bangalore

img

விக்ரம் லேண்டரை தொடர்புகொள்ள முடியவில்லை : இஸ்ரோ தகவல்

பெங்களூரு:
நிலவின் தென்துருவத்தில் உள்ள லேண்டர் விக்ரமுடன் இதுவரை தகவல் தொடர்பை ஏற்படுத்த முடியவில்லை என்றும், அதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான இஸ்ரோ தெரிவித்துள்ளது.

சந்திரயான் 2 திட்டத்தின் விக்ரம் லேண்டரை நிலவில் தரையிறக்கும் முயற்சி கடந்த 7ஆம் தேதி அதிகாலை  நடைபெற்றது. நிலவின் தரையில் இருந்து 2.1 கிலோமீட்டர் உயரத்தில் லேண்டருடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டாலும், நிலவின் பரப்பில் உடைந்து விடாமல் முழுமையாக லேண்டர் இருப்பதாகவும், அதேநேரத்தில் சாய்ந்து கிடப்பதாகவும் இஸ்ரோ வட்டாரம் தெரிவித்தது.  இஸ்ட்ராக் (ISTRAC) எனப்படும் இஸ்ரோவின் தொழில்நுட்பக் குழுவினர், லேண்டர் விக்ரமுடன் தகவல் தொடர்பை மீட்டமைக்க முழுவீச்சில் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.இந்நிலையில், லேண்டர் விக்ரமின் இருப்பிடத்தை, நிலவை சுற்றி வரும் ஆர்பிட்டர் கண்டறிந்துவிட்டாலும், இதுவரை தகவல் தொடர்பு கிடைக்கவில்லை என்று இஸ்ரோவின் டிவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் லேண்டர் விக்ரமுடன் தகவல்தொடர்பை ஏற்படுத்த சாத்தியமான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.