articles

img

டிஜிட்டல் நாணயம் உடனடி மாற்று அல்ல! - சிவசங்கர்

இந்தியாவின் மத்திய வங்கியாக செயல்படும் ரிசர்வ் வங்கி கடந்த அக்டோபர் மாதம் 7ம் தேதி மத்திய வங்கி டிஜிட்டல் நாணயம் (Central Bank Digital Currency) என்ற புதிய நாணய  வடிவத் திற்கான வரைவை அறிமுகப்படுத்தியது. இந்த புதிய  திட்டமானது பொதுமக்களிடம் போதிய அறிமுகத் திற்கு உள்ளாவதற்கு முன்னரே அவசர கதியில் நவம்பர் 1-ஆம் தேதி முதல் மொத்த விற்பனை (Wholesale) நாணய புழக்கத்திலும், அதனைத் தொடர்ந்து டிசம்பர் 1ம் தேதி முதல் சில்லறை (Retail) நாணய வர்த்தகத்திலும் அறிமுகப்படுத்தப்பட்டது. மொத்த விற்பனை நாணயம் என்பது வங்கி களுக்கு இடையிலான பெரிய அளவிலான பணப்  பரிவர்த்தனைகளின் போது வங்கி மற்றும் பிற நிதி  நிறுவனங்களால் பயன்படுத்தப்படும் ஒன்றாகும். அதேபோல சில்லறை விற்பனை நாணயம் என்பது தனிப்பட்ட இரு நபர்களுக்கு இடையிலான பணப் பரிவர்த்தனைகளின் போது பயன்படுத்தக்கூடியது ஆகும். இந்த மத்திய வங்கி டிஜிட்டல் நாணயம் (CBDC) என்பது டிஜிட்டல் வடிவில் இயங்கும் ஒரு சட்டப்பூர்வமான நாணயமாக விளங்கும் என்று  ரிசர்வ் வங்கி தனது வரைவு அறிக்கையில் தெரி வித்துள்ளது. மேலும் இது புழக்கத்தில் இருக்கும் காகித ரூபாய் நோட்டுகளுக்கு இணையாக பரிமாற்றம் செய்து கொள்ளத்தக்க பாதுகாப்பான ஒன்றாக இருக்கும் என்றும் அது தெரிவிக்கிறது.

2022 ஜூலை மாதத்தின் படி 95% உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியைக் கொண்டுள்ள ஏறக்குறைய 15 நாடுகள் சட்டப்பூர்வமான டிஜிட்டல் நாணயத்தை நோக்கிய நகர்வில் பயணிக்கத் துவங்கி யுள்ளன. அவற்றில் இதுவரை 10 நாடுகள் வெற்றிகர மாக இதனை அமல்படுத்தி முடித்துள்ளன. உல கின் இரண்டாவது பெரிய பொருளாதாரத்தைக் கொண்டுள்ள சீனா உள்பட 17 நாடுகள் டிஜிட்டல் நாணயத்தை பரீட்சார்த்த முறையில் அமல்படுத்தத் துவங்கி உள்ளன. செயல்பாட்டுச் செலவுகள் குறைப்பு,  கிராமப்புற நிதிச் சேர்மான வளர்ச்சி, எல்லை தாண்டிய  சர்வதேச பணப்பரிவர்த்தனைகளில் புதுமையான  முன்முயற்சிகள், தனியார் மெய்நிகர் நாணயத்திற் கான மாற்று, புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி பணப் பரிவர்த்தனை செயல்பாடுகளின் திறனை அதிகரித்தல் போன்ற காரணங்களுக்காக டிஜிட்டல் நாணயத்தை நோக்கி நாம் விரைவாக நகர  வேண்டும் என்று இந்திய ரிசர்வ் வங்கி தனது அறிக்கை யில் குறிப்பிடுகிறது. அவற்றில் இருக்கும் உண்மைத் தன்மைகளை ஒவ்வொன்றாகப் பரிசீலிக்கலாம்:

