cinema

img

இழந்த காதல் கலைவாணர் பரிசோதித்துப் பார்த்த மாறுபட்ட சினிமா முயற்சி...

துவக்க காலத் தமிழ் சினிமாவில் ஒரே பெயரில் ஒன்றிற்கு மேற்பட்ட படங்களைத் தொகுப்பாக வெளியிடும் முறை இருந்தது. இப்போதும்கூட அப்படியான முயற்சிகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்தாலும் அந்த நாளிலேயே இப்படியான திரைப்பட முயற்சியைத் துவக்கி வைத்தவர் அன்றைய முன்னோடி இயக்குநர் கே.சுப்பிரமணியம்தான்.  இப்படி ஒரே பெயரில் இரண்டு திரைப்படங்களை ஒன்றாகத் தொகுத்து தொடர்ந்து வெளியிட்டுப் பரிசோதித்த சாதனையாளர் நகைச்சுவைக் கலையை மக்களின் அறிவு மேன்மைக்காகப் பயன்படுத்திய பெருங்கலைஞரான கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன். கோவையில் கலைவாணருக்குச் சொந்தமான அசோகா ஃபிலிம்ஸ் எனும் தயாரிப்பு நிறுவனம் இருந்தது. தென்னிந்தியாவின் முன்னணித் தயாரிப்பாளர் எஸ்.எம்.ஸ்ரீராமுலு நாயுடுவின் பட்சிராஜா ஃபிலிம்ஸ் கம்பெனிதான் கலைவாணரின் தயாரிப்பு நிறுவனத்திற்கு நிதியுதவி செய்தது. அதில்தான் கலைவாணர் இப்படியான தொகுப்புப் படங்களைத் தொடர்ந்து எடுத்து வெளியிட்டுவந்தார். பல படங்களோடு கலைவாணர் நடித்த நகைச்சுவைக் குறும்படம் ஒன்றையும் இணைத்து ஒரு தொகுப்பாக வெளியிட்டபோது ரசிகர்கள் கலைவாணர் நடித்த நகைச்சுவைக் குறும்படத்தையே அதிகம் விரும்பினார்கள். அதனால், அந்தத் தொகுப்புக்கே பெரும் வரவேற்பு ஏற்பட்டு வசூலிலும் அது வெற்றிபெற்றது. இத்தனைக்கும் கலைவாணரின் குறும்படத்தைவிட தொகுப்பில் காட்டப்பட்ட மற்ற ஒன்றிரண்டு படங்களே பிரதான கதையாடல்களோடு, பெரிய நட்சத்திரங்களின் பங்கேற்பையும் கொண்டிருந்தன. இருந்தபோதும் கலைவாணரின் நகைச்சுவைத் துண்டுப் படத்திற்கே மக்களின் ஆதரவு அதிகமிருந்தது. அதுதான் கலைவாணரின் நகைச்சுவையின் தனிச் சிறப்பாகும்.

