articles

img

அக்கிரமக்காரர்கள் மீது இனியேனும் நடவடிக்கை எடுக்குமா அரசு?

ஊரையே சூறையாடினர்! முதியோர்களையும் அவமானப்படுத்தினர்!

கதறகதற கற்பழிக்கப்பட்ட பெண்கள் 18 பேர்!

கர்ப்பிணிப் பெண்ணையும் தாக்கினர்! முடவரையும் முட்டியிலேயே அடித்தனர்!

வாச்சாத்தி கொடுமைகள் உண்மைகளே! அமைச்சர் .ஆடியது நாடகமே!

நல்லசிவன் தலைமையிலான குழுநேரில் அறிந்த திடுக்கிடும் தகவல்கள்

தருமபுரி மாவட்டம்  அரூர் வட்டத்தில் உள்ள வாச்சாத்தி கிராமத்தில் பழங்குடி மக்க ளின் வீடுகள் நொறுக்கப்பட்டதையும், பொருள்கள் சூறையாடப்பட்டதையும், பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளானதையும் கண்டித்து இத்தகைய செயல்களில் ஈடுபட்ட வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் ஏ.நல்லசிவன் எம்.பி., தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதியிருந்தார். இக்கடிதத்திற்கு பதில் அளித்த வனத்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் இக்குற்றச் சாட்டுகளை மறுத்து இக்கிராம மக்களிடமிருந்து ரூ.1.5 கோடி மதிப்புள்ள சந்தனக் கட்டைகளை அதி காரிகள் பறிமுதல் செய்த போது அக்கிராம மக்கள் அதிகாரிகளை தாக்கினர் என்றும், அந்த கிராமத்தில் உள்ள 300 குடும்பங்களும் சந்தனக் கடத்தலில் ஈடுபட்டு வருவதாகவும் புகார் கூறினார். பாலியல் வல்லுறவு போன்ற சம்பவங்கள் நடைபெறவில்லை என்றார் (தினமணி, மதுரை 23.7.92).

இதன் பிறகு ஜூலை கடைசி வாரத்தில் தர்ம புரிக்கு அமைச்சர் செங்கோட்டையன் வருகை தந்தபோது அவரும் மற்றும் சில அமைச்சர்களும் அங்கே ஒரு பொதுக்கூட்டத்தி லும் இக்குற்றச்சாட்டுகளை மறுத்து பேசியி ருக்கிறார்கள். அமைச்சர் செங்கோட்டையன் பேசும்போது, இத்தகைய சம்பவங்கள் எதுவும் நடை பெறவில்லை என்று மறுத்ததோடு இந்தக் கிராமத்தில் உள்ள ஒவ்வொருவரும் சந்தன மரக்கடத்தலில் ஈடுபட்டு தினசரி ரூ.500 சம்பாதிக்கிறார்கள் என்றும், இதைத் தடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டாமா என்றும் பேசியுள்ளார். மேலும் பேசுகையில், ஏ.நல்லசிவன் போன்ற தலைவர்கள் இதுபற்றி முழுமையாக விசாரிக்காமல் செய்திகளை திரித்துக்கூறுகிறார்கள் என்றும் ஏ.நல்லசிவன் அந்தக் கிராமத்திற்கு நேரடியாகச் சென்று பார்த்து, உண்மைகளை தெரிந்து கொள்ள வேண்டும் என்றும்  ‘அறிவுரை’ வழங்கினார்.

ஜூலை 28 அன்று தர்மபுரியில் நடைபெற்ற பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்தில் ஏ.நல்ல சிவன் பேசும் போது அமைச்சர் இந்தப் பிரச்சனை யில் நேரடியாக சம்பந்தப்பட்டிருக்கிறார் என்று குற்றம் சாட்டி அங்கு கூறப்பட்டுள்ள சம்பவங்கள்; உண்மையாக நடந்திருக்கக்கூடிய சம்பவங்கள். மூன்று பெண்கள் மட்டும் பாலியல் வல்லுறவு செய்யப்படவில்ல; உண்மையில் 18 பெண்கள் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டுள்ளனர் என்ற விபரத்தையும் எடுத்துரைத்தார். இந்த சம்பவத்தில்  பாதிக்கப்பட்ட இரண்டு பெண்களும் அந்தக் கூட்டத்திலேயே தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை எடுத்துக்கூறினார்கள். மலைவாழ்மக்கள் சங்கத்தின் பொறுப்பான மாநிலத் தலைவர்களும் தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஜனநாயக மாதர் சங்கத் தலைவர்களும், கட்சித் தலைவர்களும் நேரில் சென்று பார்த்து தந்த தகவல்களின் அடிப்படையில்தான் இந்தக் குற்றச்சாட்டுகளை தோழர் ஏ.நல்லசிவன் முன்வைத்தார். இருப்பினும் அமைச்சர் பெரு மான் கொடுத்த ‘அறிவுரை’யை ஏற்றுக் கொண்டு தோழர் ஏ.நல்லசிவன் எம்.பி., இந்தக் கிராமத்திற்கு ஜூலை 31 அன்று காலை சென்றார். அங்கு நேரில் மக்களைச் சந்தித்து விசாரிக்கும் போது இதுவரை சொல்லப்பட்ட விபரங்கள் கால்வாசிதான் என்பதும், அதைவிட பலமடங்கு கொடுமைகள் அங்கே நிகழ்த்தப்பட்டுள்ளன என்பதும் தெரியவந்தது. அமைச்சர் சொன்ன ‘அறிவுரை’ பயனுள்ளதாகவே அமைந்தது. 

