articles

img

‘இனச்சான்று கிடைக்காமல் தவிக்கிறோம்; நாங்கள் செய்த குற்றமென்ன, சொல்வீர்!’ - பி.டில்லிபாபு

‘இனச்சான்று கிடைக்காமல் தவிக்கிறோம்; நாங்கள் செய்த குற்றமென்ன, சொல்வீர்!’

“ஐயா, எனக்கு சாதி சர்டிபிகேட் இருக்கு. ஆனால் என் பிள்ளைக்கு தர மறுக்கிறார் கள். என் மகன் பத்தாம் வகுப்பு முடித்துவிட்டான். மேல் படிக்க கோமுகி டேம் பள்ளிக்கு தான் போக வேண்டும். சாதி சர்டிபிகேட் இருந்தால்தான் சேர்ப்பார்கள், ஹாஸ்டலிலும் இடம் கொடுப்பார்கள்.” “நான் பழங்குடி காட்டுநாயக்கன் இனத்தைச் சேர்ந்தவன். எனக்கு, என் தம்பிக்கு, என் மனைவிக்கு எல்லாம் சர்டிபிகேட் இருக்கு. ஆனால் நான் பெற்ற மகன் காளியப்பனுக்கு மட்டும் தர மறுக்கிறார்கள்.” - இப்படி நூற்றுக்கணக்கான பழங்குடி பெற்றோர் களின் உள்ளக் குமுறல் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. இனச்சான்று பெறுவதற்காக நீதிமன்றம் முன்பும், திருத்தணி வட்டாட்சியர் அலுவலகம் முன்பும் பழங்குடி மக்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்கள் நாடு அறியும். தான் பிறந்த இனத்திற்கு இனச்சான்று கிடைப்பதற்கு வாழ்நாள் முழுதும் போராட வேண்டிய அவல நிலை இன்றும் தொடர்கிறது.

தமிழ்நாட்டில் பழங்குடியினர் நிலை

தமிழ்நாட்டில் கல்வி, வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை வழங்கிடும் நோக்கத்துடன் சமூக நீதியை உறுதி செய்திடும் வகையில் 37 இனக்குழுக் கள் அட்டவணை பழங்குடியினர் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் 7,95,697 பழங்குடி மக்கள் வசிப்பதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர் மக்களை பழங்குடி பட்டியலில் இணைத்த பிறகு 8,41,558 பழங்குடி மக்கள் வசிக்கின்றனர்.  இத்தகைய 37 இனக்குழுக்களைக் கொண்ட தமிழகத்தில் பழங்குடியினருக்கான முறையான ஆய்வு செய்து மாநில அரசின் பரிந்துரைகள் அடிப்ப டையில் நாடாளுமன்ற நிலைக்குழுக்கள் மற்றும் நாடாளுமன்ற விவாதத்திற்குப் பிறகு சட்டமாக்கப் பட்டு இந்திய குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெயரில் அறிவிக்கை வெளியிட்டு பழங்குடியினர் என்கிற அந்தஸ்து பெற்றுள்ளனர்.

அரசாணை 104 - தீர்வுக்கான வழி

சென்னை உயர்நீதிமன்றம் 16.12.2022 அன்று ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான இனச்சான்றி தழ் வழங்குவதற்காக கையேடு வெளியிடுமாறு தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டது. குமாரி மாதுரி பட்டேல் வழக்கின் தீர்ப்பு உட்பட பல்வேறு வழக்கு களைக் கணக்கில் எடுத்து நீதிமன்றம் இத்தகைய உத்தரவை (WP No.13851/2022) பிறப்பித்தது. தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி நலத்துறை செயலாளர் அவர்கள் அரசாணை (Go (Ms) No.104 நாள் 21.8.2023 அன்று) வெளியிட்டார். இந்த அரசாணையின் முக்கிய அம்சம்: “பெற் றோர்களுக்கு இனச்சான்று இருப்பின் அவர்களது வாரிசுகளுக்கும் மற்றும் ரத்த உறவுகளுக்கும் இனச்சான்று வழங்கப்பட வேண்டும்.” மேலும் மாநில கூர்நோக்கு குழுவில் மெய்த் தன்மை உறுதி செய்யப்பட்ட இனச்சான்று பெற்ற வர்களுக்கும் அவர்களது ரத்த உறவினர்களுக்கும் அந்த கோப்பின் அடிப்படையில் இனச்சான்று வழங்க வேண்டும் என்கிற உத்தரவும் உள்ளது.

