பண்ணை அடிமை குடும்பத்திலிருந்து மலர்ந்த மக்கள் தலைவர் எம்.செல்லமுத்து - சாமி. நடராஜன்
இந்திய விடுதலைக்கு முன்பு நிலப்பிரபுத்துவத்தின் உச்சபட்ச கோரத்தாண்டவத்தின் பிடியில் ஒன்றுபட்ட தஞ்சை மாவட்ட கிராமங்கள் இருந்தன. அதிலும் உழைக்கக்கூடிய பாட்டாளி வர்க்கமாக இருந்த தாழ்ந்தப்பட்ட மக்களின் வாழ்நிலையை சொல்லி மாளாது ஆண்டைகளின் உத்தரவுகளை மீறி எதுவும் செய்ய முடியாது. ஏன் என்று கேட்டால் சாணிப்பால், சவுக்கடி. பொழுது விடியும் முன்பு வயல்க ளுக்கு செல்ல வேண்டும். பொழுது முடிந்து இருள் சூழ்ந்த பின்பு தான் வயல்களிலிருந்து விவசாயக் கூலிகள் தங்கள் இருப்பிட பகுதிகளுக்கு வரமுடியும். இப்படிப்பட்ட பண்ணை யடிமை குடும்பங்களில் ஒரு குடும்பம் தான் தோழர்.எம்.செல்லமுத்துவின் குடும்பமும். 20.5.1938ஆம் ஆண்டு இன்றைய நாகப்பட்டினம் மாவட்டம் புதூர் ஊராட்சி நமச்சிவாயபுரம் கிரா மத்தில் மொட்டையன்- வடுகம்மாள் தம்ப தியருக்கு மூத்த மகனாக செல்லமுத்து பிறந்தார். இரண்டு சகோதரிகள், ஒரு சகோதரன் உடன் பிறந்தவர்கள்.
கம்யூனிஸ்ட் கட்சி தொடர்பு
தனது சொந்த கிராமமான நமச்சி வாயபுரத்தில் உள்ள பண்ணை ஒன்றில் மாடுகளை மேய்க்கும் வேலையை தானும், தனது சகோதரரும் சேர்ந்து செய்தனர். காலையில் பண்ணை வீட்டில் பழைய சோறு போடுவார்கள். மாலையில் மாடுகளை பண்ணையில் கட்டிய பிறகு சாப்பாடு போடுவார்கள். மாதக் கூலியாக மூன்று மரக்கால் நெல் கொடுப்பார்கள். 4ஆவது வகுப்பிற்கு மேல் படிக்க முடியாமல் பண்ணையில் கூலியாக 10 ஆண்டு காலம் வேலை செய்து வந்தார். இந்த காலகட்டத்தில் அப்பகுதி முழுவதும் நிலப்பிரபுத்துவ கொடுமைகளுக்கு எதிராக செங்கொடி இயக்கத்தின் கூட்டங்களும், போராட் டங்களும் நடைபெற்று வந்தன. அந்த கூட்டங்களில் கலந்து கொண்டு தலை வர்கள் உரைகளை உன்னிப்பாக கவனித்தார். 1960இல் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பி னராக தன்னை இணைத்துக் கொண்டார். இதன் பிறகு படிப்படியாக அப்பகுதி பண்ணைகளில் நடைபெறும் உழைப்புச் சுரண்டலுக்கு எதிராக வலு வான போராட்டங்களை முன்னெடுத் தார். அக்காலத்தில் கீழத்தஞ்சை மாவட்டம் முழுவதும் பண்ணைகளில் நடைபெறும் கொடுமைகளை நேரில் அனுபவித்தவர் தோழர்.எம்.செல்ல முத்து. அதன் வலி என்னவென்று உணர்ந்தவர். எனவே, பண்ணை அடி மைத்தனத்தை முற்றிலும் ஒழிப்ப தற்கான போராட்டக்களத்தில் முன் னணி படைவீரராகச் செயல்பட்டார். 1964இல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உதயமான போது தோழர்கள்.கே.ஆர்.ஞானசம்பந்தம், கோ. வீரய்யன், பி.எஸ்.தனுஷ்கோடி, ஜி.பாரதி மோகன், என்.வெங்கடாசலம் போன்ற தலைவர்களோடு சேர்ந்து பணி யாற்றினார்.
போலீசார் பூட்ஸ்கால் தாக்குதல்...
