articles

img

சமஸ்கிருதத்திற்கு மட்டும் ரூ.2,533 கோடியை அள்ளிக் கொடுத்த ஒன்றிய பாஜக அரசு!

சமஸ்கிருதத்திற்கு மட்டும் ரூ.2,533 கோடியை அள்ளிக் கொடுத்த ஒன்றிய பாஜக அரசு!

தமிழ் உட்பட 5 தென்னிந்திய மொழிகளுக்கும் சேர்த்தே ரூ.140 கோடி தான்

சென்னை, ஜூன் 24 - கடந்த 10 ஆண்டுகளில் சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்கு மட்டும் ரூ. 2 ஆயிரத்து 533 கோடியை ஒன்றிய பாஜக அரசு செலவிட்டிருப்பது, தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) மூலம் அம்பலமாகி உள்ளது. இதே காலத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட 5 தென்னிந்திய மொழிகளுக்கு வெறும் ரூ. 147 கோடியை மட்டுமே ஒதுக்கி மோடி அரசு பாரபட்சம் காட்டியிருப்பதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

சமஸ்கிருதத்திற்கு 17 மடங்கு அதிக நிதி

2014-15 நிதியாண்டு மற்றும் 2024-25க்கு இடையில் சமஸ்கிருத மொழிக்காக ஒன்றிய அரசு ரூ. 2 ஆயிரத்து 532 கோடியே 59 லட்சத்தை செலவிட்டுள்ளது. இது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஒடியா ஆகிய 5 பாரம்பரிய இந்திய மொழிகளுக்கு ஒட்டுமொத்தமாக ஒதுக்கீடு செய்த ரூ. 147 கோடியே 56 லட்சத்தை விட 17 மடங்கு அதிகம். சமஸ்கிருதத்திற்கு ஒவ்வோர் ஆண்டும் சராசரியாக ரூ. 230 கோடியே 24 லட்சத்தை செலவிட்டுள்ள ஒன்றிய பாஜக அரசு, தமிழ் உள்ளிட்ட மற்ற ஐந்து மொழிகளுக்கும் சேர்த்தே- ஒவ்வோர் ஆண்டும் ரூ. 13 கோடியே 41 லட்சத்தைத் தான் செலவு செய்துள்ளது. சமஸ்கிருதத்திற்கு ஒதுக்கிய மொத்த நிதியுதவியில் 5 சதவிகிதத்திற்கும் குறைவாகவே தமிழுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதுவே கன்னடம் மற்றும் தெலுங்கை எடுத்துக் கொண்டால், 1 சதவிகிதம் கூட இல்லை. 0.5 சதவிகிதத்திற்கும் குறைவாகவும், ஒடியா மற்றும் மலையாளத்திற்கு தலா 0.2 சதவிகிதத்திற்கும் குறைவாகவுமே செலவிடப்பட்டுள்ளது. செம்மொழியாக அங்கீகரிக்கப்படாத உருது, ஹிந்தி மற்றும் சிந்தி மொழிகளுக்கான செலவினமும், சமஸ்கிருத மொழிக்கான செலவை விட குறைவு தான். 2014-15 மற்றும் 2024-25க்கு இடையில் இந்தி, உருது மற்றும் சிந்தி மொழிகளுக்கு ரூ. ஆயிரத்து 317 கோடியே 96 லட்சம் ஆகும்.

தமிழை விட சமஸ்கிருதத்துக்கு 22 மடங்கு அதிக நிதி

 2004-இல் முதன் முதலாகச் செம்மொழி அங்கீகாரம் பெற்ற தமிழுக்கு, மொத்தம் ரூ. 113 கோடியே 48 லட்சம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இது 2005-இல் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட சமஸ்கிருதத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகையை விட 22 மடங்கு குறைவு.  2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவின் மொத்த மக்கள் தொகையான 120 கோடி பேரில் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஒடியா மற்றும் கன்னடம் பேசுபவர்கள் 21.99 சதவிகிதம். சமஸ்கிருதம் பேசுபவர்கள் மிகவும் சொற்பம். ஆனால், மோடி அரசு சமஸ்கிருதத்துக்கு நிதியை வாரி இறைத்துள்ளது. இதுதொடர்பாக தமிழக கட்சிகள் கேள்வி எழுப்பும் போதெல்லாம், பிரதமர் நரேந்திர மோடி உலகம் முழுவதும் தமிழின் பெருமைகளை பேசி வருவதாக பாஜக-வினர் சால்ஜாப்பு செய்து வருகின்றனர். இந்நிலையில் தான், சமஸ்கிருதத்திற்கு 10 ஆண்டுகளில் ரூ. 2,533 கோடி வாரியிறைக்கப்பட்ட உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

“போலிப் பாசம் தமிழுக்கு.. பணம் எல்லாம் சமஸ்கிருதத்திற்கா? ஒன்றிய பாஜக அரசுக்கு முதல்வர் சூடு

ஒன்றிய பாஜக அரசின் பாரபட்சத்திற்கு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமது ‘எக்ஸ்’ பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், “சமஸ்கிருதம் கோடிக்கணக்கில் பணம் பெறுகிறது. தமிழ் மற்றும் பிற தென்னிந்திய மொழிகளுக்கு முதலைக் கண்ணீர் மட்டுமே கிடைக்கிறது. போலிப் பாசம் தமிழுக்கு; பணமெல்லாம் சமஸ்கிருதத்துக்கு!” என சாடியுள்ளார்.

சமஸ்கிருத மேலாதிக்க வெறி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள கண்டனத்தில், “சமஸ்கிருதத்துக்கு 2532.59 கோடியும் தமிழ் உள்ளிட்ட பிற ஐந்து செம்மொழிகளுக்கும் சேர்த்து 147.56 கோடியும் ஒதுக்கியுள்ளது. தமிழ், தமிழ்நாட்டு மக்கள், தமிழ் கடவுள்கள் எல்லாம் பாஜகவுக்கு ஓட்டுக்கு மட்டும் தான். நோட்டுகள் எல்லாம் சமஸ்கிருதத்துக்கு தான். இது தான் பாஜகவின் அப்பட்டமான சமஸ்கிருத மேலாதிக்க வெறி!” என்று விமர்சித்துள்ளார்.