articles

img

பில்கிஸ் பானு வழக்கு குற்றவாளிகளை மட்டும் முன்கூட்டியே விடுதலை செய்தது ஏன்?

குஜராத் - ஒன்றிய பாஜக அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

குஜராத் அரசின் தண்டனைக் குறைப்பு கொள்கை, தேர்ந்தெடுக்கப்பட்ட சிலருக்கு (பில்கிஸ் பானு வழக்கு குற்றவாளிகள் 11 பேருக்கு) மட்டும் ஏன் பயன்படுத்தப்பட்டது; 14 ஆண்டுகளைக் கழித்த ஏனைய சிறைவாசிகள் ஏன் விடுதலை செய்யப்படவில்லை என்று உச்சநீதிமன்றம் கேள்விகளை எழுப்பியுள்ளது. பில்கிஸ் பானு வழக்கு கோத்ரா நீதிமன்றத்தில் நடைபெறாத நிலையில், குற்றவாளிகளை விடுவிக்க, அந்த நீதிமன்றத்தின் கருத்து ஏன் கேட்கப்பட்டது? என்றும் கேள்வி எழுப்பியிருக்கும் உச்ச நீதிமன்றம், குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்ததை பொறுத்தவரையில், குஜராத் அரசு இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிக் கொண்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது. மேலும், தண்டனைக் குறைப்பு அல்லது விடுதலைக் கொள்கையை அமல்படுத்துவது தொடர்பான- அதாவது, பில்கிஸ் வழக்கு குற்றவாளிகளை விடுதலை செய்வதற்கான பரிந்துரை வழங்கிய சிறை ஆலோசனைக் குழு எதன் அடிப்படையில் அமைக்கப்பட்டது? என்பன போன்ற விவரங்களை தாக்கல் செய்யுமாறும் குஜராத் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

குஜராத்தில் சங்-பரிவாரங்கள் வெறியாட்டம்

கடந்த 2002-ஆம் ஆண்டு, குஜராத் மாநிலத்தில் நரேந்திர மோடி முதல்வராக இருந்தபோது, கோத்ரா ரயில் எரிப்பில் 59 இந்துக்கள் பலியானதைக் காரணம் காட்டி, இஸ்லாமியர்களுக்கு எதிராக பெரும் வன்முறை தூண்டிவிடப்பட்டது. சங்-பரிவாரங்களும், பாஜக-வினரும் கொலைவெறியாட்டம் நடத்தினர். சுமார் 2 வாரங்களுக்கு நீடித்த இந்த வன்முறையில், ஆயிரக்கணக்கான இஸ்லாமி யர்கள்- குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என ஆயிரக்கணக்கானோர் ஈவிரக்கமின்றி கொல்லப்பட்டனர். 20 ஆயிரம் இஸ்லாமியர்களின் வீடுகள் மற்றும் கடைகள், 360 மசூதிகள் அழிக்கப்பட்டன. ஒன்றரை லட்சம் இஸ்லாமியர்கள் வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்தனர்.

3 வயது குழந்தை உட்பட 14 பேர் படுகொலை

இவ்வாறு உயிர்ப்பலியானவர் குடும்பங்களில் அகமதாபாத் அருகிலுள்ள தாகோடு மாவட்டம் ரன்தீக்பூர் கிராமத்தைச் சேர்ந்த பில்கிஸ் பானுவின் குடும்பமும் ஒன்றாகும். 2002 மார்ச் 3-ஆம் தேதி வன்முறையாளர்களுக்கு அஞ்சி, இவர்கள் தப்பித்துச் செல்ல முயன்றபோது சுற்றிவளைத்த 30 பேர் கொண்ட வன்முறைக் கும்பல், 14 பேரைக் கொத்தாக படுகொலை செய்தது. இதில் பானுவின் 3 வயது பெண்குழந்தை சலேஹா பாறையில் அடித்துக் கொலை செய்யப்பட்டது. 5 மாதக் கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானு, அவரது தாயார் உள்ளிட்ட 3 பெண்கள், ஒரு வன்முறைக் கூட்டத்தால், கும்பல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டனர். 
 

