articles

img

வேலைகொடு! வீடுகொடு! - அ.ராதிகா

  பதிவு செய்துள்ள 15 கோடி மக்களுக்கு, 100 நாட்களுக்கு வேலை தருவதாக இருந்தால்,  3 லட்சம் கோடி ரூபாய்  ஒரு வருடத்திற்குத் தேவைப்படும். ஆனால், ஒன்றிய அரசோ  ரூ.73 ஆயிரம் கோடி தொகையை மட்டுமே கடந்தாண்டு ஒதுக்கியுள்ளது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டம் நமது நாட்டில் 25.5.2005 முதல் அமலாக்கப்பட்டு வருகிறது. தமிழக கிராமப்புற மக்கள் இதனை நூறு நாள் வேலை என்று அழைக்கின்றனர்.  கிராம மக்களின் ஒரே நம்பிக்கை மகாத்மா காந்தி  தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் மட்டுமே. இத்திட்டத்தில் கிடைக்கும் வேலை மற்றும் ஊதியம் கிராமப்புற தொழிலாளிகளுக்கு மிகவும் உதவியாக உள்ளது. நமது நாட்டில் சுமார் 15 கோடி கிராமப்புற மக்கள் இத்திட்டத்தில் தங்களுடைய பெயரைப் பதிவு  செய்துள்ளனர். ஆனால், அரசு 7.5 கோடி மக்களுக்கு  மட்டுமே வேலை வழங்கியுள்ளது. அதுவும் சராசரியாக 50 நாட்களுக்கும் கீழாகத்தான் வழங்கியுள்ளது. நாடு முழுவதுமே 75 லட்சம் மக்களுக்கு மட்டும்தான் 100  நாட்கள் வேலை வழங்கப்பட்டிருப்பதை புள்ளி விவரங்கள் மூலம் அறிகிறோம். 100 நாட்கள் வேலை  என்ற சட்ட உத்தரவாதம் உண்மை நிலையில் இருந்து வெகுதொலைவில் உள்ளது.

இத்திட்டத்தில்  பதிவு செய்துள்ள 15 கோடி மக்க ளுக்கு, 100 நாட்களுக்கு வேலை தருவதாக இருந்தால்,  3 லட்சம் கோடி ரூபாய் ஒரு வருடத்திற்குத் தேவைப்படும். ஆனால், ஒன்றிய அரசோ ரூ.73 ஆயிரம் கோடி தொகையை மட்டுமே கடந்தாண்டு ஒதுக்கியுள்ளது. இந்த நிதி ஒதுக்கீடு வருடத்திற்கு வருடம் குறைக்கப் பட்டு வருகிறது. மத்திய நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்படும் தொகைகூட நடைமுறையில் ஒதுக்கப்படுவதில்லை என்பதே உண்மை நிலையாக இருக்கிறது. இதனால், பதிவு செய்யப்பட்ட மக்க ளுக்கு வேலை கிடைப்பதில்லை. பதிவு செய்த மக்க ளில் 5 சதவிதமான மக்களுக்கு மட்டுமே 100 நாட்கள்  வேலை கிடைத்துள்ளது. திட்ட விதிகளின்படி, வேலை செய்த 15 நாட்களுக்குள்  தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க உறுதிசெய்ய வேண்டும். ஆனால், இத்திட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு பல மாதங்கள் கழித்தே ஊதியம் வழங்கப்படுகிறது. காரணம் கேட்டால், கிராமப்புற வங்கி செயல்பாடு களை காரணமாக அரசு குறிப்பிடுகிறது. கடந்த வருடம் ரூபாய் 3000 கோடித் தொகை மிகக் காலதாமதமாக விடுவிக்கப்பட்டது.