செயல்பாட்டுச்  செலவுகள் குறைப்பு

காகித ரூபாய் நோட்டுக்களை பாதுகாப்பாக அச்சிடு வதற்கு கடந்த 2021-22 ஆம் நிதியாண்டில் மட்டும் சுமார்  4984 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. சர்வதேச  பணப்பரிவர்த்தனைகளில் டிஜிட்டல் நாணயத்தோடு சேர்த்து காகித ரூபாய் நோட்டுகளும் தொடர்ந்து புழக்கத்தில் இருக்கும் என்று ரிசர்வ் வங்கி தெரி விக்கிறது. மேலும் டிஜிட்டல் நாணய பரிவர்த்த னைகளைச் செயல்படுத்துவதற்கான தொழில்நுட்பச் செலவுகள் என்பது மிகவும் அதிகமாக இருக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே செயல் பாட்டுச் செலவுகள் பெரிய அளவில் குறையும்  என்ற  வாதத்தில் முழு உண்மை இருப்பதாகத் தெரிய வில்லை.

கிராமப்புறங்களை  உள்ளடக்கிய நிதி வளர்ச்சி

இணையதள வசதி இல்லாமலும் டிஜிட்டல்  நாணயப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும் என்றும், இதன் மூலம் இணையதள வசதிகள் இல்லாத  பின்தங்கிய கிராமப்புற பகுதிகளிலும் இவற்றைப் பயன்படுத்தி பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள லாம் என்றும் ரிசர்வ் வங்கி கூறுகிறது. எனினும் இவ்வாறு மேற்கொள்ளப்படும் இணைய வழி  இல்லாத பரிவர்த்தனைகள் முழுமையான பரிவர்த்த னையாக இருக்காது என்றும், இது பரிவர்த்தனை களில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட வழிவகுக்கும் என்றும் பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். மேலும் தற்போதைய ஒன்றிய பாஜக அரசு  வெளிப்படையான கார்ப்பரேட் ஆதரவுக் கொள்கை களை மிகத்தீவிரமாக கடைபிடித்து வருகிறது. சிறு மற்றும் குறு தொழில் கடன்களுக்கு 12 முதல் 22 சத வீதம் வரை வட்டி வசூலிக்கப்படுகிறது. இந்த விகிதம் வரக்கூடிய நாட்களில் இன்னும் அதிகரிக்கப்படும் என்று அஞ்சப்படுகிறது. அதே நேரத்தில் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வெறும் 7 சதவீத வட்டியில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் கடன்கள்  வழங்கப்படுகின்றது. அதையும் அவர்கள் திருப்பி செலுத்துவது இல்லை. இவ்வாறு சிறு, குறு தொழில் கடன்களின் மூலம் மிகப்பெரிய லாபத்தை ஈட்டி அவை பெரிய கார்ப்பரேட் நிறுவன கடன்களுக்கு மானியமாக வாரி வழங்கப்படுகின்றது. மேலும் கிராமப்புற நிதிச் சேவைகளில் மிகப்பெரிய பங்களிப்பைச் செலுத்திக் கொண்டிருக்கும் கிராம வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளை திட்டமிட்டு அழித்திடும் வேலைகளையும் துரிதமாக செய்து வருகிறது இன்றைய ஒன்றிய அரசு. உண்மை நிலை  இவ்வாறு இருக்க டிஜிட்டல் நாணய அறிமுகம் மூலம் கிராமப்புறங்களை உள்ளடக்கிய வளர்ச்சியை அதிகரிக்கும் என்ற ரிசர்வ் வங்கியின் வாதத்தை ஏற்க முடியாது.