11 பேருக்கு ஆயுள் தண்டனை

பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்தில், நீண்ட நெடிய சட்டப் போராட்டத்திற்குப் பிறகு, 2008-ஆம் ஆண்டு, குற்றவாளிகள் 11 பேருக்கு மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டது. இவர்கள் கோத்ரா கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், ஜஸ்வந்த்பாய் நாய், கோவிந்த்பாய் நாய், ஷைலேஷ் பட், ராதேஷாம் ஷா, பிபின் சந்திர ஜோஷி, கேசர்பாய் வோஹானியா, பிரதீப் மோர்தியா, பகபாய் வோஹானியா, ராஜூபாய் சோனி, மிதேஷ் பட் மற்றும் ரமேஷ் சந்தனா ஆகிய குற்றவாளிகள் 11 பேரை யும், கடந்த ஆகஸ்ட்  15 அன்று சுதந்திர தின பவளவிழாவை முன்னிட்டு குஜராத் பாஜக அரசு சிறையில் இருந்து விடுதலை செய்தது. 

விதிகளை சாதகமாக்கி விடுதலை

11 பேரையும் விடுதலை செய்வது தொடர்பாக முடிவெடுக்க குஜராத் அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு தீர்ப்பு வழங்கியதாகவும், அந்த தீர்ப்பின் அடிப்படையிலேயே, 1992-ஆம் ஆண்டின் குஜராத் மாநில சிறைக் கைதிகள் தண்டனைக் குறைப்பு கொள்கை அடிப்படையில், குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டதாகவும் மாநில பாஜக அரசு கூறிக் கொண்டது. ஆனால், இது நாடு முழு வதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குஜராத் அரசின் நட வடிக்கைக்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் கண்டனம் தெரி வித்தன. மிகக் கொடூரமான குற்றத்தில் ஈடுபட்டவர்களுக்கு நன்னடத்தை விதி பொருந்தாது என்று கூறின. மேலும், குற்றவாளிகளில் ஒருவர் 2020-இல் பரோலில் வெளியே வந்தபோது ஒரு பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்த தாக அரசின் பிரமாணப் பத்திரமே குறிப்பிடுவதால், நன்னட த்தை எங்கே இருக்கிறது? என்றும் கேள்வி எழுப்பின.

சுபாஷினி அலி மேல்முறையீடு

இந்நிலையில், பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைக் குழு உறுப்பினர் சுபாஷினி அலி, பத்திரிகையாளர் ரேவதி லால், முன்னாள் ஐபிஎஸ் அலுவலர் மீரான் சாதா போர்வான்கர், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹூவா மொய்த்ரா உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தனர். சில நாட்கள் கழித்தே பில்கிஸ் பானுவும் வழக்கில் இணைந்தார்.

உச்சநீதிமன்றம் கடும் சாடல்

இந்த வழக்குகளை விசாரிக்க, நீதிபதிகள் கே.எம். ஜோசப் மற்றும் பி.வி. நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வை உச்சநீதிமன்றம் அமைத்தது.  இந்த அமர்வு, 2023 மார்ச் 27 அன்று வழக்கை விசாரித்தது. அப்போது, “பில்கிஸ் பானுவுக்கு நடந்தது மிகவும் கொடூரமான செயல்” எனக் கூறியதுடன், இந்த விவகாரத்தில் குற்றவாளிகளை முன்கூட்டியே விடுவித்ததற்கான சான்றுகளைச் சமர்ப்பிக்குமாறு குஜராத் மற்றும் ஒன்றிய பாஜக அரசுகளுக்கு உத்தரவிட்டது. “கர்ப்பிணி கும்பல் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, சிலர் கொலைசெய்யப்பட்ட வழக்கை, பிரிவு 302-ன்கீழ் வரும் சாதாரண கொலை வழக்குடன் நீங்கள் ஒப்பிட முடியாது. ஆப்பிளை எப்படி ஆரஞ்சுப் பழத்துடன் ஒப்பிட முடியாதோ, அதுபோல படுகொலையை, சாதாரண கொலையுடன் ஒப்பிட முடியாது. குற்றங்கள் அனைத்தும் பொதுவாக சமூகத்துக்கு எதிரானவை. எனவே, சமத்துவமற்றவர்களைச் சமமாக நடத்த முடியாது. எதன் அடிப்படையில் குற்றவாளிகளை விடுதலை செய்தீர்கள். இன்றைக்கு பில்கிஸ் பானு.... நாளைக்கு நீங்களோ, நானோ அல்லது வேறு யாராகவோ இருக்கலாம். குற்றவாளிகளை விடுவித்ததற்கான சரியான காரணங்களை ஆவணமாக சமர்ப்பிக்காவிட்டால், இதில் நாங்களே முடிவெடுப்போம்” என்றும் குறிப்பிட்டது.  ஏப்ரல் 18 அன்று நடைபெற்ற விசாரணையின் போதும், பில்கிஸ் பானு வழக்கில் தண்டனை பெற்ற 11 பேரை விடுவிக்க மற்ற வழக்குகளில் பின்பற்றும் விதிமுறைகளைத்தான் குஜராத் அரசு பின்பற்றியதா? என்ற கேள்வியை எழுப்பிய நீதிபதிகள், இதற்கான அனைத்து ஆவணங்களையும் அடுத்த விசாரணையின் போது சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்திருந்தனர்.

