articles

img

மோடியின் ஆட்சியில் வங்கதேசம் வளர்ந்திருக்கிறது!! - அகர் பட்டேல் நேர்காணல்

அகர் பட்டேல் “மோடி ஆட்சிக்கு நாடு தந்த விலை” (Price of Modi years) என்ற புத்தகத்தின் ஆசிரியர். இவர் சிறந்த கட்டுரையாளர். சர்வதேச பொது மன்னிப்பு சபையின் இந்திய கிளைக்கு தலைவர். மோடியின் ஆட்சியில் மனித உரிமை மீறல்,  நாசமான பொருளாதாரம் பற்றிய மறுக்கமுடியாத தரவுகளுடன் எழுதும் விமர்சகர். ஓராண்டுக்கு முன்பு இந்துத்துவா ராஷ்டிரம் நடைமுறைக்கு வந்துவிட்டதாகவே அவர் எழுதிய போது பலரும் அதிர்ச்சி அடைந்தனர். அவர் ஃப்ரண்ட்லைன் இதழுக்கு அளித்துள்ள நேர்காணல்:

*    பிளவுவாத தேசியத்தை கொள்கையாக கொண்ட  ஆர்எஸ்எஸ்சை ஏற்றுக்கொள்ளக் கூடியதாகவும் மரியாதைக்குரிய அமைப்பாகவும் மோடி மாற்றியுள்ளாரா?

ஆர்எஸ்எஸ் கொள்கைகளை மோடி ‘மரியாதைக்குரியதாக’ மாற்ற முயற்சிக்கிறார். அதன் முதல் நோக்கம் முஸ்லிம்களை அரசியல் ரீதியாக ஓரங்கட்டுவதாகும். தீனதயாள் உபாத்தியாயா  இதுதான் தங்களது அமைப்பின் லட்சியம் என்று 1965 இல் அறிவித்தார். அது இன்று நிறைவேறிவிட்டது. இரண்டாவதாக இந்தியர்கள் அல்லாதோர் என்று ஆர்எஸ்எஸ் கருதும் மதச்சிறுபான்மை யினர் மீது  தொடர்ச்சியாக தாக்குதல் நடத்துவதாகும். சிறுபான்மையினர் மீதான தாக்குதலுக்கு மோடி அரசின் ஒப்புதலும் ஆதரவும் உள்ளது. இதனால் உலக நாடுகள் இந்தியாவை மோசமாக  பார்க்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. வளர்ந்த நாகரிக நாடுகளின்  தரவரிசையில் இந்தியா என்றாவது ஒரு நாள் சேரும் என்ற நம்பிக்கையை கைவிடும் நிலை ஏற்பட்டுள்ளது.

* மதச்சார்பற்ற கட்சிகளின் தயக்கம் குறித்து...

இன்றைய இந்தியாவில் மதச் சுதந்திரம் இல்லை. சிறுபான்மையினர் வாக்குரிமை அடிப்படையில் மட்டுமே வாழ்கின்றனர். அவர்கள் உரிய வழிபாட்டு இடங்களில் வழிபட முடியவில்லை. இந்தியாவின் வினோதம் அரசியல் சட்டம் வழங்கியுள்ள விரும்பும் மதத்தை பின்பற்றவும் பரப்பவும் அடிப்படை உரிமை யாக உள்ள அதே நேரத்தில் கிரிமினல் குற்றமாகவும் ஆகியுள்ளது. நீதித்துறையும்  தனிநபர்களின் மத சுதந்திர உரிமைக்கு ஆதரவாக நிற்பதைவிட மத  சுதந்திரத்தை ஒடுக்கும் அரசுக்கு ஆதரவாக உள்ளது.  மதச்சார்பின்மை என்பது இந்து பெரும்பான்மை யினருக்கு எதிர்மறையான ஒன்றாக மாற்றப் பட்டுள்ளது. எனவே பல்வேறு அரசியல் கட்சிகளும் மதச்சார்பின்மை என்ற வார்த்தையை உச்சரிக்கவே தயங்குகின்றன.