இக்கிராமத்திற்கு தோழர் ஏ.நல்லசிவன் எம்.பி., யுடன் விவசாயத் தொழிலாளர் சங்கத்தினுடைய மாநிலச் செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவு மான கோ.வீரய்யன், விவசாயிகள் சங்கத்தின் மாநிலச் செயலாளரும், கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினருமான கே.வரதராசன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.அண்ணா மலை, ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலச் செய லாளர் பாப்பா உமாநாத், மைதிலி சிவராமன் ஆகி யோர் சென்றிருந்தனர். உண்மைகளை அந்த மக்களிடமிருந்து விசாரித்ததோடு அல்லாமல் பாதிக்கப்பட்ட வீடுகளையும் மற்ற இடங்களையும் இவர்கள் நேரில் சென்று பார்த்தார்கள். 

தாக்குதல்களின் பின்னணி 

இந்த கிராமத்தில் சுமார் 200 வீடுகள் உள்ளன. இவற்றில் சுமார் 120க்கும் மேற்பட்ட வீடுகள் அரசாங்கத்தினால் கட்டித் தரப்பட்ட தொகுப்பு வீடுகளாகும். இவற்றில் வசிக்கக்கூடிய குடும்பங்கள் அனைத்தும் மலையாளி என்று சொல்லப்படும்  மலைசாதி இனத்தைச் சார்ந்த வர்கள். மிகப் பெரும்பான்மையோருக்கு எழுதப் படிக்கத் தெரியாது. இந்த சித்தேரி மலை யில் சுமார் 600 கோடி ரூபாய் மதிப்புள்ள (ஆசியாவிலேயே மிகச் சிறந்த, தரமான) சந்தன மரங்கள் இருக்கின்றன. இதில் இதுவரை சுமார் 200 கோடி ரூபாய் மதிப்புள்ள சந்தன மரங்கள் ஆளுங்கட்சியைச் சேர்ந்த சில பிரமுகர்களும் இந்தப் பகுதியில் உள்ள சில முக்கியஸ்தர்களும் சேர்ந்து வனத்துறை அதிகாரிகளின் ஒத்துழைப் போடு கடத்தியிருக்கிறார்கள் என்ற விசயம் இந்தப் பகுதியில் வசிக்கும் பொது மக்கள் அனை வருக்கும் தெரிந்த ரகசியம்தான். இந்த கடத்தல் வேலையை - மலையில் இருக்கும் சந்தன மரத்தை வெட்டி அடிவாரத்திற்கு தூக்கிக்  கொண்டு வருகிற வேலையை அந்த  மலைசாதி மக்களை பயன்படுத்தித்தான் செய்ய முடியும். இந்த வேலைக்கு இவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் போது வனத்துறை அதிகாரிகள் இவர்கள் மீது வழக்குப் போட்டு சிறையில் அடைத்து விடு வோம் என்று மிரட்டி இந்த மக்களை இந்த வேலை யில் ஈடுபடுத்தியிருக்கிறார்கள். தொடர்ந்து முழு ஒத்துழைப்பு கொடுக்காததால் இந்த ஊரிலே வசிக்கின்ற மக்களுக்கும், வனத்துறை அதி காரிகளுக்கும் இடையே ஒரு முரண்பாடு இருந்து வந்திருக்கிறது.  அரூர் தாலுகாவில் எங்கு சென்றாலும் இந்த சந்தன மரக்கடத்தலில் ஆளும் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ஒருவர், அரூர் நகரத்தைச் சேர்ந்த அதிமுக வழக்கறிஞரும், கூட்ரோடு என்ற ஊரில் உள்ள ஆளுங்கட்சியைச் சேர்ந்த பிரமுகர் ஒருவரும் பாப்பிரெட்டிப்பட்டியில் உள்ள ஆளும் கட்சியைச் சேர்ந்த மற்றொரு பிரமுகரும் ஒரு குறிப்பிட்ட வனத்துறை அதிகாரியும் சந்தன மரக்கடத்தலில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள் என்பது எல்லா மக்களாலும் பேசப்பட்டு வருகிற ஒன்று. கூடிய சீக்கிரத்தில் பாக்கியுள்ள மரங்கள் அனைத்தையும் வெட்டி விற்று விட வேண்டும் என்பது இவர்களின் திட்டம் என்றும் பரவலாக பேசப்படுகிறது.   

