ஒரே நாடு - ஒரே மதம் - ஒரே மொழி - ஒரே தேர்தல்’ என ஒன்றிய பாஜக அரசு கூட்டாட்சி அமைப்பு முறையின் மீது தொடர் தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவின் பெயரை பாடத்திட்டத்திலும், அரசு நிர்வாகத்திலும் ‘பாரத்’ என பெயர் மாற்றும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. மாநிலங்களின் உரிமைகளை வெட்டிச் சுருக்கி, கூட்டாட்சி தத்துவத்தை சின்னாபின்னமாக்கி வருகிறது. கிடைத்த ஆட்சியதிகாரத்தைப் பயன்படுத்தி இந்திய வரலாற்றுச் சக்கரத்தை பல நூற்றாண்டுகளுக்கு பின்னோக்கி சுழற்றிச் செல்ல முயற்சிக்கிறது.
இந்திய வரலாற்றில் மொழி அடிப்படையிலான மாநிலங்கள் உருவானதும், தமிழ் பிரதேசங்களை உள்ளடக்கிய ஒரு மாநிலம் உருவானதும், அம்மாநிலத்திற்கு ‘தமிழ்நாடு’ என பெயர் சூட்டப்பட்டதும் சாதாரணமாக நடந்தது ஒன்றல்ல. எண்ணற்ற போராட்டங்களுக்கும் அளப்பரிய தியாகங்களுக்கும் பின்னால் பெற்ற சாதனைகளாகும். இச்சாதனை வரலாற்றை தமிழ்நாட்டு மக்களுக்கு குறிப்பாக, பள்ளி மாணவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டியது வரலாற்றுத் தேவையாகும்.
“வடவேங்கடம், தென்குமரி, ஆயிடை தமிழ்கூறு நல்லுலகம்” என தொல்காப்பியம் சுட்டிக்காட்டுகிறது. இருந்தாலும் தமிழ் மக்கள் வாழும் நிலப்பரப்பு முழுவதும் ஒரே ஆட்சியின் கீழ் வரலாற்றில் எப்போதும் இருந்ததில்லை. கடந்த காலங்களில் தென்பாண்டிய நாடு, வேணாடு, குட நாடு, குட்ட நாடு, பூழிநாடு, பாண்டிநாடு, புனல்நாடு, பன்றி நாடு, அருவாநாடு, மலாடு என பல நாடுகளாக அமைந்திருந்தது. பிற்காலத்தில்,மூவேந்தர்கள் ஆண்டபோதும் பல உபநாடுகளாகப் பிரிந்து கிடந்தது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இந்திய நாடு ஒருங்கிணைக்கப்பட்டு தங்களது சுரண்டல் தேவைக்கு வசதியாக மூன்று மாகாணங்கள் அமைக்கப்பட்டன. மன்னராட்சிப் பகுதிகளும் தொடர்ந்தன. 1937 ஆம் ஆண்டில் மாகாணங்களின் எண்ணிக்கை 11 ஆக்கப்பட்டது. இருப்பினும் இம்மாகாணங்கள் மொழி, பண்பாடு உள்ளிட்டவைகளை கணக்கில் கொள்ளாமல் வெறும் நிர்வாக அமைப்பாகவே இருந்தன.
விடுதலைப் போராட்ட முழக்கம்
வெள்ளை ஏகாதிபத்தியத்தை எதிர்த்து விடுதலைப்போராட்டம் கருக்கொண்ட காலத்தில் மொழி உரிமைப் போராட்டங்கள் எழுந்தன. விடுதலை முழக்கங்கள், எழுச்சிமிகு கவிதைகள், அந்தந்த தாய்மொழியில் உரக்க முழங்கப்பட்டன. காங்கிரஸ் கட்சி தனது மாநில அமைப்புகளை மொழிவழி அமைப்புகளாக அமைத்திட 1920ஆம் ஆண்டில் நாக்பூரில் நடைபெற்ற மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டது. மொழிவழி மாநிலங்கள் அமைக்கப்பட வேண்டுமென குரல்கள் எழுந்தன. மொழிவழி மாநிலங்களை அமைத்திட வேண்டுமென 1946ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது. நாட்டின் விடுதலைக்குப் பின்னரும் மொழிவழி மாநிலங்கள் அமைத்திட கம்யூனிஸ்ட்டுகள் நாடு முழுவதும் பல போராட்டங்களை முன்னெடுத்தார்கள்.
