1திடீர் வீழ்ச்சியும் புதிய நெருக்கடியும் \
சிரியாவில் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக நிலைத்திருந்த பஷார் அல்-அசாத் குடும்பத்தின் ஆட்சி இன்று முற்றிலுமாக வீழ்ந்துள்ளது. சில வாரங்களுக்கு முன்பு வரை யாரும் எதிர்பார்த்திராத இந்த மாற்றம், மத்திய கிழக்கின் அரசியல் நிலப்பரப்பை மீண்டும் ஒருமுறை புரட்டிப் போட்டுள்ளது. இப்போது நாட்டின் பெரும்பகுதி ஹயாத் தஹ்ரீர் அல்-ஷாம் (HTS) என்ற இஸ்லாமிய அதிதீவிரவாதக் குழுவின் கைகளில் சிக்கியுள்ளது.
அசாத் நாட்டை விட்டு தப்பி ஓடிவிட்டார். அவரது ராணுவம் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டது. அரசாங்கம் சரணடைந்துவிட்டது. சிறைகள் உடைக்கப்பட்டு, ஆயி ரக்கணக்கான கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இந்த மாற்றத்தை கொண்டாடும் விதமாக ஆயிரக் கணக்கான சிரியர்கள் தெருக்களில் திரண்டுள்ளனர்.
ஆனால் அதிகார வெற்றிடத்தை உள்ளூர் ஆயுதக்குழுக்களும் தனி போர்ப்படைகளை வைத்துள்ள பிரபுக்களும் நிரப்பி வருகின்றனர்:
- தெற்கே ஸ்வெய்தா பகுதியை துருஸ் இனக்குழுக்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டுள்ளன.
- அல் தன்ஃப் பகுதியில் அமெரிக்க ஆதரவு படைகள் நாட்டின் மையப்பகுதியை நோக்கி முன்னேறி வருகின்றன.
- தெய்ர் எஸ் ஸோர் பகுதியிலிருந்து ஈரானிய படைகள் பின்வாங்கி, குர்திஷ் எஸ்டிஎப் படைகளிடம் கட்டுப்பாட்டைஒப்படைத்துள்ளன.
- ரஷ்ய படைகள் மேற்கு கடற்கரைப் பகுதிகளுக்கு பின்வாங்கியுள்ளன.
இட்லிப் மாகாணத்திலிருந்து எச்டிஎஸ் துவக்கிய தாக்குதல் அவர்களையே ஆச்சரியப்படுத்தும் வகையில் சில நாட்களிலேயே அசாத்தின் “அழுகிப் போன” ஆட்சி யை வீழ்த்தியது. அலெப்போ நகர எல்லையில் ஒரு சிறிய இராணுவ நடவடிக்கையாக தொடங்கிய மோதல், சிரிய ராணுவம் மற்றும் அரசின் முழுமையான வீழ்ச்சியாக மாறியுள்ளது. தற்போது மத்திய கிழக்கில் உணர்ச்சிகள் கொந்தளித்துக் கொண்டிருக்கின்றன. அசாத்தின் வீழ்ச்சியால் பலர் மகிழ்ச்சி அடைகிறார்கள். மற்றவர்கள் இஸ்லாமிய மத அடிப்படைவாத பிற்போக்குவாதிகளின் மறு வருகையாலும், மேலும் ஏற்படப்போகும் நிலையற்ற தன்மையாலும் கவலை அடைகிறார்கள்.
மேற்கத்திய ஊடகங்களின் போலி முகம்
மேற்கத்திய ஊடகங்கள் இந்த குழுக்களை ‘சிரிய கிளர்ச்சியாளர்கள்’ அல்லது ‘மிதவாத கிளர்ச்சியாளர்கள்’ என்று குறிப்பிடுகின்றன. ஆனால் இந்த வார்த்தைகள் உண்மையை மறைக்கும் திரைகளே. ஹமாஸ், ஹிஸ்புல்லா ஆகிய அமைப்புகளை ‘பயங்கரவாதிகள்’ என்று அழைக்கும் மேற்குநாடுகள், எச்டிஎஸ் போன்ற இஸ்லாமிய அடிப்படைவாத அதி தீவிரவாதக் குழுக்களை ‘கிளர்ச்சியாளர்கள்’ என்று அழைப்பது அப்பட்டமான போலித்தனமே ஆகும்.
