articles

img

ரயிலை நேசிப்பவர்கள் பாஜக அரசை வீழ்த்துவார்கள் - ஆர்.இளங்கோவன்

சொற்ப செலவில் ரயில் பயணம் என்பதை  மோடி அரசு ஒழித்துவிட்டது.இப்போ தெல்லாம் சிறப்பு கட்டண, சிறப்பு ரயில்கள்தான். பிரிமியம் தட்கல் தான். இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதிக்கே விமானக்கட்டணம் அளவுக்கு எகிறி விடுகிறது. முதியோர் கட்டணச் சலுகை  ரத்து. காசி -  இராமேஸ்வரம் போகிறவர்களின் வயிற்றில் அடித்துவிட்டார்கள். 12 கோடிப்பேர் அந்த  சலுகையை அனுபவித்தார்கள். அப்போது 2000 கோடி  ரூபாய் தான் ரயில்வேக்கு கூடுதல் செலவானது. கார்ப்பரேட்டுகளுக்கு 25 லட்சம் கோடி ரூபாய் கடனை அரசு செலவில் தள்ளுபடி செய்வார்களாம்.12 கோடி முதியோருக்கு 2000 கோடி ரூபாய் செலவு செய்யமாட்டார்களாம். சாதாரண பயணி வண்டிகளை எல்லாம் சிறப்பு விரைவு வண்டிகளாக்கி கட்டணக்கொள்ளை.முன்  பதிவில்லா இரண்டாம் வகுப்பு பொதுப் பெட்டிகளே பல வண்டிகளில் இல்லாமல் காலிசெய்து விட்டார்கள். சில வண்டிகளில் ஒன்று இரண்டு பெட்டிகளே உள்ளன. எல்லாம் முன்பதிவு பெட்டிகளே.அதுவும் ஏசி பெட்டிகளே அதிகம். ரயில்வேயில் 53 வகையான கட்டண சலுகை இருந்தது. 30 சலுகைகளை வெட்டி 23 ஆக சுருக்கி விட்டார்கள். பத்திரிகையாளர்கள் முதல் விவசாயி கள், இளைஞர்கள் வரை பெற்ற சலுகை கட்டணங்கள் ரத்து.

காலிப்பணியிடங்களால் ஏற்படும் விபத்துகள்

ஒரிசாவில் கோரமண்டல் விரைவு வண்டிக்கு ஏற்பட்ட விபத்து மறக்க முடியுமா? 3 லட்சம் காலிப்பணியிடங்கள்; பழைய சிக்னல்பாதி தான் புதுப்பிக்கப்படுகிறது; தண்டவாளம் 4500 கிலோமீட்டர் ஆண்டுதோறும் பழுதுபட்டும் 2000, 3000 கி.மீ.க்கு மேல் பழுது பார்க்க பணம் ஒதுக்க வில்லை; 10000 கிலோமீட்டர் பாக்கி;கவச் தொழில் நுட்பத்திற்கு பணம் ஒதுக்கவில்லை;100 வண்டி போக வேண்டிய தண்டவாளத்தில் 150 வண்டி போகிறது. போகவர சரக்குப்போக்குவரத்துக்கு தனிப் பாதை,  பயணி வண்டிகளுக்கு தனிப்பாதை போட்டால்தான் பிரச்சனை தீரும். ரயில் பாதுகாப்புக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் செலவு செய்ய பணம் ஒதுக்க தலைமை  கணக்கு அதிகாரி பரிந்துரைத்தும் சட்டை செய்யாத மோடி அரசு.