தெலுங்கு பேசும் பகுதிகளில் ‘விசால ஆந்திரா’ அமைக்க வேண்டுமென தோழர் பி. சுந்தரய்யா தலைமையிலும், மலையாள மொழிப் பகுதிகளை ஒருங்கிணைத்து ‘நவ கேரளம்’ அமைத்திட இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் தலைமையிலும், ‘வங்காளம்’, ‘மகாராஷ்ட்டிரம்’ என நாடு முழுவதும் மாநிலங்கள் அமைத்திட வேண்டும் எனவும் போராட்டங்களை கம்யூனிஸ்ட்டுகள் தலைமை தாங்கி நடத்தினர். ‘ஐக்கிய தமிழகம்’ வேண்டுமென்ற போராட்டத்தை தோழர்கள் பி. ராமமூர்த்தி, ப. ஜீவானந்தம் ஆகியோர் தலைமை தாங்கி நடத்தினர். தமிழரசுக் கழகத் தலைவர் ம.பொ. சிவஞானம் இப்போராட்டத்திற்கு தனது ஆதரவினை தெரிவித்தார்.
விடுதலைக்கு முன் மொழி வழி மாநிலங்களை அமைக்க வாக்குறுதி கொடுத்த காங்கிரஸ், ஆட்சிக்கு வந்த பின் அந்த கோரிக்கையினை நிறைவேற்ற மறுத்து விட்டது. இன்னொருபக்கம் விடுதலைப்போராட்டக் காலத்திலேயே ஆர்.எஸ்.எஸ். அமைப்பு மொழிவழி மாநிலங்கள் அமைவதை கடுமையாக எதிர்த்தது. விடுதலைக்குப் பின்னர் ஜனசங்கத்தின் தேர்தல் அறிக்கையில் “கூட்டாட்சி முறையை ஒழித்து இந்தியாவை ஒரே நாடு என பிரகடனப்படுத்துவோம்” என குறிப்பிட்டது.
ஆந்திரத்தின் போராட்டம்
இத்தகைய சூழ்நிலையில் தேசிய இனங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதத்தில் மொழி அடிப்படையிலான மாநிலங்கள் அமைக்க வேண்டுமென குரல்கொடுத்த ஒரே இயக்கம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியாகும். இதற்காக நாடு முழுவதும் பல கட்ட போராட்டங்களை நடத்தியது. ஆந்திராவில் பொட்டி ஸ்ரீராமுலு இக்கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரதம் மேற்கொண்டு 65ஆவதுநாளில் உயிர் துறந்தார். இதன்விளைவாக போராட்டங்கள் தீவிரமடைந்தன. அங்கு நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 20 பேர் கொல்லப்பட்டனர். இந்த உயிர்ப்பலிகளுக்கு பின்னரே ஆந்திர மாநிலம் தனியாக அமைக்கப்படுமென 1952ஆம் ஆண்டு பிரதமர் ஜவஹர்லால் நேரு நாடாளுமன்றத்தில் அறிவித்தார். அதனைத்தொடர்ந்து தெலுங்கு பேசும் அனைத்து பிரதேசங்களும் ஒருங்கிணைக்கப்பட்டு ஆந்திர மாநிலம் தனி மாநிலமாக உருவாக்கப்பட்டது.
இந்த வெற்றியை சென்னை மாகாண சட்டமன்றத்தில் உற்சாகத்தோடு வரவேற்று பேசிய தோழர் பி. ராமமூர்த்தி “ஆந்திர மக்கள் அடைந்த வெற்றி நமது நாட்டு மக்கள் சுதந்திரத்தையும் - ஜனநாயகத்தையும் நோக்கி நடைபோடுவதில் ஒரு மாபெரும் முன்னேற்றமாகும். .... இன்று ஆந்திர ராஜ்ஜியம் அமையப்போவது நாடெங்குமே மொழி வழி ஆட்சிகள் அமைவதை நோக்கி முன்னேறுவதில் முதல்பெரும் வெற்றியாக திகழப்போகிறது” என குறிப்பிட்டார்.
