articles

img

தமிழக நகர்மயமாதலும், உள்ளாட்சி ஜனநாயகமும் - என்.குணசேகரன்

பத்தாண்டுக் கால அதிமுக ஆட்சியில் உள்ளாட்சி அமைப்புக்கள் செயல்படாமல் இருந்தது மட்டுமல்லாது, ஊழல், முறைகேடுகளின் உறைவிடமாக அவை இருந்தன. இந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப் பட்டன. கடந்த 2022 பிப்ரவரி மாதம் நகர்ப்புற உள்ளாட்சி களுக்கான தேர்தல்கள் நடத்தப்பட்டு, தேர்ந்தெடுக் கப்பட்ட பிரதிநிதிகள் செயல்பட்டு வருகின்றனர். மக்கள் நலன் காக்கும் ஜனநாயக அமைப்புகளாக உள்ளாட்சி அமைப்புகள்  இயங்க வேண்டும். ஆனால் தற்போதைய நிலையில் அவ்வாறு இந்த அமைப்பு கள் செயல்படுகின்றனவா என்பதை  பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும்.   உள்ளாட்சி அமைப்புகள் மூன்றாவது அரசாங்கம் என்ற இலக்கணப்படி இயங்குகின்றனவா?, ஒன்றிய, மாநில அரசாங்கங்கள் பின்பற்றும் நகரமயமாதல் கொள்கைகள் நகர்ப்புற உள்ளாட்சிகள் முறையாக செயல்பட உகந்த சூழலை ஏற்படுத்தியுள்ளதா? தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மக்களுக்கு விசுவாசத்துடன் செயல்படுகின்றனரா? போன்ற கேள்விகள் முக்கியமானவை.  

மூன்றாவது அடுக்கு அரசாங்கம்

  நாடாளுமன்றம்,சட்டமன்றம் ஆகிய இரண்டு சட்டம் இயற்றும் மன்றங்களுக்கு அடுத்து மூன்றாவது அடுக்கு அரசாங்கமாக உள்ளாட்சி மன்றங்கள் கருதப் படுகின்றன. இவற்றுக்கு முறையாக தேர்தல் நடத்தப்பட்டு, செயல்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் 73 ஆவது 74 ஆவது அரசியல் சட்ட திருத்தம் 1992 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. உள்ளூர் சமூக மக்களின் தேவைகளை நிறை வேற்றுகிற அதிகாரங்கள் கொண்டதாக உள்ளாட்சி அமைப்புகள் செயல்படுவதை இந்த சட்டத் திருத் தங்கள் உறுதிப்படுத்தின. இதனால் அந்த அமைப்பு கள் தன்னாட்சி அரசாங்க நிறுவனங்கள் என அழைக்கப்பட்டன. (Institution of Self govern ment) அந்த வகையில் பார்த்தால், நாடாளுமன்றம், சட்டமன்றம் ஆகியவற்றை விட மக்களோடு நேரடி யாக தொடர்பு கொண்ட மக்களின் விருப்பங்களையும் தேவைகளையும் பிரதிபலிக்கிற இடத்தில் இந்த மூன்றாவது அடுக்கு அரசாங்கம் உள்ளது. இந்த முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு ஒன்றிய, மாநிலஅரசாங்கங்கள் உள்ளாட்சி அமைப்புகள் இயங்குவதற்கான எல்லா வாய்ப்பு வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும். 

குறிப்பாக மேற்கண்ட சட்ட திருத்தங்களில் நிச்ச யிக்கப்பட்டுள்ள உள்ளாட்சிகளுக்கான அதிகா ரங்களை ஒன்றிய மாநில அரசாங்கங்கள் உறுதி செய்ய வேண்டும். 73-வது திருத்தத்தின் கீழ் 11-வது இணைப்பு பட்டியல் 29 வகை அதிகாரங்களைக் கிராம ஊராட்சிகள் கொண்டுள்ளன. அரசியலமைப்பின் பிரிவு 243 (W) 12-ஆவது இணைப்பு பட்டியலில் 18 வகை அதிகாரங்கள் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் கொண்டுள்ளன. ஆனால் இந்த அதி காரங்கள் ஏட்டளவில் மட்டுமே உள்ளன. பெருமள வில் அதிகார வர்க்கமும் அரசின் இதர பல அமைப்புக்க ளும் தான் பல அதிகாரங்களை தங்களிடம் குவித்துக் கொண்டுள்ளன. எடுத்துக்காட்டாக சென்னையில் உள்ள சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம், சென்னை குடிநீர் வாரியம் போன்றவை தேர்ந்தெடுக்கப்பட்ட மாநக ராட்சிக்கு கட்டுப்பட்டவை அல்ல,சென்னை போன்ற பெருநகரங்கள் உள்ளிட்டு கீழ்மட்டம் வரை  அதிகார வர்க்கங்களின் பிடி இறுக்கமாக உள்ளது. இந்த நிலையை மாற்றி அரசியலமைப்பு சட்டத்தில் வழங்கப் பட்டுள்ள அனைத்து அதிகாரங்களும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புக்களுக்கு உறுதி செய்ய வேண்டும்.

