76 சுதந்திர தின விழா உரையில் பேசிய பிரதமர் மோடி காலனியாதிக்க எச்சங்களான 1500 சட் டங்களை நீக்கப் போகிறோம் என அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு முன்பே தொழிலாளர் நலச்சட்டங் களையெல்லாம் குழிதோண்டிப் புதைத்துவிட்டு தற்போது குற்றவியல் சட்டங்கள் பக்கம் திரும்பியுள்ளார். மூன்று முக்கிய குற்றவியல் சட்டங்களை நீக்கி விட்டு அவ்விடத்தில் புதிய சட்டங்களைக் கொண்டுவர 2020 ஆம் ஆண்டு ரன்பீர் சிங் தலைமையில் அமைக்கப்பட்ட குழு 2022-ஆம் ஆண்டு கொடுத்த அறிக்கையின் அடிப் படையில், 3 புதிய சட்ட மசோதாக்களை கடந்த ஆகஸ்ட் 11 அன்று தாக்கல் செய்துள்ளனர். மேலும் அதனை நாடாளு மன்ற நிலைக்குழுவிற்கும் அனுப்பியுள்ளனர். இந்த சட்டங்கள் மீது உள்துறை அமைச்சகத்திற்கான நாடாளுமன்ற நிலைக்குழு தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ்.எஸ்.பேர்வழி பிரிஷ்லால், மூன்று மாதங்களில் அறிக்கை அனுப்பவுள்ளார். மசோதாக்களுக்கு எதிராக அறிக்கை கிடைக்கும் என எதிர்பார்க்க முடியாது.
கிழக்கிந்தியக் கம்பெனியிடமிருந்து ஆட்சியதி காரத்தை தன் வசம் எடுத்துக் கொண்ட விக்டோரியா மகாராணி ஆளுகையின் போது, இந்தியாவிற்கு புதிய கல்வித்திட்டம் கொண்டு வந்த அதே மெக்காலே தான் 1860 ஆம் ஆண்டு இந்திய தண்டனை சட்டத்தையும் கொண்டு வந்தார். 1872-இல் ஸ்டீபன், வழங்கிய இந்திய சாட்சியச் சட்டம்; அதைத் தொடர்ந்து 1898 இல் கொண்டு வரப்பட்ட குற்றவியல் நடைமுறைச் சட்டம்; அதன் திருத்த சட்டம் 1973 ஆகியவற்றைத்தான் மாற்றியமைக் கப் போகிறோம் என மோடி அரசு கிளம்பியுள்ளது. பிரிட்டிசார் தங்கள் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள கொண்டு வரப்பட்டவைதான் மேற்கண்ட சட்டங்கள் என்ற போதிலும் அவற்றில் குற்றங்களை, தண்டனைகளை அவர்கள் வகைப்படுத்திய விதம் பாராட்டுக்குரியது. ஆளும் வர்க்கம் எப்பொழுதுமே தாக்குவதற்கு தயாராக வைத்திருக்கும் கைத்தடியாகத்தான் குற்ற வியல் சட்டங்களை பயன்படுத்தி வருகின்றன. இன்று சட்டம்- ஒழுங்கு தனது அதிகார வரம்பில் இல்லாத போதும் ஒன்றிய அரசு தனது அதிகாரத்திற்குட்பட்ட சட்டங்களைக் கொண்டு எதிர்க்கட்சிகளை அடக்கும் முயற்சி அன்றாட நடைமுறையாகியுள்ளது.
என்னதான் மாறுதல்?