சர்வதேச பணப் பரிவர்த்தனைகள்

உலக வங்கியின் அறிக்கைப் படி சர்வதேச பணப்பரிவர்த்தனைகளில் இந்தியா மிகப்பெரிய பங்கேற்பாளராக உள்ளதாகவும், 2021ம் ஆண்டில் மட்டும் இந்தியா சுமார் 87 பில்லியன் டாலர் அள விற்கான சர்வதேச பணப் பரிவர்த்தனைகளை ஈர்த்திருப்பதாகவும், அவற்றில் 20 சதவீதத்திற்கும் அதிகமான  பணம் அமெரிக்காவில் இருந்து பெற்றிருப்பதாகவும் தெரிய வருகிறது. தற்போது டிஜிட்டல் நாணய அறிமுகத்தின் மூலம் இது போன்ற சர்வதேச பரிவர்த்தனைகளுக்கான செலவு மிகப் பெரிய அளவிற்கு குறையும் என்று ரிசர்வ் வங்கி கூறுகிறது. இந்த பரிவர்த்தனைகள் முழுவதும் அயல்நாட்டு பரிவர்த்தனைகள் மேலாண்மை சட்டம் (Foreign Exchange Management Act) என்ற ரிசர்வ் வங்கியின் சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு நடக்கக் கூடியவை ஆகும். எனவே இத்தகைய பரிவர்த்த னைகளில் எந்த ஒரு மாற்றத்தை நிகழ்த்த வேண்டும்  என்றாலும் இந்த சட்டத்தை திருத்தி அமைக்க வேண்டும். ஆனால் அவ்வாறு இந்த சட்டங்கள்  திருத்தி அமைக்கப்பட்டு சர்வதேசப் பரிவர்த்தனை கள் எளிமையாகும் பட்சத்தில், அதே வகையில் அன்னிய செலாவணிகள் நாட்டை விட்டு வெளியேறும் நடைமுறையும் எளிமையாகும். இத னால் அன்னிய செலாவணிகள் நாட்டிற்கு உள்ளே வரும் அதே வேகத்தில் வெளியேறிவிடவும் வாய்ப்பு கள் அதிகம் உள்ளது. மேலும் இது பண மோசடிகள்  அதிகரிக்கவும் வழி வகுக்கும். எனவே ரிசர்வ் வங்கி  எவ்வாறு இவற்றையெல்லாம் கட்டுப்படுத்தப் போகிறது என்பது குறித்து விரிவாக பரிசீலித்து நடை முறைப்படுத்தினால் மட்டுமே இந்த வாதத்தைஏற்க முடியும்.

தனியார் மெய்நிகர் நாணயத்திற்கான  (கிரிப்டோ கரன்ஸி) மாற்று

கிரிப்டோ நாணயம் என்று சொல்லப்படக்கூடிய மெய்நிகர் நாணயங்களின் (அதாவது கையில் பெறமுடியாத- ஆனால் வர்த்தகத்தில் ஈடுபடுகிற நாணயம்) சமீபத்திய வளர்ச்சி பண மோசடி மற்றும் தீவிரவாத செயல்களுக்கான நிதி போன்றவற்றிற்கு உதவும் ஆபத்து உள்ளது என்று ரிசர்வ் வங்கி தனது அறிக்கையில் தெரிவிக்கிறது. மேலும் கிரிப்டோ நாணயங்களின் தங்கு தடையற்ற பயன்பாடு என்பது ஒரு நாட்டின் பணக் கொள்கையின் அடிப் படை நோக்கங்கள் மீது தீவிர தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும், ஒரு கட்டத்தில் இது ஒரு இணைப்  பொருளாதாரமாக உருவெடுத்து நாட்டின் பொருளா தார இறையாண்மையின் நம்பகத்தன்மைக்கு ஆபத்தை விளைவிக்கும் என்றும் ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைவர் கூறுகிறார்.