தாக்குதல்கள்

இந்தக் கிராமத்தில் உள்ள அனைத்தும் வீடு களும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. ஓடுகள் அனைத்தும் உடைத்து எறியப் பட்டுள்ளன. வீடுகளுக்குள் இருந்த மண்பானை கள் உடைக்கப்பட்டு, அந்த சிதறல்கள் அங்கேயே கிடக்கின்றன. சில வீடுகளில் கதவுகள் உடைக்கப்பட்டு எடுத்துச் செல்லப்பட்டி ருக்கின்றன. சில வீடுகளும் இடிக்கப்பட்டுள்ளன. குழந்தைகளின் பள்ளிப் புத்தகங்கள், சில வீடுகளில் வைக்கப்பட்டிருந்த பத்திரங்கள், முக்கியமான நிலப்பட்டா, ரேஷன் கார்டு, கடன் பதிவேடு போன்ற குறிப்பேடுகள், துணிகள் அனைத்தும் கிழித்து அங்கேயே  போடப்பட்டுள்ளன. இந்த ஊரில் உள்ள இரண்டு சிறு பெட்டிக்கடை கள் நொறுக்கப்பட்டது மட்டுமல்லாமல், அங்கி ருந்த பீடி, சிகரெட், பிஸ்கட் போன்ற பல்வேறு பொருட்களையும் அங்கு முகாமிட்ட 600க்கும் மேற்பட்ட காவல்துறையினரும், வனத்துறை அதி காரிகளும் பயன்படுத்திவிட்டு, காலி பெட்டிகளை அந்தக் கடைகளுக்குள்ளேயே போட்டிக்கிறார்கள். மொத்தம் நூறு மூடை அளவுள்ள பல்வேறு பொருட்கள் இவ்வாறு சூறையாடப்பட்டுள்ளன. ஒரு கடையின் உரிமையாளர் ஆர்.கே.இருள சாமி தன்னுடைய வாழ்க்கையே நாசமாகிவிட்டதை அழுது கொண்டே ஏ,நல்லசிவன் அவர்களிடம் கூறினார். வீடுகளில் வைக்கப்பட்டிருந்த ஏழை மக்களின் சிறு சேமிப்பு தொகைகளையும் இவர்கள் எடுத்துச் சென்று விட்டனர். சில வீடுகளில் அரிசியில் மண்ணெண்ணெய்யை ஊற்றி யுள்ளனர். கண்ணாடித் தூள்களை போட்டுள்ள னர். பெரும்பாலான வீடுகளில் இருந்த அரிசி, நெல் களவாடப்பட்டது. ஒவ்வொரு வீட்டிலும் தங்களுடைய முக்கியமான ஆடைகளையும் பொருள்களையும்  வைப்பதற்கு ஒரு பெட்டி வைத்திருந்திருக்கிறார்கள். அந்தப் பெட்டிகள் திறக்கப்பட்டு அதிலிருந்த தரமான துணிகளை போலீசார் எடுத்துச் சென்றிருக்கிறார்கள். நகைகளை எடுத்துச் சென்றிருக்கிறார்கள். பட்டுப்புடவைகளையும், நகைகளையும்  பெண் போலீசார் எடுத்துச் சென்றிருக்கிறார்கள். 

இந்த ஊரில் ஒரு மாவு மில் இருக்கிறது. இதன் பெயர் சி.சென்னம்மாள் மாவு அரவை ஆலை. இந்தியன் வங்கியின் உதவியோடு இந்த மாவுமில் நிறுவப்பட்டிருக்கிறது. இதில் உள்ள மாவு அரைக்கும் எந்திரங்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. அந்த மில்லின் சுவரிலே ஒரு படம் தொங்கிக் கொண்டிருக்கிறது.  அதிலே எம்ஜிஆர் சிரித்துக் கொண்டிருக்கிறார்! (இந்தப் படம் 27.7.92 தீக்கதிர் பத்திரிகையில் வெளி வந்திருக்கிறது) இந்த மில்லுக்குப் பக்கத்து அறையில் உள்ள சுவர்கள் இடிக்கப்பட்டுள்ளன. மின்சார இணைப்பு மீட்டரும் உடைத்து நொறுக்கப்பட்டிருக்கிறது. ஒயர்கள் பிய்த்தெறியப் பட்டுள்ளன. வாசலில் உள்ள சிறு கொட்டகை உடைத்து நொறுக்கப்பட்டுள்ளது. இந்த மில்லின் உரிமையாளர் மாரி என்பவர் அண்ணா திமுகவைச் சேர்ந்தவர். வீடுகளுக்குள்ளிருந்த சமையல் பாத்திரங்கள் பெரும்பாலும் களவாடப்பட்டுவிட்டன. சிலவற்றை உடைத்து, அங்கேயே போட்டிருக்கிறார்கள். அந்த மக்களுக்கு இன்று தண்ணீர் குடிப்பதற்கு ஒரு டம்ளர் கூட கிடையாது. கொட்டாங்குச்சியில் தண்ணீர் குடிக்க வேண்டிய அவலநிலையில் அவர்கள் இருக்கிறார்கள் என்பதை கே.வரதராசன் அவர்களிடம் பதறிக் கொண்டே கூறினார்கள். இவ்வாறு களவாடப்பட் பொருட்களை லாரிகளில் காவல்துறையினரும், வனத்துறையினரும் ஏற்றிச் சென்றிருக்கிறார்கள்.