புதிய நெருக்கடியின் பின்னணி
இந்த திடீர் மாற்றத்திற்கு பல காரணங்கள் உள்ளன:
1. பிராந்திய சமநிலை குலைவு
2. அசாத் ஆட்சியின் உள்ளார்ந்த பலவீனங்கள்
3. ரஷ்யா, ஈரான் ஆகிய சிரிய ஆதரவு சக்திகளின் கவனம் சிதறியுள்ள நிலை
4. துருக்கியின் துரோகமும் இரட்டை வேடமும்
அசாத் ஆட்சியின் வீழ்ச்சி, சிரியாவின் அரசியல் அமைப்பில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது. ஆனால் இது மக்களின் விடுதலைக்கான புரட்சியல்ல - மாறாக ஏகாதிபத்திய சக்திகளின் கைக்கூலிகளான இஸ்லாமிய மத அடிப்படைவாத அதி தீவிரவாதிகளின் ஆட்சிக் கைப்பற்றலே.
2 மேற்கத்திய சதி வலையும் எச்டிஎஸ் அமைப்பின் எழுச்சியும்
பதினான்கு ஆண்டுகளாக அசாத் ஆட்சிக்கு எதிராக போராடி தோற்றுக்கொண்டிருந்த இஸ்லாமிக் ஸ்டேட் எனப்படும் ஐஎஸ் பயங்கரவாதிகள் உள்ளிட்ட அதி தீவிரவாத சக்திகள் இப்போது வெறும் பத்து நாட்களில் வெற்றி பெற்றுள்ளனர். இந்த திடீர் வெற்றிக்குப் பின்னால் நீண்ட வரலாறும், மேற்கத்திய சக்திகளின் ஆழமான சதி வலை யும் உள்ளன.
சிஐஏவின் திட்டம்
சிரிய உள்நாட்டுப் போரின் ஆரம்ப ஆண்டுகளில் - 2010 களில் - அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளான துருக்கி மற்றும் வளைகுடா முடியரசுகளும் இஸ்லாமிய பயங்கரவாத படைக்குழுக்களுக்கு பில்லியன்கணக்கான டாலர்களை வழங்கின. அமெரிக்காவின் உளவு அமைப்பான சிஐஏ (CIA)-வின் “ஒரு பில்லியன் டாலர் சிரியா திட்டம்” அந்த அமைப்பின் வரலாற்றிலேயே மிகப்பெரிய செலவினங்களில் ஒன்றாக இருந்தது. பல்வேறு ஜிஹாதி குழுக்களுக்கு ஆயுதங்களும் பயிற்சியும் வழங்கப் பட்டன. இது ஆப்கானிஸ்தானில் கம்யூனிஸ்ட் தலைவர் நஜி புல்லா ஆட்சியை ஒழித்துக் கட்ட, பயங்கரவாத முஜாஹி தீன்களுக்கு உதவிய சிஐஏவின் திட்டத்தை ஒத்திருந்தது - அந்த திட்டம் தான் பின்னாளில் தலிபான்களின் எழுச்சிக்கு வித்திட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
கொடிய பயங்கரவாதிகள்
தற்போதைய தாக்குதலை நடத்தும் எச்டிஎஸ் அமைப்பு, ஜப்ஹத் அல்-நுஸ்ரா என்ற அல்-கொய்தாவின் சிரிய கிளையிலிருந்து உருவானது. சிஐஏ திட்டத்தின் மிகப்பெரிய பயனாளியாக இருந்தவர் இக்குழு வின் தலைவர் அபு முஹம்மத் அல்-ஜொலானி. இன்று தன்னை ‘மிதவாதி’ என காட்டிக்கொள்ளும் இவர், உண்மையில் ஒசாமா பின் லேடன், அல்-பக்தாதி போன்றவர்களைப் போலவே கொடிய பயங்கரவாதி. ஜொலானியின் தீவிரவாத வாழ்க்கை ஐஎஸ் அமைப்பின் முன்னோடி அமைப்பில் உறுப்பினராக தொடங்கியது. பின்னர் அல்-கொய்தாவின் நேரடி கட்டுப்பாட்டில் ஜப்ஹத் அல்-நுஸ்ராவை உருவாக்கினார்.
