articles

img

இளைய தலைமுறைக்கான அரசியல் பாதை எது? - என். குணசேகரன்

மோடி அரசின் மிகப்பெரிய தோல்விகளில் ஒன்று, வேலை வாய்ப்புகளை ஏற்படுத்த தவறியதுதான். கடந்த ஆண்டு 10 லட்சம் அரசு வேலைகள் வழங்கு வோம் என்று ‘ரோஜ்கர் மேளா’ பிரச்சாரத்தை காணொலிக் காட்சி வழியாக தொடங்கி வைத்து விளம்பரம் தேடிக் கொண்டது ஒன்றிய அரசு. ஆனால் வேலையின்மையின் தீவிரம் குறையவில்லை. 2012-ஆம் ஆண்டு 1 கோடி அளவில் இருந்த வேலையற்றோர் எண்ணிக்கை 2018-2019-ஆம் ஆண்டுகளில் 3 கோடியாக உயர்ந்தது. இது மேலும் அதிகரித்து, 2022-ல் 3.8 கோடியாக உயர்ந்தது. ஒன்றிய அரசுப்  பணிகளே 10 லட்சம் இடங்கள் நிரப்பப்படாமல் இருக்கும் நிலையில், கடந்த 3 வருடங்களில் எப்போதும் இல்லாத அளவில் அரசுப் பணி யிடங்களை ஒன்றிய அரசு குறைத்து வந்துள்ளது. வேலையில் இருக்கும் தொழிலாளர்கள், குறிப்பாக இளம்வயது ஆண், பெண் தொழிலாளர்கள் நிலை, மிகவும் மோசமானது. வருமானம் மற்றும் வாழ்க்கை பாதுகாப்பிற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லாத, தரமற்ற வேலைகளில்தான் அதிக இளைஞர்கள் பணியாற்றி வருகின்றனர்.  

கடும் வேலைச்சுமையுடன், இன்னல் மிகுந்த வாழ்க்கைச் சூழலில், இளமைக் காலத்தை இழந்து வரும் பரிதாப நிலையில்தான், இளைய தலைமுறை வாழ்ந்து கொண்டிருக்கிறது.

வேலையின்மையும் முதலாளித்துவமும்

பொருளாதார அறிஞர் அருண்குமார், வேலைவாய்ப்பை பெருக்க வேண்டு மானால், சிறு தொழில்துறைக்கும், விவசாயத்துறைக்கும் நிதி முதலீட்டை அதிகரித்து வேலை வாய்ப்பை அதிகரிக்க வேண்டுமெனக் கூறுகின்றார். ஆனால், மோடி அரசு எதிர்த்திசையில் பயணித்து வந்துள் ளது. பெரும் கார்ப்பரேட் மூலதனத்திற்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்து வருகிறது. இது நவீன தாராளமய வழியில் செல்லும்  முதலாளித்துவப் பாதை. இது வேலை யின்மையை ஒழித்திடாது. முதலாளித்துவத்தின் கீழ் மூலதனக் குவியல் நடக்கிறது; தொழில்நுட்ப வளர்ச்சி யுடன் உற்பத்தித் திறனும் வளருகிறது; இதன் ஊடாகவே வேலையின்மையும் பெருகுகிறது. முதலாளித்துவத்தின் இந்த முரண்பாட்டை மார்க்சியம் துல்லியமாக விளக்குகிறது. எனவே, முதலாளித்துவத்தால் கசக்கிப் பிழியப்பட்டு உழைப்புச் சுரண்டலுக்கு ஆளாகும் பாட்டாளி வர்க்கங்கள் ஒன்று  சேர்ந்து, முதலாளித்துவத்தை ஒழிக்க வேண்டு மென்பது வரலாற்றுத் தேவையாகிறது. இது, பாட்டாளி வர்க்கங்களின் கடமை. இதற்கான வர்க்க எழுச்சி உணர்வை பாட்டாளி வர்க்கங்கள் சுவீகரித்துக் கொள்ள வேண்டும். அதற்கு, உழைக்கும் வர்க்கங்களிடம் கம்யூனிஸ்ட்டுகள் சித்தாந்த விழிப்புணர்வை ஏற்படுத்த, இடையறாது முயற்சிக்க வேண்டும். முதலாளித்துவத்தில் வாழ்க்கையை இழக்கும் இளைய தலைமுறை, ஆளும், வர்க்க அதிகாரத்தை வீழ்த்த உறுதி பூண்டு இயக்கம் காண வேண்டும்.  இதற்கு முன்னோடியாக விளங்கிய ஏராளமான புரட்சிகர இளைஞர்களின் தியாக வரலாறுகள், இன்றைய தலைமுறை கற்க வேண்டிய பாடங்களாக அமைந்துள்ளன.