ஐக்கிய தமிழகம் கோரிக்கை
ஆந்திரத்தின் வெற்றியைத் தொடர்ந்து நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்தன. கொச்சி-திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இணைந்திருந்த தமிழகப் பிரதேசங்களான தோவாளை, அகஸ்தீஸ்வரம், கல்குளம், விளவங்கோடு, செங்கோட்டை பகுதிகளையும் வேறு பல பிரதேசங்களோடு இணைந்திருந்த பகுதிகளையும் இணைத்து தனி மாநிலம் அமைக்க வேண்டுமென போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. கன்னியாகுமரியில் கம்யூனிஸ்ட்டுகள் நடத்திய போராட்டத்தில் மார்ஷல் நேசமணி இணைந்தார். தோழர்கள் ப. ஜீவானந்தம், ஜி.எஸ். மணி, டி. மணி உள்ளிட்டோர் தலைமையில் நடத்திய போராட்டத்தின் மீது அப்போதைய முதலமைச்சர் பட்டம் தாணுப்பிள்ளை காவல்துறையை ஏவி கொடுமையான அடக்குமுறைகளை கட்டவிழ்த்துவிட்டார். துப்பாக்கிச் சூட்டில் 11 தமிழர்கள் உயிரிழந்தனர்.
ஐக்கிய தமிழகம் கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் நடைபெற்ற மாபெரும் போராட்டத்தில் பி ஆண்டு சி மில் தொழிலாளர்கள் உள்பட 50 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். இப்பேரணி மீது காவல்துறை நடத்திய தாக்குதலில் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் ஜீவானந்தம், எம்.ஆர். வெங்கட்ராமன், கே. முத்தையா, தமிழரசுக் கட்சி தலைவர் ம.பொ. சிவஞானம் உள்ளிட்டு 1000க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். போராட்டம் இந்திய நாடு முழுவதும் தீவிரமடைந்த சூழ்நிலையில் ஒன்றிய அரசு “பசல் கமிசன்” அமைத்தது. அக்குழு தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம் ஆகிய மாநிலங்கள் அமைத்திட பரிந்துரையை வழங்கியது. இப்பரிந்துரை அடிப்படையில் 1956 நவம்பர் 1ஆம் தேதி தமிழ்ப்பிரதேசங்களை முழுமையாக கொண்ட தனி மாநிலம் ‘சென்னை மாகாணம்’ என்ற பெயரில் அமைக்கப்பட்டது. தமிழ் பேசும் மக்கள் ஒரே ஆட்சி நிர்வாக அமைப்பின் கீழ் வாழும் நிலைமை முதன்முறையாக ஏற்பட்டது வரலாற்றுச் சாதனையாகும். இந்த வரலாற்றில் கம்யூனிஸ்ட்டுகளின் பங்களிப்பு வைரவரிகளால் எழுதப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் ஒலித்த குரல்
இவ்வாறு உருவான சென்னை மாகாணத்தின் பெயரை தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்ய வேண்டுமென தமிழ்நாடு சட்டமன்றத்தில் கம்யூனிஸ்ட்டுகள் 1952ஆம் முதல் குரல்கொடுத்தது மட்டுமின்றி, இந்திய நாடாளுமன்றத்தில் இதற்கான சட்டத்திருத்தத்தை முன்மொழிந்தவர் தோழர் பி. ராமமூர்த்தி ஆவார். இத்தீர்மானத்தின் மீது அவையில் வாதாடிய பெருமை தோழர் பூபேஷ் குப்தாவைச் சாரும். நாடாளுமன்றத்தில் இத்தீர்மானத்திற்கு அறிஞர் அண்ணா ஆதரவு தெரிவித்து பேசினார். இருப்பினும் காங்கிரஸ் கட்சி இத்தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்து தோற்கடித்தது. பின்னர் 1968ஆம் ஆண்டு அறிஞர் அண்ணா முதலமைச்சராக பதவியேற்ற நிலையில் சட்டமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டு ஒன்றிய அரசு ஏற்றுக்கொண்டு ‘தமிழ்நாடு’ என்ற பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இத்தகைய நீண்ட, நெடிய வரலாற்றை தமிழ்நாட்டு மக்களுக்கு எடுத்துச் சொல்லும் வகையில் தமிழ்நாடு அரசு நவம்பர் 1ஆம் தேதி மாநில அமைப்பு தினத்தை சிறப்பான விழாவாக கொண்டாட வேண்டும்.
