மார்க்சிய வரலாற்றாசிரியர், எழுத்தாளர், கல்வியாளர் மற்றும் சிறந்த இலக்கியவாதியான ராம் சரண் சர்மா 1919 நவ.26 அன்று பீகார் மாநிலம் (பெகுசராய் மாவட்டம்) பரௌனி கிராமத்தில் பிறந்தார்.
1958 இல் பாட்னா பல்கலைக்கழ கத்தில் வரலாற்றுத் துறை தலைவராக பணியாற்றினார். இவர் இந்தியாவின் பண்டைய மற்றும் இடைக்கால வரலாற்றில் நிபுணத்துவம் பெற்றவர். தனது பரௌனி கிராமத்தின் தரத்தை மேம்படுத்துவதற்கான போராட்டத்தில் முன்னிலை வகித்தார். குறிப்பாக, குழந்தைகள், பெண்களுக்கு கல்வி வசதிகள் கிடைக்கச் செய்தார்.
பேராசிரியர் சர்மாவின் நிபுணத்துவத்தை அவரது படைப்புகள், கல்வெட்டு, இலக்கியம், நாணயவியல் மற்றும் தொல்பொருள் என அனைத்து வகை நூல்களும் காட்டுகின்றன. ஏகாதிபத்திய - காலனித்துவ வரலாறு மற்றும் சமீப கால கலாச்சார பேரினவாதிகளால் உருவாக்கப்பட்ட பல கட்டுக்கதைகளை தகர்த்தெறிய இது அவருக்கு உதவியது.
விஞ்ஞான வரலாற்றைப் பரப்புவதில் சர்மாவின் அர்ப்பணிப்பு எல்லையற்றது. தனது வாழ்நாள் முழுவதும் வகுப்புவாத இருட்டடிப்பு, சாதிவெறி மற்றும் பாசிச சக்திகளை எதிர்த்து தொடர்ந்து போராடினார்.
இவரது புத்தகங்கள் உலக மொழிகள் பலவற்றில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவர் இந்தியாவில் நகர்ப்புறச் சிதைவு, ஆரியர்களைத் தேடுதல் மற்றும் இந்தியாவின் பண்டைய கடந்த காலம் போன்ற புகழ்பெற்ற நூல்களை எழுதியுள்ளார்.
புதுமையான சிந்தனைக்கு உத்வேகம் அளித்த இவர், 2011 ஆகஸ்ட் 20 அன்று தனது 91-வது வயதில் மறைந்தார்.