புரட்சி வீராங்கனை கல்பனா

ஜூலை 27,மகத்தான விடுதலைப் போராட்ட  வீராங்கனை கல்பனா தத்தாவின் 110வது பிறந்த தினம். வங்காளத்தில் பிறந்த அவர், கல்லூரி வாழ்க்கையின்போதே “சாத்ரி சங்கா” (மாணவியர் சங்கம்) என்ற புரட்சிகர அமைப்பில் செயல்பட்டார். சூரியா சென் தலைமையில் இயங்கிய ஆயுதமேந்திய சுதந்திரப் போராட்டத்தில் இணைந்தார். ஆயுதங்களை பயன்படுத்தும் பயிற்சி, வெடி மருந்துகள் தயாரிக்கும் முறைகளில் தேர்ச்சி பெற்றார். தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து கொண்டே பல போராட்டங்களில் ஈடுபட்டார். 1930 ஆம் ஆண்டு நடந்த வீரஞ்செறிந்த சிட்டகாங் ஆயுதக் கிடங்கைக் கைப்பற்றும்  போராட்டத்தில் தீவிரப் பங்காற்றினார். 1933-ல் பிரிட்டிஷ் ராணுவத்துடன் கடும் துப்பாக்கி சண்டைக்குப் பிறகு, கல்பனா கைது செய்யப்பட்டார். அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அவரது விடுதலைக்கு நாடு முழுக்க ஆதரவுக் குரல்கள் எழுந்தன. 1939ல் சிறையிலிருந்து விடுதலையானவுடன், கம்யூனிச இயக்கத்தில் இணைந்து, இந்திய சோசலிச இலட்சியத்திற்காக இறுதி மூச்சு வரை பணியாற்றினார். சூரியா சென் தலைமையிலான சிட்டகாங் புரட்சிகர இயக்கத்தில் இணைந்தபோது புரட்சி வீராங்கனை கல்பனாவிற்கு வயது 18.  சமூக மாற்றத்துக்கான போரில் மிக இளம்  வயதில் இணைத்துக் கொண்ட பெண் என்ற சிறப்பு கொண்டவர். அவர் என்றென்றும் இளை ஞர்களுக்கு புரட்சிகர எழுச்சி உணர்வை அளிப்பவராக திகழ்கிறார்.

அறிவுலகின் குழப்பங்களை அகற்றிய மேதை

வரலாற்றில் இதே ஜூலை மாதத்தில்தான் ஓர் இளைஞர் ஓர் ஆய்வை வெளியிட்டார். முத லாளித்துவத்தின் இயக்கத்தை முழுமையாக ஆராய்ந்து, அதுவரை அறிவுலகில் இருந்த குழப்பங்களை அகற்றி “தத்துவத்தின் வறுமை” என்ற நூலை எழுதி வெளியிட்ட இளைஞர், கார்ல் மார்க்ஸ். பிரௌதானுடைய “வறுமையின் தத்துவம்”  என்ற நூலுக்கான பதிலுரையாக இதனை எழுதினார் மார்க்ஸ். சீர்திருத்தவாதி பிரௌதான்  கருத்துக்களை கடுமையாக விமர்சனம் செய்தார் மார்க்ஸ். இந்த கருத்துப் போராட்டத்தில் தனது அர சியல் பொருளாதாரம், வரலாற்றுப் பொருள் முதல்வாதக் கருத்துக்களை மார்க்ஸ் விளக்குகிறார். வரலாற்றில் உற்பத்திக் கருவிகள் மற்றும் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி புதிய சமுதாய உறவுகளை ஏற்படுத்துகின்றன என்ற கருத்தை இந்த நூலில் மார்க்ஸ் விளக்கினார். “கை அரவை எந்திரம், நிலப்பிரபுவுடன் உள்ள சமுதாயத்தைக் கொடுக்கிறது; நீராவி எந்திரம் எந்திரத் தொழில் முதலாளிகளுடன் உள்ள சமுதாயத்தை தருகிறது” என்று எளிமை யாக விளக்கினார், மார்க்ஸ்.

உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி முதலாளித்து வத்துடன் நின்றுவிடாது; மேலும் மேலும் வளருகிற உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி முதலாளித்துவத்தை அப்புறப்படுத்தும். மனிதர்களிடையே சமத்துவத்தை ஏற்படுத்தும்; சோசலிசத்தை அது கொண்டு வரும். இந்த கோட்பாட்டை மார்க்சும், ஏங்கெல்சும் அறிவியல்பூர்வமாக நிறுவுகின்றனர். ஆனால், சோசலிச மாற்றம் தானாக வந்துவிடுவதில்லை. பாட்டாளி வர்க்க ஒற்றுமை, மேலோங்கிய புரட்சிகர வர்க்க உணர்வு அனைத்தும் சேர்ந்து புதிய புரட்சிகர மாற்றத்தை ஏற்படுத்துகிறது. தத்துவத்தின் வறுமை நூல் 1847 ஜூலையில் வெளிவந்தது. அதற்கு முன்பு  மார்க்ஸ், ரெயினிஷ்சி ஜூட்டுங் பத்திரிக்கை யில் ஆசிரியராக 1842 ஆம் ஆண்டிலேயே பணியாற்றினார். அப்போது அவருக்கு வயது 24. தத்துவப் பார்வை வளர்ச்சி பெற்ற நிலை யில் மார்க்சால் படைக்கப்பட்ட நூல் “தத்து வத்தின் வறுமை” என்று லெனின் புகழ்ந்தார். அந்த நூலை வெளியிட்டபோது மார்க்சிற்கு வயது 29. முதலாளித்துவப் பண்பாடு இளை யோருக்கு சுயநலத்தை வளர்க்க முயற்சிக் கிறது. அதற்கு இரையாகாமல் சமூகப் புரட்சிக்கு தங்களை அர்ப்பணித்த இளம்பெண்கள், இளைஞர்களின் பங்களிப்பு வரலாறு நெடுக உள்ளது. புரட்சிகர பாதையினை இளைய சமூகம் முன்னெடுக்க வேண்டுமென்பது இன்றைய காலக்கட்டத்தின் தேவை. புரட்சிக் கருத்துக்கள் முகிழ்த்து வளரும் பருவம், இளமைப் பருவம். இளைஞர்கள் வேலையின்மையை எதிர்த்துக் களம் காண வேண்டும்; அத்துடன் முதலாளித்துவத்தை வீழ்த்துகிற, சோசலிச புரட்சிப் பாதையிலும் ஒன்று சேர வேண்டும்.