தற்போது தமிழக அரசு தலைமைச் செயலாளர் தலைமையில் ஒரு உயர்மட்ட குழுவை அமைத்துள்ளது. இந்த குழுவில் பயனாளிகளின் சார்பில் ஒருவர் கூட சேர்க்கப்படவில்லை; தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் ஒருவர் கூட இடம்பெறவில்லை. இந்த குழுவும் இதுவரை கூடி எந்த முடிவும் எடுக்காத நிலை
தமிழ்நாடு முழுவதும் அறநிலையத்துறைக்கு சொந்தமான அடிமனைகளில் தங்களுடைய சொந்த உழைப்பில் வீடுகட்டி குடியிருந்து வருபவர்கள், விவசாய நிலங்களை சாகுபடி செய்யும் விவசாயிகள், சிறுகடை வைத்திருப்போர் என லட்சக்கணக்கானோர் பல தலைமுறைகளாக பயனாளி களாக உள்ளனர். ஆரம்ப காலத்தில் ஆண்டுக்கு ஒரு முறை (பசலி) பகுதிப் பணமாக கோயில் நிர்வாகத்திற்கு செலுத்தி வந்த இவர்களுக்கு மாத வாடகை நிர்ணயிக்கப்பட்டது. இவ்வாறு வாடகை நிர்ணயிக்கும் போது சம்பந்தப்பட்ட பயனாளிகளிடமும் கருத்து கேட்டு வாடகை/ குத்தகை நிர்ணயிக்கப்பட்ட முறை மாற்றப்பட்டு சில ஆண்டுகளாக அறநிலையத்துறை அதிகாரிகளே வாடகை மற்றும் குத்தகையை நிர்ணயிக்கும் முறை தொடர்கிறது.
இந்துத்வா மதவெறியர் தொடுத்த வழக்கு
பெரும் நகரங்கள் மற்றும் அனைத்து நகரப் பகுதிகளிலும் அடிமனைக்கான வாடகை தொடர்ந்து பலமடங்கு உயர்த்தப்பட்டுள்ளதால், சாதாரண ஏழை, எளிய, நடுத்தரப் பகுதி மக்கள் கட்டமுடியாத நிலை தொடர்கிறது. கடந்த ஆட்சி காலத்தில் பல மடங்கு உயர்த்தப்பட்ட வாடகை/குத்தகையை குறைத்திடக் கோரி பல போராட்டங்கள் பயனாளிகள் சார்பில் நடைபெற்றுள்ளன. இதன் பலனாக கோயில் இடங்களில் நீண்ட காலமாக அடிமனையில் குடியிருப்பவர்களில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளவர்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்குவதற்கான அரசாணை 318 வெளியிடப்பட்டது. இதன்மூலம் கோயில் இடங்களில் 600 ஏக்கர் இடத்திற்கு தமிழக அரசே உரிய தொகையை சம்பந்தப்பட்ட கோயில்களுக்கு வழங்கிவிட்டு சுமார் 18 ஆயிரம் ஏழைகளுக்கு பட்டா வழங்க கொள்கை முடி வெடுத்தது. இதை செயல்படுத்தக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்துத்துவ அமைப்பை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் இடைக்கால தடை உத்தரவு பெற்றுள்ளார். தடையை நீக்கிட வேண்டும் என்று அரசின் சார்பிலும், பயனாளிகள் சார்பிலும் மேல்முறை யீடு செய்யப்பட்டுள்ளது.
வழக்கு தற்போதும் விசாரணையில் உள்ள சூழலில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இந்த நிலையில் இந்து சமய அறநிலையத்துறை தொடர்ந்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. குறிப்பாக நகர்ப்புறங்களில் பல்வேறு இடங்களில் செல்வாக்கு படைத்த பலர் ஆக்கிரமித்து வைத்திருந்த ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள கோயில் சொத்துக்களை மீட்டுள்ளது வரவேற்கத்தக்கது. அதே நிலையில் தமிழகம் முழுவதும் பல தலைமுறைகளாக கோயில் அடிமனைகளில் வீடுகட்டி குடியிருப்பவர்களும், விவசாயம் செய்யும் சாதாரண விவசாயிகளையும் ஒன்றாக இணைத்து பார்ப்பது சரியான அணுகுமுறை அல்ல. இதைப் பல முறை அமைச்சர் மற்றும் துறை உயரதிகாரிகளின் கவனத்திற்கு தமிழ்நாடு அனைத்து சமய நிலங்களை பயன்படுத்துவோர் பாதுகாப்பு சங்கம் கொண்டு சென்றுள்ளது. இருப்பினும் சாதாரண ஏழை, எளிய மக்களின் நியாயமான கோரிக்கைகளை உணர்ந்ததாக தெரியவில்லை.