இந்தியாவில் 17 மாநில அரசுகள், மாநில அள விலான குறைந்தபட்ச ஊதியத்தைவிடக் குறை வாகவே இத்திட்டத்தில் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்குகின்றன. மாநிலங்களுக்கு இடையே ஊதிய வேறுபாடு ரூபாய் 193 முதல், ரூபாய் 318 வரை  நிலவுகிறது. பல மாவட்டங்களில் குறை தீர்க்கும் அதிகாரிகள் நியமிக்கப்படாத நிலை காணப்படுகிறது.  மேலும், வேலை செய்யும் இடத்தில் தொழிலாளர் களுக்குத் தேவையான வசதிகளும் செய்யப்படு வதில்லை. தொழிலாளர்களின் குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள எந்த ஏற்பாடுகளும் செய்யப் படுவதில்லை. தொழிலாளர்களுக்கான காப்பீடு வசதி முறையாக செய்யப்படாத நிலை காணப்படுகிறது. ஒன்றிய அரசு, கிராம நிர்வாகத்தை நம்பாமல் தானே நேரடியாக நிர்வாகம் செய்ய முயற்சி செய்கிறது. 

கொரோனா நோய் பாதிப்பு காலத்தில், சுமார் 20 லட்சம் கோடியை மக்களிடம் கடன் கொடுத்து நாட்டில் பணப்புழக்கத்தை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. தற்பொழுது நாட்டில் பணவீக்கம் அதிகரித்துவிட்டதால், பணவீக்கத்தை குறைக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனக் காரணம் காட்டி, மகாத்மா காந்தி வேலை வாய்ப்பு திட்டத்தின் ஒதுக்கிட்டில் கைவைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த வேலை வாய்ப்புத் திட்டத்தில் செலவு செய்யப்படும் தொகையால் பணப்புழக்கம் அதிகரிக்கிறது; அதனால் இந்தத் திட்டத்தின் தொகையைக் கட்டுப்படுத்தியாக வேண்டும் எனச் சொல்லி, செய்யவேண்டிய ஒதுக்கீடு களை நிறுத்தும்,  காலம்தாழ்த்தும் முயற்சிகள் நடக்கின்றன. இந்த நிலையில், திட்டத்திற்கு நிதியை அதிகரிக்க வேண்டும்; வேலை நாட்களை அதிகரிக்க  வேண்டும்; ஊதியத்தை அதிகமாக்க வேண்டும்; நகர்ப்புறங்களுக்கும் இத்திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும்; தொழிலாளர்களுக்குப் போதிய வசதி களை உறுதிப்படுத்திட வேண்டும் என அனைத்தி ந்திய ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்துகிறது.

வாழத் தகுதியில்லாத வீடுகளில்...

இந்தியா உலகில் இரண்டாவது பெரிய மக்கள் தொகையைக் கொண்ட நாடு. சுமார் 141 கோடி மக்கள் 6 லட்சம் கிராமங்களிலும் 7000க்கும் மேற்பட்ட சிறு மற்றும் பெரிய நகர்ப்புற பகுதிகளிலும் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களில் 40 கோடிக்கு அதிகமான மக்கள் பாழடைந்த மற்றும் வாழத் தகுதியில்லாத வீடுகளில் வாழ்ந்து வருகிறார்கள். நகர்ப்புறங்களில் 23 சதவிகித மக்கள், குளக்கரை, சாலை ஓரங்கள், இரயில் தண்டாவாளத்தை ஒட்டிய பகுதிகள், நீர்நிலை ஓரங்களில், ஓலை, வைக்கோல், மூங்கில், பிளாஸ்டிக் கூரை, தகர டின் கூரைகள் அமைக்கப்பட்ட வீடுகளில் வசிக்கிறார்கள். இவர்கள் வசிப்பிடப் பகுதிகளில் குடிநீர், சுகாதாரம், கழிவுநீர், சாலைவசதி போன்றவை மோசமாக உள்ளது.