மாதுரி பட்டேல் வழக்கு வழிமுறைகள்

பழங்குடியினர்/பட்டியல் சாதியினர் இட ஒதுக்கீட் டிற்கு அரசுப் பணி மற்றும் கல்வி நிறுவனங்களில் இனச் சான்றிதழ் மற்றும் சாதி சான்றிதழ் சம்பந்தப்பட்ட வர்கள் பணியில் சேர்ந்த ஆறு மாதங்களுக்குள் மாநில கூர்நோக்கு குழுவின் மூலம் சரிபார்க்கப்பட வேண்டும் என்று மாதுரி பட்டேல் வழக்கில் 1995ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. உண்மை யான பழங்குடிகளுக்கு அரசின் சலுகைகள் சென்றடைய வேண்டும் என்கிற நோக்கத்தில் உச்சநீதிமன்றம் இந்த தீர்ப்பை அளித்தது. தமிழ்நாட்டில் அரசாணைகள் மற்றும் வழிகாட்டு தல் நெறிமுறைகளைப் பின்பற்றி கடந்த காலங்களில் பழங்குடியினர் இனச்சான்று வழங்கப்பட்டது. குறிப்பாக சம்பந்தப்பட்ட வருவாய்த்துறை அதிகாரி கள் களஆய்வு செய்து ஆவணங்களையும் பார்த்து  தீவிர உள்ளூர் விசாரணைகள் மூலமாக இனச்சான்றி தழ் வழங்கப்பட்டு வருகிறது.

ஏன் அமல்படுத்தப்படவில்லை?

அரசாணை 104இன் வழிகாட்டுதல் நெறிமுறை கள் இருக்கும் போதும், தமிழகத்தில் சில வரு வாய் கோட்டாட்சியர்கள்/தாசில்தார்கள் அதை அமல் படுத்த மறுக்கிறார்கள். பெற்றோருக்கு வழங்கப் பட்ட இனச்சான்று அடிப்படையில் அவர்களது பிள்ளை களுக்கு இனச்சான்று கேட்டு மனு செய்தால், மானுட வியல் ஆய்வறிக்கைகள் அடிப்படையில் மட்டுமே இனச்சான்று வழங்க முடியும் என்கிற முரண்பாடான முடிவுகளை எடுக்கிறார்கள். அரசாணை 104 வழிகாட்டு நெறிமுறைகளுக்கு முரணாக தமிழ்நாட்டில் உள்ள சில வருவாய் கோட்டாட்சியர்கள் மானுடவியல் ஆய்வாளர்கள் கொண்ட குழுவை அமைக்கக் கூறுவதும், அரசாணை  104ஐ அமல்படுத்திட வேண்டிய பழங்குடியினர் இயக்குனர், அரசு செயலாளர் போன்றோர், மதுரை, திருவள்ளூர், சேலம், திண்டுக்கல் என படிப்படியாக அனைத்து மாவட்டங்களிலும்  மானுடவியல் குழுவை அமைத்துக் கொடுத்திடும் அரசாணையை துரிதமாக பின்பற்றி வருகின்றனர். இதனால் பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்ல வேண்டிய பழங்குடியின மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மதுரையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக ஒரு இளைஞர் ரயில்வே துறையில் பணி கிடைத்தும், அவரது பழைய இனச் சான்று அட்டை வடிவில் உள்ளதை பெற்று மாற்றி ஆன்லைன் சான்றாக வழங்க வேண்டி தமிழ்நாடு அரசின் இத்துறையின் அரசு செயலாளரை மன்றாடி மனு அளித்தும், மதுரை மாவட்ட ஆட்சியர், வரு வாய் கோட்டாட்சியர் இருவரும் “எங்களால் அத்த கைய ஆன்லைன் மூலமாகச் சான்று வழங்கிட முடி யாது. இப்போது மாநில கூர்நோக்கு குழு விசா ரணை செய்து கொண்டிருக்கிறார்கள்” என்று மறுத்து விட்டனர்.

