articles

img

கருகும் பயிரைக் காக்க ஆணையமே நீரை திறந்திடுக! - சாமி.நடராஜன்

மாநிலங்களுக்கிடையே நதிநீரைப் பங்கிட்டுக் கொள்வதில் இந்தியா வில் பல நதிநீர் தாவாக்கள் தீர்த்து வைக்கப்பட்டிருந்தாலும் காவிரி நதி நீர் பிரச்சனை நூற்றாண்டைக் கடந்தும் நடுவர் மன்றம், உச்சநீதி மன்றம் இறுதி உத்தரவுகளை வழங்கிய பின்பும் இந்த உத்தரவுகளை முழுமையாக அமல்படுத்த முடியாத நிலையே தொடர்ந்து கொண்டுள்ளது.

பாரம்பரிய பாசன உரிமை

தமிழகத்தின் பாரம்பரிய பாசன உரிமை பெற்ற நதி காவிரி, சிலப்பதிகாரம் காலம் தொட்டு பல்வேறு தமிழ் இலக்கியங்களில் காவிரியின் சிறப்புகளும் காவிரி டெல்டாவின் பாசனப் பெருமைகளும் கூறப் பட்டுள்ளன. இதன் மூலம் காவிரி நீரை தமிழ்நாடு பாசனத்திற்காக கடந்த காலங்களில் முழுமையாகப் பயன்படுத்தியதை அரிய முடிகிறது. காவிரி என்பது வெறும் ஆற்று தண்ணீர் மட்டுமல்ல தமிழகத்தின் பண்பாடு, கலாச்சாரம், வாழ்வியலோடு இணைந்த ஒன்றாகும். ஆங்கிலேய ஆட்சிக் காலத்திற்கு முன்பு காவிரி யின் பெரும்பகுதி நீரை தமிழ்நாடு பாசனத்திற்காக பயன்படுத்தி வந்தது. ஆங்கிலேய ஆட்சிக் காலத்தி லும் காவிரியில் ஏறக்குறைய 600 டி.எம்.சி தண்ணீரை பயன்படுத்திய மாநிலம் தமிழ்நாடு. காவிரி தண்ணீரை  பயன்படுத்தி காவிரி டெல்டா மாவட்டங்களில் 30 லட்சம் ஏக்கர் வரை முப்போகம், சாகுபடி நடைபெற்ற காலம் உண்டு. இந்த நிலையில் தான் காவிரி தண்ணீரை கர்நாடகம் கூடுதலாக பாசனத்திற்கு பயன்படுத்த துவங்கியதும் பிரச்சனை எழுந்தது. 1924இல் தமிழ் நாடு, கர்நாடகா அரசுகளுக்கிடையில் ஒப்பந்தம் ஏற்பட்டு இது 50 ஆண்டுகள் நடைமுறையில் இருக் கும். அதற்குப் பிறகு அப்போதைய நிலைமைகளை கவனத்தில் கொண்டு அனுபவத்தின் அடிப்படையில் ஒப்பந்தத்தை புதுப்பித்துக் கொள்வது என்பதன டிப்படையில் 1974ஆம் ஆண்டு இரு மாநில அரசுகள் பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தம் இறுதி செய்யப் படவில்லை.

நடுவர் மன்றம் அமைப்பு

பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தியும் எந்த தீர்வும் ஏற்படாத நிலையில் நதிநீர் பங்கீட்டுச் சட்டம் 1956-ஐப் பின்பற்றி 2.6.1990இல் காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. நடுவர் மன்றம் காவிரி தண்ணீரை பயன்படுத்தும் தமிழ்நாடு, கர்நாடகம், புதுச்சேரி, கேரளம் ஆகிய நான்கு மாநிலங்களில் நேரில் சென்று ஆய்வு செய்து, விவசாயிகளை சந்தித்தது. அதன் பிறகு 25.06.1991இல் இடைக்கால உத்தரவை பிறப்பித்தது. இதில் ஆண்டிற்கு 205 டி.எம்.சி. தண்ணீரை மாத வாரி யாக கர்நாடகம் தமிழகத்திற்கு வழங்கவேண்டும் என உத்தரவிட்டது. இதற்கு எதிராக கர்நாடகத்தில் பெரும் வன்முறை ஏற்பட்டது. அங்குள்ள தமிழர்கள் தாக்கப் பட்டார்கள், அவர்களின் சொத்துகள் சூறையாடப் பட்டன. இரு மாநிலங்களிலும் பெரும் பதற்றமான சூழல் ஏற்பட்டது அனைவரும் அறிந்ததே. காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பில், இடைக் காலத் தீர்ப்பில் வழங்கப்பட்ட 205 டி.எம்.சி யை குறை த்து 192 டி.எம்.சி. வழங்க தீர்ப்பு வழங்கியது. இதையும் கர்நாடக அரசு அமல்படுத்தாமல், உச்சநீதிமன்றம் சென்றது, தமிழக அரசும், உச்சநீதிமன்றம் சென்றது. உச்சநீதிமன்றத்தில் நீண்ட காலம் வழக்கு நடை பெற்று 2007ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் தனது இறுதித் தீர்ப்பை வழங்கியது. அதில் நடுவர் மன்றம் வழங்கிய இறுதித் தீர்ப்பில் உள்ள 192 டி.எம்.சி என்ப தைக் குறைத்து ஆண்டிற்கு 177.25 டி.எம்.சி. தண்ணீர் கர்நாடகம் மாதவாரியாக தமிழகத்திற்கு வழங்க உத்தர விட்டது. இந்த உத்தரவை செயல்படுத்திட காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் நீர் ஒழுங்காற்றுக் குழு அமைத்திடவும், உச்சநீதிமன்ற இறுதி உத்த ரவை ஒன்றிய அரசின் அரசிதழில் வெளியிட வைப்ப தற்கும் தமிழ்நாடு அரசும், விவசாயிகளும் நீண்ட நெடிய போராட்டம் நடத்தியதின் பின்புதான் ஒன்றிய அரசு உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டது, காவிரி நீர் மேலாண்மை வாரியத்தையும் அமைத்தது.

