articles

img

பாட்டாளிகளின் படைப்பாளி கவிஞர் தமிழ்ஒளி - இரா.தெ.முத்து

1949 இல் ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்படுகிறது. அதன் ஏடான ஜனசக்தியும் தடை செய்யப் படுகிறது. தடையை எதிர்கொள்ள கட்சி ஒரு வியூகம் வகுக்கிறது. ஜனசக்தியின் வாசகர்களை, சந்தாதாரர் களை “முன்னணி”  வார இதழை வாங்கவும் வாசிக்கவும் சொல்கிறது. இதன் ஆசிரியராக கவிஞர் குயிலனும் துணையாசிரியர்களாக கவிஞர் தமிழ்ஒளியும், எஸ்.ஆர்.சவுந்திரராஜனும்  இருக்க வழி காட்டப்படுகிறது. அடுத்த ஓராண்டில் இதுவும் தடை செய்யப்படும் வரை கவிஞர் தமிழ்ஒளி, ‘முன்னணி’ வார இதழில் கட்சி நெறிப் படி, மார்க்சிய அழகியல் அரசியல் கோட் பாட்டின் படி, வர்க்க எதிரிகளை எதிர்த்து உழைக்கும் மக்களுக்கு பக்கபலமாக நின்று எழுத்தாயுதம் ஏந்துகிறார். அதில் மே தினத்தைப் பற்றி 151 வரிகளில் ‘மேதினமே வருக’ என்ற தலைப்பில் நெடுங்கவிதை எழுதுகிறார் தமிழ்ஒளி. சோவியத் ருசியாவின் சிறப்பு என எழுதப் பட்ட இந்தக் கவிதை அற்புதமான கவித்துவப் படிமங்க ளோடு, தமிழில் முதன்முதலாக மேதினம் பற்றி எழுதப் பட்ட கவிதை என்ற இடத்தைப் பெற்று காலத்தால் அழியாததாக, சிறப்பான ஒர் அரசியல் கவிதையாக இன்றும் ஒளிர்கிறது.

எழுத்தாளர்களின் எழுத்தாளர்

மறைந்த எழுத்தாளர் ஜெயகாந்தன், தனக்கு தமிழ் கற்பித்த ஆசான்கள் இருவர்; ஒருவர் ஜீவா, இன்னொருவர் தமிழ்ஒளி என தமிழ்ஒளியைத் தன் ஆசானாக சொல்லியிருப்பதன் வழியாக கவிஞர் தமிழ்ஒளியின் சிறப்பை அறியலாம். அவரது காலத்தில் வாழ்ந்த சக வயது இலக்கியத் தோழரான தொ.மு.சி.ரகுநாதன் தமிழ்ஒளியைப் பற்றி  சொல்லும் பொழுது, “நாடறிந்த பல கவிஞர்களின் தகு திக்குக் குறையாத தகுதி பெற்றவர்” என்கிறார். திரைப்படத்துறையில் பெரும் செல்வாக்கு செலுத்திய வசனகர்த்தா ஏ.எல்.நாராயணன் , “ மன்னன் உன் மதிப்பைப் பெற உன் வாசலில் காத்திருந்தோர் ஏராளம். எழுத்து நடையை எனக்குக் கற்பித்த என் ஞானாசிரியன் நீ” என தமிழ்ஒளி மறைவை ஒட்டி 1965 சமநீதி இதழ் வெளியிட்ட சிறப்புமலரில் எழுதி இருக்கிறார். 