*     இன்றைய பொருளாதார வீழ்ச்சிக்கு கொரோனா ஊரடங்கு மட்டுமே காரணமா அல்லது செல்லாப்பண நடவடிக்கையால் 2016 லேயே வீழ்ச்சி துவங்கிவிட்டதா?

நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு கொரோனா ஊரடங்கு மட்டுமே காரணமல்ல. 2014 இல் வங்கதேசத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தனிநபர் வருமானம் இந்தியாவை விட 50% பின் தங்கியிருந்தது. ஆனால் இப்போது தெற்காசிய  நாடுகளில் சர்வதேச ஏற்றுமதியில் வங்க தேசம்  முன்னணியில் உள்ளது. இந்தியாவில் இன்று ஐந்து கோடிக்கும் குறைவாகவே தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்கிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தி யில் சீனாவில் தொழிலாளர்களின் பங்கு 70% ஆகும்.  ஆனால் இந்தியாவில் இது 40% மட்டுமே. இது தெற்கா சிய நாடுகளிலேயே மிகவும் குறைவானதாகும். இந்திய தொழிலாளர்களின் எண்ணிக்கையில் மோடி ஐந்தில்  ஒரு பகுதியை வீட்டுக்கு அனுப்பிவிட்டார். மோடியின்  ஆட்சிக் காலத்தில் வங்கதேசம் மிகவும் முன்னேறி யுள்ளது. ஆனால் இந்தியாவோ மிகவும் பின்தங்கி யுள்ளது. இது மோடி ஆட்சியின் திகைக்க வைக்கும் திறமையின்மையால் வந்த வினையாகும். ஆனால் கெடுவாய்ப்பாக இதற்கான அவப்பெயர் மோடிக்கு ஏற்படவே இல்லை.

1947க்கு முன்பு வேலையின்மை மூன்று சதவீதமாக இருந்தது. 2018 இல் வேலையின்மை விகிதம் 6 சதவீதமாக   உயர்ந்துள்ளது. இதுவே கூட அரசு தரும்  புள்ளிவிவரங்கள் ஆகும். மோடி உறுதியாக செயல்படுபவர் என்று கூறிக் கொள்கின்றனர். ஆனால் அவர் கோப்புகளை பார்ப்பதோ, படிப்பதோ கிடை யாது. அது கல்வி ஆய்வாளர்களின் வேலையாம்! பிரதமர் செய்யக்கூடிய வேலை இல்லையாம். எனவே  அரசு கோப்புகள் பற்றி அதிகாரிகள் இரண்டே நிமிடங்களில் மோடிக்கு  வாய்மொழியாக எடுத்துரைக்கிறார்கள். மோடி உடனடியாக அரசின் செயல்பாட்டை தீர்மானிக்கிறார். இதுவே அவருக்கு வசதியானதாக இருக்கிறது. ஒரு தேசம் இப்படி நடத்தப்படக் கூடாது. ஆனால், இதுதான் மோடி செயல்படும் பாணியாக உள்ளது.

*    லஞ்ச ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் எந்த நாடும் செல்லாப்பண நடவடிக்கையை எடுத்தது இல்லை. ரிசர்வ் வங்கி செல்லாப்பண நடவடிக்கைக்கு எதிராக மோடி அரசை எச்சரித்தது. அவ்வாறு இருந்தும் மோடி ஏன் செல்லாப்பண நடவடிக்கையை மேற்கொண்டார்?

செல்லாப்பண நடவடிக்கை நாட்டின் கடுமை யான பிரச்சினைகளுக்கு  ஒரு மந்திர ஆயுதம் என்று  மோடி நம்பினார். லஞ்சம், கருப்பு பணம், தீவிரவாதம் எல்லாவற்றுக்குமான தீர்வு செல்லாப்பண நடவடிக்கை என்றார். ஆனால் இந்த நடவடிக்கை மோசமான தோல்வியில் முடிந்ததும் மோடி திணறினார். அதிர்ச்சியும் குழப்பமும் அடைந்தார்.