இந்திய விடுதலைக்குப்  பிறகு, மக்களுக்கு வீட்டு வசதியை உறுதிசெய்யும் நோக்கில், இந்திய அரசு பல முயற்சிகளை முன்னெடுத்திருக்கிறது. 1954-ஆம் ஆண்டு குறைந்த வருவாய் பிரிவினருக்கான வீட்டு வசதித் திட்டம், 1956-ஆம் ஆண்டு நகர்ப்புற குடிசை பகுதி சுகாதாரம் மற்றும் முன்னேற்ற திட்டம், 1959-ஆம் ஆண்டு நடுத்தர வருவாய் பிரிவுக்கான  திட்டம், 1970-ஆம் ஆண்டு ஹட்கோ வீட்டுவசதித் திட்டம், 1985-ஆம் ஆண்டு இந்திரா ஆவாஸ் யோஜனா திட்டம், 1998-ஆம் ஆண்டு தேசிய வீடு மற்றும்  குடியிருப்பு திட்டம், 2009-ஆம் ஆண்டு ராஜீவ் ஆவாஸ்  யோஜனா திட்டம், 2015-ஆம் ஆண்டு பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் எனப் பல ஆண்டு களாகப் பல்வேறு பெயர்களில் மக்களின் வீட்டுத் தேவையை பூர்த்தி செய்ய, ஒன்றிய அரசு, மாநில அரசுகள் உதவியோடு திட்டங்கள் செயல் படுத்தப்பட்டு வருவதை நாம் பார்த்து வருகிறோம். கடந்த 2018 ஆண்டில், பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு  தெரிவித்த உறுதிமொழி, 2022-ஆம் ஆண்டுக்குள் அனைத்து இந்தியர்களுக்கும் வீடு என்பதை நோக்கி அரசு பணியாற்றி வருகிறது” என்பது.

சாத்தியமாகி இருக்கிறதா?

2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, வீடற்றவர்களுக்கு 2 கோடி வீடுகள் கட்டித் தர வேண்டும் என்ற தேவை இருந்தது.  ஆனால், இந்தியா சுதந்திரம் பெற்றது முதல், இதுவரை  இந்திய அரசு கட்டிக்கொடுத்த வீடுகளின் மொத்த எண்ணிக்கை வெறும் 67 லட்சமாக மட்டுமே உள்ளது.  நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் வீடு இல்லா தவர்கள், மோசமான வீடுகளில் வசிப்பவர்களின் எண்ணிக்கை 40 கோடியாக இருக்கிறபோது, இவர்களுக்கு 10 கோடி வீடுகள் கட்டித்தர 150 லட்சம்  கோடி ரூபாய் நிதி தேவைப்படும். இந்திய அரசோ  வருடத்திற்கு 48,000 கோடி ரூபாய் என்ற அள வில்தான் ஒதுக்கீடு செய்துவருகிறது. 70 சதவிகிதம் மக்கள்தொகை கொண்ட கிராமப்புறங்களுக்கு செய்துள்ள ஒதுக்கீடு வெறும் வெறும் 4500 கோடி ரூபாயாக மட்டுமே இருக்கிறது. இந்திய குடிமக்களின் வீட்டு வசதி தேவைக்கும், இந்திய அரசின் நிதி  ஒதுக்கீடுக்கும் இடையே மலையளவு இடைவெளி உள்ளது. இந்திய அரசு வீட்டு வசதித் திட்டத்திற்குப் போதுமான நிதியை ஒதுக்குவதில்லை. அனை வருக்கும் வீடு என்ற அடிப்படைத் தேவை, அரசின் கொள்கையாக உள்ள போதும், இந்த இலக்கை எட்டுவதில் அரசின் உறுதிப்பாடும், செயல்பாடும் குறைவாகவே உள்ளது. இந்த வேகத்தில் அரசு செயல்பட்டால், அனைவருக்கும் வீடு என்ற அரசின் உறுதிமொழி வெற்று வார்த்தைகளே என்பது புரிய வரும்.

