மே 20 - தொழிலாளர் வேலை நிறுத்தத்தை மாபெரும் வெற்றி பெறச் செய்வோம்!
கீழ்வேளூர் பொதுக் கூட்டத்தில் பெ.சண்முகம் அழைப்பு
நாகப்பட்டினம், மே 3 - “தொழிலாளர்களின் உரிமைகள் சீதனமாக வந்ததல்ல; அவை ரத்தம் சிந்திப் போராடிப் பெற்றவை” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் கூறினார். 139-ஆவது மே தினத்தையொட்டி, நாகப் பட்டினம் மாவட்டம்- கீழ்வேளூர் கிழக்கு வீதி யில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. சிபிஎம் நாகை மாவட்டச் செயலாளர் வி.மாரிமுத்து தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக் கூட்டத்தில் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் பேசியதாவது:
போராட்டத்தால் கிடைத்த தொழிலாளர் உரிமைகள்
உலக அளவில் கொண்டாடப்படுகின்ற மே தினமானது போராடிப் பெற்றது. சிலர் இதை சீதனம் வந்தது போல் கூறி வருகிறார்கள். அவர்களுக்கு சொல்லிக் கொள்வோம், ‘எட்டு மணிநேர உழைப்பு, எட்டு மணிநேர உறக்கம், எட்டு மணிநேர ஓய்வு’ என்பது, பல்வேறு உயிர்த் தியாகங்களுக்கு பிறகு கிடைத்த போராட்டத்தின் வெற்றி. அதைத்தான் மே தினமாக கொண்டாடி வருகிறோம்.
தொழிலாளர்கள் மீது உழைப்புச் சுரண்டல்
இப்போது சில கார்ப்பரேட் கம்பெனி முத லாளிகள் எட்டு மணிநேர உழைப்பு போதாது; 14 மணி நேரம் - 16 மணி நேரம் உழைக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். அவற்றையே சில ‘பொருளாதாரப் புலிகள்’ அறிவுரைகளாக கூறி வருகிறார்கள். ஐ.டி கம்பெனிகள் இளை ஞர்களின் கனவுகளை அழித்து ஒழித்து அவர்க ளிடம் மிகப்பெரிய அளவில் உழைப்புச் சுரண் டலை நடத்துகின்றனர். வெளி மாநிலத்தவர்/புலம்பெயர் தொழிலாளிகளிடம் கருணையின்றி உழைப்பு சுரண்டலை ஏவி விடுகின்றனர். செயற்கை நுண்ணறிவுத் திறன் என்கின்ற ஏ.ஐ.அறிவு தொழில்நுட்பம் வளர்ந்த பின்னும், உழைப்புச் சுரண்டல் என்பது நடந்து கொண்டேஇருக்கிறது.
கவுரவ விரிவுரையாளர்களுக்கு நிர்ணயித்த ஊதியத்தை வழங்கு!
பல்கலைக்கழகங்களில் வேலை பார்க்கும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு நிர்ணயித்தபடி யான ஊதியத்தை தமிழ்நாடு அரசாங்கம் வழங்க வேண்டும். ஒவ்வொரு பல்கலைக் கழகம் மற்றும் கல்லூரிகளில் கவுரவ விரிவுரை யாளர்களாக பணியாற்றும் பேராசிரியர்க ளுக்கு இன்று வரை அநீதி இழைக்கப்பட்டு வருகிறது. பல பல்கலைக்கழகங்களில் நிரந்தர பணியிடத்தில் பணியாற்றும் பேராசிரியர்கள் சொற்ப எண்ணிக்கையிலேயே இருக்கின்றனர். ஆனால், அதிக அளவில் கவுரவப் பேரா சிரியர்களே பணியாற்றுகின்றனர். ஆனால் இவர்களுக்கு போதுமான ஊதியம் இன்று வரை வழங்கப்படவில்லை. இதுவும் ஒரு வகை யில் உழைப்புச் சுரண்டல் தான்
8-ஆவது ஊதியக் குழு பரிந்துரை விரைந்து அமல்படுத்த வேண்டும்!
அரசுத் துறைகளில் பணியாற்றுகின்ற ஊழி யர்களுக்கு ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கும் அவர்கள் பெறுகின்ற ஊதியத்தை வரை யறுத்து சமகாலத்திற்கு தகுந்தாற்போல் ஊதியம் வழங்கப்பட வேண்டும். அதற்காக ஒரு குழுவை ஏற்படுத்தி அந்தக் குழு கொடுக்கின்ற பரிந்துரையின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்பட வேண்டும். அப்படி எட்டாவது ஊதிய குழு கொடுத்த பரிந்துரையின்படி ஊதி யம் ஆனது வழங்கப்பட வேண்டும்.
மே 20 வேலை நிறுத்தத்தை வெற்றிபெறச் செய்வோம்!
ஒன்றிய அரசின் மக்கள் விரோத செயல் பாட்டால் நாளுக்கு நாள் பல்வேறு இடர்பாடு களை மக்கள் சந்தித்து வருகின்றனர். எனவே, இத்தகைய மோசமான பாசிச ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவதற்கான வேலைகளை இடதுசாரிக் கட்சிகள் உள்ளிட்ட ஜனநாயக சக்திகள் செய்து வருகின்றன. அந்த வகை யில், மே 20 அன்று நாடு தழுவிய அளவில் மிகப்பெரிய வேலைநிறுத்தத்தை திட்டமிட்டு உள்ளோம். மே 20 அன்று ரயில் மறியல், சாலை மறியல் என அனைத்துப் பகுதிகளிலும் வேலை நிறுத்தம் முழுமையாக நடைபெற வேண்டும். அதற்கான திட்டமிடலை சரியாக எடுத்துச் செய்து அனைத்து தரப்பு மக்களையும் ஒன்று திரட்டி இந்தப் போராட்டத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு பெ. சண்முகம் பேசினார்.