இந்த நடவடிக்கைக்கு முன்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி யோசிக்கவே இல்லை. அந்த நவம்பர் 8 கூட்டத்தில் கேபினட் மந்திரிகள் கைபேசி  இல்லாமல் கூட்டத்திற்கு வருமாறு பணிக்கப்பட்டனர். 500, 1000 ரூபாய் நோட்டுகள் ஒழிக்கப்பட போகிற தென்று அவர்களில் ஒருவருக்கும் தெரியாது. எனவே அதற்கான முன் தயாரிப்பு அறவே இல்லை. மோடியின் ஆட்சியில் நடுத்தர நடுத்தர வர்க்கத்தின் வளர்ச்சி கூட நின்றுவிட்டது. கார் வீடுகள் விற்பனை கடந்த பத்து ஆண்டுகளாக படுத்துவிட்டது. ஐந்து ஆண்டு களாக இருசக்கர வாகனங்களின் விற்பனை உயரவே இல்லை. சந்தேகத்திற்கிடமின்றி மிகவும் பின் தங்கிக்கொண்டிருக்கிறோம். பிரச்சினை இருப்பதை ஒத்துக் கொண்டால்தானே பிரச்சினைகளைத் தீர்க்க முடியும்! எல்லாம் நன்றாகவே நடக்கிறது என்று நினைத்தால் சரி செய்வதற்கு ஒன்றும் இல்லை. மோடிக்கு பிரச்சினை இருப்பது தெரியுமோ, தெரியாதோ;ஆனால் எல்லாம் நன்றாக இருப்பதாக கூறுகிறார்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் 2013இல் இருந்ததைவிட வேலை கேட்போர் நான்கு மடங்கு கூடுதலாக ஆகியுள்ளது. இந்தியர்கள் உழைக்க விரும்புகிறார்கள். ஆனால்  வேலையில்லை. இந்தியர்கள் 2012இல் உணவு உண்டதை விட 2018 இல் குறைவாகவே உண்கின்ற னர்; செலவழிக்கின்றனர். இந்த புள்ளிவிபரத்தை பொரு ளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் வெளியிட விரும்பினார். ஆனால்    வெட்கப்பட்டு  மோடி இந்த விவரத்தை வெளியிடவில்லை.

*    மோடி அரசின் திட்டங்கள் குறித்து...

மேக் இன் இந்தியா துவங்கிய பிறகு உள்நாட்டு  உற்பத்தி 16% இல் இருந்து 13% ஆக வீழ்ச்சி அடைந்து விட்டது. உற்பத்தித் துறையில் மொத்த வேலை அளிப்பு  5.1 கோடியிலிருந்து 2.7 கோடியாக(2016) சரிந்துள்ளது. பிரதமரின் முன்னாள் ஆலோசகர் அரவிந்த் பனகாரியா ஆத்மா நிர்பார்  குளறுபடியான திட்டமென்று கூறி யுள்ளார். பேட்டி பதாவோ திட்டம் (Beti Padhao) ஒன்றும்  இல்லாமல் போனது. மோடி மனதைச் செலுத்தி எந்த  திட்டத்திலும் சீரான தொடர்ச்சியை பின்பற்றுவது கிடை யாது. ஆர்வமுடன் ஒன்றைத் தொடங்குவார். பின்னர் உற்சாகமிழந்து திட்டத்தை கைவிட்டுவிடுவார்.

*    மோடியின் விளம்பரச் செலவு பற்றி...