இந்த நிலையில் மோடி அரசு கொண்டுவந்துள்ள மாற்றங்கள் தான் என்ன? இந்திய தண்டனைச் சட்டத்தில் பிரிவுகள் 511 க்கு பதிலாக 356 பிரிவுகளாக குறைக்கப்படுகிறது. அதில் 8 புதிய பிரிவுகள் சேர்க்கப்பட்டு, 22 நீக்கம் செய்யப் பட்டுள்ளன. மேலும் 175 பிரிவுகள் திருத்தம் செய்யப் பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். இந்திய தண்டனைச் சட்டத்தில் தண்டனைக்கு பதில் சமூக சேவை செய்யவும், ஒழுங்கமைக்கப்பட்ட அல்லது திட்டமிட்ட குற்றங்கள் (Organised crime) மற்றும் பயங்கரவாதச் செயல்கள் குறித்து தனிப் பிரிவு களில் விளக்கம் அளித்துள்ளனர். இ.த.ச பிரிவு 124 (அ) ராஜ துரோக வழக்கிற்கு பதிலாக இந்திய ஒன்றிய இறையாண்மைக்கு எதிரான குற்றமாக வகைப்படுத்தி யுள்ளனர். பல குற்றச்செயல்களுக்கான தண்டனையும் அபராதமும் உயர்த்தப்பட்டுள்ளன.
குற்றவியல் விசாரணை நடைமுறைச்சட்டத்தில் பிரிவுகள் 533 பதிலாக 160 பிரிவுகள் மட்டுமே இடம் பெறும். காவல்துறை விசாரணையில் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. காவல்துறை விசாரணை, நீதிமன்ற விசாரணை, தீர்ப்பு வழங்க கால வரையறை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 7 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெறக்கூடிய வழக்குகளில் பாதிக்கப்பட்டவர் அனுமதியின்றி அரசுத் தரப்பால் வழக்கை வாபஸ் பெற முடியாது. வீடியோ கான்பரஸ் மூலமும் விசாரணை நடத்தலாம். இந்திய சாட்சியச் சட்டத்தில் பிரிவுகள் 170 பதிலாக 163மட்டுமே இடம் பெறும் அதில் 23 பிரிவுகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அதில், மின்னணு சாதனங்கள் மூலம் தகவல் அளிக்கலாம். தொழில் நுட்ப சாதனங்களை பயன்படுத்தி காணொலி காட்சி மூலம் சாட்சியமளிக்கலாம் . மின்னணு சாதன பதிவு கள் சாட்சியமாக ஏற்கப்படும். வழக்குகளின் தன்மைக்கு ஏற்ப ஒரே மாதிரியான குறுகிய நேர விசாரணை முறை நடைமுறைப்படுத்தப்படும். இந்த மாறுதல்களில் பல உச்சநீதிமன்ற தீர்ப்பு களின் அடிப்படையில் பின்பற்றப்படுபவை தான்.
குழப்பம் நீடிக்கும்!
புதிய மசோதாக்கள், கொண்டு வரப்பட்டுள்ள அடிப்படையிலேயே சட்டமானால் புதிய குழப்பங்க ளுக்குத்தான் வழி வகுக்கும் . உதாரணமாக இ.த.ச 377வது பிரிவு தற்போது நீக்கப்பட்டுள்ளது. அந்த பிரிவை நீக்குவதால், சம்மதம் இல்லாத பாலியல் உறவை பலாத்காரம் என்ற வகையில் குற்றம் சாட்ட முடியாமல் போகும். கும்பல் படுகொலையை கொலைப் பிரிவில் சேர்த்துவிட்டு அதற்கான தண்டனை 7 ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது. சட்டப் பிரிவுகளின் எண்கள் மற்றுவதால் குற்ற பதிவு ஆவணத்தில் குற்றங்களை பதிவு செய்வதில் சிரமம் ஏற்படும். இது போல் பல குழப்பங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. ‘மன நோயாளிகள்’ என்ற பிரிவுகளின் கீழ் பலர் தப்பிவிட புதிய சட்டம் வழிவகுக்கும் என சட்ட வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தண்டனைக்கு பதில் ‘சமூக சேவை’ என்ற புதிய கண்டுபிடிப்பு ஆர்.எஸ்.எஸ்.க்கு ஆள் சேர்ப்பதற்காக கொண்டு வரப்பட்டது போல் தெரிகிறது .
பிரச்சனைகளுக்கு தீர்வா?