ஆட்சி மாறினாலும்,  காட்சி மட்டும் மாறவில்லை

உச்சநீதிமன்ற இறுதி உத்தரவுப்படி கர்நாடகம் தமிழ்நாட்டிற்கு காவிரியில் 177.25 டிஎம்சி தண்ணீரை ஜூன் 9.19 டி.எம்.சி, ஜூலை 31.24 டி.எம்.சி, ஆகஸ்ட் 45.95 டி.எம்.சி, செப்டம்பர் 36.19 டி.எம்.சி, அக்டோபர் 20.22 டி.எம்.சி. நவம்பர் 13.78 டி.எம்.சி. டிசம்பர் 7.35 டி.எம்.சி. ஜனவரி 2.76 டி.எம்.சி. பிப்ரவரி 2.76 டி.எம்.சி. மார்ச் 2.76 டி.எம்.சி. ஏப்ரல் 2.76 டி.எம்.சி. மே 2.76 டி.எம்.சி. என்ற அடிப்படையில் மாதவாரியாக வழங்க வேண்டும்.  ஒரு காலத்தில் 600 டி.எம்.சி தண்ணீர் வரை பயன் படுத்திய தமிழ்நாட்டில் பாசன உரிமை கொஞ்சம், கொஞ்சமாக குறைக்கப்பட்டு கடைசியில் 177.25 டி.எம்.சி. தண்ணீர் தான் சட்ட ரீதியாக பயன்படுத்த முடியும் என்ற நிலையில், இந்த தண்ணீரைக் கூட கர்நா டகம் முழுமையாக வழங்காமல் உள்ளது வேதனை யானது. கர்நாடகத்தில் எந்த கட்சி ஆட்சியில் இருந்தா லும் காவிரி நதிநீர் பிரச்சனையை தங்களுடைய அரசியல் தேவைகளுக்காக பயன்படுத்துகின்றனர். தற்போது அங்கு ஆட்சி மாற்றம் நடைபெற்ற நிலை யிலும் இது தொடர்கிறது.

கருகும் குறுவைப் பயிர்

கடந்த இரண்டு ஆண்டுகளில் கர்நாடகத்தில் பருவ மழை காலத்தில் கூடுதலாகப் பெய்த மழையால் அங்குள்ள நீர்த் தேக்கங்கள் நிரம்பி உபரி தண்ணீரை தமிழகத்திற்கு திறந்தனர். கடந்த இரண்டு ஆண்டு களில் காவிரி டெல்டாவில் சாகுபடிக்கு பிரச்சனைகள் ஏற்படவில்லை. இந்தாண்டு மேட்டூர் அணை குறுவை சாகுபடிக்காக ஜூன் 12இல் திறக்கப்பட்டது அணை திறக்கப்பட்ட போது அணையின் நீர் மட்டம் 103 அடி யாக இருந்தது. தமிழ்நாடு அரசு குறுவைத் தொகுப்பு திட்டத்தை அறிவித்து விவசாயிகளை ஊக்கப் படுத்தியது. இதனால் டெல்டாவில் ஏறக்குறைய 5 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி, நேரடி விதைப்பு மூலமும், நடவு மூலமும் நடைபெற்றது. ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் கர்நாடகம் வழங்க வேண்டிய தண்ணீரை முழுமையாக வழங்காததால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்தது. இத னால் அணையிலிருந்து பாசனத்திற்கு திறக்கப்பட்ட தண்ணீர் குறைக்கப்பட்டதால் கடைமடைப் பகுதிக ளுக்கு தண்ணீர் செல்லவில்லை. இதனால் நேரடி விதைப்பு மற்றும் நடவு செய்த குறுவைப் பயிர்கள் காய்ந்து கருகிவிட்டது. குறிப்பாக நாகை மாவட்டத் தில் தலைஞாயிறு, கீழ்வேளூர், கீழையூர், நாகை வேதாரண்யம் பகுதிகளிலும், திருவாரூர் மாவட்டத்தில் முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி, கோட்டூர் மன்னார்குடி பகுதியில் குறுவைப் பயிர்கள் முற்றிலும் கருகி விட்டது. 

