மனிதகுலத்துக்கு மனிதனே செய்துகொண்ட பேரழிவுகளில் முதன்மையானதும் கொடூரமானதும் எது? எனக் கேட்டால், அது ஜப்பானின் ‘ஹிரோஷிமா - நாகசாகி’ ஆகியவற்றின்மேல் அமெரிக்கா நடத்திய அணுகுண்டு வீச்சைத்தான் சொல்வார்கள். 3 லட்சம் மக்களைக் கொன்று குவித்த அந்தச் சம்பவத்துக்கு அமெரிக்காவின் யுத்த வெறி காரணமென்றால், அந்தக் குண்டு வெடிப்பின் மூளையாய் செயல்பட்ட அறிவியல் அறிஞர் ராபர்ட் ஜே.ஓப்பன்ஹெய்மரும் முக்கிய காரணம். அவரது வாழ்க்கையையும் அந்தச் சம்பவத்தால் அவரடைந்த தீவிர மனஉளைச்சலையும் சொல்லும் வரலாற்று ஆவணம்தான் பிரபல ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் இந்த ஓப்பன்ஹெய்மர் திரைப்படம். பிரம்மாண்டமும், கணினி கிராபிக்ஸைப் பயன்படுத்தாது அசலாகவே எடுக்கப்பட்ட காட்சியமைப்புகளுமாக இந்தப் படம் ஹாலிவுட்டின் மனசாட்சியாக - இன்னும் சொல்லப்போனால் அமெரிக்காவின் மனசாட்சியாகவே வெளிப்படுவதாகக் கூறப்படுகிறது. 70 எம்.எம். திரையில் அசலாக அணுகுண்டு வெடிப்பதை வியக்கும்வகையில் காண்பிக்கும் படமாக மட்டுமல்லாமல் சுழன்றடிக்கும் அரசியலில் அலைக்கழிக்கப்பட்டு குற்றவுணர்ச்சியில் தவிக்கும் ஒரு சூழ்நிலைக் கைதியின் கதை என்றும் சொல்கிறார்கள். ரஷ்யக் கம்யூனிஸ்ட்களுக்கு ஓப்பன்ஹெய்மர் உதவினாரா எனும் விசாரணையின் பின்னணியில் படம் சொல்லப்பட்டிருக்கிறதும், கம்யூனிஸ்ட்களுடனான அவரது நட்பு, ஹிட்லரின் நாஜிக்களுக்கு எதிரான போரில் அவரது பங்களிப்பு என்றே படத்தின் காட்சிகளைக் கொண்டுசெல்வதும் படத்தின் மீதான உலக ரசிகர்களின் கவனத்தைக் கொண்டிருக்கின்றன.