1968இல் மாவட்டம் முழுவதும் பண்ணையாளர்கள் விவசாயக் கூலிக ளுக்கு வேலைவாய்ப்பை பறிக்கும் வகையில் ஏர் உழவுக்கு பதிலாக டிராக்டர் கொண்டு வந்து வயல்களில் இறக்கும் போது, அதற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் அவருடைய சொந்த கிராமமான நமச்சிவாயபுரத்தில் இவர் தலைமையில் நூற்றுக்கணக்கான விவசாயத் தொழிலாளர்கள் நிலத்தில் படுத்து மறியல் போராட்டம் நடத்தினர். நூற்றுக்கணக்கான போலீசார் போராடிய விவசாயத் தொழிலாளர்களை கண்மூடித்தனமாக தாக்கினர். அப்போது தோழர் செல்லமுத்து மல்லாந்து படுத்து போராட்டம் நடத்திய போது காவலர்கள் அவரின் அடி வயிற்று பகுதியில் பூட்ஸ் காலால் தொடர்ந்து மிதித்து கடும் தாக்குதல் தொடுத்தார்கள். இதன் காரணமாக அவருடைய சிறுநீரகங்கள் கடுமை யாகப் பாதிக்கப்பட்டன. அவர் இறக்கும் வரை அந்த பாதிப்பு இருந்து கொண்டே யிருந்தது. விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் நிர்வாகியாகச் செயல்பட்டவர், படிப்படியாக உயர்ந்து கட்சியின் மாவட்டச் செயலாளராக, மாநிலக்குழு உறுப்பினராக உழைப்பால் உயர் பொறுப்புகளுக்கு வந்தார்.
சட்டமன்ற உறுப்பினர்
திருவாரூர் சட்டமன்றத் தொகுதியி லிருந்து இரண்டு முறை (1980, 1984) தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டார். 7 ஆண்டு காலம் சட்டமன்ற உறுப்பினராக இருந்த போது சாதாரண ஏழை, எளிய, விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பேசிய வர். திருவாரூர் தொகுதியில் பல இடங்களில் புதிய பள்ளிக்கூடங்கள், சாலைகள், மருத்துவமனைகள் வருவதற்கு முக்கியப் பங்காற்றினார். சட்டமன்ற உறுப்பினராக இருந்த காலங்களிலும் மிக எளிமையாக சாதாரண மனிதராகவே செயல்பட்டார். எப்போதும் தோளில் கிடக்கும் துண்டை சில நேரங்களில் தலையில் முண்டாசாக கட்டிக் கொள்வார். ஒருமுறை இவர் அரசு விரைவுப்போக்குவரத்து பேருந்து நிறுத்தம் சென்னை பிராட்வேயில் இயங்கிய போது திருவாரூர் செல்வ தற்கான பேருந்தில் ஏறி முன்வரிசை யில் உள்ள 7ஆம் எண் சீட்டில் உட் கார்ந்துள்ளார்.
முண்டாசுக் கட்டும் விஐபி சீட்டும்
பேருந்தில் ஏறிய நடத்துநர் தலையில் முண்டாசுடன் அமர்ந்திருந்த செல்லமுத்துவைப்பார்த்து “யோவ் எழுந்திரி, இங்கே உட்காரக்கூடாது. பின்பக்கம் உள்ள கடைசி சீட்டில் உட்கார்” என பேசியுள்ளார். இவர் பொறுமையாக ஏன் இந்த சீட்டில் உட்காரக்கூடாது என கேட்டுள்ளார். அதற்கு நடத்துநர் “இது வி.ஐ.பி சீட்டுயா” என்றார். அதற்கு செல்லமுத்து அவர்கள் “வி.ஐ.பி-ன்னா யாரு” என கேட்டுள்ளார். நடத்துநர் உடன டியாக “விஐபி என்றால் எம்.பி, எம்.எல்.ஏ” என சொல்லியுள்ளார். இவர் “நானும் எம்.எல்.ஏ தான்பா” என சொல்லி யுள்ளார். நடத்துநர் உடனே “யாருக்கிட்ட கதை யடிக்கிற நீ எம்.எல்.ஏவா” என ஒரு மையில் பேசியவுடன், இவர் அமைதி யாக எம்.எல்.ஏ அடையாள அட்டையை எடுத்து கொடுத்தவுடன், அவர் அப்படியே ஆடிப்போய் “தலைவரே என்னை மன்னித்து விடுங்கள்” என கெஞ்சியுள்ளார். தோழர்.செல்லமுத்து சிரித்துக் கொண்டே “பரவாயில்லை. உங்கள் வேலையை நீங்கள் செய்தீர்கள்” என சொல்லியுள்ளார்.
குடும்ப வாழ்க்கை
1962ஆம் ஆண்டு தோழர்.செல்லமுத்து - லட்சுமி தம்பதியருக்கு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு சுசீலா, கோதாவரி என்ற இரு மகள்க ளும், ஹோசிமின், சுந்தரய்யா, ஜீவா என மூன்று மகன்களும் உள்ளனர். நான்காவது வரை மட்டுமே படித்திருந்த தோழர்.எம்.செல்லமுத்து தனது குழந்தைகளை உயர்படிப்புகள் வரை படிக்க வைப்பதற்கு மிகவும் சிரமப் பட்டார். இருவர் முனைவர் பட்டமும், இருவர் பொறியியல் பட்டமும் பெற்று பணியாற்றிக் கொண்டுள்ளனர். தனது பிள்ளைகள் அனைவருக்கும் கட்சித்தலைவர்கள் பெயர் சூட்டி மகிழ்ந்தார். அவருடைய பிள்ளைகள் அனைவரும் கட்சியோடு தொடர்ந்து பயணிக்கின்றனர்.