அதிகாரிகளின் முரண்பாடுகள் மற்றும் எதிர்ப்புகள்

சேலம் மேட்டூர் வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட பண்ணவாடி, பூதப்பாண்டி, கொளத்தூர் போன்ற கிராமங்களில் பழங்குடியினருக்கான இனச்சான்று வழங்கிட மேட்டூர் வருவாய் கோட்டாட்சியர்கள் மறுத்ததால், சென்னை உயர்நீதிமன்றத்தை நாடி  22 குடும்பங்கள் வழக்கு தொடர்ந்தனர். சென்னை உயர்நீதிமன்றம் வழக்கில் முறையிட்ட 22 குடும்பங் களுக்கும் இனச்சான்று வழங்கும்படி உத்தரவு பிறப்பித்தது. ஆனால் அந்த உத்தரவை ஏற்று சேலம் மாவட்ட ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர், தமிழ்நாடு  அரசின் சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி நலத்துறை செயலாளர், இயக்குனர் என அனைவரும் சாதிச்சான்று வழங்கிட மறுத்து, உச்சநீதிமன்றத்திற்கு மேல்முறையீடு செய்துள்ளனர். இனச்சான்று வழங்க உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தாமல், பழங்குடி மக்களின் உரிமைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் அளவுக்கு வக்கிரமாக சில அதிகாரிகள் நடந்து கொண்டது பேரதிர்ச்சி அளிக்கிறது. இதே மேட்டூர் கோட்டத்திற்குள் நூற்றுக்கணக் கான பெற்றோர்கள் இனச்சான்று பெற்றுள்ளார்கள். அவர்களது பிள்ளைகளுக்கும் இனச்சான்று மறுக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றம் 8 குடும்பத்தி னரை மட்டுமே விசாரணை செய்து அறிக்கை கேட்டி ருந்த நிலையில், பழங்குடி நலத்துறை இயக்ககம் “அனைவரையும் விசாரணை செய்துவிடுவோம்” என்றும் “அரசுப் பணியில் இருந்து ஓய்வுபெற்று 10 வரு டங்களானவர்களையும் விசாரணை மேற்கொள்ள வேண்டும்” என்று மிரட்டி அச்சுறுத்தல் செய்து விசாரணை நடத்தி வருகிறது. திண்டுக்கல் மாவட்டம் ஒன்றுபட்ட மதுரை மாவட்டத்தில் இருந்து பிரிந்து 25 ஆண்டுகளாகிறது. இது நாள் வரை திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மலைவேடன் பழங்குடி மக்களுக்கு வருவாய் கோட்டாட்சியர் ஒரு சான்றிதழ் கூட வழங்க வில்லை. மாறாக, நீதிமன்றம் சென்று ஆவணங் களைச் சமர்ப்பித்து அதன் அடிப்படையில் 50க்கும் மேற்பட்ட இனச்சான்றுகள் பெற்றிருக்கிறார்கள். இவற்றில் முப்பதுக்கு மேற்பட்ட மலைவேடன் இனச்சா ன்றுகள் மாநில கூர்நோக்கு குழுவால் மெய்த்தன்மை உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் மாநில கூர்நோக்கு குழு இறுதி செய்யப்பட்ட இனச்சான்றுள்ள பெற்றோர்களின் அவர்களது பிள்ளைகளுக்கு வழங்க திட்டமிட்டே மறுக்கிறது திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம்.

மானுடவியல் ஆய்வு யாருக்கு?

மானுடவியல் ஆய்வு புதிதாக பழங்குடி அந்தஸ்து கோருபவர்களுக்கு மட்டுமே பொருந்தும். ஆனால் மதுரை சத்தியமூர்த்தி நகரில் 50 ஆண்டுகளுக்கு மேலாக வாழும் காட்டுநாயக்கர் பழங்குடி மக்கள் ஆயி ரத்துக்கும் மேற்பட்ட இனச்சான்றுகள் பெற்றுள்ள னர். இவர்களது பிள்ளைகளுக்கு இப்போது ஏன் மானுடவியல் ஆய்வு?

