articles

‘‘கருவறை முதல் கல்லறை வரை’’ - சி.பரமேஸ்வரி

மே 30ஆம் தேதி (இன்று) திருப்பூர் மாநகரில் நடைபெறும் தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியர்களின் ஜீவனுள்ள அமைப்பான தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியர் சங்கத்தின் 6வது மாநில மாநாடு தமிழகத்திலுள்ள அனைத்து கிராம சுகாதார செவிலியர்கள் இடையே மிகுந்த ஆர்வத்தையும், உற்சாகத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

பொது சுகாதாரம்

பொது சுகாதாரம் என்பது பொதுமக்களின் ஆரோக்கியத்தை தீர்மானத்துப் பாதுகாப்பது ஆகும். மனித இனம் உயிர் வாழ தேவையான வசதிகளுக்காக கலைஞர் வகுத்த சுகாதாரக் கொள்கைகள் நிச்சயமாக வாக்கு அரசியலுக்காக அல்ல, அவ்வகையில் 10 கிலோ மீட்டருக்கு ஒரு ஆரம்ப சுகாதார நிலையம், கிராமங்கள்தோறும் துணை சுகாதார நிலையங்கள் என உருவாக்கி மக்கள் நலனை பேணிக் காக்க கிராமப்புறங்களுக்கு கிராம சுகாதார செவிலியர்கள் நியமிக்கப்பட்டார்கள். தமிழகத்தில் 8,713 துணை சுகாதார நிலையங்கள் உள்ளன. அத்துணை சுகாதார நிலையங்களில் பணிபுரியும் கிராம சுகாதார செவிலியர்கள் அடித்தட்டு மக்களின் மனநிலை அறிந்து மக்களோடு மக்களாக மக்களின் அடிப்படை சுகாதார திட்டத்தை செயல்படுத்துகிறார்கள். அனைவருக்கும் ஆரம்ப சுகாதாரத்தை உறுதி செய்யும் விதமாக பொது சுகாதாரத் துறையில் 1982 முதல் பயிற்சி முடிந்தவுடன் கிராம சுகாதார செவிலியராக பணியாற்றி.... குக்கிராமங்களில்..... பேருந்து போக்குவரத்தும் நடைபாதையும் இல்லாத இடத்திலும் கூட.... புதிய பாதையைக் கண்டுபிடித்து காடு மலைகளில் கால்நடையாக சென்று தாய்- சேய் நலனில் அக்கறை கொண்டும் முழுமையான தடுப்பூசி பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.   காலிப்பணியிட பணிகளிலும் பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப வேலை செய்ய ஊழியர் இல்லை என்றாலும் பசி அறியாது பணியாற்றுகின்றனர். குடும்பநல பணியிலும் தாய் - சேய் நல பணியிலும் போலியோ இல்லாத தமிழகமாக மாற்றியதிலும் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம் என்று உலக வங்கியின் தலைவராலேயே 28.08.2015 அன்று அறிவிக்கப்பட்ட பெருமைக்கு சொந்தக்காரர்கள் கிராம சுகாதார செவிலியர்கள்.

பாலின பாகுபாடு நிலை அகலட்டும்!

பொது சுகாதாரத் துறையின் சூழல் அறிந்து, துறையின் வளர்ச்சியால் தான் தன் வளர்ச்சியும் உள்ளது என்று வெள்ள நிவாரணப் பணிகளிலும், வெயிலோ, மழையோ, பனியோ, புயலோ எத்தகைய இடர்பாடுகளிலும்  கொரோனா போன்ற பேரிடர் காலங்களிலும் துறையின் தாய்-சேய் நலன் சார்ந்த அறிவிப்புகள் எவ்வளவு சிரமமானதாக இருப்பினும் (தட்டம்மை, ரூபெல்லா தடுப்பூசி, கொரோனா தடுப்பூசி பணி) துறையின் வளர்ச்சியை முழு குறிக்கோளாகக் கொண்டு துறையால் அறிவிக்கப்படும் அனைத்து பணிகளையும் வெற்றிகரமாக ஆக்கிட ஆணிவேராக செயல்படும் கிராம சுகாதார செவிலியர்களின் ஊதிய விகிதம் வஞ்சிக்கப்பட்ட நிலையில் உள்ளது. இந்தியா முழுவதும் எம்மாநிலத்திலும் எந்தத் துறையிலும் நிகழாத “ஆண் - பெண்” பாலின பாகுபாடு இங்கு நிலவிவருகிறது. நான்காவது ஊதியக் குழுவில் இருந்து பல ஆண்டுகளாக நீடித்து வரும் “ஆண் - பெண்” பாலின பாகுபாடு அகலட்டும்.

சமநிலையான  பதவி உயர்வு வழங்கிடுக!

கிராம சுகாதார செவிலியர்களின் பணி நிலையில் தேர்வு நிலை, சிறப்பு நிலை முதுநிலை... பெற்றும் கூட ஒரு கட்ட பதவி உயர்வு நிலையே கனவாகி.... துறையில் அறிவிக்கப்படும் பல்வேறு பணிகளும் பிற பிரிவு டெங்கு, சிக்கன் குனியா, கொரோனா 19 என பல பணிகளும் துரத்திக் கொண்டே வருகிறது. அனைத்து பணிகளையும் மிகச் சிறப்பாக குறிப்பாக கொரோனா பேரிடர் காலத்தில் கிராமப்புறங்களில் நேரடியாக பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து பரிந்துரை செய்த பணி, கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியில் மிகச் சிறப்பாக செயல்பட்டு இன்று தமிழகத்தில் மக்களுக்கு 88 சதவீதம் நோய் எதிர்ப்புசக்தி ஏற்படவும், கொரோனா உயிரிழப்பு இல்லாத மாநிலமாகவும் திகழ காரணியாக இருந்தவர்கள் கிராம சுகாதார செவிலியர்கள். அனைத்து பணிகளையும் கருவறை முதல் கல்லறை வரை மிகச் சிறப்பாக செய்யும் கிராம சுகாதார செவிலியர்களுக்கு பதவி உயர்வு என்பது எட்டாக்கனியாகவே தான் உள்ளது. 30 ஆண்டுகள் ஒரே நிலையில் ஓய்வு பெறும் நிலை உள்ளது. சொற்ப அளவே பகுதி சுகாதார செவிலியர், சமுதாய சுகாதார செவிலியர்கள் என பதவி உயர்வு, அதுவும் ஓய்வு பெறும்போது அடையும் நிலை உள்ளது. எல்லா துறைகளிலும் 5 கட்ட பதவி உயர்வு வழங்குவது போன்று கிராம சுகாதார செவிலியர்களுக்கு 5 கட்ட பதவி உயர்வு வழங்க அரசு கவனத்தில் கொள்ள வேண்டியதன் அவசியத்தை இம்மாநாடு உணர்த்தும்.  கட்டுரையாளர் : மாநிலத் தலைவர்,  தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியர் சங்கம்