அப்படியான இரண்டு திரைப்படங்களின் தொகுப்பு ஒன்றை 1941 இல் கலைவாணர் வெளியிட்டார். அதில் இரண்டு திரைப்படங்கள் அடங்கியிருந்தன. ஒன்று, இழந்த காதல் மற்றது சந்திரஹரி. இழந்த காதல் என்பது பிரபலமாகியிருந்த நாடகம். திருச்சி அமெச்சூர் நாடக சங்கத்தின் சார்பில் நடத்தப்பட்டு வந்த யதார்த்தம் பொன்னுசாமி பிள்ளை எழுதிய நாடகம் அது. இந்த யதார்த்தம் பொன்னுசாமி பிள்ளைதான் வி.சி.கணேசனை நடிப்புலகிற்குக் கொண்டுவந்தவர். அந்த வி.சி.கணேசன்தான் பின்னாளின் நடிகர்திலகம் சிவாஜி கணேசன். பிறகு கலைவாணரின் என்.எஸ்.கே. நாடக சபா இந்த இழந்த காதல் நாடகத்தை மேடையேற்றியது. அப்போது வி.சகஸ்ரநாமம் அந்த நாடகத்தின் பிரதான பாத்திரத்தில் நடித்தார். காரணம் லட்சுமிகாந்தன் கொலைவழக்கில் கலைவாணர் சிறையிலிருந்த நேரம் அது. கலைவாணரோடு அதே குற்றச்சாட்டின் பேரில் எம்.கே.தியாகராஜ பாகவதரும் சிறையிலிருந்தார். நாடகமாக நடிக்கப்பட்டபோது அது பெற்ற வரவேற்பைத் திரைப்படமாக்கியபோது இழந்த காதல் பெறவில்லை. கணவர் சிறை சென்றதால் கலைவாணரின் காதல் மனைவி டி.ஏ.மதுரம் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடிக்கு ஆளானார். சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தின் அருகில் அப்போதிருந்த மிகப் பிரபலமான ஒற்றைவாடை கூத்துக்கொட்டாய் என்றழைக்கப்பட்ட வால்டாக்ஸ் தியேட்டரில் மதுரம் நாடகங்களை நடத்தத் தொடங்கினார். பின்னாளில் கலைவாணர் இல்லாமலேயே மதுரம் மட்டும் மேடை நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். பைத்தியக்காரன் நாடகத்தில் முன்னணிக் கதாபாத்திரத்தில் அவர் நடித்தார். அது சினிமாவாக எடுக்கப்பட்டபோது அப்போது அதிகம் பிரபலமாகாத எம்.ஜி.ஆர். அதில் வில்லனாக நடித்தார். இழந்த காதல் கதையில் மரணப்படுக்கையில் கிடக்கும் ஒரு பணக்காரர் தனது நண்பரும் உறவினருமான சோமநாதன் பிள்ளை என்பவரிடம் 5 ஆயிரம் ரூபாயைக் கொடுத்து, தாயை இழந்த தனது மகள் பத்மாவைத் தக்க வயதில் தனது மாமனின் மகன் ஜெகதீஷ் என்பவருக்குத் திருமணம் செய்துவைக்குமாறு வேண்டுகிறார். அதன்பின் அவர் மரணத்தைத் தழுவ, சோமநாதனின் வீட்டில் வளர்கிறாள் பத்மா.

வாலிப வயதை அடைந்த பின்னர் பத்மாவுக்கு சோமநாதனின் மகன் ஜெயபாலனுடன் காதல் மலர்கிறது. ஆனால் நண்பருக்குச் செய்துகொடுத்த சத்தியத்தால் அந்தக் காதலை சோமநாதன் ஒப்புக்கொள்ள மறுக்கிறார். பத்மாவை ஜெகதீஷூக்கே திருமணம் செய்து வைக்கிறார். தனது மகன் ஜெயபாலனுக்கு சரோஜா என்கிற பெண்ணைத் திருமணம் செய்து வைக்கிறார். காதலர்களால் தங்கள் காதலை மறக்க இயலவில்லை. பத்மாவின் வாழ்க்கை மிகவும் பரிதாபகரமாக மாறுகிறது. மறுபக்கம் ஜெயபாலன் குடிக்கு அடிமையாகிறான். வீட்டிலிருந்து வெளியேற்றப்படுகிறான். பத்மாவுக்கும் ஜெயபாலனுக்கும் இடையே தொடர்பிருப்பதாக வதந்தி உலவத் தொடங்குகிறது. அவன் மின்னல் தாக்கிக் கண்களை இழக்கிறான். வழியில் ஒரு துறவியைச் சந்திக்கிறான். அதன்பின் அவனது வாழ்க்கை என்னவாகிறது என்பதை மீதிக் கதை விளக்குகிறது. கலைவாணர், டி.ஏ.மதுரம், டி.பி.பொன்னுசாமி பிள்ளை, கே.பி.காமாட்சி, திருச்சூர் பத்மாவதி, புளிமூட்டை ராமசாமி, மாஸ்டர் காக்கா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்தனர். பிரபல பாடகர் சி.எஸ்.ஜெயராமன் பாட வருவதற்கு முன் தனது பதின் பருவத்தில் இந்தப் படத்தில் ஒரு சிறுவனாக நடித்தார். படத்தில் பாடவும் செய்தார். என்.எஸ்.பாலகிருஷ்ணன் மற்றும் கே.எம்.கௌரீசன் இசையமைத்தனர். பிரபல ஒளிப்பதிவாளர் இ.ஆர்.கூப்பர் கேமராவைக் கையாள, கே.எஸ்.மணி இயக்கினார். கலைவாணர் - மதுரம் ஆகியோரின் நகைச்சுவை விருந்து இருந்தாலும் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.