா தேவி பாதியில் விலகிவிட்டதால் அவரை மணந்துகொண்ட அரசனைத்தேடி அவளது ஆவி புகுந்த உடலுடன் பி.எஸ்.சரோஜா செல்கிறார். இதைச் சட்டெனப் பார்வையாளர்களால் புரிந்துகொள்ள முடியாமல் குழம்பவும் செய்தார்கள். அதனால் படத்தின் வசூலை அது பாதித்துவிட்டது. படத்திற்குக் கூடுதல் ஈர்ப்பை ஏற்படுத்தவேண்டி லலிதா - பத்மினி நடனக் காட்சியையும் சேர்த்தார்கள். படத்தில் வரும் ஆஸ்ரமத்தை நடத்தும் சுவாமியாக நடித்தவர் ராஜா ஐயங்கார். அவர் பழைய மைசூர் மாநிலத்தின் பிரபல இசைக் கலைஞர். அவர் தனது பாடல்களுக்கு வயலினுக்குப் பதிலாக ஹார்மோனியத்தைப் பின்னணி இசைக் கருவியாகப் பயன்படுத்தி பாடல்களைப் பதிவு செய்து வெளியிட்டவர். பிரபல இசை மேதைகள் எம்.எஸ்.சுப்புலட்சுமி, பாலமுரளி கிருஷ்ணா ஆகியோரால் பாடப்பட்ட ஜெகதோதரனா என்ற பாடல் ராஜா ஐயங்காருக்கும் புகழ் சேர்த்தது. படத்தின் பாடல்களை பாபநாசம் சிவன் மற்றும் எஸ்.ராஜாராம் ஆகியோர் எழுதினார்கள். பாபநாசம் சிவன் இசையமைத்தார். டி.கே. பட்டம்மாள், கொத்தமங்கலம் சீனு ஆகியோர் பாடல்களைப் பாடினார்கள். தனது பாடும் திறத்தால் சிங்களக் குயில் என்றழைக்கப்பட்ட இலங்கையின் தவமணி தேவி ஒரு பாடலைப் பாடியும், சிறிய வேடத்தில் நடித்துமிருந்தார். நிலைமைக்கு ஏற்ப கதையின் அமைப்பைச் சாதுரியமாக மாற்றியும், இத்தனை மனித உழைப்பைச் சிந்தியும் இந்த நாட்டியராணி என்ற கலை முயற்சி வெற்றிக்கனியைப் பறித்திடத் தவறிவிட்டது என்பது வருத்தமே.