இந்திய ரிசர்வ் வங்கி கடந்த 2018 ஆம் ஆண்டு கிரிப்டோ கரன்சியைத் தடை செய்தது. எனினும் கிரிப்டோ கரன்சி விஷயத்தில் ரிசர்வ் வங்கி தனது தடையை அமலாக்குவதில் தோல்வி அடைந்து விட்டது என்று உச்சநீதிமன்றம் கடந்த மார்ச் 2020ல்  கூறியது. இதைத்தொடர்ந்தே கடந்த நவம்பர் 2021-ல் அனைத்து வகையான கிரிப்டோ நாணயங்களையும் முழுமையாக தடை செய்யும் சட்ட வரைவை ஒன்றிய  அரசு கொண்டு வந்தது. எனினும் இது நாடாளு மன்றத்தில் இதுவரை தாக்கல் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு ஒன்றிய அரசும்,  இந்திய ரிசர்வ் வங்கியும் இந்த விஷயத்தில் தொடர்ந்து ஒரு ஊசலாடும் போக்கையே கடைபிடித்து வருவது தெரிகிறது. இந்த நிலையை மாற்றி தனியார் கிரிப்டோ கரன்சிகளை முழுவதுமாக தடை செய்யும் சட்டத்தை உடனடியாக செயல்படுத்த ஒன்றிய அரசு முன்வர வேண்டும். இப்போது ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தி இருக்கும் டிஜிட்டல் நாணயம் என்பது பொதுமக்களுக்கு தனியார் கிரிப்டோ நாண யங்கள் வழங்கும் அனைத்து வசதிகளையும் உள்ளட க்கிய, அதேநேரம் பாதுகாப்புகளுடன் கூடிய சட்டப்பூர்வமான ஒரு டிஜிட்டல் நாணயமாக விளங்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த  டிஜிட்டல் நாணயத்தை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா,  பேங்க் ஆப் பரோடா, யூனியன் பாங்க் ஆப் இந்தியா,   ஹச்டிஎஃப்சி வங்கி (HDFC), ஐசிஐசிஐ வங்கி (ICICI), கோடக் மகேந்திரா வங்கி, எஸ் வங்கி, ஐடிஎப்சி ஃபர்ஸ்ட் வங்கி மற்றும் ஹெச்எஸ்பிசி வங்கி (HSBC) ஆகிய 9 வங்கிகளின் வழியே செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஒன்பது  வங்கிகளில் முதல் மூன்று வங்கிகள் மட்டுமே பொதுத்துறை வங்கிகள் என்பதும், மற்ற ஆறு  வங்கிகளும் தனியார் துறை வங்கிகள் என்பதும்  கவனிக்கத்தக்கது. தனியார் கிரிப்டோ கரன்சிகளுக்கு மாற்றாக பாதுகாப்பான மற்றும் நம்பகத் தன்மை  மிக்க ஒரு டிஜிட்டல் கரன்சியை அறிமுகப்படுத்துவ தாக அறிவித்துவிட்டு எவ்வித நம்பகத்தன்மைக்கும் உறுதித் தன்மைக்கும் உத்தரவாதமில்லாத தனியார் வங்கிகளின் மூலம் அவற்றை செயல்படுத்துவது பல கேள்விகளை எழுப்புவதாக உள்ளது.

புதுமையான மற்றும் திறன்வாய்ந்த பணப் பரிவர்த்தனை முறைமை

இந்த டிஜிட்டல் நாணயம் மூலம் மேற்கொள்ளப் படும் பரிவர்த்தனைகள் அனைத்தும் பாதுகாப்பான மற்றும் உடனடித் தீர்வை கொடுக்கக்கூடிய ஒன்றாக இருக்கும் என்று ரிசர்வ் வங்கி கூறுகிறது.  மேலும் இந்த டிஜிட்டல் நாணயத்தின் வரவால் பணப்பரி வர்த்தனைகளின் போது இரு வங்கிகளுக்கு இடை யிலான பங்களிப்புகள் என்பது பெரிய அளவில்  குறைகிறது. எந்த ஒரு தனிப்பட்ட வங்கிகளின் பங்களிப்பும் இன்றி நேரடியாக ரிசர்வ் வங்கியின் மையப்படுத்தப்பட்ட சர்வர் மூலம் ஒரு கணக்கில்  இருந்து மற்றொரு கணக்கிற்கு பணப் பரிவர்த்த னைகள் நடைபெறும் வாய்ப்பு உருவாகும். இதன் மூலம் சிக்கல்கள் அற்ற மிக எளிய வடிவிலான விரை வான பணப் பரிவர்த்தனைகளுக்கு சாத்தியக்கூறுகள் அதிகமாகும். மேலும் சமீப ஆண்டுகளாக உலக அளவிலும், நம் நாட்டிலும் கணிசமான அளவில் உயர்ந்துள்ள டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் வீச்சு இன்னும் வேகமாக அதிகரிக்கும்.