வாடகை பல மடங்கு உயர்வு
வாடகை பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. உயர்த்தப்பட்ட வாடகையை முன் தேதியிட்டு கட்ட வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தால் ஒவ்வொருவருக்கும் பல லட்சங்கள் வாடகை பாக்கியுள்ளது. இந்த பாக்கி தொகையினை குறிப்பிட்ட 15 அல்லது 30 தினங்களுக்குள் ஒரே தவணையில் கட்ட வேண்டும்; இல்லையென்றால் வீட்டை இடிப்போம் என தொடர்ந்து மிரட்டுகின்றனர். வாடகை நிர்ணயிக்கப்பட்டதில் பல குளறுபடிகள் உள்ளன. பயனாளிகள் குடியிருக்கும் அடிமனைப் பகுதிகளை அளவீடு செய்வதில் பல தவறுகள் உள்ளன. இவற்றை முறைப்படுத்துங்கள், புதிய வாடகை நிர்ணயிக்க குழு அமைத்திட பலமுறை வலி யுறுத்தப்பட்ட பின்பு தற்போது தமிழக அரசு தலைமைச் செயலாளர் தலைமையில் ஒரு உயர்மட்ட குழுவை அமைத்துள்ளது. இந்த குழுவில் பயனாளிகளின் சார்பில் ஒருவர் கூட சேர்க்கப்படவில்லை; தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் ஒருவர் கூட இடம்பெறவில்லை. இந்த குழுவும் இதுவரை கூடி எந்த முடிவும் எடுக்காத நிலையில் தற்போது தமிழகம் முழுவதும் வாடகை பாக்கியுள்ளது என்று நோட்டீஸ் அனுப்பி வீடுகளை இடிக்க அதிகாரிகள் தொடர் முயற்சி செய்கின்றனர்.
குறிப்பாக தேனி மாவட்டம் கம்பம் நகரில் உள்ள கம்பராயபெருமாள் மற்றும் காசி விஸ்வநாதர் திருக்கோவிலுக்கு சொந்தமான 864 சதுர அடி, அடிமனை யில் ஒருவர் வீடு கட்டி பல ஆண்டுகளாக குடியிருந்து வருகிறார். அவர் தற்போது வரை மாத வாடகையாக 636 ரூபாய் நிலுவையில்லாமல் செலுத்தி வருகிறார். இவருக்கு தற்போது மாத வாடகை 8870 ரூபாய் என்றும் இந்த அடிப்படையில் வாடகை பாக்கி 5,36,700 ரூபாய் என்றும் நோட்டீஸ் கிடைத்த 15 தினங்களுக்குள் கட்ட வேண்டும்; இல்லையென்றால் வீட்டை விட்டு வெளியேற்றுவோம் என அச்சுறுத்துகின்றனர். இது எந்த வகையில் நியாயமாக இருக்கும்? இதே போல திருச்சி மாவட்டம் மணப்பாறையில் 28 ஏழை, எளிய குடும்பங்கள் நீண்ட காலமாக கோயிலுக்கு சொந்தமான அடிமனையில் வீடுகட்டி குடியிருந்து வரும் நிலையில் அவர்களை அறநிலையத்துறை ஆணை யரின் அறிவுறுத்தல்படி, வாடகைதாரர்களாக வரன்முறைப் படுத்திடாமல் 28 குடும்பங்களையும் அப்புறப்படுத்திட இரண்டு முறை அதிகாரிகள் முயற்சித்தனர். பயனாளிகள் மற்றும் அவர்களுக்கு ஆதரவாக தமிழ்நாடு அனைத்து சமய நிலங்களை பயன்படுத்துவோர் பாதுகாப்பு சங்கத்தின் போராட்டத்தின் காரணமாக தற்காலிகமாக தடுக்கப்பட்டுள்ளது.
இப்படி தமிழகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான பயனாளிகளை அச்சுறுத்தும் நடவடிக்கைகளை அற நிலையத்துறை மேற்கொள்வதை நிறுத்திட வேண்டும். ஒரு பக்கம் வாடகை நிர்ணயிக்க குழு அமைத்துவிட்டு மறுபக்கம் இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வது ஏற்புடையதல்ல. அரசு அமைத்துள்ள வாடகை நிர்ணயக் குழுவிற்கு 12.01.2022 அன்று தமிழ்நாடு அனைத்து சமய நிலங்களைப் பயன்படுத்துவோர் பாது காப்பு சங்கத்தின் சார்பில் விரிவான கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது. கோயில் இடங்களை பயன்படுத்துவோர் பெரும் பகுதியானவர்கள் ஏதுமற்ற ஏழை, எளிய இந்து மக்களே என்பதை அறநிலையத் துறை அமைச்சரும், அரசும் உணர்ந்து செயல்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. கீழ்க்கண்ட கோரிக்கைகளை தமிழக அரசு பரிசீலித்து நிறைவேற்றிட வேண்டும்.
