தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் ஈரோட்டில் நடத்திய நிகழ்வில் மாநில துணை தலைவர் எழுத்தாளர் மயிலைபாலு ஆற்றிய உரை.
மயிலை பாலு
கவிஞர் தமிழ்ஒளி பிரபலமான கவிஞர் இல்லை. அவர் கவிதை வரிகளுக்கு, காத்திரமான சொற்களுக்கு செவிமடுத்தவர்கள் அன்றைக்கு இருந்தவர்கள் தயாராக இருந்தார்கள். ஒரு காலத்தில் ராமாயணம், சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி, புறநானூறு, அகநானூறு, எட்டுத்தொகை, பத்துப்பாட்டு போன்ற இலக்கிய மரபு மாறிப்போய் கடைசியில் புதுக்கவிதை என்று வந்து சேர்ந்தது. புதுக்கவிதை வந்த பிறகு மரபுக்கவிதை கொஞ்சம் எட்டிக்காயாக நம்மை விட்டு நகர்ந்து சென்றது. மரபுக்கவிதை எழுத இலக்கணம் தேவை. அதை படிப்பதற்கு மனம் தேவை. அதை ரசிப்பதற்கு முயற்சி தேவை.
கையெழுத்து பத்திரிகை நடத்தி கைதானவர்
அவருக்கு கவிதை எழுதும் ஆற்றல் இயற்கையாகவே இருந்தது. அவர் பாரதிதாசனிடம் பயிற்சி பெற்றார். அதன் பிறகு எழுச்சிக் கவிஞனாகிறார். பாரதிதாசனின் மகன் கோபதியும், தமிழ்ஒளியான விஜயரங்கனும் இணைந்து ஒரு கையெழுத்து பிரதி (பத்திரிகை) நடத்தி வந்தனர். அதனை கைப்பற்றிய அரசாங்கம் அவர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தியது. அவர்கள் சிறார்கள் என்றதால் சொந்த ஜாமீனில் விட வேண்டும் என்றது. அதன்பின்னர் பாரதிதாசன், சிறார்களாகிய நீ்ங்கள் கையெழுத்து பிரதி நடத்துவதே பெரிய வேலை. அதிலும் சொந்த பேரை போட்டு, சொந்த முகவரியைப் போட்டு நடத்துவீர்களா என்று திட்டியவர், கோபதியின் பெயரை மன்னர்மன்னன் என்று மாற்றச் சொன்னார். கோபதி, விஜயரங்கனுக்கு தமிழ்ஒளி என்ற பெயரை சூட்டினார். தொடக்கத்தில் திராவிட சிந்தனையால் ஈர்க்கப்பட்டவர் தமிழ்ஒளி. அவருக்கு சென்னையில் சில நட்பு வட்டங்கள் கிடைக்கிறது. அதில் ஒருவர் ஜெயகாந்தன். விந்தன் போன்றோ ரின் நட்பும் கிடைத்தது. அதனால் அவரது சிந்தனை மிக விசாலமாக மாறியது. திராவிட சிந்தனையிலிருந்து பொது வுடைமை சிந்தனைக்கு வருகிறார். அதன் பிறகு அவரது நடையும், பாடுபொருளும் மாறுகிறது. ஆனால் பாதையை மறக்கவில்லை. பாரதி தான் எல்லாமும் என்றார்.
பாணர் பரம்பரை
நாங்கள் கொற்றவன் புகழ் பாடி மகிழ்ந்து குதித்திடும் பாணர் பரம்பரை என்று அறிவித்துக்கொண்டார். புலவர்கள் என்பவர்கள் மன்னர்களைப் போற்றி பாடுபவர்கள். எழுதுபவர்கள் எல்லாம் கவிஞர்கள் என்று சொல்லப்பட்டார் கள். பாணர்கள் அப்படி அல்ல. ஒருவரை பாடிப் பிழைக்க மாட்டார்கள். பரிசு பெறுவதற்காகவே பாட மாட்டார்கள். பாணர்கள் பரம்பரை ஊரெல்லாம் சென்று கொண்டேயிருப் பார்கள். அவர்கள் யாரையும் நத்திப் பிழைக்க மாட்டார்கள். சொல்ல வேண்டும் என்பதை துணிந்து சொல்வார்கள். அத போல பாரதிதாசனை நெஞ்சிலேயே நிறுத்திக் கொண்டிருந்த வர் கவிஞர் தமிழ்ஒளி. பாரதிதாசன் இறந்ததை நம்ப மறுத்தார். உயிரில், உறவில் கலந்த கவிஞர். அவர் செய்த செயலை மறக்காமல் மீண்டும் மீண்டும் மக்களிடத்திலே எடுத்துச் செல்வேன் என்றார். அவர் தொண்டு சிறந்திட தொண்டு செய்வேன் என்றார்.