மேற்கத்திய மற்றும் பிராந்திய ஆதரவைப் பெறுவதற்காக, அல்-கொய்தாவுடனான தொடர்பை வெளிப்படையாக துண்டிப்பதாக அறிவித்தார். ஆனால் ரகசியமாக அந்த அமைப்புக்கு உதவி அளிக்கும் திட்ட மும் இருந்தது. அல்-கொய்தா இந்த யோசனையை நிரா கரித்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதன் பின்னர் ஜொலானி, எச்டிஎஸ் அமைப்பை சிரியாவுக்கு மட்டுமே சொந்தமான அமைப்பாக காட்ட முயன்றார். மற்ற நாடுகளுக்கு ஐஎஸ் அமைப்பின் ஆதிக்கத்தைப் பரப்பும் நோக்கம் இல்லை என்று கூறினார். இது வெறும் தந்திரம் - மேற்கத்திய சக்தி களுக்கு ஏற்றவாறு தங்களை காட்டிக்கொள்ளும் உத்தி மட்டுமே.
எர்டோகனின் சூழ்ச்சிகள்
துருக்கி ஜனாதிபதி எர்டோகன் இந்த சூழ்நிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டார். இட்லிப் மாகாணத்தில் துருக்கி தனது இராணுவ முன்னரங்குகளை அமைத்து, அசாத் மற்றும் ஈரான் படைகளிடமிருந்து அப்பகுதியை பாதுகாத்து வந்தது. சிஐஏ துருக்கியின் அனுமதியுடன் எச்டிஎஸ்-உடன் தொடர்பு கொண்டிருந்தது. எல்லை கடந்த வர்த்தகம் மற்றும் விநியோக வழிகளை துருக்கி கட்டுப்படுத்துவதால், எச்டிஎஸ் அமைப்பு முற்றிலும் துருக்கியைச் சார்ந்திருந்தது.
இஸ்லாமிய அடிப்படைவாதிகளுடன் நெருக்கம் கொண்ட எர்டோகன், சிரியா மீதான தனது கட்டுப்பாட்டை விரிவுபடுத்த நீண்ட காலமாக விரும்பி வந்தார். இது பழைய ஓட்டோமான் துருக்கிய பேரரசை மீண்டும் நிறுவும் நிறைவேறா முயற்சியின் ஒரு பகுதி - வட சிரியா மற்றும் வட இராக் முழுவதையும் கட்டுப்படுத்தும் திட்டம். சிரியா வின் அலெப்போ, மோசுல், குர்திஷ் பகுதிகள் அனைத்தும் இதில் அடங்கும். குறிப்பாக வடகிழக்கு சிரியாவின் குர்திஷ் பகுதிகளை இன ரீதியாக துடைத்தெறிய எர்டோகன் திட்டமிட்டுள்ளார்.
இவ்வாறு மேற்கத்திய சக்திகளின் நீண்டகால திட்டமிட லும், துருக்கியின் பேராசையும், எச்டிஎஸ் போன்ற அதிதீவிர வாதக் குழுக்களின் சூழ்ச்சிகரமான நகர்வுகளும் இணைந்து, அசாத் ஆட்சியின் வீழ்ச்சிக்கு வழிவகுத்துள் ளன. ஆனால் இந்த மாற்றம் சிரிய மக்களுக்கு மேலும் துன்பங்களையே கொண்டு வரக்கூடும்.
3 ஒரு வளமான நாட்டின் சீரழிவு
சிரியா சமீப காலம் வரை மத்திய கிழக்கின் மிகவும் முன்னேறிய சமூகங்களில் ஒன்றாக இருந்தது. 1970களில் அது உயர்ந்த அளவிலான தொழில்மயமாக்கல் மற்றும் நவீனமயமாக்கலை அடைந்தது. அதன் கலாச்சார மற்றும் நல வாழ்க்கைத் தரம் அண்டை நாடுகளை விட சிறப்பாக இருந்தது. கல்வி, சுகாதாரம், பொது சேவைகள் என அனைத்து துறைகளிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டிருந்தது.