மீண்டும் விசாரணை

இந்நிலையில், வியாழனன்று (2023 ஆகஸ்ட் 17) பில்கிஸ் பானு வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. நீதிபதி கே.எம். ஜோசப் ஓய்வு பெற்றதை தொடர்ந்து, பி.வி. நாகரத்னாவுடன் இணைந்து, உஜ்ஜல் புயான் வழக்கை விசாரித்தார். அரசுத் தரப்பில், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி. ராஜூ, மூத்த வழக்கறிஞர்கள் ரிஷி மல்ஹோத்ரா, சித்தார்த் லூத்ரா உள்ளிட்டோரும் பொதுநல மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங், வழக்கறிஞர்கள் அபர்ணா பட், பிருந்தா குரோவர்,  பிரதிக் ஆர் பாம்பார்டே, மற்றும் நிஜாம் பாஷா ஆகியோரும் பில்கிஸ் பானு தரப்பில் ஷோபா குப்தாவும் ஆஜராகினர்.

கருணைக்கு தகுதியானவர்களா?

பில்கிஸ் பானு வழக்கறிஞர் ஷோபா குப்தா, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 11 பேரையும் ஒட்டுமொத்தமாக விடுவித்தது சட்டவிரோதம் என்று குற்றம் சாட்டினார். “பிஸ்கிஸ் வழக்கில் வல்லுறவுக் குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட தண்டனை அவர்கள் செய்த குற்றத்தின் தன்மை மற்றும் தீவிரத்தன்மைக்கு ஏற்ப இருக்க வேண்டும். அவர்கள் செய்த குற்றங்களில் 14 கொலைகள் மற்றும் மூன்று கும்பல் வல்லுறவுக் குற்றங்கள் அடங்கும். இந்த குற்றங்கள் மிருகத்தனமானவை. மதவெறுப்பின் அடிப்படையில் இந்த குற்றங்கள் நிகழ்த்தப்பட்டு உள்ளன. அவ்வாறிருக்க, இந்த 11 குற்றவாளிகளும் கருணைக்கு தகுதியானவர்களா?” என்று கேள்வி எழுப்பினார். “...பில்கிஸ் தனது முதல் குழந்தையின் தலை கல்லில் அடித்து நொறுக்கப்பட்டதைக் நேரில் கண்டார். தாக்கியவர்களிடம் அவர் கெஞ்சினார். அவர்கள் பில்கிஸ் பானுவின் ஊரைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவருக்கு அவர்களைத் தெரியும். ஆனால், அவர்களோ பில்கிஸ் பானுவுக்கோ அவரது குடும்பத்தாருக்கோ கருணை காட்டவில்லை... எனவே, இந்தக் குற்றங்களைச் செய்த குற்றவாளிகளாகக் கண்டறியப்பட்ட குற்றவாளிகளான - இவர்களுக்குக் காட்டப்படும் கருணைக்கு அவர்கள் தகுதியானவர்களா?” என்றார். மேலும், “பில்கிஸ் பானு வழக்கில் வல்லுறவுக் குற்றவாளிகளை முன்கூட்டியே விடுவிப்பதன் சமூக தாக்கத்தை அரசாங்கம் கருத்தில் கொள்ளவில்லை அல்லது சட்டத்தின் கீழ் அவர்களுக்குத் தேவைப்படும் பிற தொடர்புடைய காரணிகளைக் கருத்தில் கொள்ளவில்லை” என்றும் குப்தா வாதிட்டார்.