பாவேந்தரின் வளர்ப்புப் பிள்ளை


21.09.1924 ஆம் ஆண்டு இன்றைய கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியை அடுத்த ஆமூர் கிரா மத்தில் பொ.சின்னையா- செங்கேணியம்மாளின் மகனாகப் பிறந்தார் சி.விஜயரங்கம். விஜயரங்கத்தின் தமிழ் மீதான பேரார்வம் கண்டு  பாவேந்தர் பாரதிதாச னின் புதல்வர் மன்னர்மன்னன் தமிழ்ஒளி என புனைப் பெயர் சூட்டினார். பாவேந்தரின் வளர்ப்புப்பிள்ளையாக தம் உடன் இருந்த தமிழ்ஒளிக்கு முறையான தமிழ்ப்புலமை கற்பிக்க தஞ்சை கரந்தை தமிழ்க்கல்லூரியில் சேர்த்து விடுகிறார் பாரதிதாசன். தமிழ்படித்து பணிக்குப் போவ தற்கான பாடத்திட்டம் கொண்ட கரந்தை தமிழ்க் கல்லூரி, தமிழ் மீதான புலமை பெறுவதற்கான பாடத்திட்டம் கொண்டிராத நடைமுறை மீது தமிழ் ஒளிக்கு வெறுப்பு வர, கல்லூரியை விட்டு வெளியேறு கிறார். தந்தை பெரியார்,பாரதிதாசன் ஆகியோர் மீதான ஈர்ப்பாலும் இயல்பிலேயே தாய்த்தமிழ் மீதான பெரு விருப்பும் கொண்ட தமிழ்ஒளி அன்றைய திராவிட இயக்க இதழ்களான குடியரசு,போர்வாள்,திராவிட நாடு போன்ற ஏடுகளில் உணர்ச்சித் ததும்பும் கவிதை களை தமிழ் வெல்ல, தமிழ்நாடு வெல்ல, தகத்தகாய மாய் ஒளிரும் கவிதைகளை எழுதுகிறார்.

கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்

இயல்பிலேயே எளிய உழைக்கும் மக்களின் மீதான போராட்டங்களில் கவனம் கொண்ட தமிழ்ஒளி, எளிய மக்களுக்காகப் போராடுகிற கம்யூனிஸ்ட் கட்சியால் ஈர்க்கப்பட்டு 1946 வாக்கில் தோழர் ஜீவாவைச் சந்தித்து கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினராகிறார். இந்தக் காலத்தில் ‘நிலைபெற்ற சிலை’, ‘வீராயி’ என்ற  உழைக்கும் மக்களை ஒடுக்கப்படும் மக்களை கதை மாந்தர்களாக மையப்படுத்திய காவியங்களை வெளியிடுகிறார் தமிழ்ஒளி. ‘நீ எந்தக் கட்சியில்?’ என்ற தலைப்பில் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டங்களை, உழைக்கும் மக்களை, மேதினத்தைப் பாடுகிற கவிதைத் தொகுப்பொன்றை வெளியிடுவதன் வழி கட்சியின் கவிஞராக மலர்கிறார். 1949 இல் அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தமிழ்நாட்டுக் கிளையின் அமைப்புக்குழு உருவாக்கப்படுகிறது. இந்த அமைப்புக்குழுவானது 1952இல் தலைமைக்குழு, நிர்வாகக்குழு, செயலாளர், பொருளாளர் என்ற முறையில் அமைப்பாக உரு வாக்கப்படுகிறது. கவிஞர் தமிழ்ஒளி அதன் தற்காலிக அமைப்புக்குழுவிலும் பின் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்பிலும் இணைந்து செயலாற்றி இருக்கிறார்.

மொழியியல்- மானுடவியல் அறிஞர் 

தமிழ்ஒளியின் காவியங்கள் கவிதைகளில் வெளிப் படும் செய்நேர்த்தி இலக்கண யாப்பு போன்றவைக ளுக்காக பன்மொழிப் புலவர் கா.அப்பாதுரையார், மு. வரதராசனார், எழுத்தாளர் விந்தன், மஞ்சரி ஆசிரியர் கி.வா.ஜகந்நாதன், குயிலன் போன்றோர் கவிஞர் தமிழ்ஒளியை மதிப்பீடு செய்து எழுதி இருக்கி றார்கள். காப்பியம், கவிதைகள், இதழியல், சிறுகதை, ஆய்வுகள், சிறார் இலக்கியம், நாடகம், திரைப்படம் என, தான் மறைந்த 1965 வரையான நாற்பதாண்டுக ளுக்குள் பல இலக்கிய வகைமைகளில் தமிழ்ஒளி செயற்பட்டுள்ளார்.  தமிழ்ஒளியின் ஆய்வு நூலான ‘சிலப்பதிகாரம்: காவியமா? நாடகமா?’ எனும் தலைப்பிலான நூலில் சிலப்பதிகாரம் இசைநாடகம் என கிரேக்க,ரோமானிய இசை நாடக வரலாற்றுச் சான்றுகள் தழுவி, காலத்தால் முந்தையது சிலப்பதிகாரம் என தமிழ்ஒளி நிறுவுகிறார். திருவள்ளுவர் குறளில் கையாள்கிற கடவுள் வாழ்த்தின் ஆதிபகவனை முன் வைத்து, பரிமேலழ கரின் வைதீகநெறிப்பார்வைக்கு மாறான இயற்கை வழிபாடு சார்ந்த மரபில் கடவுள் வாழ்த்துப் பாடலைக் காண வேண்டும் என்கிற பார்வைகள் கொண்ட கட்டு ரைகளுக்காக, நாம் தமிழ்ஒளியின் கட்டுரைகளை வாசித்தறிய வேண்டும்.