1. பயனாளிகளிடமிருந்து தமிழகம் முழுவதும் வாடகை அதிகமாக உள்ளது. வாடகையை நிர்ண யிப்பதில் பல குளறுபடிகள் உள்ளது என்ற கோரிக்கை களை ஏற்று அமைக்கப்பட்டுள்ள வாடகை நிர்ணயிக்கும் குழுவில், பயனாளிகளின் சார்பில் பிரதிநிதிகள் குழுவில் இடம் பெற வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளும் குழுவில் இடம் பெறவேண்டும்.
2. 30 தினங்களுக்குள் கட்டவில்லை என்றால் சட்டப்பிரிவு 78,79ன் படி நடவடிக்கை எடுக்கப்படும் என பயனாளிகளை அச்சுறுத்துவதை தவிர்த்திட வேண்டும்.
3. கொரோனா பெருந்தொற்று காலம் முழுவதும் வறுமைக்கோடடிற்கு கீழ் உள்ளவர்களின் வாடகை, குத்தகை தொகையினை தள்ளுபடி செய்திட வேண்டும்.
4. புதிய வாடகை நிர்ணயிக்கும் வரை அறநிலைய சட்டப்பிரிவு 7879ஐப் பயன்படுத்தி வீடுகளை காலி செய்ய நோட்டீஸ் அனுப்புவது, வீடுகளை பூட்டி சீல்வைப்பது போன்ற நடவடிக்கைகளை நிறுத்தி வைத்திட வேண்டும்.
5. பல மடங்கு உயர்த்தப்பட்ட வாடகை, குத்தகை தொகையினை குறைத்திட வேண்டும். அரசாணை 298 (20.7.2020)ன் படி மூன்றாவது பத்தியில் ஏ பிரிவில் 01.11.2001 தேதி நிலவரப்படி வாடகை நிர்ணயம் 0.10 என்று இருப்பதை 0.05 என்று மாற்றி அமைத்திட பரிசீலிக்க வேண்டும்.
6. அடிமனை வாடகைதாரராக உள்ள பயனாளிகள் பெயரிலுள்ள இடங்களில் பரப்பளவு சரியாக அளந்து கணக்கிடப்படாததால் குறைந்த இடத்திற்கு மிக அதிகமான வாடகை செலுத்தும் நிலை உள்ளது. இது குறித்து பலமுறை முறையீடு செய்தும் இந்த குறை சரிசெய்யப்படாமல் உள்ளது. எனவே, புகார் தெரிவித்துள்ளவர்களின் இடங்களை முறையாக அளவீடு செய்ய வேண்டும்.
7. கோயில் இடங்களில் குடியிருக்கும் பயனாளிகளின் வீடுகள் சேதமடையும் போது அதை பழுதுபார்ப் பதற்கும், புதிய மின் இணைப்பு பெறுவதற்கும் அறநிலையத்துறை அதிகாரிகள் தடை செய்வதை தவிர்க்க வேண்டும்.
8. அறநிலைய சட்டம் 34ன் படி பல தலைமுறைகளாக கோயில் இடங்களில் குடியிருப்பவர்கள், சாகுபடி செய்யும் விவசாயிகள், சிறுகடை வைத்து வியா பாரம் செய்பவர்களுக்கு படிப்படியாக அந்தந்த இடங்களுக்கான நியாயமான விலையை தீர்மானித்து கிரயத் தொகையை தவணை முறை யில் பெற்றுக் கொண்டு இடங்களை பயனாளி களுக்கு சொந்தமாக்கிட வேண்டும்.
9. கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் அறநிலையத்துறை மானியக் கோரிக்கை விவாதத்திற்கு பதிலளித்து பேசிய அறநிலையத்துறை அமைச்சர், அரசாணை 318க்கான இடைக்கால தடையை நீக்கிட அரசின் சார்பில் விரைவில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என அறிவித்தார். அந்த அடிப்படை யில் உடன் சீராய்வு மனு தாக்கல் செய்ய உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
10. அறநிலையத்துறையை முற்றிலும் சீரழித்து தேவையற்ற அவதூறு பிரச்சாரங்கள் மூலம் அறநிலையத்துறையே தேவையில்லாத ஒன்று என்று தவறான பிரச்சாரங்களை மேற்கொண்டு, கோவிலை யும் அதன் சொத்துக்களையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர துடிக்கும் மதவெறி அமைப்புகளின் செயல்பாட்டை தடுத்து, அறநிலையத்துறையை பாதுகாத்திட வேண்டும்.
கட்டுரையாளர்: அமைப்பாளர், தமிழ்நாடு அனைத்து சமய நிலங்களை பயன்படுத்துவோர் பாதுகாப்பு சங்கம்