திருச்சி மாவட்டத்தில் களப்பணி யாற்றிய பல தோழர்களை இத்தொடரில் ஏற்கெனவே சந்தித்திருக் கிறோம். இப்போது நாம் தோழர் எஸ்.லூர்துசாமி, தோழர் எம்.கே.தங்கராஜ் இருவரையும் சந்திக்கவிருக்கிறோம். தோழர் லூர்துசாமி 1943ஆம் ஆண்டு திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம் காட்டூர் கிராமத்தில் பட்டியலின சமூகத்தில் பிறந்தவர். தாய், தந்தை இருவரும் விவசாயத் தொழிலாளர்கள். கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்தி வந்தனர். லூர்துசாமி காட்டூர் கிராமத்தில் ஆரம்ப கல்வி முடித்து லால்குடி நகரில் உயர்நிலைப் பள்ளிக் கல்வி பயின்றார். பள்ளி இறுதி ஆண்டின்போது தந்தை இறந்துவிட்டார். இதனால் குடும்பத்தை பாதுகாக்க இவரும் கூலி வேலைக்குச் சென்றார். அப்போது காட்டூர் கிராமத்தில் கோத்தாரி சர்க்கரை ஆலை கட்டுமானப் பணி துவங்கியிருந்தது. அந்த நிறுவனத்தில் லூர்துசாமி ஒப்பந்தத் தொழிலாளியாக வேலையில் சேர்ந்தார். 1962ஆம் ஆண்டு கோத்தாரி ஆலையில் சர்க்கரை உற்பத்தி தொடங்கியது. அதையொட்டி லூர்துசாமி நிரந்தரத் தொழிலாளியாக ஆக்கப்பட்டார். மாதச் சம்பளம் 76 ரூபாய். 380 தொழிலாளர்கள் வேலை செய்தார்கள். தொடக்கத்தில் திமுக தலைமையிலான தொழிலாளர் முன்னேற்ற சங்கம் இயங்கி வந்தது. அதில் லூர்துசாமியும் மற்ற தொழிலாளர்களும் உறுப்பினர்களானார்கள். ஒரு கட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளு மன்ற உறுப்பினராக இருந்த தோழர் ஆர். உமாநாத் சங்கத்தின் தலைவராகவும், தோழர் பி. ராமச்சந்திரன் செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.
வேலைநிறுத்தமும், வேலைநீக்கமும்
1968ஆம் ஆண்டு தொழிலாளர்களுக்குரிய போனஸ் கோரிக்கை ஏற்கப்படாத நிலையில் ஆலையில் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. அப்போராட்டத்தில் லூர்துசாமி முன்னணிப் பாத்திரம் வகித்தார். இவரையும் பாலகிருஷ்ணன், ராஜகோபால் ஆகிய இரு தொழிலாளர்களையும் நிர்வாகம் வேலைநீக்கம் செய்தது. தொழிலாளர் நீதிமன்றத்தில் இவர்களுக்காக வழக்கறிஞர் என்.ஜி.ஆர்.பிரசாத் வழக்குத் தொடுத்தார். மதுரையில் நடைபெற்ற வழக்கு விசாரணையில் அன்று வழக்கறிஞராக இருந்த கே.சந்துரு (சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு நீதிபதி) வாதாடினார். நான்காண்டு சட்டப்போராட்டத்தில் வேலைநீக்க ஆணை விலக்கப்பட்டு லூர்துசாமி உள்ளிட்ட மூன்று பேருக்கும் மறுபடி வேலை கிடைத்தது. “வேலைநீக்கம் செய்யப்பட்டிருந்த நான்கு ஆண்டுகளில் குடும்பத்தைப் பாதுகாக்க என்ன செய்தீர்கள்,” என்று கேட்டபோது, ஓராண்டுக்கு சங்கம் நிதி வசூல் செய்து உதவியதாக கூறினார். மூன்று பேருமே வேறு சில வேலைகளுக்குச் சென்று குடும்பத்தைப் பாதுகாத்ததாகவும் லூர்துசாமி குறிப்பிட்டார். வேலைக்கு திரும்பிய தோழர் லூர்துசாமி சங்கத்தின் செயலாளராக 1974ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டார். 2003ஆம் ஆண்டு பணி ஓய்வு பெறும்வரை அப்பொறுப்பில் செயல்பட்டார். சிஐடியு மாவட்டக்குழு உறுப்பினராகவும், சர்க்கரை ஆலைத் தொழிலாளர்கள் சம்மேளனத்தின் மாநில நிர்வாகியாகவும் தேர்வு செய்யப்பட்டு செயல்பட்டிருக்கிறார். 1984ல் தோழர் டி.கே. ரங்கராஜன் காட்டூர் சர்க்கரை தொழிலாளர் சங்கத்தின் தலைவராகப் பொறுப்பேற்றார். சங்கத்தின் செயலாளர் என்ற முறையிலும் தொழிலாளி வர்க்க உணர்வோடும், இக்கால கட்டத்தில் நடை பெற்ற எல்லாப் போராட்டங்களிலும் முக்கியப் பங்காற்றினார் தோழர் லூர்துசாமி. அந்தப் போராட்டங் கள் இவரை உறுதிமிக்க தோழராக வளர்த்தெடுத்தன.