சிறார் இலக்கியம்
இப்படிப்பட்ட தமிழ் ஒளி தனது முதல் பாடலில் இளைஞர்க்கு எழுச்சி வேண்டும், தமிழ்நாட்டை தட்டி எழுப்ப வேண்டும் என்றார். ஒரு கவிஞனை, படைப்பாளியை, சிந்தனையாளனை, செயல்பாட்டாளனை எங்கிருந்து தொடங்கினான், எங்கே போய் நின்றான் என்பதிலிருந்து தான் மதிப்பிட வேண்டும். தமிழ்நாடு இன்றைக்கு எதிர்பார்ப்பது வாழ்க்கையை வளப்படுத்தும் கலையைத் தான் என்று எழுதினார். இளைஞர்கள் நாம் எங்கே செல்லப்போகிறோம், என்ன செய்யப் போகிறோம், எந்த திசையை நோக்கி நாம் பயணிக்கப் போகிறோம், நம்முயை லட்சியம் என்ன என்பதை குறிப்பிட்ட காலத்திற்குள் நிர்ணயித்துக் கொண்டால் அவர்களுடைய வேகமும், வீச்சும், பெறுகிற வெற்றியும் மிக பிரம்மாண்டமாக இருக்கும். 40, 50 ஆண்டுகளுக்குப் பிறகு எதையும் யோசித்து பெரிதாக செய்துவிட முடியாது. சிலர் விதிவிலக்காக இருக்கலாம். அவர் படைப்புகளை திரும்பிப்பார்த்தால் பிரமிப்பாகவும், வியப்பாகவும் இருக்கிறது. அவர் 9 காவியங்களை எழுதி யுள்ளார். ஒவ்வொன்றும் முத்தாய்ப்பானது. அவர் படைப்புகள் கட்டுரைகளாக, ஆய்வுகளாக, நாடகங்களானது. அவர் பெரியவர்களுக்காக மட்டும் பாடவில்லை, சிறார் இலக்கியமும் படைத்தார்.
கற்றல் மனிதர்கள் கையில் அதிகாரம் வர விரும்பியவர்
யாரும் எழுதாத விசயத்தை எழுதியவர் கவிஞன் தமிழ்ஒளி. மேதினத்தை வரவேற்று அவருக்கு முன்னாலும் யாரும் எழுதவில்லை. பின்னாலும் எழுதவில்லை. கோழிக்கு முன்னெழுந்து கொத்தடிமை போலுழைத்து என 144 வரிகள் கொண்ட நீண்ட கவிதையை எழுதினார். அந்த கவிதையில் இறுதியில் கந்தல் மனிதர்கள் கையில் அதிகாரம் என்று முடித்தார். அது சோவியத் ரஷ்யாவின் ஈர்ப்பு. கடைசி வரை பொதுவுடைமையின் பாதையில் கவிஞர் தமிழ் ஒளியை வைத்துக் கொண்டே இருந்தது. தனது கடைசி கவிதையில், சுமந்து பெறாமல், தனது இதயம் திறந்து சுரந்தவள் சோவியத் அன்னை என்றார். நாடுகள் நம் வீடுகளாகிவிடும், நாம் அதன் மக்களாய் வாழ்வோம் என்று சொல்லி முடிக்கிறார். சோவியத் யூனியன் போல நாம் மாற வேண்டும் என்று விரும்பினார். ஆனால் நம்முடைய நாடும், மக்களும், அரசியலும், தொழிலாளர் வர்க்கமும், விவசாயிகளும், அந்த லட்சியத்தை அடைவதை நோக்கி நாம் பாடுபட்டுக் கொண்டிருக்கிறோம். தமிழ்ஒளி தன் வாழ்நாள் முழுவதும் அதற்காக வாழ்ந்தார். சென்னையில் சனாதன ஒழிப்பு மாநாடு நடத்தப் போகிறோம். அதன் நோக்கம் மக்கள் சமமாக இருக்க வேண்டும் என்பது. மூடப்பழக்கங்களிலிருந்து விடுபட வேண்டும். ஒரு ஆதிக்க கட்டுப்பாட்டிற்குள் மக்களை வைத்திருக்கக் கூடாது என்னும்போது கவிஞர் தமிழ்ஒளி நினைவில் வருகிறார். அவர் கவிதைகள் இன்றைக்கும் தேவை. அவர் தன்னை உலகின் சொந்தக்காரன் என்றார். அவரை குறைந்தபட்சம் தமிழனின் சொந்தக்காரனாகவாவது எடுத்துக்கொண்டு, கொண்டாட வேண்டும். அப்பொழுதுதான் இந்த சமூகம் மாறும். மக்களின் நிலை மாறும். அப்படிப்பட்ட தமிழ்ஒளி போன்ற கவிஞர்களை நாம் படிப்பதும், பரப்புவதும், அதன்படி வாழ்வதும், அதன்படி மற்றவர்களை வளர்ப்பதும் இன்றைய தேவை.