சந்தைப் பொருளாதாரத்தின் தாக்கம்
1990களில் சந்தைப் பொருளாதாரம் அறிமுகப்படுத்தப் பட்டது சிரியாவின் சமூக-பொருளாதார கட்டமைப்பில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியது:
- பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்பட்டன
- சமூக பாதுகாப்பு வலைகள் பலவீனமடைந்தன.
- வறுமை மற்றும் வேலையின்மை அதிகரித்தது.
- சமூக ஏற்றத்தாழ்வுகள் பெருகின.
2011 உள்நாட்டுப் போரின் வேர்கள்
இந்த பொருளாதார மாற்றங்கள் மக்களிடையே அதிருப்தியை வளர்த்தன. இளைஞர் வேலையின்மை உச்சத்தை எட்டியது. விலைவாசி உயர்வு மக்களை பாதித்தது. ஊழல் பரவலாக காணப்பட்டது. அரசின் அடக்குமுறை அதிகரித்தது.
2011க்குப் பிறகு வெடித்த உள்நாட்டுப் போர் நாட்டை முற்றிலும் சீரழித்தது:
- 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
- மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்தனர்.
- தொழிற்சாலைகள் அழிக்கப்பட்டன.
- முக்கிய உள்கட்டமைப்புகள் சேதமடைந்தன.
- விவசாய நிலங்கள் பாழடைந்தன.
பொருளாதார சரிவின் பரிமாணங்கள்
போருக்குப் பிந்தைய சிரியாவின் பொருளாதார நிலை மோசமாக சீரழிந்தது:
- மொத்த உள்நாட்டு உற்பத்தி 60% சுருங்கியது.
- வேலையின்மை 50% தாண்டியது.
- 90% மக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்கின்றனர்.
- நாளொன்றுக்கு 2 டாலருக்கும் குறைவான வருமானத்தில் வாழ்க்கை நடத்தும் அவலம்.
குழந்தைத் தொழிலாளர் பிரச்சனை
வறுமையின் கோரப் பிடியில் சிக்கி, பல குடும்பங்கள் கடுமையான நெருக்கடிகளை எதிர்கொள்கின்றன:
- குழந்தைகள் பள்ளிகளை விட்டு வெளியேறுகின்றனர்.
- 11% குடும்பங்களின் குழந்தைகள் வேலைக்கு அனுப்பப்படுகின்றனர்.
- குடும்ப வருமானம் வாழ்வதற்கே போதாத நிலை.
- கல்விக் கனவு நொறுங்கிப்போன தலைமுறை உருவாகிறது.
சமூகச் சீரழிவின் அறிகுறிகள்
நாட்டின் சமூக கட்டமைப்பே சிதைந்து வருகிறது. ஒரு காலத்தில் மத்திய கிழக்கின் முன்னோடி நாடாக திகழ்ந்த சிரியா இன்று, போதைப்பொருள் புழக்கம் அதிகரிப்பு; குற்றங்கள் பெருக்கம்; சமூக உறவுகள் சிதைவு; மத, இன முரண்பாடுகள் தீவிரமடைதல் என, பேரழிவின் விளிம்பில் நிற்கிறது. மேற்கத்திய ஏகாதிபத்தியங்களின் தலையீடும், உள்நாட்டுப் போரின் கொடூரங்களும் ஒரு முழு தலைமுறையின் எதிர்காலத்தையே இருளடையச் செய்துள்ளன.
4சர்வதேச சக்திகளின் விளையாட்டு
இராக் மீதான அமெரிக்க படையெடுப்பும், இராக் ராணுவத்தின் கலைப்பும் மத்திய கிழக்கின் அதிகாரச் சமநிலையை அடியோடு மாற்றியது. இராக்கின் வீழ்ச்சி ஈரானை பிராந்தியத்தின் முக்கிய சக்தியாக உயர்த்தியது. இது மேற்கத்திய நாடுகளின் கணக்குகளை குழப்பியது.