கிளையில் தீக்கதிர் வாங்கி...
காட்டூர் கிராமத்தில் அப்பாதுரை, மணக்கால் ஜெயராமன் போன்ற தோழர்கள் 1971ஆம் ஆண்டு கட்சி கிளை துவங்கினார்கள். தேநீர்க் கடை நடத்தி வந்த சர்க்கரை ஆலைத் தொழிலாளி நாராயணன் ‘தீக்கதிர்’ வார இதழை விநியோகம் செய்து வந்தார். மேலும், கட்சியின் பிரசுரங்களையும் அவர் விற்பனை செய்து வந்தார். ‘தீக்கதிர்’ மற்றும் கட்சி வெளியீடுகளைப் படித்து அரசியல் உணர்வு பெற்ற தோழர் லூர்துசாமி கிராமத்தின் கட்சிக் கிளையில் உறுப்பினரானார். கட்சிக் கொடி ஏற்றும்போது அன்றைய ஆளுங்கட்சியினர் கொடிக்கம்பத்தை வெட்டி விட்டனர். உறுதியாக நின்று மீண்டும் கொடியேற்றியதோடு, மக்களைத் திரட்டி, கட்சியின் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டமும் நடத்தப்பட்டது. அந்தக் கூட்டத்தில் சிறப்புரையாற்றினார் தோழர் உமாநாத். கிராமத்தில் கட்சிக் கிளை தொடங்கிய பிறகு ஆலைத் தொழிலாளர்களிடையேயும் கட்சிக் கிளை ஒன்று தொடங்கப்பட்டது. எழுச்சிகரமான அந்த நாட்களைப் பற்றி லூர்துசாமி பெருமிதத்தோடு குறிப்பிட்டார். 1975ஆம் ஆண்டு விவசாயத் தொழிலாளர்களுக்கான கூலி உயர்வு கோரிக்கை மாநாடு லால்குடியில் நடைபெற்றது. தோழர் கோ. வீரய்யன் அம்மாநாட்டில் கலந்துகொண்டார். சர்க்கரை ஆலையிலிருந்து கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்டு 25 தொழிலாளர்கள் அம்மாநாட்டில் பங்கேற்றார்கள். விவசாயத் தொழிலாளர் சங்க வட்ட அமைப்புக் குழுவும் ஏற்படுத்தப்பட்டது.