பட்ஜெட்டே ரத்தானது

ஐந்தாண்டு திட்டத்தை ஊற்றி மூடிவிட்டார்கள்.காங்கிரஸ் அரசு 2012 முதல் 2032 வரை 35.30 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டில் ரயில் வளர்ச்சிக்கு 20 ஆண்டு திட்டம் போட்டது.வேகம் அதிகரித்தல்,அதிக போக்குவரத்தை ரயிலுக்கு ஈர்த்தல், சரக்கு, பயணி பாதைகளை தனித்தனியாக நிறுவுதல் எல்லாம் லட்சியம். 2014 ல் மோடி வந்தவுடன் இந்த திட்டங்களை ரத்து செய்துவிட்டது. 2017ல் ரயில் பட்ஜெட்டையே ரத்து செய்தார்கள்.  2018 முதல் 2030 வரை 12 ஆண்டுகளில் 50 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்து ரயில் பிரச்ச னையை தீர்ப்போம் என்று 2019-ல் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். 2019 முடிவிலேயே அதை கைவிட்டு விட்டார். 2019 முதல் 2025 வரை 111 லட்சம்கோடி ரூபாயில்  தேசிய அடித்தள கட்டுமான திட்டம் (National Infrastructure Pipeline) என்று மோடி அறிவித்தார். அதில் 13.69 லட்சம் கோடி ரயிலுக்கு என்றார். 87 சதமானம் ஒன்றிய அரசே கொடுக்கும் என்றார். அந்தப் பேச்சு முடிவதற்குள், தேசிய ரயில் திட்டம் (National Rail Plan) அறிவித்தார். இது 2021 முதல் 2051 வரை 38.5 லட்சம் கோடி ரூபாய் செலவில் அமல்படுத்தப்படும் என்றார். ஆனால் பேச்சு வெறும் பேச்சுத்தான். கதிசக்தி : 3 வகை பாதைகள்- 11லட்சம் கோடி ரூபாய் - 8 ஆண்டுகள் இந்த ஆண்டு பட்ஜெட்டில் அந்த திட்டங்கள் எல்லாம் என்ன ஆகின என்பதைப்பற்றி எந்த பரிசீலனையும் இன்றி முற்றிலும் புதிய திட்டத்தை நிதி அமைச்சர் அறிவித்தார்.

3 காரிடார் அமைக்கப்போகிறார்களாம்.எரிசக்தி, தாது, சிமெண்ட் காரிடார். துறைமுக தொடர்பு காரிடார்; உயர்போக்குவரத்து நெரிசல் உள்ள காரிடார்.  இந்த காரிடார் மட்டும் ‘அம்ரித் சதுர்புஜ்’ என்று அழைக்கப்படுமாம். அதாவது தங்க நாற்கரம்.மூன்றுக்கும் 11 லட்சம் கோடிரூபாய் செலவு ஆகுமாம்.  இந்த திட்டம் 6 முதல் 8 ஆண்டுகள் பிடிக்குமாம். இதற்கும் கூட இன்னும் அமைச்சரவை ஒப்புதல் வழங்கவில்லை. 10 ஆண்டுகளில் இவர்கள் செய்ததெல்லாம் மெகா  அறிவிப்புகள்தான். உருப்படியாக ஒரு திட்டமும் நிறைவேற்றவில்லை. எனவே வேகமான, பாதுகாப்பான, கட்டுப்படி யான கட்டணத்தில் ரயில் பயணம் என்பது கேள்விக்குறியதாகிவிட்டது. ரயில்வே வளர்ச்சி என்பது நுலிழைகூட அதிகரிக்கவில்லை. 2.45 லட்சம் கோடி ரூபாய் இந்த ஆண்டு முதலீடு என்கிறார்களே, எந்த திட்டத்தில்  தெரியுமா? வந்தே பாரத் தயாரிக்க தனியாருக்கு கொடுக்கவும்; மும்பை அகமதாபாத் புல்லட் ரயிலுக்கும் தான். பொதுவான ரயில்வே வளர்ச்சித் திட்டங்களில் எதற்கும் இல்லை.