இராக் முதல் சிரியா வழியாக லெபனான் வரை ஈரானின் செல்வாக்கு பரவியது. போர் அனுபவம் கொண்ட லட்சக்கணக்கான போராளிகள் ஈரானின் கட்டுப்பாட்டில் உருவாகினர். ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு எதிரான போரில் மேற்கு நாடுகள் கூட இவர்களை நம்ப வேண்டிய நிலை ஏற்பட்டது. சிரியாவில் ஈரானிய ராணுவப் படையினர், இராக்கியப் படைக்குழுக்கள், ஹிஸ்புல்லா அமைப்பு ஆகியோர் அசாத்தின் ஆட்சியை காப்பாற்றினர்.
ரஷ்யாவின் சிக்கல்
சிரியா ரஷ்யாவின் முக்கிய முன்னரங்காக மாறியது. கிழக்கு மத்தியதரைக் கடல் பகுதியில் ரஷ்யா புதிய செல்வாக்கைப் பெற்றது. ரஷ்ய-ஈரானிய கூட்டணி சிரியாவில் பயங்கரவாத சக்திகளின் முன்னேற்றத்தை தோற்கடித்து, மேற்கத்திய தலையீட்டை முறியடித்தது. ஆனால் இன்று ரஷ்யா உக்ரைன் போரில் சிக்கியுள்ளது. ஈரான் லெபனானில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. இந்த சூழலை பயன்படுத்தி துருக்கி புதிய நகர்வுகளை மேற்கொண்டு விட்டது.
\துருக்கி இந்த நெருக்கடியில் மிகவும் சூழ்ச்சியாக நடந்து கொண்டது. ஆரம்பத்தில் அமெரிக்க தலையீட்டில் முக்கிய பங்காளியாக இருந்தது. பின்னர் காற்றின் திசையை உணர்ந்து ஈரான்-ரஷ்யா கூட்டணிக்கு மாறியது. இது அமெரிக்காவின் செல்வாக்கை மேலும் குறைத்தது. இப்போது எச்டிஎஸ் மூலம் சிரியாவில் தனது ஆதிக்கத்தை விரிவுபடுத்த முயல்கிறது. இன்று புதிய அணிகள் உருவாகி யுள்ளன. ஒரு பக்கம் அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டணி இல்லாமிய அடிப்படைவாத - பயங்கரவாதிகளுக்கு மறைமுக ஆதரவு வழங்குகிறது. இதற்கு எதிராக ரஷ்யா-சீனா அணி அசாத் ஆட்சியை காப்பாற்ற முயன்றது.
பரவும் மோதல்
அமெரிக்க ஏகாதிபத்திய கூட்டணியால் தூண்டி விடப்பட்ட இந்த மோதல்கள் ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு பரவி வருகின்றன. பிராந்திய அளவிலான பேரழிவின் அபாயம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பல தசாப்தங்களாக ஏகாதிபத்தியங்கள் மத்திய கிழக்கை சூறையாடி வந்துள்ளன. ஒவ்வொரு தலையீட்டிலும் பிராந்தியத்தை காட்டுமிராண்டித்தனப் பாதையில் தள்ளியுள்ளன. சிரியாவின் சிதைவு இந்த வரலாற்று போக்கின் மற்றொரு சோக அத்தியாயமாக மாறியுள்ளது.
5 சொந்த பலமற்ற ஆட்சியின் வீழ்ச்சி
அலெப்போ மற்றும் ஹமாவின் விரைவான வீழ்ச்சி அசாத் ஆட்சியின் ஆழ்ந்த பலவீனத்தை வெளிப்படுத்தி யுள்ளது. இது முற்றிலும் சொந்த பலமற்ற ஆட்சி - ஈரான் மற்றும் ரஷ்யாவின் வெளி ஆதரவால் மட்டுமே நிலைத்திருந்தது. ஒரு தசாப்த கால போரால் சிரியா முற்றிலும் சீரழிந்துள்ளதன் விளைவு இது. முன்னொரு காலத்தில் வலிமை மிக்க ராணுவமும், திறமையான அரசியல் அமைப்பும் கொண்டிருந்த நாடு, இன்று வெறும் கூலிப்படைகளையும் ஊழல் நிறைந்த அதிகாரிகளையும் மட்டுமே கொண்டுள்ளது.