கொரோனா பேரிடர் இந்தியாவுக்கு வந்து சேர்ந்ததும், மோடி அரசின் விளம்பர ஒதுக்கீடு 1300 கோடி ரூபாயை உடனடியாக நிறுத்த கோரினார் சோனியா காந்தி. ஆனால் பொதுத் துறைகளின் மூலமாக அரசுக்கு வேண்டிய மீடியாக்களுக்கு விளம்பரங்கள் வாரி வழங்கப்பட்டன. இதனால் விளம்பரச் செலவு 2500 கோடியாக உயர்ந்தது.   இந்தியர்கள் பார்த்துப் பார்த்து சலித்த முகத்தை விளம்பரம் செய்ய எதற்காக  2500 கோடியை விரயம்  செய்ய வேண்டும்? ஆனால் தனது இமேஜ் பற்றி  பெரிதும் கவலைப்படும் மோடி இதை நிறுத்தமாட்டார். கடந்த பத்து ஆண்டுகளாக இந்திய மீடியாக்கள் மதவெறி மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளன. விளம்பர சந்தை சுருங்கியுள்ள நேரத்தில் அவைகளுக்கு மோடி யின் அரசு விளம்பரங்களை அள்ளிக் கொடுத்ததன் மூலம் மீடியாக்கள் வகுப்புவாத முகத்துடன் நடந்து கொண்டன. சிறுபான்மை மக்கள் மீது, குறிப்பாக முஸ்லிம்கள் மீது மீடியாக்கள் போர் தொடுத்துள்ளன. மீடியாக்கள் ஏற்படுத்தியுள்ள நீண்டகாலப் பாதிப்பை சரிசெய்ய பல தலைமுறைகளாகும்.

*     நாடு வேலையின்மை உச்சத்தில் இருக்கும்போது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம் போன்ற திட்டங்கள் எவ்வாறு செயல்படுகின்றன?

நாட்டின் பொருளாதாரம் நொறுங்குவதை வெளிப்படையாக மோடி ஒப்புக் கொள்ளாவிட்டாலும், வேலையின்மையின் தீவிரத்தை உணர்ந்து மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கு அதிக நிதி ஒதுக்கியது. இதற்கு முன்பு இந்த திட்டத்தை  கழுத்தை நெரித்து கொன்றுவிட மோடி விரும்பினார். இந்தத் திட்டத்தை ஏளனம் செய்தார். ஏனெனில் மக்களுக்கு இதைவிட நல்ல வேலைவாய்ப்புகளை தன்னால் உருவாக்க முடியும் என்று நம்பிக்கொண்டார். 2014 இல் ரூ.32000  கோடியாக இருந்த திட்டநிதி ஒதுக்கீடு  பொருளாதாரம் வீழ்ச்சியடைய ஆரம்பித்தபோது, 2018 இல் ரூ.61000 கோடியாகி, 2020 இல் ரூ.1.11,000 கோடியாக  மூன்று மடங்காக உயர்ந்தது. ஆனால் முதல் ஏழு மாதங்களுக்கு உள்ளாகவே ஒதுக்கீடு நிதி அனைத்தும் காலியாகி விட்டது. பாரத பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் முதல் நான்கு ஆண்டுகளுக்கு ரூ.1.00 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்வதாக கூறப்பட்டது. ஆனால்  20 ஆயிரம் கோடி மட்டுமே செலவு செய்யப்பட்டுள்ளது. 

*     உங்கள் புத்தகத்தில் பெரும்பான்மைவாதம் பற்றி பேசுகிறீர்கள். மோடியின் இந்தியா ஜியா உல் ஹக்கின் பாகிஸ்தானை (1986) நினைவுபடுத்துகிறதா?