ஆடு, மாடுகள், கோழிகளும் கொள்ளை 

இந்த மலைசாதி மக்களின் ஒரு முக்கியமான தொழில் ஆடு, மாடுகள் வளர்ப்பது. இன்று அந்த கிராமத்தில் ஆடு, மாடு, கோழி எதுவு மில்லை. மூன்று நாட்கள் முகாமிட்டு, அந்த கிராமத்தில் இத்தாக்குதலை நடத்திய சுமார் 600க்கும் மேற்பட்ட காவல்துறை, வனத்துறை அதி காரிகள் ஆடுகளையும், கோழிகளையும் வெட்டி, கறி சமைத்து சாப்பிட்டிருக்கிறார்கள். பெரு வாரியான ஆடுகள், மாடுகள் அங்கிருந்து கடத்தப்பட்டு விற்கப்பட்டிருக்கின்றன.இந்தக் கிராமத்தில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் இருந்திருக்கின்றன. ஊர் கவுண்டர் பொறுப்பில் இருக்கும் பெருமாள் வீட்டில் மட்டும் 40 ஆடுகள் களவு போயுள்ளன. ஆடுகளின் எண்ணிக்கைக்கு இன்னொரு உதாரணத்தையும் கூற முடியும். இந்த ஆடுகளையும் மாடுகளையும் மலைப்பகுதிகளுக்கு இட்டுச் சென்று மேயவிடுவது வழக்கம். இப்படி மேய்ப்பதற்கு ஆட்டிற்கு மாதம் 2 ரூபாய் வீதமும், மாட்டிற்கு மாதம் 3 ரூபாய் வீதமும் மேய்ச்சல் கட்டணம் என்ற பெயரில்  வனத்துறை அதிகாரிகளால் இக்கிராம மக்களிடம் வசூ லிக்கப்பட்டு வந்திருக்கிறது. 

ஒரு நாய் மட்டுமே மீதம்

ஒவ்வொரு வீட்டிலும் எத்தனை ஆடுகள் இருந்தன என்ற பட்டியல் வனத்துறை அதிகாரிகளிடம் உள்ளது. இவர்கள் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று அந்தக் கணக்குப்படி வசூல் செய்து வந்திருக் கிறார்கள். இப்படி ஆட்டிற்காக ஒவ்வொரு மாதமும் இவர்கள் வசூலித்த தொகை ரூ.4 ஆயிரம். ஆக இவர்கள் கணக்குப்படியே இரண்டாயிரம் ஆடுகள் அங்கே இருந்திருக்கின்றன. உண்மையில் ஆடுகள் இன்னும் கூடுதலாக இருந்திருக்க வேண்டும். காரணம், இந்த வீடுகளில் இருப்பவர்கள் பணம் கட்ட வேண்டுமே என்பதற்காக ஆடு களின் எண்ணிக்கையை குறைத்துத்தான் சொல்லி யிருப்பார்கள். ஆனால், இன்று இந்த ஊரில் ஒரு ஆடு கூட கிடையாது! ஒரு மாடு கூட கிடையாது! அத்தனையும் இந்த காவல்துறை, வனத்துறை அதிகாரிகளால் சூறையாடப்பட்ட அக்கிரமம் நடந்தி ருக்கிறது! பறிபோன கோழிகளின் எண்ணிக்கை 700க்கும் மேல் என்று சொல்லப்படுகிறது!  நாய்க்கறி தின்னும் பழக்கம் அந்த அக்கிர மக்காரர்களுக்கு இல்லை போலும். காரணம் நாங்கள் அங்கே சென்ற போது ஒரே ஒரு நாய் மட்டும் வாலை சுற்றிக் கொண்டு ஒரு வீட்டிற்குள் பதுங்கிக் கிடந்தது. பாவம், இத்தாக்குதலில் ஏற்பட்ட அதிர்ச்சியிலிருந்து அந்த ஜீவன் கூட இன்னும் மீளவில்லை போலும்!

கிணறுகளும் இலக்காயின!

கிணறுகளில் இருந்த மோட்டார்கள், உடைத்து நொறுக்கப்பட்டு கிணற்றுக்குள்ளேயே போடப்பட்டுள்ளன.  இரண்டு மோட்டார்களை விற்றிருக்கிறார்கள். கிணறுகள் எதிர் காலத்தில் பயன்படக்கூடாது என்ற நோக்கத்தோடு ஆட்டுத் தோல், ஆட்டுக்குடல் எல்லாம் கிணற்றுக்குள் போடப்பட்டுள்ளன. டீசலையும் ஊற்றி யிருக்கிறார்கள். இந்த ஊருக்கென்று வெட்டப்பட்ட ஒரு ஜீவன்தாரா கிணறு- பெரிய கிணறு இருக்கிறது. அதற்குள் ஆட்டுத் தோல், மோட்டார், ஹோஸ் பைப், தீனி வைக்கக்கூடிய கூடைகள், டீசல், இரண்டு சைக்கிள்கள் இதையெல்லாம் போடப்பட்டிருப்பதை பார்க்க முடிந்தது. இந்தக் கிணற்றில் நெல் மூட்டைகளையும் அவிழ்த்து கொட்டிருக்கிறார்கள். அப்படி கொட்டப்பட்ட நெல் கிணற்றில் உட்புறச் சுவரில் இந்த ஒரு மாதக் காலத்தில் முளை விட்டு பயிராக வளர்ந்துள்ளதையும், பார்க்க முடிந்தது. இன்று குடிக்கவும் தண்ணீர் இல்லை. வளமான எழில்மிக்க இந்தப் பகுதியில் இந்த ஏழை மக்கள் பாடுபட்டு வளர்த்துள்ள பயிர்கள் தண்ணீரின்றி வாடுவதையும் காண முடிந்தது. 

