“உக்ரைன் நெருக்கடி மற்றும் உலகளாவிய விநியோகச் சங்கிலி சீர்குலைவுகள் உலக அளவில் பல விளைவுகளைத் தூண்டிவிட்டன, ஆனால் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் குறைந்த வருவாயில் வாழும் கோடிக்கணக்கான மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருளின் விலை உயர்வால் பாதிக்கப்படுகின்றனர்.( ராய்ட்டர்ஸ், புது தில்லி மே 20, 2022) உக்ரைன்- ரஷ்ய மோதலைப்பற்றி செய்தி நிறு வனங்கள் தரும் தகவல்கள் வரலாற்றுப் போக்கு பற்றி அறியாத இந்தியப் பாமரர்களாகிய நம்மை வெகுவாகக் குழப்புகின்றன. உண்மை எது என்று அறிய முடியாமல் தவிக்கவைக்கின்றன. இந்தத் தவிப்பைப் போக்கி பொய் எது? மெய் எது? என்பதைக் கண்டறிய இ.பா. சிந்தன் எழுதி பாரதிபுத்தகாலயம் வெளியிட்டுள்ள “ உக்ரைனில் என்ன நடக்கிறது?” என்ற 110 பக்க புத்தகம் உதவு கிறது.
உக்ரைனைத் தனதுடமையாக்க ரஷ்யா யுத்தம் தொடங்கியதென குற்றம் சாட்டலாமா? மறுபக்கம் உக்ரைனில் வசிக்கும் ரஷ்ய மொழி பேசும் வம்சாவழியினரை அழித்தொழிக் கும் பாசிசப் போக்கை அகற்ற எடுக்கும் நடவடிக்கையே தவிர பொதுமக்களைத் தாக்கும் யுத்தமல்ல என்று ரஷ்யா கூறுவது மெய்தானா? உக்ரைனை நேட்டோ ராணு வக் கூட்டில் சேர்த்து ரஷ்யாவைச் சுற்றி ராணுவ தளத்தை அமைக்க அமெரிக்கா வெகு நாட்களாகக் காய்களை நகர்த்து கிறது. அதனைத் தடுக்க, வேறு வழி யில்லாமல் ரஷ்யாபடையெடுக்கிறது என்று கூறப்படுவது மெய்தானா?
உலக நாடுகளின் ஒத்துழைப்பில்லாமல் ஏகாதிபத்திய நேட்டோ ராணுவக் கூட்டை உடைக்க முடியுமா? உலக நாடுகளின் ஒத்துழைப்பை உரு வாக்க முயற்சி செய்யாமல் ரஷ்யா படை யெடுத்தது சரியா? அல்லது ரஷ்ய படையெடுப்பே ராணுவக் கூட்டுகளுக்கு எதிராக உலகை நாடு களைத் திருப்பும் முயற்சியின் முதல்படி என்பது சரியா? நட்பு நாடான சீனா ரஷ்யாவை ஆதரிக்கா மல் நடுநிலை என்று அறிவித்ததன் மர்மமென்ன? உக்ரைன் அரசு நிர்வாகத்தில் ஜனாதிபதியே அதிகாரம் படைத்தவர். ஜனாதிபதி தேர்தலில் அந்நியத் தலையீட்டால் ஜனாதிபதிகளைப் பந்தாடும் நிலை ஏற்பட்டது என்பது சரிதனா? அரசியல் இயக்கங்களிலே பங்கு பெறாத அரசியல் தலைவர்களை கேலி செய்கிற ரஷ்யா விலும் பிரபலமான ஸ்டாண்டிங் காமெடியன் செலன்ஸ்கி எதனால் ஜனாதிபதியானார் ? வட அட்லாண்டிக் ராணுவக் (நேட்டோ) கூட்டில் சேராமல் நடுநிலை வகிக்கப் போவதாகக் கூறி வெற்றி பெற்றவர் பின் ஏன் பல்டி அடித்தார்? அதனுடைய உற்பத்திக் கட்டமைப்பு சோவியத் ஒன்றியம் உறுப்பினர் நாடாக இருந்த காலத்தில் உருவானதாக இருந்தும் ரஷ்யாவோடு பகைமையை வளர்ப்பது யார்? உக்ரைன் ராணுவமும், ரஷ்ய ராணுவமும் சில போர் முனைகளில் சமரசம் செய்வதாகவும் சில இடங்களில் வெறித்தனமாக மோதுவதையும் கேள்விப்படுகிறோம். அது உண்மையா? ஏன் இந்த இரட்டை நிலை?
இந்த யுத்தம் அமெரிக்காவிற்கும் ரஷ்யா விற்கும் நடக்கிற போர் என்று கூறமுடியுமா? 1874இல் ஐரோப்பிய சாம்ராஜ்யவாதிகள் காலனி ஆதிக்க ஒப்பந்தப்படி உலகை உருட்டுவது தங்களது கையில் இருக்கவே காலனிகளைப் பிடிக்க மோதுவ தில்லை என்ற முடிவிற்கு வந்து காலனிகளைப் பங்கீடு செய்தனர். 1945க்குப் பிறகு காலனி ஆதிக்கம் முடிவிற்கு வந்தது. சோசலிச முகாம் பரவு வதைத் தடுக்கவே வட அட்லா ண்டிக் ராணுவக் கூட்டை அமைத்த னர். 1987இல் சோசலிச முகாமே பின்னடைவை சந்தித்த பிறகு ராணுவக் கூட்டு எதற்கு? யுகோஸ்லாவியாவை, இராக்கை, லிபியாவை நேட்டோ ராணுவம்ஏன் துவம்சம் செய்தது? 80 நாடுகளிலும் தீவுகளிலும் அமெரிக்க ராணுவதளம் இன்றும் இருப்பது ஏன்?
உலகமயச் சூழலால் உருவான பொருளாதாரச் சக்கரத்தை சுழற்றும் உலகளாவிய வழங்கல் தொடரை இந்த யுத்தம் அறுத்து விட்டதாகக் கூறுவது சரியா? அல்லது ஏற்கனவே வழங்கல் தொடர் கடன் சுமையால் பலவீனப்பட்டுக் கிடக்கிறது. இந்த யுத்தம் கடைசி துரும்புதான் என்று கூறுவது சரியா? நேட்டோ ராணுவக் கூட்டு கலைக்கப்பட வேண்டும் என்பது சரியா? நேட்டோ ராணுவம் இல்லையெனறால் சீனா உலக நாடுகளை அடிமைப்படுத்திவிடும் என்பது உண்மையா? ஊடகத் தகவல்களால் உள்ளத்தில் எழும் இதுபோன்ற பல கேள்விகளுக்கு நறுக்கென்ற விடைகளை இந்தப் புத்தகம் தருகிறது. நூறு ரூபாய் கொடுத்து வாங்குங்கள்; படி யுங்கள்; ஆசிரியரை உற்சாகப்படுத்துங்கள்; பாரதிபுத்தகாலயம் நீடித்து அறிவுச் சொத்தை வழங்கும் பணியைச் செய்ய உதவுங்கள்.