தமிழகத்தின் கதி அதோ கதி

தமிழகத்தில் புதிய பாதை திட்டங்கள் 2006 முதல் கிடப்பில் கிடக்கின்றன.அவற்றை நிறைவேற்ற 11000 கோடி ரூபாய் தேவை. அத்திப்பட்டு-புத்தூர்; திண்டிவனம்- -செஞ்சி-திருவண்ணாமலை; ஈரோடு-பழனி; சென்னை-மகாபலிபுரம்-கடலூர்; மதுரை-அருப்புக்கோட்டை-தூத்துக்குடி; திருப்பெரும்பதூர்-கூடுவாஞ்சேரி-இருங்காட்டுக்கோட்டை-ஆவடி ; மொரப்பூர்-தர்மபுரி; இராமேஸ்வரம்-தனுஷ்கோடி; சின்னசேலம்-கள்ளக்குறிச்சி; தஞ்சாவூர்-பட்டுக்கோட்டை;

இந்த திட்டங்களுக்கு ஒதுக்கிய தொகை எவ்வளவு தெரியுமா?

ஒவ்வொன்றுக்கும் வெறும் ஆயிரம் ரூபாய்.சுட்டிக்காட்டி விமர்சனம் செய்தபின் சென்ற பட்ஜெட்டில் 50 கோடி ,20 கோடி,100 கோடி என்று ஒதுக்கினார்கள். ஆனால் ஒதுக்கியது பாதுகாப்பு நிதியிலிருந்து. விமர்சனம் வந்ததால் அதையும் வாபஸ் வாங்கிவிட்டார்கள். இதுதான் ‘விக்சித்’ பாரத்! வளர்ச்சி பாரத்! மோடிக்குத்தான் வளர்ச்சி.ரயிலுக்கு தளர்ச்சி.

தீவிர தனியார் மயம்

வந்தே பாரத் உற்பத்தியை பன்னாட்டு முதலாளிகளிடம் ஒப்படைக்கப் பார்த்தார் மோடி.நாடே எதிர்த்துப்போராடியது. 150 ரயில்களை தனியாருக்கு தாரை வார்க்க ஏலம் விட்டார் மோடி.தேர்தல் பத்திரம் வாங்கி லஞ்சம் கொடுத்த கோவை லாட்டரி ஏஜென்ட் மார்ட்டினுக்கு கோவை - சீரடி தனியார் ரயிலை தாரை வார்த்ததை மறக்க முடியுமா? ரயில் நிலையங்களையும், ஐசிஎஃப் உள்ளிட்ட  உற்பத்தி பிரிவுகளையும், பணிமனைகளையும்,குட்ஷெட்டுகளையும்,மைதானங்களையும் தனியாருக்கு தாரை வார்க்க திட்டம் போட்டுள்ளார் மோடி. பொதுத்துறையே சாவதற்குத்தான் பிறந்துள்ளது என்கிறார் மோடி. ரயில்வேயை தனியார்மயமாக்க ஏற்றபடி சலுகைகளை ரத்து செய்கிறார்.கட்டணங்களை உயர்த்துகிறார்.தேசிய ரயில் திட்டத்தில் ரயிலை வளர்க்கிறாரோ இல்லையோ தனியார்மயத்துக்கு திட்டம் போட்டுள்ளார்.2031க்குள் அனைத்து சரக்கு ரயில்களும் பயணி ரயில்களும் தனியார்மயமாக்கப்படும் என்கிறார். தனியார்மயமானால் கட்டணம் மேலும் உயரும்.  ரயில் பயணம் சாதாரண மக்களுக்கு எட்டாக்கனி யாகிவிடும். சலுகைகள் அனைத்தும் ரத்தாகும். வேலைவாய்ப்பு தனியார் மயமாகி கண்ணிய வேலை இட ஒதுக்கீடு அனைத்தும் பறிமுதலாகும். எனவே ரயிலை நேசிப்பவர்கள் மோடிக்கு வாக்களிக்கமாட்டார்கள்.