விடுதலைப்போராட்ட வீரரும் தமிழகத்தின் மிகமுக்கிய ஆளுமையும் இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலுமான ராஜகோபாலாச்சாரி என்ற ராஜாஜி எழுதிய சிறுகதைதான் திக்கற்ற பார்வதி. சிறுகதை என்றாலும் அதனை அதே பெயரில் ஒரு திரைப்படமாக உருவாக்கினார்கள். குடிப்பழக்கத்தின் தீமைகளை அழுத்தமாகச் சொன்னது திக்கற்ற பார்வதி. மகிழ்ச்சிகரமான வாழ்க்கை வாழ்ந்துவந்த பார்வதிக்கு வாய்க்கும் கணவன் கருப்பன் அன்பானவன். மாமியாரும்கூட அன்பொழுக நடப்பவர்தான். எனவே அவளது திருமண வாழ்க்கை துவக்கத்தில் மிகவும் மகிழ்ச்சியோடேயே இருக்கிறது. பார்வதிக்கு ஒரு குழந்தையும் பிறக்கிறது. கருப்பன் தனது சம்பாத்தியத்தை அதிகரிக்கவேண்டி கடன்பட்டு ஒரு வண்டி வாங்குகிறான். கருப்பனுக்குக் கொஞ்சம் சில்லரை சேருகிறபோது குடிப்பழக்கம் தொற்றுகிறது. விரைவிலேயே அதற்கு அடிமையாகின்றான். பார்வதியின் வாழ்வில் துயரம் தொடங்குகிறது. குடிகாரக் கணவனின் அலட்சியத்தால் தான் பெற்ற பிள்ளையைக் காலனுக்குப் பலி கொடுக்கிறாள் பார்வதி. அவளது வாழ்வில் சோகம் அப்பிக்கொள்கிறது. கடன் தொல்லை கருப்பனை விரட்டுகிறது. கடன் கொடுத்தவரின் மகனின் தவறான அணுகுமுறைக்குப் பலியாகிறாள் பார்வதி. அதை அறிந்த கருப்பன் தன் மனைவியிடம் தவறாக நடந்துகொண்டவனின்மீது கோபப்பட்டு அரிவாளை எறிகிறான். அவன்மீது கொலைப்பழி விழ, அவன் சிறை செல்கிறான். பார்வதியின் உறவினர்கள் அவளை நிராகரிக்க அவள் திக்கற்றவளாகிறாள். கணவனின் விடுதலைக்காகப் போராடுகிறாள் தன்னந்தனியாக. தனது வழக்கறிஞரின் ஆலோசனைப்படி தான்தான் அந்தக் குற்றத்தைச் செய்ததாக நீதிமன்றத்தில் அறிவிக்கிறாள் பார்வதி. அதனால் கருப்பன் விடுதலையாகிறான். விடுதலையாகிற கணவனோ அவளை ஏற்க மறுக்கிறான். மனமுடைந்த பார்வதி மலைமீதிலிருந்து குதித்துத் தற்கொலை செய்துகொள்கிறாள்.
