articles

img

வெல்லட்டும் கோவை அகில இந்திய மாநாடு!

கோயம்புத்தூரில் நடை பெறும் பஞ்சாலை மற்றும் விசைத்தறியில்  செயல்படும் சிஐடியு அமைப்புகளின் அகில இந்திய ஒருங்கிணைப்புக் குழுவின் மாநாடு இந்தியாவில் நடைபெறுகிற முதல் அகில இந்திய மாநாடாகும். பொதுவாக இந்தியாவில் ஜவுளித் தொழில் நெருக்கடியில் சிக்கித் திணறுகிறது. ஒன்றிய அரசின் பஞ்சு ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக் கொள்கையிலிருந்து இது தொடங்குகிறது. குறிப்பாக இந்த தொழிலில் உள்ள சிறு உற்பத்தியாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். துணி உற்பத்தி, ஆயத்த ஆடை உற்பத்தி, பனியன் உற்பத்தி மற்றும் இவை தொடர்பான எண்ணற்ற சார்பு உப தொழில்கள் நசியத் தொடங்கியிருக்கின்றன. உற்பத்தியாளர்களும், விசைத்தறி உரிமையாளர்களும், பல நாள் வேலைநிறுத்தப் போராட்டங்களை நடத்தி  வருவதை பார்க்கிறோம். இந்த வகையில் இப்போது பட்டு நெசவும் நெருக்கடியின் பிடியில் சிக்கியுள்ளது. பட்டின் விலை மூன்று மடங்கிற்கு மேல் உயர்த்தப்பட்டுள்ளது. சீனப்பட்டின் இறக்குமதி உரிய மாற்று ஏற்பாட்டில்லாமல் நிறுத்தப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் தர்மாபுரம், கும்பகோணம், திருபுவனம் போன்ற பட்டு உற்பத்தி மையங்களில் ஒன்றிய அரசுக்கு எதிராக முழு வேலைநிறுத்தமும் கடையடைப்பும் நடந்துள்ளன. ஜவுளித் தொழிலுக்கு ஏற்பட்டுள்ள அதே நிலை தான் இது. ஒன்றிய அரசு தான் ஜவுளி மற்றும் பட்டுத் தொழில் நசிவிற்கு பெரும் குற்றவாளி. பெரும் கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவான ஒன்றிய அரசின் கொள்கை பெரும் நாசத்தை விளைவித்து வருகிறது.  இந்தத் தொழிலில் உள்ள உழைப்பாளிகள் , தொழிலாளர்கள் வேலையிழந்து வருமானம் இழந்து வேதனை நெருப்பில் வீசப்படுகின்றனர். இவை குறித்து சரியான இயக்க முடிவை மேற்கொள்ளவும் ஒன்றிய அரசின் தவறான கொள்கைகளை எதிர்த்து இயக்க முன்னெடுப்புகளை செய்திடவும் கோவையில் நடைபெறும் அகில இந்திய மாநாடு வழிகாட்டும். மாநாடு வெல்லட்டும்!