காவிரி ஆணையம்  பொறுப்பேற்க வேண்டும்

எஞ்சியுள்ள    குறுவைப் பயிர்களை பாது காத்திடவும், சம்பா சாகுபடியை மேற்கொள்வ தற்கும் கர்நாடகம் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் வழங்க வேண்டிய தண்ணீரில் பாக்கி யுள்ளதையும், செப்டம்பர் முதல் மாதவாரியாக வழங்க வேண்டிய தண்ணீரை முழுமையாக வழங்கிட உரிய முறையில் உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டிய காவிரி  மேலாண்மை ஆணையத்தை தமிழக அரசு பலமுறை வலியுறுத்திய பின்பு இரண்டு முறை  ஆணையக் கூட்டம் நடைபெற்றது. அதில் தமிழகத்தின் சார்பில் காவிரியில் விநாடிக்கு 24 ஆயிரம் கன அடி தண்ணீரை கர்நாடகம் திறக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப் பட்டது. கர்நாடக தரப்பில் பருவமழை குறைவாக பெய்துள் ளதால் தண்ணீர் திறக்க முடியாது என வாதிடப்பட்டது. தற்போது கர்நாடக அணைகளில் 85 சதவீதம் தண்ணீர் உள்ள நிலையில் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரை கொடுக்க மறுத்து வருகின்றனர்.  இந்த நிலையில் தமிழ்நாடு அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம் இதை விசாரிப்பதற்கு 3 பேர் கொண்ட தனி அமர்வை அமைத்தது. தனி அமர்வில் வழக்கு விசாரணையை 6.9.2023 அன்று எடுத்துக் கொள்வதாக அறிவித்தது. ஆனால் அன்று  (6.9.2023) வழக்கை மீண்டும் 21.9.2023க்கு ஒத்தி வைத்து விட்டது. காவிரி டெல்டாவில் பயிர்கள் காய்ந்து கொண்டுள்ள நிலையில், தமிழ்நாடு அரசின் சார்பில் இந்த வழக்கை அவசர வழக்காக கருதி விசாரிக்க வேண்டுமென்று வலியுறுத்திய பின்பும் வழக்கை மீண்டும், மீண்டும் ஒத்திவைப்பது கருகும் பயிர் களை காப்பாற்றவும், சம்பா சாகுபடியை துவங்க முடி யாத நிலையைத்தான் ஏற்படுத்தும்.  

பாஜகவின் இரட்டைவேடம்

29.08.2023 அன்று காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில் கர்நாடகம் விநாடிக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்க உத்தரவிட்டது. இதற்கும் கர்நாடக தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப் பட்டது. கர்நாடக பாஜகவினர் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கக்கூடாது என போராட்டம் நடத்துகின்றனர். தமிழ்நாட்டு பாஜகவினர் காவிரி தண்ணீர் பிரச்ச னையில் தமிழ்நாடு அரசை விமர்சித்துப் பேசுகின்ற னர். இவ்வாறு காவிரி பிரச்சனையில் இரட்டை வேடம் போடுகின்றனர். காவிரி நதிநீர் ஆணையம் திறக்க உத்தரவிட்டுள்ள 5 ஆயிரம் கன அடி தண்ணீர் தமிழ்நாட்டின் தேவையை பூர்த்தி செய்யாது. எனவே, காவிரியில் கர்நாடகம் மாத வாரியாக வழங்க வேண்டிய தண்ணீரை வழங்கிட உரிய உத்தரவுகளை ஆணையம் பிறப்பிக்க வேண்டும். ஆணையமோ, உச்சநீதிமன்றமோ பிறப்பிக்கும் உத்தரவுகளை கர்நாடக அரசு செயல்படுத்தாத நிலை ஏற்பட்டால் தன்னாட்சி அதிகாரம் பெற்ற “காவிரி நதிநீர் ஆணையமே” முழு பொறுப்பையும் எடுத்துக் கொண்டு தமிழகத்திற்கு தண்ணீர் திறந்திட வேண்டும். தற்போது ஏற்பட்டுள்ள இந்த இக்கட்டான நிலையில் காவிரி டெல்டாவில் சம்பா மற்றும் தாளடி சாகுபடி களை விவசாயிகள் மேற்கொள்வது குறித்து தமிழ்நாடு அரசு விவசாயிகளுக்கு உடன் அறிவித்திட வேண்டும். இந்நிலையில் காவிரி டெல்டா மாவட்டங்களில் காய்ந்து வரும் குறுவைப் பயிர்களுக்கு தண்ணீர் பெறு வதற்கும், காவிரியில் தமிழகத்தின் பாசன உரிமை யைப் பாதுகாப்பது குறித்தும் விவாதித்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக 08.09.2023 அன்று “காவிரிப் படுகைப் பாதுகாப்புக் கூட்டியக்கத் தின்” சார்பில் தஞ்சாவூரில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.