நிதிப் பகிர்வு 

தமிழக அரசின் 5-ஆவது மாநில நிதி ஆணை யத்தின் பரிந்துரைப்படி, மாநில அரசு தனது சொந்த வரி வருவாயில் 10 சதவீதத்தை உள்ளாட்சி அமைப்புக ளுக்கு பகிர்ந்தளிக்கிறது. தமிழகத்தில் தொடர்ந்து உள்ளாட்சிகளுக்கு ஒதுக்கும் நிதி 10 சதவீதமாகவே இருந்து வந்துள்ளது. இந்த நிலை உள்ளாட்சிகளின் செயல்பாட்டை மேம்படுத்தாது. மாநிலத்தின் சொந்த வரி வருவாயிலி ருந்து உள்ளாட்சிகளுக்கான நிதிப் பகிர்வு 30-40 சத வீதத்தை எட்டும் வகையில்  படிப்படியாக அதிகரிக்க வேண்டும். ஒன்றிய அரசு தொடர்ந்து உள்ளாட்சி களுக்கான நிதியை அதிகரிக்காமல் சொத்து வரி சீர்திருத்தங்கள், பயனாளிகள் கட்டண உயர்வு என பல வகைகளில் மக்கள் மீது வரிச் சுமையை அதிகரிக்க வலியுறுத்தி வருகிறது. இவற்றையெல்லாம் அதிக ரித்தால்தான் ஒன்றியத்திலிருந்து மானியங்களையும் நிதியையும் கூடுதல் கடன்களையும் பெற முடியும் என்று ஒன்றிய அரசு கட்டாயப்படுத்தி வருகிறது. 15ஆவது நிதி ஆணையத்தின் 2022-23 ஆண்டுக்கான மானியங்களை நகர்ப்புற உள்ளாட்சி கள் பெற வேண்டும் என்றால் சொத்து வரி விகிதங்களை  உயர்த்திட வேண்டும் என்று ஒன்றிய அரசு வலி யுறுத்தி உள்ளது. ஒன்றிய அரசின் திட்டங்களான அம்ருத், ஸ்வச் பாரத் மிஷன் போன்றவற்றின் நிதி  ஒதுக்கீட்டை பெறுவதற்கு சொத்து வரி உயர்வு, குடிநீர் கட்டணம் உள்ளிட்ட பயனாளி கட்டணங்களில் சீர்திருத்தங்கள் செய்ய வேண்டும் என ஒன்றிய அரசு மாநில அரசாங்கங்களை கட்டாயப்படுத்தி வருகிறது.

ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு பங்கீடு செய்ய வேண்டிய நிதியை ஒதுக்கினால்தான் வேகமாக நடந்து வரும் நகரமயமாதலுக்கு ஏற்ப மக்களின் தேவைகளை மாநில அரசுகளால் நிறைவேற்ற முடியும். இதில் ஒன்றிய அரசின் போக்கு கடும் கண்டனத்துக்குரியது.சமீபத்தில் மத்திய நிதி நிலை அறிக்கை தயாரிப்பது  தொடர்பாக ஒன்றிய நிதி அமைச்சர் மாநில நிதிய மைச்சர்கள் கூட்டத்தை கூட்டினார்.இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பாஜக ஆளும் மாநில நிதி அமைச்சர்களே ஒன்றிய அரசு முறையாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்; கூட்டாட்சி முறைக்கு எதிராக செயல் படக்கூடாது என்று பேசினர். மாநில அரசுகள் ஒன்றிய அரசின் போக்குக்கு எதி ராக ஒன்று திரண்டு நிர்பந்தம் அளிக்க வேண்டும். மாறாக, ஒன்றிய நிதி வரவில்லை என்ற காரணத்தை  முன்வைத்து மக்கள் மீது வரி உயர்வு திணிப்பு, கட்ட ணத் திணிப்பு நடவடிக்கைகளை கண்மூடித்தனமாக மேற்கொள்ளக்கூடாது. தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் கூடுதலாக சொத்து வரி மூலம் 1750 கோடி  வருமானம் திரட்ட நகர்ப்புற சொத்து வரி உயர்வினை அறிவித்து வரி வசூலை நடத்தி வருகிறது. நகர்ப்புறங்க ளில் துப்புரவு பணிகள், குடிநீர் வழங்கல் உள்ளிட்ட வற்றை மேம்படுத்த இந்த உயர்வு மேற்கொள்ளப்படு வதாக தெரிவிக்கப்பட்டது.ஆனால் இது கடும் பாதிப்பை மக்களுக்கும், வணிகர்கள் மற்றும் சிறு தொழில் நடத்துவோருக்கும் ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் மாநில முதல்வர் மாநிலத்தின் உரி மைக்காக குரல் கொடுத்து வருகிறார். மக்களும் இணைந்து குரல் எழுப்ப வேண்டும். மக்களைத் திரட்டி மாநில அரசு ஒன்றிய அரசு மீதான அழுத்தத்தை அதிகரிக்க வேண்டும்.சொத்து வரி போன்ற அனைத்தும் மாநிலத்திலிருந்து ஒரே மாதி ரியாக திணிக்காமல் மக்களின் தேவைகளுக்கேற்ப தேர்ந்தெடுக்கப்பட்ட மன்றங்களின் கருத்தறிந்து, ஜனநாயகப்பூர்வமாக விவாதித்து  மக்களுக்கு சுமை ஏற்படுத்தாமல் இந்த உயர்வுகளை அமலாக்க வேண்டும்.