40 கிராமங்களில் போராட்டம்
1977ஆம் ஆண்டு லால்குடி வட்டத்தில் 40 கிராமங்களில் விவசாயத் தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு கோரி வலுவான போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தை ஒடுக்க ஒருபுறம் நிலச்சுவான்தார்களால் ஏவிவிடப்பட்ட அடியாட்கள் தாக்கினார்கள். இன்னொரு புறம் காவல்துறையின் அடக்குமுறை கட்டவிழ்த்துவிடப்பட்டது. இரண்டையும் துணிவோடு எதிர்கொண்ட போராட்டம் பரவலாக நடைபெற்றது. அன்பில், வழுதியூர், வெள்ளனூர் கிராமங்களில் விவசாயத் தொழிலாளர்களின் போராட்டத்தை ஒடுக்குவதற்காக அன்றைய அரசு துப்பாக்கிச் சூடு நடத்த ஆணையிட்டது. நெற்குப்பை கிராமத்தில் 340 தலித் விவசாயத் தொழிலாளர்களின் வீடுகளை நிலச்சுவான்தார்களின் அடியாட்கள் தீக்கிரையாக்கினர். இத்தகைய அடக்குமுறைகளையெல்லாம் மீறி விவசாயத் தொழிலாளர்களின் வீரமிக்க போராட்டம் தொடர்ந்தது. கூலி உயர்வுக்காக மட்டுமல்ல, பல கிராமங்களில் நிலவிய தீண்டாமைக் கொடுமையை எதிர்த்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், விவசாயத் தொழிலாளர்கள் சங்கமும் போராடின. இந்தப் போராட்டங்களையும் தோழர்களின் வீரத்தையும் தியாகத்தையும் கண்ட பல தொழிலாளர்களும் மக்களும் இயக்கத்தின் பால் ஈர்க்கப்பட்டார்கள். விவசாயத் தொழிலாளர் போராட்டத்தில் மூத்த தோழர் சுயம்பிரகாசம், அண்ணாதுரை, எஸ்.திருநாவுக்கரசு (மாநில, அகில இந்திய விதொச முன்னாள் பொதுச் செயலாளர் கே.டி.சந்திரன் (கட்சியின் தற்போதைய திருச்சி புறநகர் மாவட்ட செயற்குழு உறுப்பினர்), லூர்துசாமி உள்ளிட்டோர் முக்கியப் பங்காற்றி னர். போராட்டத்தின் விளைவாக கூலி உயர்வு ஒப்பந்தம் ஏற்பட்டது. இப்பின்னணியில் பல கிராமங்களில் கட்சிக் கிளைகள் உருவாக்கப்பட்டு லால்குடி வட்டக்குழுவும் அமைக்கப்பட்டது. வட்டக்குழுவின் முதல் செயலாளராக லூர்துசாமி தேர்வு செய்யப்பட்டார். லால்குடி வட்டக்குழு 2022ல் லால்குடி, புள்ளம் பாடி என இரண்டு ஒன்றியக் குழுக்களாக பிரிக்கப்பட்டது.
ஊராட்சி மன்றத் தலைவராக...
தோழர் லூர்துசாமி 10 ஆண்டுகள் வட்டக்குழு வின் செயலாளராகவும், 2 ஆண்டுகள் ஒன்றிய செய லாளராகவும் செயல்பட்டிருக்கிறார். கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினராக 1979ல் தேர்வு செய்யப்பட்ட தோழர் லூர்துசாமி 2018 ஆம் ஆண்டு வரை அப்பொறுப்பிலிருந்து செயல்பட்டார். 5 ஆண்டுகள் காட்டூர் ஊராட்சி மன்றத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட தோழர் லூர்துசாமி நேர்மைக்கு ஓர் அடையாளமாகச் செயல்பட்டதை அப்பகுதி மக்கள் நினைவு கூர்கிறார்கள். லூர்துசாமி - சரோஜா இருவரது திருமணம் 1966ஆம் ஆண்டு நடைபெற்றது. தோழர் சரோஜா கட்சி உறுப்பினரானதோடு, காட்டூரிலும் சுற்றுவட்டார கிராமங்களிலும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கக் கிளைகளை துவக்கினார். இந்த அமைப்பின் மாவட்டக்குழு உறுப்பினராக பல ஆண்டுகள் செயல்பட்டிருக்கிறார். லூர்துசாமி - சரோஜா இணை யருக்கு இரண்டு மகன்கள், மூன்று மகள்கள். லூர்து சாமி அவரது இணையர் சரோஜா, மகன் ஜோசப் நிக்சன் ஆகிய மூவரும் கட்சி உறுப்பினர்களாக உள்ளனர். கோத்தாரி ஆலையில் பணியாற்றும் தோழர் ஜோசப் நிக்சன் கட்சியின் கிளை செயலாளராக செயல்பட்டு வருகிறார். தோழர் லூர்துசாமியின் குடும்பம் கட்சிக் குடும்பமாகும்.