படைப்புகள் ; முன்னெடுப்புகள்

கவிஞனின் காதல், நிலைபெற்ற சிலை, வீராயி, மேதின ரோஜா,விதியோ வீதியோ, கண்ணப்பன் கிளி கள், கோசலக்குமாரி,புத்தர் பிறந்தார், மாதவி காவி யம் எனும் ஒன்பது காவியங்களை படைத்துள்ளார். மறைந்த செ.து.சஞ்சீவி அவர்களால் இதுவரை தொகுக்கப்பட்ட190 கவிதைகள், இரண்டு குறு நாவல்கள், மூன்று ஆய்வு நூல்கள், முப்பது சிறுகதை கள், இருபது ஓரங்க நாடகங்கள், மூன்று மேடை நாட கங்கள் என தமிழ்ஒளி பங்காற்றி இருக்கிறார். மேடை நாடகங்கள், ஓரங்க நாடகங்கள், குறுநாவல்களின் பிரதிகள் இதுவரை கிடைக்கவில்லை. 1965  மார்ச் 29 இல் காசநோயாலும் காதல் வாழ்வு அமையப்பெறாத மன அமைதி இன்மையாலும் தனிமையாலும் பாதிக்கப்பட்ட தமிழ்ஒளி தன் 41 ஆவது வயதில் புதுச்சேரியில் உயிர்நீத்தார்.

நாளை நூற்றாண்டு துவக்கம்

கவிஞர் தமிழ்ஒளியின் படைப்புகளை, நினைவை தமிழ் கூறு நல்லுலகம் முன் தொடர்ந்து கொண்டு செல்ல 2013 இல் உருவாக்கப்பட்ட நூற்றாண்டு விழாக் குழு கடந்த பத்தாண்டுகளில் தமிழ்ஒளியின் காவியங்க ளை தொகுத்து மக்கள் பதிப்பாக வெளியிட்டு, வீராயி காவியத்தை ரூபாய் ஒன்றரை லட்சம் செலவில் சென்னை கலைக்குழு வழியாக நாடகமாக அரங் கேற்றியும்; பள்ளி - கல்லூரிகளுடன்  இணைந்து தமிழ்ஒளி படைப்புகளை மாணவர்கள் மத்தியில் அறி முகம் செய்து, தமிழ்ஒளி படைப்புகளை பதிப்பித்து வந்த செ.து.சஞ்சீவி அவர்கள் பதிப்பித்த நூல்களுக்கு நூலக ஆணைக்குழு, தமிழ் வளர்ச்சி இயக்ககம் வழி யாக மானியம் மற்றும் நூல்களை கொள்முதல் செய்ய உதவியும், சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ் இலக்கியத்துறையின் கீழ் நூற்றாண்டு விழாக்குழு சார்பில் ரூபாய் 5 லட்சம் மதிப்பில் கவிஞர் தமிழ் ஒளி நினைவு அறக்கட்டளை உருவாக்கியும் தமிழ்நாடு அரசுக்கு கவிஞர் தமிழ்ஒளி குறித்த தரவுகளை கைய ளித்து, தமிழ்ஒளி நூற்றாண்டை அரசு விழாவாக எடுக்கக் கோரியும் தொடர்ந்து பல முன்னெடுப்பு களை எடுத்து வருகின்றது.  இந்தப் பின்னணியில் 2023 செப்டம்பர் 21 அன்று கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு உற்சாகமாகத் துவங்குகிறது.

கட்டுரையாளர்: செயலாளர்,
கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு விழாக்குழு