உள்துறை அனுமதி பெற்றே விடுதலை

இவற்றுக்கு பதிலளித்து குஜராத் அரசு மற்றும் ஒன்றிய அரசுத் தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி. ராஜூ வாதங்களை வைத்தார். அவர், “குஜராத் அரசாங்கம் வழங்கிய நிவாரணம் (குற்றவாளிகளை விடுதலை  செய்தது) சட்டப்பூர்வமானது” என்றும், “சட்டத்தின் கீழ் ஆராயப்பட வேண்டிய அனைத்து காரணிகளையும் கருத்தில் கொண்டே வழங்கப்பட்டது” என்றதுடன், “தண்டனையின் சீர்திருத்தக் கோட்பாட்டையும் குஜராத் அரசு பயன் படுத்தியிருக்கிறது” என்றார். “கடந்த 2008-ஆம் ஆண்டு தண்டனை பெற்ற 11 பேரும் 14 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவாசம் அனுபவித்து விட்டனர். குஜராத் அரசின் 1992 சட்டத்திருத்தத்தின் படி, தண்டனை குறைப்பு விதிகளின்படி, ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் அனுமதி பெற்றே அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்” என்று கூறினார்.

எல்லோரையும் தூக்கிலிட வேண்டுமா?

“குற்றத்திற்கு தண்டனைதான் நிவாரணமா?” என்று கேட்ட ஒன்றிய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ராஜூ, “ஒரு கொடூரமான குற்றத்தைச் செய்தவர் பின்னர் தன்னைத்தானே சீர்திருத்திக் கொண்ட பிறகும், வருத்தத்தை வெளிப்படுத்தி மீண்டும் ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்க விரும்பும் நிலையிலும், தண்டனையைத்தான் முன்னிலைப்படுத்த வேண்டுமா..? கடந்த காலம் எப்போதும் அவர்களின் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்க வேண்டுமா? இந்தக் குற்றவாளிகள் எல்லாக் காலங்களிலும் கண்டிக்கப்பட வேண்டுமா? இவைதான் எனது கேள்விகள்.” என்றார். மேலும், குற்றவாளிகள் ஏற்கெனவே 14 அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் கடுங்காவல் சிறைவாசத்தை அனுபவித்திருப்பதால், அவர்களின் விடுதலையை கேள்வியெழுப்ப முடியாது. அதுமட்டுமல்லாமல், இவ்வழக்கில் தண்டனை, ஆயுள் தண்டனை குறைக்கப்பட்ட போதே, குற்றம் (பில்கிஸ் பானு கும்பல் வல்லுறவு) அவ்வளவு கொடூரமானது இல்லை என்பதை காட்டுகிறது. அரிதான வழக்கு அல்ல என்பதையும் உறுதிப்படுத்துகிறது. அந்த அடிப்படையில் நன்னடத்தை அடிப்படையில் தண்டனைக் குறைப்பு கோட்பாட்டை அமல்படுத்தவும் போதுமான காரணி உள்ளது” என்றார். “ஒவ்வொரு குற்றவாளியும் தூக்கிலிடப்பட வேண்டும், அல்லது நிரந்தரமாக தண்டிக்கப்பட வேண்டும் என்று சட்டம் கூறவில்லை. மிகக் கடுமையான குற்றவாளிகள் கூட தங்களைச் சீர்திருத்துவதற்கான வாய்ப்பைப் பற்றி சட்டம் பேசுகிறது” என்றும் ராஜூ கூறிக்கொண்டார்.

சிறைகள் நிரம்பி வழிகிறதே ஏன்?