வாழ்வாதார நெருக்கடிகள்

 நகர்ப்புற மக்களின் வாழ்வாதார நெருக்கடிகள் தொடர்கின்றன. அரசாங்கங்களின் மறுகுடியமர்த்தல் கொள்கைகள் குடியிருப்பை இழந்த மக்களுக்கு மறுவாழ்வை அளிப்பதாக இல்லை. தங்கள் வாழ் விடங்களிலிருந்து மக்களை அப்புறப்படுத்தும் கொடு மைகள் தொடர்கின்றன. ஏராளமான நிதி ஒதுக்கப் பட்டு, ஒன்றிய, மாநில அரசுகளால் அமலாக்கப் பட்டு வந்துள்ள ஸ்மார்ட் சிட்டி திட்டம் பெருமள வுக்கு மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறை வேற்றுகிற கட்டமைப்பு திட்டங்கள் கொண்டதாக  இல்லை என்பதை பல ஆய்வுகள் எடுத்துரைக்கின் றன. நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டங்கள் அனைத்தும், உள்ளாட்சி மன்றங்கள் மற்றும் மக்கள்  பங்கேற் போடு அமலாக்கப்பட்டால்தான் உண்மையான பலன் கிட்டிடும்.  ஒன்றிய அரசு பின்பற்றி வரும் நகர்மயமாதல் கொள்கை உள்ளூர் மக்களை அதிகாரமற்றவர்களாக மாற்றி, நகர வளர்ச்சியை  திட்டமிடக்கூடிய அனைத்து பொறுப்புகளையும் உயர்மட்ட அதிகார வர்க்கத்திட மும் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களிடமும் ஒப்ப டைப்பதாகவே உள்ளது. தீவிரமான தனியார்மயம், மக்களின் மீதான கூடுதலான வரிச்சுமை, பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அனைத்து விதமான சலுகைகள் அளிப்பது போன்ற கொள்கைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன.

திராவிட மாடலைப் பற்றி  உயர்வாக பேசுகிற பலரும் கூட தமிழக நகரமய குறைபாடுகளை சுட்டிக் காட்டி உள்ளனர். “திராவிட மாடல்” நூல் எழுதிய பேரா சிரியர் ஏ.கலையரசன், “...74 ஆவது சட்டத் திருத்தம் நகர்ப்புற நிர்வாகத்தில் மக்கள் பங்கேற் பின் அவசியத்தை வலியுறுத்துவதை குறிப்பிட்டு போதுமான அளவில் மக்கள் பங்கேற்புடன் நிர்வாகம் நடக்கவில்லை என்பதை குறிப்பிடுவதோடு மக்க ளுக்கு அதிகாரத்தை வழங்குவதற்கு பதிலாக நகர நிர்வாகம் அதிகார வர்க்கத்தையும் அரசியல்வாதி களையும் சார்ந்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள் ளது என்று குறிப்பிடுகிறார்….” அதன் விளைவுகளையும் அவர் குறிப்பிடுகிறார்: “…..வறுமை தற்போது நகரமயமாக்கப்பட்டுள்ளது; மோசமான வேலை நிலைமைகள் கொண்ட புதிய வேலைகள் முறைசாரா துறைகளில் பெருமளவு உரு வாகியுள்ளது. பாரம்பரிய துறைகளிலும், விவசாயத் துறையிலும் வேலை இழப்புக்கள் அதிகரித்து வரு கிறது; ஆனால் சமூக பாதுகாப்போடு கூடிய வேலைகள் குறைவாகவே உள்ளன. நகர்ப்புற வேலை உறுதித் திட்டங்களின் அவசர தேவையை இது எடுத்துக் காட்டுகிறது…” (-Kalaiyarasan A. is an Assistant Professor at the Madras Institute of Development Studies, The hindu OCTOBER 08, 2022)