பாலியல் வல்லுறவு

இந்தக் கிராமத்தை தாக்கி சூறையாடும் நோக்கத்தோடு திட்டமிட்டு காவல்துறையினரும், வனத்துறையினரும் திரட்டப்பட்டிருக்கிறார்கள். சுமார் 600 பேர்கள் மூன்று நாட்கள் முகாமிட்டி ருக்கிறார்கள். 80 பெண் காவலர்களும் இவர்க ளோடு வந்திருக்கிறார்கள். இந்த ஊரில் வாழ்கின்ற பெண்களை எல்லாம் ஓரிடத்தில் சேர்த்து வைத்து அதில் இளம் பெண்களாக இருந்த 18 பேர்கள் (பெரும்பாலோர் மணமாகாத சிறு வயதினர்) தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். சந்தனக் கட்டைகள் ஒளித்து வைக்கப்பட்ட இடங்களை கண்டுபிடிக்க வேண்டும் என்ற பெயரில் அந்த இடங்களை இந்த பெண்கள் காட்ட வேண்டும் என்று நிர்ப்பந்தப்படுத்தப்பட்டு காவல்துறையினரும், வனத்துறையினரும் இவர்களை மலைக்கு அழைத்துச் சென்றிருக் கிறார்கள். பெண் காவலர்கள் 80 பேரையும் மலைக்கு வரவேண்டியது இல்லை என்று சொல்லி மரத்தடியிலேயே ஊருக்குள்ளேயே உட்கார வைத்துவிட்டு சென்றிருக்கிறார்கள். மலைப் பகுதிக்கு சென்றதும் தனித்தனியாக இந்த  பெண்களை அழைத்துச் சென்று 18 பெண்களுக்கும் பாலியல் வன்கொடுமை நடந்தி ருக்கிறது. இந்த சம்பவங்களை சிறையிலிருந்து ஜாமீனில் வெளி வந்திருக்கிற சில பெண்கள் அழுது கொண்டே ஜனநாயக மாதர் சங்க தலை வர்கள் பாப்பா உமாநாத், மைதிலி சிவராமன் ஆகியோரிடம் கூறினார்கள்.  பாலியல் வல்லுறவுக்காக தேர்ந்தெடுக்கப் பட்ட பெண்களில் திருமணம் ஆகாதவர்களே அதிகம். ஒருவருக்கு மட்டும் திருமணம் ஆகி யிருக்கிறது. 15 வயது சிறுமிகள் அதிகம் பேர். இந்த பெண்களை பார்க்கும் போது நம் வீடுகளில் உள்ள சின்னஞ்சிறு பெண்களின் நினைவு தான் தோன்றுகிறது. ஏதுமறியாத இச்சிறுமிகள் காவல்துறையினரின், வனத்துறையினரின் மிருக வேட்டைக்கு பலியாகியுள்ளனர். எதிர் காலம் கேள்விக்குறியாகிவிட்ட நிலையில், பரிதாப மான நிலைக்கு இவர்கள் இன்று தள்ளப்பட்டி ருக்கிறார்கள்.

94 பெண்களும், 93 ஆண்களும், 48 குழந்தைகளும் இத்தாக்குதலின் போது, கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் பலரும் இன்னும் சிறையில் தான் இருக்கிறார்கள். இந்தப் பெண்களை வனத்துறை அலுவலகத்தில் வைத்து நிர்வாணப்படுத்தி அவமானப்படுத்தியுள்ள கொடுமையும் நிகழ்ந்திருக்கிறது.  ஊர்க் கவுண்டர் (ஊர்த் தலைவர் ) பெரு மாள் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர். இவரை விட்டு இந்த பெண்களை துகிலுரிய நிர்ப்பந்தப்படுத்தி இருக்கிறார்கள். ‘என்னுடைய குழந்தைகளுக்கு  இந்த கொடுமையை நான் இழைக்க மாட்டேன்’ என்று இவர் மறுத்த போது, வனத்துறை அதிகாரிகள் இவரை கடுமையாக அடித்திருக்கிறார்கள். வனத்துறையினரே இந்தப் பெண்களை நிர்வாணப்படுத்தி துடைப்பத்தால் அவர்களை அடித்து அவமானப்படுத்தியுள்ளனர். இந்தக் கொடுமைக்காரர்கள் ஒரு கர்ப்பிணி யையும் அடித்து உதைத்து அவமானப்படுத்தியிருக் கிறார்கள். கைது செய்யப்பட்ட பெண்களில் ஒருவரான இவர் சிறையிலேயே பிரசவித்த கொடுமையும் நடந்திருக்கிறது. இந்தக் கொடுமைகளை அழுது கொண்டே ஜெயா என்ற 15 வயது பெண் மாதர் சங்க தலைவர்களிடம் தெரிவித்திருக்கிறார். மார் என்பவரின் மனைவி முனியம்மா என்பவர். இவரது வயது 65. இவர் போலியோ  வியாதியினால் கால் பாதிக்கப்பட்டு நடக்க முடியாமல் இருந்துள்ளார். பாதிக்கப்பட்ட காலின் முழங்கால் முட்டியிலேயே லத்தியால் அடித்து காயப்படுத்தியிருக்கிறார்கள். 65 வயதான இந்தக் மூதாட்டியை நிர்வாணப்படுத்தி கேவலப்படுத்தியிருக்கிறார்கள். இந்நிகழ்ச்சியை கண்களில் நீர் மல்க மாநில விதொச செயலாளர் கோ. வீரய்யனிடம் அந்த அம்மையார் விவ ரித்தார். இதைப் பார்க்கும் போது, இந்த அயோக்கியர்கள் காம வேட்கை கொண்டவர்கள் மட்டுமல்ல, எவ்வளவு வக்கிரமானவர்கள் என்பதும் தெளிவாகிறது. 