அப்போது குறுக்கிட்ட நீதிபதி பி.வி. நாகரத்னா, “சிறையிலுள்ள பிற சிறைவாசிகளுக்கு இந்த சட்டம் எவ்வளவு தூரம் பயன்படுத்தப்படுகிறது?” என்று கேள்வி எழுப்பினார். மேலும், “நமது சிறைகள் ஏன் நிரம்பி வழிகின்றன? குறிப்பாக விசாரணைக் கைதிகள் அதிகமானோர் சிறையில் இருக்கிறார்களே ஏன்? இவர்களுக்கெல்லாம் நிவாரணம் இல்லையா..? ஏன் நிவாரணக் கொள்கை தேர்ந்தெடுக்கப்பட்ட முறையில் பயன்படுத்தப்படுகிறது?” என்று சரமாரியான கேள்விகளை எழுப்பினார்.  “இந்தக் கேள்விக்கு பொதுவான பதிலை வழங்குவது கடினம்” என்று கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ராஜூவும் ஒப்புக்கொண்டார்.  இதையடுத்து, “நீங்கள் மாநில வாரியாக புள்ளிவிவ ரங்களை வைத்திருக்க வேண்டும். ஒரு சில கைதிகளுக்கு மட்டுமல்லாமல், ஒவ்வொரு கைதிக்கும் சீர்திருத்த வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்” என்று நீதிபதி பி.வி. நாகரத்னா கூறினார். மூத்த வழக்கறிஞர் சித்தார்த் லுத்ரா, “ஒரு குற்றவாளி 14 ஆண்டுகள் நிறைவடையும் தருணத்தில், அவர்கள் முன்கூட்டியே விடுதலை செய்ய தங்களின் நன்னடத்தையை நிரூபிக்க வேண்டும். ஒவ்வொரு மாநிலத்திலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் அவர்களுக்கு தனித்தனி தகுதி வரையறை உள்ளது” என்றார். 

அரசின் கருணை பிற சிறைவாசிகளுக்கு இல்லையா?

“அப்படியானால், குற்றவாளிகள் 14 ஆண்டுகளை நிறைவுசெய்த வழக்குகளில், அவர்களை முன்கூட்டியே விடுதலை செய்யும் நிவாரணக் கொள்கை எவ்வளவு தூரம் செயல்படுத்தப்படுகிறது? அனைத்து நிகழ்வுகளிலும், அவர்களின் தகுதிக்கு உட்பட்டு, நிவாரணக் கொள்கை செயல்படுத்தப்படுகிறதா?” என்று நீதிபதி நாகரத்னா மீண்டும் கேட்டார்.  மேலும், “இங்கு (பில்கிஸ் பானு வழக்கில்) மிக உயர்ந்த தூக்குத் தண்டனைக்குப் பிறகுதான், ஆயுள் தண்டனை வழங்கப்படுகிறது. ஒருமுறை தண்டனைக் குறைப்பு வழங்கப்பட்டு விட்டது. அவ்வாறிருக்கையில் தண்டனைக் குறைப்பு தொடர் நிகழ்வாக இருக்க முடியாது” என்றார். அதற்கு விளக்கம் அளித்த சொலிசிட்டர் ஜெனரல் ராஜூ, “முதல் தண்டனையில் விடுவிக்கப்பட்ட பிறகு, இரண்டாவது தண்டனை தொடரும் என்று நீதிமன்றம் கூறியிருக்கலாம். ஆனால், இந்த வழக்கில் நீதிமன்றம் அப்படி எதுவும் கூறவில்லை” என்றார். “அப்படியானால், நீதிமன்றம் எந்தக் காலக்கெடுவும் குறிப்பிடப்படாததால், அவர்கள் என்ன மாதிரியான குற்றங்களில் தண்டனை பெற்றிருந்தாலும் 14 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியே வர அவர்களுக்கு உரிமை உண்டு என்று நீங்கள் சொல்கிறீர்களா?” என்று நீதிபதி நாகரத்னா கேட்டார். அதற்கு, “அவ்வாறு கருத்தில் கொள்ள உரிமையுண்டு” என்ற சொலிசிட்டர் ஜெனரல் ராஜூ, “இதில், அரசு தன் விருப்புரிமையை சரியாகப் பயன்படுத்துகிறதா என்பதுதான் பிரச்சனை” என்றார். “அப்படிப் பார்க்கும்போது, குற்றவாளி களின் மன்னிப்புக் கடிதங்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு, உச்ச நீதிமன்றத்தால் (அஜய் ரஸ்தோகி அமர்வால்) அறிவுறுத்தப்பட்ட பின்னர், சட்டத்தின் கீழ் உள்ள அனைத்து நடைமுறைகளையும் குஜராத் அரசு பின்பற்றியுள்ளது. குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 432 இன் துணைப் பிரிவு (2) இன் கீழ் உத்தரவிடப்பட்டுள்ளபடி நீதித்துறையின் கருத்தையும் பெற்றுள்ளது” என்றார். 