பழங்குடி பட்டியலில் இணைக்க வேண்டிய சமூகங்கள்

தமிழ்நாட்டில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பாக பழங்குடியினர் பட்டியலில் இருந்த வேட்டைக் காரன் பழங்குடி மக்களை அப்போது பட்டியலில் இருந்து நீக்கி வேறு பட்டியலில் இணைத்துவிட்டனர். “நாங்கள் பழங்குடிகள்தான், எங்களை மீண்டும் பழங்குடி பட்டியலில் இணைக்க வேண்டும்” என்று  கூறி பலகட்ட போராட்டங்களை தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கம், தமிழ்நாடு வேட்டைக்காரன் பழங்குடி மக்கள் முன்னேற்றச் சங்கமும் முன்னெடுத்துள்ளனர். தற்போதைய தமிழ்நாடு அரசின் நிர்வாகம் நிறை வேற்றும் என்று, திமுக அளித்த வாக்குறுதிகளில் வாக்குறுதி எண் 280: “வேட்டைக்காரன் சமூக மக்களை பழங்குடியினர் பட்டியலில் இணைப்போம்” என்று இருக்கிறது. ஆனால் அந்த கோரிக்கையை தமிழ்நாடு  அரசின் உயர் அதிகாரிகள் கிடப்பில் போட்டுள்ளனர். அதேபோல் புலையன் பழங்குடியின மக்கள் 60  ஆண்டுகளுக்கு முன்பாக பழங்குடியினர் அட்ட வணையில் இருந்தவர்கள். அவர்களும் பழங்குடி பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுவிட்டனர். தமிழ்நாடு முழுவதும் சொற்பமாக உள்ள புலையன் இன மக்களை பழங்குடி இன பட்டியலில் இணைத்திட விரைந்து நடவடிக்கை எடுத்திட வேண்டும். அத்த னை ஆய்வுகளும் முடித்து அரசுக்கு அனுப்பப்பட்டு பல வருடங்கள் ஆகின்றன. ஈரோடு மாவட்டத்தில் மலையாளிகள் கடம்பூர், பர்கூர், கடமலை போன்ற பகுதிகளில் பரந்து விரிந்து  வசித்து வருகின்றனர். தமிழ்நாடு அரசு ஈரோடு மாவட்டத்திலும் பழங்குடி மக்கள் வசிக்கிறார்கள் என்று திருத்தம் செய்து ஈரோடு மாவட்ட மலையாளி என்று அறிவிக்கை வெளியிட்டால் அந்த  மாவட்டத்தில் பழங்குடி மக்களுக்கும் இனச்சான்று கிடைக்கும். 30 ஆண்டுகால கோரிக்கையைத் தொடர்ந்து முன் வைத்துப் போராடிக் கொண்டிருக்கிறோம். அதேபோல்தான் குறவர் இனத்தின் உட்பிரிவு எனச் சித்தன்னார் குறவன் உட்பட அனைத்து குறவன் உட்பிரிவுகளை மலைகுறவன் பழங்குடி பட்டிய லில் இணைத்திட வேண்டும். குருமன்ஸ் இனத்தின் உட்பிரிவுகள் குறும்பா, குறும்பர் அனைத்தும் பழங்குடி பட்டியலில் சேர்த்திட வேண்டும். இக்கோரிக்கை களை தமிழ்நாடு அரசுக்கு மலைவாழ் மக்கள் சங்கம் பல ஆண்டு காலமாக முன்வைத்து வருகிறது.

 முதலமைச்சர் தலையிட வேண்டும்

போலியாக இனச்சான்று பெற்றவர்களை கண்டறிவதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் உண்மையான பழங்குடி மக்களுக்கு இனச்சான்று வழங்காமல் காலதாமதம் செய்வது சமூக நீதிக்கு முரணானது. மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் பழங்குடி மக்களின் சமூக நீதியை நிலைநாட்ட அரசாணை 104-ஐ முழுமையாக அமல்படுத்தி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இக்கோரிக்கைகளை நிறைவேற்றிட பல்லாயிரக் கணக்கான பழங்குடி மக்கள் சென்னை தலைமைச் செயலகத்தை நோக்கி நடத்திடும் போராட்டத்தினை இன்று (ஜூன் 30) நடத்துகிறது.