பெண் போலீஸ்காரர்கள் இருக்கும் போது பாலியல் வல்லுறவு சம்பவங்கள் எவ்வாறு நடக்கும் என்று அமைச்சர் கேட்டிருக்கிறார். எவ்வாறு நடந்தது என்பதை மேலே விவரித்துள் ளோம். இனியாவது அமைச்சர் நடவடிக்கை எடுப்பாரா?  இந்நிகழ்ச்சிகள் நடந்தது கடந்த ( 1992)  ஜூன் மாதம் 20 ஆம் தேதியிலிருந்து 24 ஆம் தேதி வரை யாகும். சம்பந்தப்பட்ட மக்கள் சுமார் 250 பேர் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்கள். இவர்களில் சிலர் இப்போது ஜாமீனில் வந்திருக்கிறார்கள். பாக்கியுள்ளவர்கள் இன்னமும் ஊருக்குள் வர பயந்து கொண்டு மலைப்பகுதியிலேயே வாழுகின்ற கொடுமை நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இரவு நேரங்களில் செடி களுக்கடியில் படுத்துறங்கும் அவல நிலையும் தொடர்கிறது. குழந்தைகளும், சிறுவர்களும் கூட இந்த பயங்கரமான அனுபவத்திற்கு தப்ப வில்லை. நல்லசிவன் சம்பவம் நடந்த இடத்திற்கு செல்ல வேண்டும் என்று ஆலோசனை சொன்ன அமைச்சர் இந்தக் காலத்தில் இரண்டு முறை தர்மபுரிக்கு வந்திருக்கிறார். ஆனால் அவ ருக்கு தர்மபுரியிலிருந்து 50 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள வாச்சாத்திக்கு சென்று மக்க ளைச் சந்திக்க நேரம் கிடைக்கவில்லை. அவருடைய சக அமைச்சர்களில் பலர் இந்த ஒரு மாதத்திற்கும் மேலான காலத்தில் தர்மபுரிக்கு வந்திருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கும் இந்தக் கிராமத்திற்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க நேரமில்லை. சம்பவம் நடந்து இத்தனை நாட்களாகியும் மாவட்ட ஆட்சியர் கூட இந்தக் கிராமத்தை எட்டிப்பார்க்கவில்லை. இவற்றுக்கெல்லாம் காரணம் பாதிக்கப்பட்ட மக்கள் ஏதுமற்ற ஏழை மலைசாதி மக்கள் என்பதாலா? இதற்கு அவர்கள் பதில் கூறியே ஆக வேண்டும். 

மிகைப்படுத்தப்பட்டது அல்ல!

இங்கு நடந்த சூறையாடல் சம்பவங்களைப் பற்றி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையும் தின மணி பத்திரிகையும் அவற்றினுடைய நிருபர் சேகரித்துத் தந்த தகவல்களை செய்தியாக வெளி யிட்டுள்ளனர். நாம் விவரித்துள்ள பல விசயங்கள் அந்த செய்திலேயே இடம் பெற்றுள்ளன. இம்முறையில் தமிழகத்திற்கு உண்மையான செய்தியை தந்ததற்காக இந்த பத்திரிகைகளை பாராட்ட வேண்டும். அதே நேரத்தில் பாலியல் வல்லுறவு சம்பவங்களை பற்றிக் குறிப்பிடும் போது ஏ.நல்லசிவன் எம்.பி., கூறிய குற்றச்சாட்டு சற்று மிகைப்படுத்தப்பட்டதாக தோன்றுகிறது என்று இப்பத்திரிகைகள் கூறியுள்ளன. ஒரு வேளை அவற்றுக்குக் காரணம் பாதிக்கப்பட்ட பெண்கள் அனைவரும் ஒரு மாதத்திற்கு மேலாக சிறையில் இருந்த காலத்தில் அந்த நிருபர் இந்த கிராமத்திற்கு சென்றிருக்கக்கூடும். இப்போதுதான் அந்த பெண்களில் சிலர் ஜாமீனில் வெளி வந்திருக்கிறார்கள். அவர்கள் வந்தபிறகுதான் உண்மை நிலவரம் உலகிற்கு தெரிந்திருக்கிறது. எனவே, இப்போது அவர்களை சென்று விசாரித்தால் இந்த உண்மைகளை அவர்களும் உணர்வார்கள். ஆரம்பத்தில் பாலியல் வல்லுறவு செய்யப்பட்ட பெண்கள் மூன்று பேர் என்று வந்தது. இப்போது 18 பேர்களாக ஆகியிருக்கிறது. ஜாமீனில் வெளிவந்திருக்கிற செல்வி (வயது 15), முத்து வேடி (15), ஜெயா(16), காந்தி(15), பூங்கொடி (17 திருமணமானவர்) ஆகிய இந்த ஐவரும் இந்த சம்பவங்களின் கொடூரத்தை நமது மாதர் சங்கத் தலைவர்களிடம் விளக்கியுள்ளார்கள். இந்த ஐந்து பேரும் பாலியல் வல்லுறவு செய்யப்பட்ட பெண்கள். அமைச்சர் என்ன விளக்கம் சொல்லப் போகிறார்? 