இதுதான் ராஜாஜியின் திக்கற்ற பார்வதி. இதில் பார்வதியாக நடிகை லட்சுமி மிகவும் அற்புதமாக நடித்தார். அவள் கணவன் கருப்பனாக நடிகர் ஸ்ரீகாந்த் நடித்தார். பிரபல இயக்குநர் சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ் இந்தப் படத்தை இயக்கினார். படத்தின் வசனத்தைக் காரைக்குடி நாராயணன் எழுதினார். சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ், எம். லட்சுமிகாந்த ரெட்டி, எச்.எம். சஞ்சீவ ரெட்டி ஆகியோர் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்தார்கள். திக்கற்ற பார்வதி திரைப்படம் அபூர்வமான பல சிறப்புகளைக் கொண்டதாக திரைப்பட வரலாற்றில் இடம்பெற்றிருக்கிறது. ராஜாஜியின் சிறுகதை என்பதோடு கூடுதலான சிறப்புகளும் இதற்கு உண்டு. இந்தச் சிறுகதையைத் திரைப்படமாக்க விரும்பிய சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ் ராஜாஜியிடம் அனுமதி கேட்டார். ராஜாஜி அதற்கு அனுமதியளித்துக் கையொப்பமிட்டதுதான் அவர் போட்ட கடைசி கையெழுத்து. ஆமாம், படம் முடிந்து திரைக்கு வரும்முன் ராஜாஜி மரணமடைந்துவிட்டார். ராஜாஜி பிறந்த ஊரான தொரப்பள்ளியிலேயே முழுவதும் படமாக்கப்பட்டது இந்தத் திக்கற்ற பார்வதி. நீதிமன்றக் காட்சிகள் ஓசூரிலும் சென்னையிலும் அசல் நீதிமன்றங்களிலேயே படமாக்கப்பட்டன. அதற்காக சிறப்பு அனுமதியும் பெறப்பட்டன. அந்தக் காட்சிகளில் நிஜமான வழக்கறிஞர்களும் இடம்பெற்றார்கள். கண்ணதாசனும் ராஜாஜியும் இதன் பாடல்களை எழுதியிருந்தார்கள். மொத்தம் இரண்டு பாடல்கள். இரண்டையும் வாணிஜெயராம் பாடினார். முதன்முறையாக பிரபல இசைக்கலைஞர் சிட்டிபாபு இந்தப் படத்திற்கு இசையமைத்தார்.
படத்திற்கான மொத்த பட்ஜெட் இரண்டரை லட்ச ரூபாய். அதன் தற்போதைய மதிப்பு ஏறத்தாழ மூன்றரைக் கோடி ரூபாய். செலவுத் தொகையில் 80 சதவீதத்தை தேசியத் திரைப்பட வளர்ச்சிக் கழகத்தில் கடனாகப் பெற்றார்கள். அப்போது அது ஃபிலிம் ஃபைனாஸ் கார்ப்பரேசன் என்ற பெயரில் இயங்கிவந்தது. திக்கற்ற பார்வதி படம் வெளிவந்தது. ஆனாலும் தயாரிப்பாளரால் அந்தக் கடனைத் திரும்பச் செலுத்த இயலவில்லை. அப்போது தமிழ்நாட்டின் முதல்வராக எம்.ஜி.ஆர். இருந்தார். அவர் இந்தப் படத்திற்கு உதவ முன்வந்தார். ராஜாஜி எழுதிய கதை என்பதாலும், குடிப்பழக்கத்திற்கு எதிரான செய்தியைச் சொல்கிற படம் என்பதாலும் இதற்கு உதவும் எண்ணம் எம்.ஜி.ஆருக்கு ஏற்பட்டிருக்கலாம். தமிழக அரசே அந்தக் கடனை அடைத்து, வெளியிடப்பட்ட பிறகும்கூட விலைக்கு வாங்கியது. ஒரு மாநில அரசு ஒரு திரைப்படத்தை அது வெளியிடப்பட்ட நிலையில் விலைக்கு வாங்குவது இந்தியத் திரைப்பட வரலாற்றிலேயே இதுதான் முதன்முறை. 1974இல் வெளிவந்த திக்கற்ற பார்வதி ஐம்பதாவது ஆண்டைத் தொடப்போகிறாள். அது 1975இல் சிறந்த திரைப்படமாகத் தேர்வு செய்யப்பட்டு தேசிய விருது பெற்றது. படத்தில் பார்வதியாக நடித்த லட்சுமி சிறந்த நடிகை என்றும் திக்கற்ற பார்வதி தமிழில் சிறந்த திரைப்படம் என்றும் இரண்டு ஃபிலிம் ஃபேர் விருதுகள் கிடைத்தன. ஒரு சிறுகதையை முழுநீள சினிமாவாக்கியதில் அந்தச் சிறுகதையின் ஆன்மா கெடாமல் இந்தத் திக்கற்ற பார்வதி பிரதிபலித்ததாகப் பத்திரிகைகள் பாராட்டி எழுதின. வசூலிலும் இந்தப் பார்வதி குறை வைக்கவில்லை.