உலக அளவில் 95 சதவீத மொத்த உள்நாட்டு உற்பத்தியைக் கொண்டுள்ள நாடுகள் டிஜிட்டல் கரன்சியை நோக்கி சென்று கொண்டிருப்பதால் உலகச் சந்தையில் போட்டியிட வேண்டிய இந்தியா வும் அதை நோக்கி நகர வேண்டிய தேவை இருப்பதை  மறுக்க முடியாது. நவம்பர் 2016-ல் ஒரு மாதத்திற்கு 3 லட்சம் பரிவர்த்தனைகளையும், சுமார் 100 கோடி ரூபாய் மதிப்புகளையும் பெற்றிருந்த டிஜிட்டல் பரிவர்த்தனைகள் 2022-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் சுமார் 730 கோடி பரிவர்த்தனைகளையும், 12 லட்சம் கோடி ரூபாய் மதிப்புகளையும் கொண்டவை யாக மாறி இருக்கிறது. அதே நேரத்தில் 2016 நவம்பரில் 18 லட்சம் கோடி ரூபாய் மதிப்புடையதாக இருந்த காகித பணப்புழக்கம் 2021 நவம்பரில் 32 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதையும் சேர்த்து  கவனிக்க வேண்டிய தேவை உள்ளது. இதன்மூலம் காகித பணப்புழக்கத்தின் தேவை இந்திய சமூகத்தில் இன்றும் மிக அதிக அளவில் உள்ளது என்பது தெளிவாகிறது. எனவே டிஜிட்டல் நாணயம் என்பது காகித பணத்திற்கான உடனடி மாற்றாக முன்  வைப்பதில் எந்த நியாயமும் இல்லை. மாறாக ஏற்கனவே புழக்கத்தில் இருக்கும் முறைமையை பாதிக்காத வகையில் படிப்படியான முறையில் டிஜிட்டல் நாணயத்தின் செயல்பாட்டை புழக்கத்திற்கு கொண்டு வர வேண்டும்.

மேலும் ரிசர்வ் வங்கியின் இந்த டிஜிட்டல் கரன்சி  எந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்த இருக்கிறது என்பது குறித்து தெளிவாக விளக்கப்படவில்லை. ஒன்றிய நிதியமைச்சர் தனது பட்ஜெட் உரை யில் பிளாக் செயின் (Block chain) என்ற தொழில் நுட்பத்தை பயன்படுத்த திட்டமிட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த தொழில்நுட்பம் ஏற்கனவே பல தனியார் கிரிப்டோ கரன்சிகளில் பயன் படுத்தப்பட்ட ஒன்றாகும். இது இணையத் திருடர் களால் பலமுறை ஊடுருவப்பட்டு பல்வேறு மோசடி களுக்கு உள்ளான ஒரு தொழில்நுட்பம் என்பதற்கு உலகம் முழுவதும் பல உதாரணங்கள் உள்ளன.  எனவே இதுபோன்ற ஒரு பாதுகாப்பற்ற தொழில் நுட்பத்தை பயன்படுத்தாமல், நம் நாட்டிற்கென்று பிரத்யேகமான பாதுகாப்பான ஒரு புதிய தொழில் நுட்பத்தை உருவாக்க  வேண்டும்  என்பதே பொரு ளாதார வல்லுநர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

மேலும் இந்த டிஜிட்டல் நாணயம் என்பது ஒரு அடையாள முறையிலான அமைப்பாக உருவாக்கப் பட்டு, அதைப் பெறும் நபர் அந்த நாணயத்தின் மீதான அவரின் நியாயமான உண்மைத்தன்மையை உத்தரவாதப்படுத்திக் கொள்ள வேண்டிய பொறுப்பையும் உருவாக்க வேண்டும். மிக முக்கிய மாக  ரிசர்வ் வங்கியும் ஒன்றிய அரசும் இந்த விஷயத்தில் விழிப்புடன் செயல்பட்டு பொதுமக்கள் இவற்றை தாமாக முன்வந்து ஏற்றுக் கொள்ளும் படியாக மாற்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். 

கட்டுரையாளர் : இந்தியன் வங்கி ஊழியர் சங்க துணை பொதுச் செயலாளர்