இரண்டு ஆட்சிகளுக்கும் ஒற்றுமைகள் உள்ளன. இரண்டுமே மதச் சிறுபான்மையினரை ஒடுக்கின. ஆனால் மோடியின் மதவெறிக்கு இந்தியாவில் பெரும்பான்மை ஆதரவு உள்ளது. ஜியாவுக்கு அப்படி  கிடையாது. அவருக்கு ஜனநாயகத்தின் ஒப்புதல் கிடைக்கவில்லை. இஸ்லாமிய ஹீடுட் சட்டத்தின்படி கல்லெறிந்து கொலை செய்தல், அங்கங்களை வெட்டுதல்  போன்ற சட்டங்கள்  காகிதத்தில் தான் இருந்தன. அறிஞர்களும் நீதித் துறையினரும் எதிர்த்ததால் அவற்றை ஜியா உல் ஹக்கால் நிறைவேற்ற முடியவில்லை. மாறாக இந்தியாவில் சிறுபான்மையினர் தனிநபர் சுதந்திரத்தில் தலையிடும் சட்டங்களுக்கு பெரும்பகுதி மக்கள் ஆதரவாக உள்ளனர். இங்கு முஸ்லிம்களை அடித்துக் கொலை செய்வது அன்றாட நிகழ்வாகிவிட்டது. ஹோட்டல்கள் சிறு வணிகம், வியாபாரம் செய்யும் முஸ்லிம்கள் தொல்லைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். இன்று பாகிஸ்தான் சில வழிகளில் மதச்சார்பின்மை நோக்கி பயணப்படும் போது இந்தியா மதச்சார்பின்மையை விட்டு விலகிச் செல்கிறது. எதிர்காலத்திலும் இது எல்லாமே  நீடிக்கும் என்று தோன்றுகிறது. ஏனெனில் இந்திய சமூகத்தின் பெரும்பகுதி மதவெறி வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளது.

*     சுதந்திர இந்தியாவில் 2014க்குப் பின்னர் பசுமாடு தொடர்பாக 97ரூ வன்முறைகளை பார்க்கிறோம். நீண்டகாலமாகவே பசு புனிதமான மிருகமாக கருதப்படும் போது இவ்வாறான வன்முறைகளை எவ்வாறு புரிந்து கொள்வது?

பசுக்கள் கொல்லப்படுவது விவசாய பொருளா தாரத்தின் ஒரு பகுதியாகும். டிராக்டர்கள் வந்தபிறகு காளைகளினால் பயனில்லை. அவைகளை செலவழித்து பராமரிக்க முடியாது. விவசாயிகள் இதை  புரிந்து கொண்டுள்ளனர். மோடி பாஜக ஆளும் மாநிலங்களில் மாட்டுக்கறி வைத்திருப்பதை குற்றமாக்கும் சட்டத்தை கொண்டுவரச்  செய்தார். இதன் பின்னர்தான் முஸ்லிம்களை அடித்துக் கொல்வது ஆரம்பமானது. அடுத்து இரு மதத்தினரின் கலப்புத் திருமணங்களை தடை செய்யும் லவ் ஜிகாத் சட்டங்கள் இயற்றப்பட்டன.

*    மோடியின் ஆட்சிக்கு நாடு தந்த விலை என்ன?

இந்தியா சீனாவுக்கு அடுத்து மிகப்பெரிய பொருளாதார சக்தியாக வளர்வது என்ற பேச்சு ஒரு பக்கம் இருக்கட்டும்! இன்று நாட்டில் பரவியுள்ள தீநுண்மியால் பெரும்பகுதி மக்களின் வறுமை நீடிக்கும்.  வேலையின்மை நீடிக்கும் என்பது விதியாகி விட்டது. விரல் விட்டு எண்ணக்கூடிய சிலரின் கைகளில் தேசத்தின் வளங்கலெல்லாம் சேர்க்கப்படுகின்றன. இந்திய சமுதாயம் பிரிந்து கிடக்கிறது. சிறுபான்மை யினர் பலவந்தமாக தனிமைப் படுத்தப் படுகின்றனர். வன்முறை ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டது. நீதித்துறை அதன் பொறுப்பைத் துறந்துவிட்டது. மோடியின் இந்துத்துவ அரசானது அரசு பல பிரயோகத்தை பயன்படுத்துகிறது. இந்துத்துவா கும்பல்கள் இந்தியாவை ஆட்சி செய்கின்றன.

ஃப்ரண்ட்லைன், டிச.31 தமிழில்: ம.கதிரேசன்