தினமும் 500 ரூபாய் வருமானம் பெறுகிற வர்கள் என்று இவர்களைப் பற்றி அமைச்சர் கூறியிருக்கிறார். கடத்தலில் ஈடுபடும் பெரும் புள்ளிகளைப் பற்றி ஏற்கெனவே விவரித்திருக்கிறோம். அவர்கள் மீது எல்லாம் எந்த நடவடிக்கையையும் இந்த அரசு எடுக்காதது ஏன்?  வனத்துறை அலுவலகத்தில் பாதுகாப்பில் வைக்கப்பட்ட சந்தனக் கட்டைகளை அதிகாரிகளால் திருடப்படுவது  பற்றி அரூர் மக்கள் டீக்கடைகளிலும் பேருந்து நிலையத்திலும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இதிலும் நடவடிக்கை எதுவும் எடுக்காதிருக்கிற அரசு, இதுபற்றி ஒன்றும் தெரியாது என்று கூறுகிறதா?  அல்லது தமிழக அரசின் பொறுப்பில் உள்ளவர்கள் மேலிருந்து கீழ் வரை சகலரும் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்று இப்பகுதி மக்கள் பேசிக் கொள்வது உண்மைதானா? 

பாலியல் வல்லுறவு மூலமா கடத்தலை தடுக்கப் போகிறார்கள்?  

கடத்தல்காரர்கள் மீது ஈவிரக்கமற்ற நடவடிக்கை எடுப்போம் என்றும் அதே ஊரைச் சேர்ந்த ஆண்கள்,  பெண்கள், குழந்தைகள் அத்தனை பேரும் கடத்தலில் ஈடுபட்டார்கள் என்றும் அமைச்சர் குறிப்பிட்டிருக்கிறார். இது எவ்வாறு சாத்தியமாகும்? வாதத்திற்கென்று எடுத்துக் கொண்டாலும் அந்த ஊரில் கடத்தலில் சிலர் ஈடுபட்டிருக்கலாம். அப்படி ஈடுபட்டவர்கள் மீதும் நடவடிக்கை எடுப்பது கூட பிரச்சனை இல்லை. ஆனால் ஊரையே சூறையாடி வீடுகளை எல்லாம் இடித்துத் தள்ளி   நாசப்படுத்தித்தான் அமைச்சர் கடத்தலை தடுக்கப் போகிறாரா?  வாச்சாத்தி மக்கள் எந்தக் கட்சி தெரியுமா ஏதுமறியாத 19 இளம் பெண்களை, சின்னஞ்சிறுமிகளை காமவெறியர்களை விட்டு பாலியல் வல்லுறவு செய்வதன் மூலம்தான் கடத்தலை தடுக்க முடியும் என்று அமைச்சர் சொல்கிறாரா? கடத்தலில் ஈடுபட்டிருக்கிற பெரும் புள்ளிகள் ஆளுங்கட்சிக் காரர்கள் என்பதால் அவர்களை சட்டம் தீண்டாது. அவர்களுடைய கடத்தல்களுக்கும் எந்த பாதிப்பும் இருக்காது என்று அமைச்சர் சொல்கிறாரா?

இன்னும் சொல்லப்போனால் இந்தக் கிராமத்தில் உள்ள மக்கள் அனைவரும் ஆளுங்கட்சியான அண்ணா திமுகவைச் சேர்ந்தவர்கள். இன்று வரை மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள் அல்லர். கடந்த தேர்தலின் போது மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் எம். அண்ணாமலை இத்தொகுதியில்  சட்டமன்ற வேட்பாளராக போட்டியிட்டார். இவர் வாக்குக் கேட்கக்கூட வாச்சாத்திக்குள் நுழையக் கூடாது என்று தடுத்தவர்கள் இதே மக்கள்தான். போஸ்டர் ஒட்டக்கூட அனுமதிக்கவில்லை. அவ்வளவு தீவிரமாக அதிமுகவில் இருந்தவர்கள் இந்த மக்கள். ஆனால் இன்று மார்க்சிஸ்ட் கட்சிதான் அவர்களுக்கு தைரியம் சொல்லி இழைக்கப்பட்ட கொடுமைகளை நாட்டுக்குத் தெரிவித்து அவர்களுக்கு நியாயம் கிடைப்பதற்காக போராடிக் கொண்டிருக்கிறது. நல்லசிவன் எம்.பி., வருகை தந்த அன்றுதான் இத்தொகுதி எம்எல்ஏ காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அபரஞ்சிக்கு இந்த ஊருக்கு வர நேரம் கிடைத்தது. ஏ.நல்லசிவன் வீடுகளைச் சுற்றி பார்த்துக் கொண்டிருந்த போது, அவர் தன் சகாக்களுடன் காரில் வந்து இறங்கினார். ‘இந்த தாக்குதலுக்கு பிறகு எங்களை காப்பாற்றுங்கள் என்று வந்து உங்களிடம் முறையிட்டோமே, இத்தனை நாள் இந்த ஊருக்கு நீங்கள் வரவும் இல்லை, நாங்கள் என்ன ஆனோம் என்று பார்க்கவும் இல்லை, இன்று மட்டும் எதற்காக வந்தீர்கள்?’ என்று அங்கே இருந்த பெண்கள் ஆவேசத்துடன் கேட்டார்கள். வேறு யாரும் அவரோடு பேசக்கூட இல்லை. ஒரு சில நிமிடங்களிலேயே நிலைமையை உணர்ந்த அவர் அங்கிருந்து கிளம்பிச் சென்று விட்டார். அவர் முன்னிலையிலேயே ‘எங்கள் எம்.எல்.ஏ  நீங்க இல்ல- அண்ணாமலைதான்’ என்று அந்த மக்கள் ஆவேசத்துடன் கூறியது எந்தளவுக்கு அவர்கள் ஆளுங்கட்சி மீதும் காங்கிரஸ் மீதும் நம்பிக்கை இழந்திருக்கிறார்கள் என்பதை காட்டுகிறது. 