சிரிய முதலாளித்துவம் தனது நெருக்கடியிலிருந்து வெளியேற வழி காண முடியவில்லை. ஊழலும் சீரழிவும் சிரிய அரசை முற்றிலுமாக ஆட்கொண்டன. ராணுவ வீரர்களுக்கு ஊதியம் கிடைக்கவில்லை. அதிகாரிகள் தன்னிச்சையாக ஆட்சி செய்தனர். நாட்டின் மீதோ ராணு வத்தின் மீதோ எந்த விசுவாசமும் இல்லை. அரசு அதிகாரி கள் வளங்களை கொள்ளையடித்தனர். மேலும் மேலும் கடன் வாங்கி, அதனை திருப்பிச் செலுத்த முடியாமல் தவித்தனர்.
மக்களிடையே ஆழ்ந்த விரக்தி நிலவுகிறது. உள்நாட்டுப் போரின் போது பெரும்பான்மை மக்கள் இஸ்லாமிய பயங் கரவாதிகளை எதிர்த்து, அசாத் ஆட்சியை ஆதரித்தனர். ஆனால் இன்று ஆட்சி நிலைத்திருக்கிறதா இல்லையா என்பதில் அவர்கள் அக்கறை காட்டவில்லை. இந்த விரக்தி நிலையே தற்போது எச்டிஎஸ் அமைப்பினர் அலெப்போ போன்ற பெரு நகரங்களை எளிதாக கைப்பற்ற உதவியது. ஆட்சியின் வீழ்ச்சியை தடுக்க மக்கள் முன்வரவில்லை.
அசாத் ஆட்சி வெறும் அடக்குமுறையாலும், வெளி நாட்டு ஆதரவாலும் மட்டுமே நிலைத்திருந்தது என்பது இப்போது தெளிவாகிறது. மக்களுக்கான அடிப்படை வசதி களை வழங்க முடியாமல், ஊழலில் மூழ்கி, கொள்ளை யடிப்பதிலேயே குறியாக இருந்தது. பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு, சமூக முன்னேற்றம் எதுவும் இல்லாமல் நாடு தேங்கி நின்றது. இந்த வெற்றிடத்தை சமூக விரோத சக்திகள் நிரப்பத் தொடங்கின.
முதலாளித்துவத்தின் தோல்வி
அரசின் தோல்வி வெறும் தனிநபர்களின் தவறல்ல. இது தற்கால முதலாளித்துவத்தின் அமைப்புசார் நெருக்கடியின் வெளிப்பாடு. பொருளாதார வளர்ச்சி யின்றி, மக்கள் நலனை புறக்கணித்து, வெளிநாட்டு சக்திகளை நம்பி இயங்கும் எந்த ஆட்சியும் நிலைக்க முடியாது என்பதை சிரியா நிரூபித்துள்ளது. அழுகிய ஆப்பிள் சிறு அசைவிலேயே விழுந்தது போல, அசாத் ஆட்சியும் உள்ளிருந்தே சிதைந்து விழுந்துள்ளது. இந்த சூழலில் ரஷ்யாவும் ஈரானும் நீண்ட காலமாக சிரியாவுக்கு ஆதரவாக இருந்த போதிலும் இப்போது எதிர்ப்பின்றி பின்வாங்கி விட்டன. ரஷ்யப் படைகள் கடற்படை தளங்களைப் பாதுகாக்க கடற்கரைப் பகுதிக்கு பின்வாங்கின. ஈரானியப் படைகள் இராக்கிற்குள் பின்வாங்கின.
சிரியாவின் வீழ்ச்சி காட்டும் மற்றொரு முக்கிய படிப்பினை என்னவெனில், வெறும் இராணுவ பலத்தால் மட்டும் ஒரு ஆட்சி நிலைக்க முடியாது என்பதுதான். மக்களின் ஆதரவை இழந்த, பொருளாதார அடித்தளம் சிதைந்த எந்த ஆட்சியும் காலப்போக்கில் வீழ்ச்சியை சந்திக்கும். சிரியாவின் சோகம் இதற்கு சாட்சியாக நிற்கிறது.