இன்று நாம் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு புதிய சட்டங்கள் தீர்வாக அமைந்துள்ளனவா? ஸ்காட்லாந்தில் ஒருவர் கைது செய்யப்பட்டால் அவரை 6 மணி நேரத்திற்கு மேல் சிறையில் வைத்திருக்க முடியாது. நமது நாட்டில் 60 நாட்கள் முதல் 90 நாட்கள் சிறை யில் வைத்திருக்க முடியும். இதனை மேலும் உறுதிப் படுத்தும் வகையில் தான் புதிய சட்டமும் உள்ளது. விசாரணைக் கைதிகளை கை விலங்கிட்டு அழைத்துச் செல்வதற்கு உச்சநீதிமன்றம் பல தடைகளை விதித்துள்ளது. ஆனால் இனி அந்த அதிகாரம் முழுக்க போலீசாரின் கட்டுப்பாட்டிற்குள் வரப் போகிறது. இனி ஒருவரை கைது செய்ய எந்த பல பிரயோ கத்தையும் பயன்படுத்தலாம் என புதிய சட்டம் சொல்கி றது. என்கவுண்ட்டர் கொலைகள் இனி சட்டப்பூர்வமான கொலைகளாக மாறுவதற்கு இது வழி வகுக்கும். 15 நாள் நீதிமன்றக் காவல் இனி 90 நாட்களாக நீட்டிக்கப்படும். எனவே, மோடி அரசு கொண்டு வந்துள்ள மாற்றங்க ளுக்கும் மனித உரிமைக்கும் சம்மந்தமில்லை. மாறாக, இந்த சட்டங்கள் அமல்படுத்தப்பட்டால் காவல்துறையின் காட்டாட்சிதான். நீதிக்காக காத்திருப்பவரின் வழக்குகளை விரைந்து விசாரிக்க வேண்டும் எனும் சட்ட வல்லுனர் மேனன் போன்றோரின் ஆலோசனைகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக பார்த்தால் பழைய மொந்தை யில் புதிய கள்ளை மட்டும் அமித்ஷா ஊற்றவில்லை; அதில் போதை மாத்திரையும் கலந்துள்ளார்.
போராட்டம்தான் தீர்வு
ஒன்றிய அரசின் சட்டங்கள் அனைத்தும் ஆங்கி லத்தில் வெளியிட்டு அட்டவணை மொழிகளில் மொழி பெயர்ப்பதுதான் நடைமுறையாக உள்ளது. இந்த நடைமுறைகளை எல்லாம் மாற்றி, வாயில் நுழையாத இந்தி மொழியில் சட்டத்திற்கு பெயரிட்டுள்ளது. இது இந்தி திணிப்பின் ஒரு வடிவமே. இது வழக்கறிஞர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது. சட்ட மாறுதல் குறித்து நாடு முழுவதும் உள்ள சட்ட வல்லுநர்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாட்டில் வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்புகள் போராட்டத்தைத் துவக்கியுள்ளன. சட்டம் தண்டனை வழங்க மட்டுமல்ல; நீதி வழங்கப் போவதாக அமித்ஷா, சட்ட மசோதாக்களை அறிமுகப் படுத்தும் போது கூறினார். புல்டோசர் அரசியல் நடத்தும் அமித்ஷா நீதித்துறையை நோக்கி இந்த புதிய சட் டங்களை ஏவியுள்ளார். இச்சட்டங்களில் இருந்து நீதியை எதிர்பார்க்க முடியாது. போராடித்தான் பெற்றாக வேண்டும். அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் (AILU) தனது எதிர்ப்பை பதிவு செய்ததோடு போராடவும் அறை கூவல் விடுத்துள்ளது. ஆகஸ்ட் 21 துவங்கியுள்ள போராட்டம் 10 நாட்கள் நடைபெறுகிறது. தமிழகத்தின் தன்னெழுச்சியான வழக்கறிஞர்களது போராட்டம் இந்தியாவெங்கும் எதிரொலிக்கட்டும்.
கட்டுரையாளர் : வழக்கறிஞர், திருப்பூர்