அடித்தள ஜனநாயகம் 

உள்ளாட்சி மன்றக் கூட்டங்களில் அனைத்து பிரதி நிதிகளும் ஜனநாயகப்பூர்வமாக  விவாதம் நடத்திடும் சூழல் இருக்க வேண்டும்.பட்டியலின பிரதிநிதிகள், பெண்கள் சம அந்தஸ்துடன் நடத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகின்றன.அடித்தள ஜனநாயகமே உண்மையான ஜனநாயகம் என்ற புரிதல் வேண்டும். தமிழக அரசு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிக ளில் வார்டு சபாக்கள் அமைப்பதற்கு அறிவிப்பு வெளி யிட்டபோது அது பலராலும் வரவேற்கப்பட்டது.மக்களின் விருப்பங்களையும் கருத்துக்களையும் எதிரொலிக்கும் ஜனநாயக அமைப்புகளாக வார்டு சபாக்கள் அமையும் என்கிற எதிர்பார்ப்பு உள்ளது. வார்டு சபாக்களின் முதல் கூட்டம் கடந்த மாதம் நடைபெற்றது. இந்த ஜனநாயக நடைமுறை மக்கள் பங்கேற்புக்கு  வழிவகுக்கும்.

அதே நேரத்தில் வார்டு கமிட்டிகள்  அமைத்ததில் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஆளும் கட்சி யின் பிரதிநிதிகள் வார்டு கமிட்டியில் கூடுதலாக இடம் பெறுவதால் மக்களின் உண்மையான தேவைக ளுக்கான ஆலோசனைகள் உருவாக்க வாய்ப்ப ளிக்காது. நகர் மேம்பாட்டுக்கு உரிய ஆலோசனைகள் வழங்குகிற அனுபவம் கொண்டவர்கள் இந்த கமிட்டிகளில் இடம் பெற வேண்டும். உள்ளாட்சி பணியிடங்களை ரத்து செய்தல், அவுட்சோர்சிங்,தனியார்மயம் போன்றவை நவீன தாராளமய நடவடிக்கைகள்.இவை உள்ளாட்சிகளின் செயல்பாட்டை மேம்படுத்த உதவிடாது.இந்தியா முழுவதும் நகர்ப்புற திட்டங்களையும் கொள்கைகளை யும் வகுப்பதில் உயர்மட்ட அதிகார வர்க்கம் அதி காரம் கொண்டதாக உள்ளது.இது நவீன தாராளமய கண்ணோட்டத்துடன் பல திட்டங்களையும் கொள்கைகளையும் கொண்டு வருவதற்கு வாய்ப்பை ஏற்படுத்துகிறது. 

இதனை மாற்ற மாநில அளவில் நகர்மயமாதல் நிபுணர்கள், நகர்ப்புற ஆய்வு துறைகளில் ஆழ்ந்த அனுபவம் கொண்டவர்களை உள்ளடக்கிய ஒரு நகர்ப்புற கமிஷன் அமைப்பது அதன் ஆலோசனை களை பெற்று கொள்கைகளையும் திட்டங்களையும் வகுப்பதும் நல்ல நடைமுறையாக இருக்கும்.இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், சாதாரண மக்களுக்கு ஏற்றவாறு கட்டட வடிவமைப்பு மேற்கொள் ளுகிற நிபுணர்கள்,நகர்ப்புற செயல்பாட்டாளர்கள் பொருளியல் சமூகவியல் அறிஞர்கள் உள்ளிட்ட வர்களை கொண்டதாக இந்த நகர்ப்புற கமிஷன் அமைய வேண்டும். (Why Tamilnadu needs an urban Commission to manage its cities – Times of India by Vanessa peter & Tikender singh Panwar. Mar 16, 2022) நகர்வாழ் மக்கள் அனைவரும் தங்கள் உரிமைக ளுக்காக அணிதிரள வேண்டும். இடதுசாரி ஜனநாயக அமைப்புகள் நகர்ப்புற நெருக்கடிகளுக்கு மாற்றாக மக்கள் நலன் காக்கும் திட்டத்தை முன்வைத்து நடத்துகிற இயக்கங்கள் மக்கள் பங்கேற்புடன் வலுப்பெற வேண்டும்.நடுத்தர மக்கள் மத்தியில் குடி யிருப்போர் நல சங்கங்கள் அதிக அளவில் செயல்படு வதும் குடியிருப்பு சார்ந்திருக்கிற உரிமைகளுக்காக அவை குரல் எழுப்புவதும் இன்றைய காலத்தின் தேவை யாக உள்ளது.

கட்டுரையாளர் : மாநில செயற்குழு உறுப்பினர், சிபிஐ(எம்)