தாய்மொழி வழிக் கல்வி
விடுதலைக்கு முன்னரும், விடுதலைக்குப் பின்னரும் கம்யூனிஸ்ட்டுகள் மொழி பிரச்சனையில் தீர்க்கமான தெளிவோடு குரலெழுப்பினர். தமிழ்நாட்டில் ஆட்சி மொழி, பயிற்று மொழி, உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக தமிழே இடம் பெறவேண்டுமென ஆணித்தரமாக குரலெழுப்பிய பெருமை கம்யூனிஸ்ட்டுகளையேச் சாரும். 1952ஆம் ஆண்டு தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றி பெற்றது. ஆனால் காங்கிரஸ் செய்த சதியால் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டு எதிர்க்கட்சியாக செயல்பட்டது. இக்காலத்தில் சட்டப்பேரவையில் ஆங்கிலம் மட்டுமே அவை மொழியாக இருந்த நிலையை முறியடித்து தாய்மொழிகளில் முதலில் உரையாற்றியவர்கள் கம்யூனிஸ்ட்டுகள். தமிழில் சட்டமன்ற வரலாற்றில் முதலில் பேசி பதிவு செய்தவர்கள் தோழர்கள் பி. ராமமூர்த்தி, ப. ஜீவானந்தம் ஆகியோர் ஆவர்.
இந்தியாவின் பன்முக பண்பாட்டை பாதுகாக்கும் வகையிலும் அனைத்து மொழிபேசும் மக்களுடைய மொழி உரிமைக்கு முன்னுரிமை கொடுக்கும் வகையிலும் இந்தியாவின் ஆட்சி மொழி, பயிற்று மொழிக் கொள்கைகளை கடைப்பிடிப்பதற்கு மாறாக, இப்போதுவரை அமைந்துள்ள ஒன்றிய அரசுகள் இந்தி மொழியை திணிப்பதில் தீவிரம் காட்டியே வந்துள்ளன. அரசியல் சாசனம் 17ஆவது அட்டவணையில் பிரிவு 343 முதல் 351 வரையிலான பிரிவுகள் மொழி பிரச்சனைகள் குறித்து விளக்குகின்றன. இப்பிரிவுகள் ஒன்றிய அலுவல் மொழியாக இந்தியே நீடிக்க வேண்டுமென குறிப்பிட்டுள்ளதை காரணம் காட்டியே ஒன்றிய அரசு அனுதினமும் இந்தியை திணித்து வருகிறது.
மத்தியில் ஆட்சிப்பொறுப்புக்கு வந்துள்ள பாஜகவின் குருபீடமான ஆர்.எஸ்.எஸ். இந்தியாவின் பிற மொழிகளை தேசிய மொழியாக அங்கீகரிக்க மறுத்து வருகிறது. அவ்வமைப்பை பொறுத்த வரை சமஸ்கிருதம் மட்டுமே இந்தியாவின் ஒரே மொழி என்ற அடிப்படையில் சமஸ்கிருதமயமாக்கும் நடவடிக்கையை தொடர்ந்து மேற்கொண்டுவருகிறது. குறைந்தபட்ச மக்களிடம் கூட பேச்சு மொழியாக இல்லாத சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்கு ஒவ்வொரு ஆண்டும் பல நூறு கோடி ரூபாய் செலவழித்து வருகிறது. 2017-18 முதல் 2021-22 வரை சமஸ்கிருத வளர்ச்சிக்காக ஒன்றிய அரசு ரூ. 643.84 கோடி பணம் செலவழித்துள்ளது. இது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஒடிசா உள்ளிட்டு இதர தேசிய மொழிகளுக்கு செலவழித்ததைப் போல 22 மடங்கு அதிகமாகும். சமஸ்கிருதமய நடவடிக்கைக்கு துணைபோகும் வகையில் இந்தி திணிப்பில் ஒன்றிய பாஜக அரசு முழுவேகத்துடன் செயல்பட்டு வருகிறது.