தோழர் எம்.கே.தங்கராஜ்
1947 ஆம் ஆண்டு மால்வாய் கிராமத்தில் பட்டிய லின சமூகத்தில் விவசாயத் தொழிலாளர் குடும்பத்தில் பிறந்தவர் தோழர் எம்.கே. தங்கராஜ். பள்ளிப் படிப்பை முடித்து ஐடிஐ பயிற்சியும் பெற்றவர். 1968 ஆம் ஆண்டு தங்கராஜ், கோத்தாரி சர்க்கரை ஆலையில் வேலைக்குச் சேர்ந்தார். சர்க்கரை ஆலை தொழிலாளர் களின் போராட்டங்களில் கலந்துகொண்டு அரசியல் உணர்வுபெற்று 1970 ஆம் ஆண்டு காட்டூர் கிராம கட்சிக் கிளை உறுப்பினரானார். ஆலைத் தொழிலாளி என்ற அடிப்படையில் சங்கம் நடத்துகின்ற இயக்கங்களில் பங்கேற்றதோடு காட்டூரிலும் சுற்றுவட்டார கிராமங்களிலும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கிளைகளை உருவாக்கினார். இதைத் தொடர்ந்து வாலிபர் சங்கத்தின் மாவட்டத் தலைவராக இரண்டு முறை தேர்வு செய்யப்பட்டு செயல்பட்டிருக் கிறார். 1980 ஆம் ஆண்டு கட்சியின் லால்குடி வட்டக்குழு உருவாக்கப்பட்டபோது அக்குழுவின் உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். இரண்டு முறை வட்டக்குழுவின் செயலாளராகவும் பணியாற்றியிருக்கிறார். கட்சி யின் மாவட்டக்குழு உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டு ஆறு ஆண்டு காலம் அப்பொறுப்பில் செயல்பட்டிருக் கிறார். சர்க்கரை ஆலைத் தொழிலாளர் சங்கத்தின் நிர்வாக உறுப்பினராக செயல்பட்ட இவர் 2008 ஆம் ஆண்டு வேலையிலிருந்து ஓய்வு பெற்றார்.
நிலச்சுவான்தார்களின் அட்டூழியம்
1980ல் தொடங்கி தொடர்ந்து 15 ஆண்டுகள் லால்குடி வட்டத்தில் விவசாயத் தொழிலாளர்களுடைய கூலி உயர்வுக்காக வலுவான போராட்டங்கள் நடந்ததை தோழர் தங்கராஜ் குறிப்பிட்டார். 1992 ஆம் ஆண்டு கூலி உயர்வுக்கான போராட்டம் நடந்துகொண்டிருந்தபோது போராட்டத்திற்குத் தலைமை தாங்கிய தலைவர்களில் ஒருவரான தோழர் திருநாவுக்கரசை வைக்கோல்போரில் தள்ளிவிட்ட நிலச்சுவான்தார்களின் அடியாட்கள் அவரை உயிரோடு எரித்துவிட முயன்றனர். லூர்துசாமி உள்ளிட்ட தோழர்கள் வலிமையாகப் போராடி அதைத் தடுத்து திருநாவுக்கரசைக் காப்பாற்றிய அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார் தோழர் தங்கராஜ். இந்தப் போராட்டத்தில் சந்திரன் உள்ளிட்ட பல தோழர்கள் கடுமை யாகத் தாக்கப்பட்டார்கள் எனவும் குறிப்பிட்டார். தோழர் தங்கராஜ் காட்டூர் கிளை கட்சி உறுப்பினராக செயல்படுவதோடு தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் திருச்சி புறநகர் மாவட்டத் தலைவராகவும் இயங்கி வருகிறார். போராட்டக் களத்திலிருந்து அரசியல் உணர்வு பெற்ற வர்களாக இயக்க ஈடுபாட்டை வளர்த்துக்கொண்டவர்கள் தோழர்கள் லூர்துசாமி, தங்கராஜ் இருவரும். தற்போது 80 வயதாகும் தோழர் லூர்துசாமி, 76 வயதாகும் தோழர் தங்கராஜ் இருவரும் இளைய தலைமுறைகளுக்கு வழிகாட்டிகளாகக் கடந்த அரை நூற்றாண்டுக்கு மேலாக ஆற்றி வரும் இயக்கப் பணி பாராட்டுக்குரியது, பின்பற்றத்தக்கது.