சாதிவாரி கணக்கெடுப்பு .... நிதி, செயல்திட்டம் எங்கே?
சமீபத்தில் ஒன்றிய மோடி அரசாங்கம் சாதிவாரி கணக்கெடுப்பு க்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கி உள்ளது. இதை வரவேற்கின்றோம். ஆனால் கணக்கெடுப்பை எப்படி அமல்படுத்தப் போகிறோம் என்று வெளிப்படையாக எதுவும் கூறப்படவில்லை. கொரோனா பெருந்தொற்றால் 2021 ஆண்டு நடைபெற இருந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு இன்று வரை நடை பெறவில்லை, ஆனால் இப்போது சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப் போகிறோம் என்று ஒன்றிய அரசு அறிவிக்கிறது, இது பீகார் தேர்தலுக் கான நாடகமாகத்தான் தெரிகிறது, பட்ஜெட்டில் நிதி ஒதுக்காமல் எப்படி சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது, ஒரு கணக்கெடுப்பு நடத்து வது என்றால் மிகப்பெரிய அளவில் பொருட்செலவு ஏற்படும். இதை ஒன்றிய அரசாங்கம் தெளிவுபடுத்தவில்லை. இடைக்கால பட்ஜெட்டில்நிதி ஒதுக்கி சாதிவாரி கணக்கெடுப்பையும், அத்துடன் சமூக பொருளாதார கணக்கெடுப்பையும் சரியாக நடத்த வேண்டும். சமீபத்தில் காஷ்மீர் மாநிலம் பஹல்காம் என்ற சுற்றுலாத்தலத்தில் 26 அப்பாவிகளை, பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர். அவர்க ளைக் கண்டறிந்து கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும். அதே நேரம், பாகிஸ்தானுக்கு சிந்து நதியின் நீரை நிறுத்தப் போகிறேன் என்று சொல்வதும், ராணுவ படைகளுக்கு விருப்பம் போல் நடந்து கொள்ளலாம் என்று ஆணையிடுவதும் ஒரு ஜனநாயக நாட்டின் பிரதமருக்கு அழகானது அல்ல, ஷரத்து 370-ஐ நீக்கினால், காஷ்மீர் மாநிலத்தில் அமைதி திரும்பும்; தீவிரவாதம் ஒழியும், என்றெல்லாம் வாய்ச்சவடால் விட்டார் பிரதமர் மோடி. ஆனால் இன்றைக்கு என்ன நிலைமை? 200 கிலோ மீட்டர் இந்திய நிலப்பரப்பிற்குள் வந்து அப்பாவி மக்களை சுட்டு வீழ்த்துகின்றனர். நம்மிடம் எந்தப் பாது காப்பும் இல்லை. மோடி அரசால், இந்திய மக்களின் பாதுகாப்பிற்கு எந்த உத்தரவாதத்தையும் தர முடியவில்லை.இறந்தவர்களுக்கு அஞ்சலி கூட செலுத்தாமல் தேர்தல் பிரச்சாரத்துக்கு மோடி சென்று விட்டார்.
ஊர்களுக்கு இருக்கும் சாதிப் பெயர்களை மாற்ற வேண்டும்!
தமிழ்நாடு சட்டமன்றத்தில் தமிழக அரசால் கொண்டுவரப்பட்ட சட்ட திருத்தத்தில் இனிமேல் தெருவின் பெயர்களில் ‘காலனி’ என்ற சொல் இருக்காது என்று கூறியிருப்பதை நாங்கள் வரவேற்கின்றோம். அதே சமயத்தில் பல ஊராட்சிகளின் பெயர்கள் சாதியின் பெயரால் இருக்கின்றன. நாயக்கன் கொட்டகை, பாப்பாரப்பட்டி, பறையப்பட்டி, பள்ளப்பட்டி இப்படி பல ஊராட்சிகளின் பெயர்கள் சாதியின் பெயரை தாங்கி நிற்கின்றன. எனவே, அது குறித்தும் தமிழ்நாடு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும், வெறுமனே தெருவின் பெயரோடு மட்டும் நின்று விடக்கூடாது. செங்கொடி கம்பங்களை அதிகாரிகள் அகற்றக் கூடாது! உழைக்கும் மக்களின் ஒப்பற்ற கொடி யான செங்கொடி கம்பங்கள் தமிழகத்தில் குறிப்பாக ஒருங்கிணைந்த தஞ்சை பகுதி யில் அதிக எண்ணிக்கையில் காணப்ப டும். உழைக்கும் மக்களின் வியர்வையி லும், குருதியிலும், அவர்கள் செய்த தியா கத்தால் உருவானதே, இந்த செங்கொடி. பலகட்டப் போராட்டங்களை வெற்றி கொண்டதன் அடிப்படையில் ஒரு கொடி ஏற்றப்படுகிறது. அந்த கொடியை அரசு நிர்வாக அதிகாரிகள் எடுக்க நினைப்பது சரி யல்ல. இதுதொடர்பாக நாங்கள் நீதிமன் றத்தை நாடியுள்ளோம், தற்போது சிபிஎம் உடனிணைந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியும் இந்த வழக்கில் தங்களை இணை த்துக் கொண்டுள்ளனர். எனவே, இந்த வழக்கின் தீர்ப்பு வரும் வரை அரசு நிர்வாக அதிகாரிகள் எங்கள் செங்கொடி கம்பத்தை அகற்றுவதற்கு முயலக் கூடாது.