articles

img

கண்ணீரின் சபதம்! திருவை நூர்முகம்மது

டந்து செல்கிறது

கொஞ்சம் கொஞ்சமாய் காலம்!

கவனித்து நிற்கிறது

சலனமெதுவுமின்றி இந்த ஞாலம்!

உருவங்கள் சிதைந்து விழ

குரல்களோ உடைந்து போகின்றன!

பிஞ்சு உடல்கள் சிதறி விழுகின்றன.

நிறுத்துங்கள் எனக் குரல் கொடுக்க

நெஞ்சிலே யாருக்கும் ஈரமில்லை!

உயிருடன் எரியும் மாந்தருக்குத்

தப்பிப் பிழைக்க வழியுமில்லை!

சிதறித் தெறிக்கும் பிஞ்சு மூளைகள்!

கதறித் துடிக்கும் அன்னையர் வலிகள்!

கருவறையிலிருந்து நேரடியாகக்

கல்லறைக்குச் செல்லும் கொடூரம்!

நொறுங்கிப் போன கனவுகள்!

உறங்கிப்போன எதிர்பார்ப்புகள்!

அதிர்வலைகளின் தாக்கத்தில்

அனைத்தும் குலுங்குகின்றன!

சுழலும் கடிகாரத்துடன்

சுழன்றுகொண்டே வரும் மரணமும்!

ஆனாலும்

அவர்கள் பிரகடனம் செய்கிறார்கள்

பச்சிளம் பாலகர்கள் பயங்கரவாதிகளாம்!

மழலைகளின் கண்களில்

மரணத்தின் பீதி!

பொழியும் குண்டுமழையால்

நிறையுது வீதி!

தன்னைச் சுமந்த அன்னை

குண்டைச் சுமந்து கிடப்பதைக்

கண்டே அழைக்குது அம்மா என்று!

இன்னும் நாங்கள் தீவிரவாதிகள்         என்பீர்களா?

வாருங்கள்..

எங்கள் வானத்தைப்

பாருங்கள்!

எங்கள் மண்ணுக்குள் துணிவுடன்

வாருங்கள்!

எங்கெங்கும் மரண ஓலம்!

சிதறிக் கிடக்கும் உடல்கள்!

எடுத்துப் புதைக்கப்

 புதைகுழிகளில்லை!

திசையெங்கும் பிணநாற்றம்!

உயிர்பிழைக்க உண்டியில்லை!

தாகம் தீர்க்கத் தண்ணீருமில்லை!

தாக்கப்படும் மருத்துவமனைகள்!

தகர்ந்துவிழும் இல்லங்கள்!

காட்டுமிராண்டிகளின்

கயமைத் தாக்குதல்களால்

மூச்சுவிட நேரமில்லை!

அரவணைக்க யாருமில்லை!

துக்கங்களைப் பகிர்ந்து கொள்ள

துணையொன்றும் இங்கில்லை!

ஆனால்...

ஒன்றை மட்டும் தெரிந்து கொள்ளுங்கள்..

இந்த மண்ணின்

ஒவ்வொரு கருப்பையிலிருந்து

வெளிவரும்

ஒவ்வொரு உயிரும்

எதிர்த்து நிற்கும் மனவலிமையும்

எதையும் தாங்கும் இதயத்தையும்

தன்னகத்தே கொண்டே பிறக்கிறது!

தொடர்ந்து எதிர்வினையாற்றும்

பண்பு என்பது...

எங்கள் உதிரத்தில் கலந்தது..

எங்கள் உணவும் எங்கள் உணர்வும்..

இந்த மண் எங்களுடையது..

இதில் வாழ்வது எங்கள் பிறப்புரிமை..

புரிந்து கொள்ளுங்கள்..

எதுவரினும்

எங்கள் மண்ணைவிட்டு

வெளியேறமாட்டோம்!

மதலைகளும் சிறுவர்களும் பெண்களும்

தங்களுக்கு அச்சுறுத்தல் என்று

கோழைகள்

தொலை தூரத்திலிருந்து தாக்குகிறார்கள்!

உண்மை உங்கள் முகத்தில்

காறி உமிழ்கிறது...

ஆனால் நீங்களோ..

பொல்லாத செயல்கள் புரிந்து,

இல்லாத பொய்களைப் பரப்பி,

விலைபோன ஊடகங்களையும்

தலையாட்டும் தரங்கெட்டவர்களையும்

துணையாய்க் கொண்டு

ராஜ தந்திரம் என்றும்

பேச்சுவார்த்தை என்றும்

குள்ளநரித்தனம் செய்து

மாயத் தோற்றத்தைப்

உருவாக்குகிறீர்கள்!

சென்ற காலங்களைத் திரும்பிப்          பார்ப்போமா?

வெள்ளை மேட்டிமைத் தனம்

அடிமை முறை

இனப்படுகொலைகள்

மிருகங்கள் கூடச் செய்யாத கயமைத் தனங்கள்

எளியாரை வதைத்து இன்புறும்

சேடிசங்கள்..

இவைதானே உங்கள்= பழங்கதை?

காலம் மாறிவிட்டது..

மக்கள் விழிப்படைந்துள்ளனர்..

உங்கள் ஆட்டம் விரைவில்

முடிவுக்கு வரும்..

நீதியின் நாள் நெருங்குகிறது!

அயோக்கியத் தனங்களை எதிர்த்து நின்றால் பயங்கரவாதியா?

புரிந்து கொள்ளுங்கள்...

நாங்கள் எதிர்த்து நிற்போம்..

எதுவரினும் புறம்கொடோம்..

உங்கள் கரங்கள் இரத்தக்கறை           படிந்தவை..

எங்கள் கரங்கள் அமைதியை    வேண்டுபவை!

உண்மை வெளிவரும்போது

அதன் வலிமையை உணர்வீர்கள்!

 

குழந்தையின் அழுகுரல்

காதில் விழுகிறது..

அது வெறும் கனவாக இருக்க

மனம் விழைகிறது!

இதுவே நிஜ உலகம்...

வெட்கப்படட்டும் மனிதகுலம்!

கடந்து செல்கிறது

கொஞ்சம் கொஞ்சமாய் காலம்!

கவனித்து நிற்கிறது

சலனமெதுவுமின்றி இந்த ஞாலம்!

எதிர் காலம் ஒன்று வரும்..

என் நெஞ்சில் எரிந்த

நெருப்பைப் பற்றி

பெருமையுடன் உரைப்பேன்...

இந்த சோதனையைக் கடந்துவந்த

வரலாற்றையும்..!

இன அழிப்புக்கு எதிராக என்னால்

முடிந்ததை முயன்றேன் என்பதைக்

காலம் பறைசாற்றும்..!

 

- தமிழில் :
திருவை நூர்முகம்மது