கோத்ரா நீதிமன்றத்திடம் கருத்து கேட்டது ஏன்?

அதாவது, 11 குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்வதற்கு, கோத்ரா மாவட்ட நீதிபதியின் நேர்மறையான பரிந்துரையையும் பெற்றுள்ளது என்றார். அப்போது, இந்த வழக்கையே விசாரிக்காத கோத்ரா மாவட்ட நீதிமன்றத்தின் கருத்தைப் பெற்றது ஏன்? என்று நீதிபதி நாகரத்னா கேள்வி எழுப்ப, அதற்கு, “குற்றம் நடக்கும் இடத்திலேயே நீதிபதி இருக்கிறார். ஆனால் இங்கு (பில்கிஸ் பானு வழக்கில்) விசாரணை (மகாராஷ்டிரா மாநிலத்திற்கு) மாற்றப்பட்டது. மகாராஷ்டிர நீதிபதிக்கு குஜராத்தில் என்ன நடக்கிறது என்பது குறித்த எந்த தகவலும் இருக்காது. மகாராஷ்டிராவில் உள்ள ஒருவரைக் காட்டிலும், கோத்ராவில் உள்ள ஒருவர் அல்லது தாஹோத்தில் உள்ள நீதிபதி இதை மேற்பார்வையிட சிறந்த நபராக இருப்பார்” என்றார். “சுதந்திரமான மற்றும் நியாயமான விசாரணையை உறுதி செய்வதற்காக, வழக்கு நடவடிக்கைகள் குஜராத் மாநிலத்திற்கு வெளியே மாற்றப்பட்டது” என்பதையும், “அப்போது இந்த அதிகார வரம்புக்கு முன்னுரிமை அளிக்கப்படவில்லை” என்பதையும் சுட்டிக்காட்டிய நீதிபதி  நாகரத்னா, “வழக்கின் பின்னணியை மனதில் கொள்ளுங் கள். விசாரணை அதிகார வரம்பிற்கு வெளியே வேறு மாநிலத்திற்கு அனுப்பப்பட்டது” என்றும் நினைவுபடுத்தினார்.

புறந்தள்ளப்பட்ட சிபிஐ எதிர்ப்பு

இந்த வழக்கை நடத்திய சிபிஐ-யிடம் கலந்து ஆலோசிக்கப்பட்டதா என்ற கேள்வியையும் நீதிபதிகள் எழுப்பினர். அதற்கு, “வழக்கின் தன்மை காரணமாக, இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட மத்திய புலனாய்வுப் பிரிவைக் கலந்தாலோசிக்க வேண்டிய அவசியமில்லை” என்று கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ராஜூ சமாளித்தார். அப்போது, “சிபிஐ ஆலோசனை தேவையா என்பதை விவாதிப்பதும் ஒரு பயிற்சி சார்ந்ததுதான்.. அந்த வகையில், சிபிஐ தனது ஆலோசனையில் என்ன கூறியது?” என்று நீதிபதி பி.வி. நாகரத்னா கேட்டார். அதற்கு “மத்திய புலனாய்வுப் பிரிவு எதிர்மறையான கருத்தைத்தான் தெரிவித்தது” என்று சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்தார். இவ்வாறு விவாதங்கள் நடைபெற்றன. இந்த வழக்கில் அடுத்தகட்ட விசாரணை ஆகஸ்ட் 24-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.