6 பிராந்திய நெருக்கடியின் விரிவாக்கம்
சிரியாவின் தற்போதைய நெருக்கடி முழு மத்திய கிழக்கிற்குமான ஆபத்தை உருவாக்கியுள்ளது. இது நாட்டின் எல்லைகளைக் கடந்து, பிராந்திய அளவில் பரவி வரும் அபாயத்தை நாம் உணர வேண்டும். ஒரு நாட்டின் அரசியல் அமைப்பின் வீழ்ச்சி, அண்டை நாடுகளின் நிலைத்தன்மையையும் பாதிக்கும் என்பதை வரலாறு பலமுறை நிரூபித்துள்ளது. இன்று லெபனானில் நிலவும் அரசியல் முடக்கம், இராக்கின் தொடர் அமைதியின்மை, ஈரான் மீதான அழுத்தங்கள், வளைகுடா நாடுகளின் உள் முரண்பாடுகள் என அனைத்தும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்துள்ளன. இவற்றுக்கிடையே சிரியாவின் வீழ்ச்சி புதிய பதற்றங்களை உருவாக்கியுள்ளது.
பாதுகாப்பு வெற்றிடம்
லெபனானில் ஹிஸ்புல்லாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ளது. இஸ்ரேல் தொடர்ந்து ஹிஸ்புல்லா இலக்குகளைத் தாக்கி வருகிறது. ஈரான் ஆதரவுப் படைகள் சிரியாவிலிருந்து லெபனானுக்கு நகர்த்தப்பட்டுள்ளன. இது சிரியாவின் வடக்கில் ஒரு பாதுகாப்பு வெற்றிடத்தை உருவாக்கியுள்ளது.
இராக்கில் புதிய பதற்றங்கள் உருவாகியுள்ளன. சிரியா வின் வீழ்ச்சி ஈரானிய செல்வாக்கை பலவீனப்படுத்தி யுள்ளது. இதை பயன்படுத்தி பல்வேறு குழுக்கள் தங்கள் செல்வாக்கை அதிகரிக்க முயல்கின்றன. ஈரான் ஆதரவு குழுக்களும், அமெரிக்க ஆதரவு குழுக்களும் மோதல் பாதைக்கு திரும்பியுள்ளன.
துருக்கியின் புதிய நகர்வுகள் குர்திஷ் பிரச்சனையை மீண்டும் முன்னுக்குக் கொண்டு வந்துள்ளன. எர்டோ கனின் பேரரசுக் கனவுகள் வடக்கு சிரியா மற்றும் இராக்கின் குர்திஷ் பகுதிகளுக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளன. குர்திஷ் பிரச்சனை மீண்டும் ஒரு பிராந்திய நெருக்கடியாக வெடிக்கும் அபாயம் உள்ளது.
ஜோர்டானிலும் விரிசல்கள் தோன்றியுள்ளன. சிரிய அகதிகளின் பெருந்திரள், போதைப்பொருள் கடத்தல், எல்லை தாண்டிய குற்றங்கள் ஆகியவை அந்நாட்டின் நிலைத்தன்மையை பாதித்துள்ளன. சிரியாவின் தென் பகுதியில் உள்ள பாலைவனப் பகுதி கட்டுப்பாடற்ற நிலையில் உள்ளது.
பதற்றம் தீவிரமாகும்
வளைகுடா நாடுகள் புதிய அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றன. எகிப்தும் தனது பங்கிற்கு பிராந்திய அரசியலில் தீவிரமாக ஈடுபடத் தொடங்கியுள்ளது.
இந்த மாற்றங்கள் அனைத்தும் மத்திய கிழக்கின் பாரம்பரிய அதிகாரச் சமநிலையை குலைத்துள்ளன. புதிய கூட்டணிகள் உருவாகின்றன, பழைய உறவுகள் உடைகின்றன. இந்த நிலையற்ற தன்மை பிராந்திய அளவிலான மோதலுக்கு வழிவகுக்கும் அபாயம் உள்ளது. ஏற்கனவே பல நாடுகளில் அரசியல் நிலையற்ற தன்மை நிலவும் நிலையில், சிரியாவின் வீழ்ச்சி புதிய சிக்கல்களை உருவாக்கியுள்ளது.