இந்தி திணிப்பிற்கு எதிராக...
இத்தகைய இந்தி திணிப்பை எதிர்த்து போராடிய பெருமை தமிழ்நாட்டிற்கு உண்டு. இந்தி படிப்பது கூடாது என்பதல்ல. எந்தவொரு மொழியையும் கட்டாயமாக திணிக்கக் கூடாது என்பதே இந்தி திணிப்பு எதிர்ப்புக்கு அடிப்படை. இந்தி திணிப்பை எதிர்த்து போராடிய தமிழ்நாட்டில் அந்த இடத்தில் அனைத்து நிலைகளிலும் தமிழை நிலைநிறுத்துவதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டிருக்க வேண்டும்.
ஆனால், இதற்கு மாறாக, அந்த இடத்தில் ஆங்கிலம் முன்னிறுத்தப்பட்டது தமிழகத்தில் சோக வரலாறாகும். இதன் விளைவாக பல்வேறு பயிற்றுமொழி சம்பந்தமான குழுக்கள், குழுக்களின் சிபாரிசுகள், அரசாணைகள் வெளியிடப்பட்டிருந்த போதிலும் ஒட்டுமொத்தத்தில் தொடக்கக் கல்வி முதல் பல்கலைக்கழக கல்வி வரை தமிழே படிக்காமல் பட்டம் பெறும் அவல நிலை தமிழகத்தில் உருவாகியுள்ளது. அரசு நடத்தும் மழலையர் பள்ளிகளில் கூட ஆங்கிலமே கோலோச்சிக் கொண்டிருக்கிறது. கல்வி வணிகமயத்தின் விளைவாக ஆங்கில மோகம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுள்ளது. இதன் விளைவு பள்ளிக் கல்வி முதல் பல்கலைக்கழகம் வரை தமிழ் புறந்தள்ளப்படும் மோசமான நிலை உருவாகியுள்ளது.
தமிழ்நாட்டில் பல ஆண்டுகளுக்கு முன்னால் மருத்துவம், பொறியியல் படிப்புகள் தமிழ் மொழியில் மேற்கொள்ளப்படும் என்ற அறிவிப்புகளும் வெறும் அறிவிப்புகளாக மட்டுமே உள்ளன. தாய்மொழிக் கல்வி மூலம் மட்டுமே மாணவர்களின் அறிவியல் சிந்தனையை முழுமையாக வளர்த்திட முடியும். அந்நிய மொழி மாணவர்களுக்கு சுமையாக இருப்பது மட்டுமின்றி, பாடங்களில் முழுமையான புரிதலையும் ஏற்படுத்த முடிவதில்லை. அதிலும், சமூகத்தில் அடித்தட்டில் உள்ள பட்டியலினம் மற்றும் பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை மக்களுக்கு அந்நிய மொழி ஒரு சுமையாகவே அமைந்து அவர்களின் எதிர்காலத்திற்கு பெரும் தடையாக அமைந்துள்ளது.
மாணவர்களுக்கு வளமான கல்வி அறிவை புகட்டிட அனைத்து நிலைகளிலும் தாய்மொழியை பயிற்றுமொழியாக செயல்படுத்திட வேண்டும். இதற்கு தேவையான மருத்துவம், பொறியியல், தொழில்நுட்ப புத்தகங்களை தமிழில் மொழி பெயர்த்திட வேண்டும். தாய்மொழிக் கல்வியில் உரிய பயிற்சியை வழங்கிட ஆசிரியர்களை உருவாக்கிட வேண்டும். அதேசமயம், மாணவர்கள் விரும்புகிற வேறொருமொழியை மொழிப்பாடமாக பயிற்றுவதற்கான உரிய ஏற்பாடுகளையும் அரசு செய்து தர வேண்டும்.