மக்களின் பிரச்சனைகள்

பெருகி வரும் நகரமயமாக்கல் மற்றும் அதனுடன் தொடர்புடைய பொருளாதார வளர்ச்சியின் காரண மாக நகர்ப்புற இடப்பெயர்வு பெரிய அளவில் உள்ளது. இந்த இடப்பெயர்வுக்கு ஈடுகொடுக்கும் வகையில் நகர்ப்புறங்களில் போதிய வீட்டுவசதி இல்லாத காரணத்தால், நகர்ப்புறங்களில் குடிசைப் பகுதிகள் அதிக அளவில் பெருகி வருகின்றன. மக்க ளின் இடப்பெயர்வு மற்றும் சில துறைகளில் வளர்ச்சி யைக் (கணினி, தகவல்தொழில்நுட்பம்,  சேவைத் துறை) கணக்கில் கொண்டு, நில புரோக்கர்கள் தங்கள் ஊக வணிகம் மற்றும் விளம்பர உத்திகள் மூலம் நிலத்தின் விலையை பன்மடங்கு உயர்த்தி லாபம் காண்கின்றனர். இதனால் சமுதாயத்தில் பிற துறைகளில் பணிபுரியும் மக்களுக்கு வீட்டு வசதிக்காக செலவிடும் தொகை அதிகரித்து, நகர்ப்புறங்களில் வீடு என்பது பலருக்கும் எட்டாக் கணியாகவே மாறிவிட்டது.  இந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி வீட்டு வாடகையும் மிக அதிக அளவில் உயர்ந்துள்ளது. ஒன்றிய அரசு இதைக் கட்டுப்படுத்தாமல் வேடிக்கை பார்ப்பதோடு மட்டுமல்லால், நில புரோக்கர்கள் மற்றும் டெவலப்பர்களுக்கு ஆதரவாக இருப்பது மக்களின் பெரிய பிரச்சனையாக இருக்கிறது.

வீடு கட்டத் தேவைப்படும் கட்டுமானப் பொருட் களின் விலையும் தொடர்ந்து பன்மடங்கு அதி கரிக்கின்றன. வங்கி மற்றும் பாரம்பரிய வீட்டு வசதி நிதி நிறுவனங்கள் நம்பகமான வருமான ஆதாரங்கள் இல்லாத குறைந்த வருமானம் கொண்ட மக்களுக்கு கடன் வழங்குவதில்லை. இந்தப் பிரச்சனையைத் தீர்க்க அரசும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு சரியான கட்டளைகளை வழங்க வில்லை. வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் 6 சத விகிதம் முதல் 40 சதவிகிதம் வரை வீட்டுக் கடனுக்கு வட்டி விதிப்பதால் மக்கள் கடன் வலைக்குள் சிக்கிக் கஷ்டப்படும் நிலை உள்ளது. எனவே, ஒன்றிய, மாநில அரசுகள் இணைந்து அனைவருக்கும் வீடு என்ற இலக்கை எட்ட அதிக நிதியை ஒதுக்க வேண்டும்; எந்த வித ஆவணங்களும் இல்லாத மக்களுக்கும் அரசு முன்னுரிமை வழங்கி அவர்களின் வீட்டுவசதித் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்; வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகள் தரமான முறையில் இருப்பதை உறுதிப் படுத்த வேண்டும்; வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் கட்டப் படும் வீடுகளின் பரப்பளவை அதிகப்படுத்தவேண்டும். 

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் 16 வது மாநில மாநாடு கடலூரில் நடைபெற்றது. தமிழகத்தின் 41 மாவட்டங்களில் இருந்து கலந்து கொண்ட பிரதிநிதிகள்  மக்களின் இன்றைய அடிப் படைத்  தேவையான   பிரச்சனைகளை மிக  ஆழமாக விவாதித்தனர். தமிழகத்தில்  வேலை வீடு இரண்டும் மக்களின் மிக முக்கிய வாழ்வாதாரப் பிரச்சனைகளாக உள்ளன என்பதை எடுத்துரைத் தனர். அதற்கான போராட்டத்தை தமிழகத்தில் முன்னெடுக்க மாநாடு தீர்மானித்தது.  அக்டோபர் 17 உலக வறுமை ஒழிப்பு தினத்தன்று தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் பல்லாயிரக் கணக்கான பெண்களை திரட்டி அரசு அலுவலகங்கள் முன்பு வீடு கொடு; வேலைகொடு; என்ற கோரிக்கையை முன்வைத்து மனு கொடுக்கும் இயக்கத்தை நடத்த உள்ளது. மக்களின் பிரச்சனைக்கான போராட்டங் களை  தொடர்ந்து முன்னெடுப்போம்!

கட்டுரையாளர் : மாநிலப் பொதுச்செயலாளர்,  அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்