இவ்வளவு கொடூரமான சம்பவங்கள் நடைபெற்றிருந்ததும் 18 பெண்கள் பாலியல் வல்லுறவு செய்யப்பட்ட நிலையில், இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஏ.நல்லசிவன் எம்.பி., தமிழக முதல்வருக்கு நேரடியாக கடிதம் எழுதியிருந்தபோதிலும் இதுவரை இதுபற்றி தமிழக முதல்வர் ஜெயலலிதா ஒரு வார்த்தைக் கூட கூறவில்லை என்பது விந்தையாக இருக்கிறது. உண்மைகளை கண்டறிய மற்றவர்களுக்கு கால தாமதம் ஆகலாம். ஆனால் இவ்வளவு பெரிய திறமை வாய்ந்த அரசு இயந்திரத்தை வைத்துக் கொண்டிருக்கிற முதல்வருக்கு இந்த உண்மைகள் இதுவரை எட்டவில்லை என்று சொன்னால் மக்கள் நிச்சயமாக அதை ஏற்கமாட்டார்கள். ஒரு பெண் முதல்வராக இருக்கிற தமிழகத்தில் பாலியல் வல்லுறவு சம்பவங்கள் அன்றாட நிகழ்ச்சிகளாக மாறி வருகிற அவல நிலை ஏற்பட்டுள்ளது. அதுவும் அவர் பொறுப்பிலிருக்கிற காவல்துறை நேரடியாக இந்தக் கொடுமைகளை செய்து வருவதை கண்டித்து நடவடிக்கை எடுக்க அவர் தயாராக இல்லையா என்று இப்பகுதி மக்கள் ஆத்திரத்துடன் கேட்கிறார்கள்.  பாலியல் வல்லுறவில் காவல்துறையினர் ஈடுபட்டபோது பார்வையாளர்களாகவும், கொள்ளையில் பங்குதாரர்களாகவும் பெண் காவலர்கள் இருந்ததினால் பெண்  போலீஸ் மீதே பெண்கள் நம்பிக்கை இழந்துள்ள நிலைமையும் ஏற்பட்டுள்ளது. ‘சிதம்பரம் அண்ணாமலை நகரில் பத்மினியை மாறி மாறி பாலியல் வல்லுறவு செய்த கொடுமைக்கார காவல்துறையினர் கைது செய்யப்பட இரண்டு மாதங்கள் ஆயிற்று. அதுவும் தமிழகம் தழுவிய ஒரு மக்கள் இயக்கத்திற்கு பிறகு தான் அது நடந்தது. இங்கே 18 பேரை பாலியல் வல்லுறவு செய்து இன்னும் ஏராளமான பெண்கள் நிர்வாணப்படுத்தி, அவமானப்படுத்தியிருக்கிற காவல்துறையினர் மீதும் வனத்துறையினர் மீதும் நடவடிக்கை எடுக்க எத்தனை மாதங்கள் ஆகும்’ என்று இப்பகுதி மக்கள் கேட்கிறார்கள். இப்போதாவது இப்பகுதி மக்களின் இந்த நியாயமான கேள்விகளுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா பதில் அளிப்பாரா? 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக்குழு கூட்டம் தருமபுரியில் 1992 ஜூலை 28 முதல் 31 வரை மாநில செயற்குழு உறுப்பினர் கோ.வீரய்யன் தலைமையில் நடைபெற்ற போது, இதுபற்றி விவாதித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அதன்படி,  1. இக்கிராம மக்களுக்கு கிராமத்தில் வந்து குடியேறி வசிப்பதற்கு முழுப் பாதுகாப்பை அரசு ஏற்படுத்தி தர வேண்டும. கொள்ளையடிக்கப்பட்ட ஏராளமான பொருட்களுக்கு நஷ்ட ஈடு தர வேண்டும். 2. இச்சம்பவம் பற்றி பணியில் இருக்கும் உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரை கொண்டு பகிரங்க நீதி விசாரணை நடத்த உடனடியாக உத்தரவிட வேண்டும். 3. இத்தகைய கொடும் செயலில் ஈடுபட்ட காவல்துறை, வனத்துறை அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இக்கோரிக்கைகளை வலியுறுத்தி உடனடியாக இவற்றை நிறைவேற்ற கோரியுள்ளது மாநிலக்குழு. பாதிக்கப்பட்ட இந்த ஏழை மக்களுக்கு நியாயம் கிடைக்கும் வரை மார்க்ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து போராடும்.