இத்தகைய சிறப்புமிகுந்த ஆலோசனைகளை 1968ஆம் ஆண்டு சட்டமன்றத்தில். நிறைவேற்றப்பட்ட ஆட்சி மொழி சட்டத்தின் மீது நடைபெற்ற விவாதத்தின் போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றக்குழு தலைவர் தோழர் ஏ. பாலசுப்பிரமணியம் கீழ்க்கண்டவைகளை அரசு நிறைவேற்ற வேண்டுமென வற்புறுத்தியது இன்றைக்கும் பொருத்தமான உள்ளது இந்திக்கு அளிக்கப்படும் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு அனைத்து இந்திய மொழிகளுக்கும் சமமான அந்தஸ்து வழங்க வேண்டும், அரசியல் சட்டத்தின் 8ஆவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள அனைத்து மொழிகளும் மத்திய ஆட்சி மொழியாக அங்கீகரிக்கப்பட வேண்டும். நாடாளுமன்றத்தில் அவரவர் தாய்மொழியில் பேசவும் அது உடனுக்குடன் மொழிபெயர்க்க வசதி செய்யப்பட வேண்டும். ஒன்றிய அரசின் மசோதாக்கள் சட்டங்கள் உத்தரவுகள் அனைத்தும் எட்டாவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள அனைத்து மொழிகளிலும் ஆக்கம் செய்யப்பட வேண்டும்.
அந்தந்த மாநிலங்களில் உள்ள ஒன்றிய அரசு அலுவலகங்களில் அந்தந்த மாநில மொழிகளிலேயே மக்களுடன் தொடர்பு வைத்து பணியாற்ற வேண்டும். மாநில அரசுகள் ஒன்றிய அரசுக்கு தத்தம் தாய்மொழியிலேயே கடிதம் எழுதவும் அந்த மொழியிலே பதில் பெறவும் வாய்ப்பு வேண்டும். ஒவ்வொரு குடிமகனும் தன்னுடைய தாய்மொழியில் ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதி பதில் பெறும் உரிமை வேண்டும். எட்டாவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள அனைத்து மொழிகளுக்கும் சமமான நிதி வசதி வழங்க வேண்டும். அனைத்து மாநிலங்களிலும் உள்ள கல்வி நிலையங்களில் அந்தந்த மாநில மொழியே பயிற்றுமொழியே இருக்க வேண்டும்.
மாநில மொழியே, மாநில அரசுகளின் நிர்வாக மொழியாகவும், நீதிமன்ற மொழியாகவும் இருக்க வேண்டும். மொழிவழி சிறுபான்மையினர் உயர்கல்வி வரை தாய்மொழியிலேயே கல்வி பயில உத்தரவாதம் வேண்டும். மும்மொழித் திட்டம் தேவையற்றது. ஆனால் அதேசமயத்தில் கல்வி நிலையங்களில் தாய்மொழி தவிர ஆங்கிலம், அல்லது இதர இந்திய மொழிகளையும், மாணவர்கள் தங்களது விருப்பம் போல் படிப்பதற்கு வசதி செய்துதர வேண்டும் என்பது தோழர் ஏ.பாலசுப்பிரமணியம் முன்வைத்த கோரிக்கைகளாகும். இவை, தமிழ்நாட்டிற்கும் மட்டுமல்ல; இந்திய நாடு முழுமைக்குமே பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது. மொழிப்பிரச்சனையில் கம்யூனிஸ்ட்டுகள் எந்த அளவுக்கு தெளிவாக இருந்தார்கள் என்பதை இந்த கோரிக்கைகள் விளக்குவதோடு இவை நிறைவேற்றப்பட்டால் மொழிகளின் சமத்துவமும், இந்திய ஒருமைப்பாடும் நின்று நிலைபெறும் என்பதை புரிந்து கொள்ள முடியும்.