articles

img

ஊடக சுதந்திரம் காக்க அரசியல் தலைவர்கள் முழக்கம்

ஊடகங்கள் மீதான பாஜக அரசின் அடாவடித்தனத்தை கண்டித்து, ‘பத்திரிகை சுதந்திரத்தை பாதுகாப்போம்’ என்ற முழக்கத்துடன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சென்னை வள்ளலார் நகர் பேருந்து நிலையம் (மிண்ட்) அருகே புதனன்று (அக். 11) மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்:

- தொகுப்பு: எஸ்.ராமு

மோடி ஆட்சியின் இறுதிக்காலம் - கி. வீரமணி

திராவிடர் கழகத் தலைவர் ‘ஆசிரியர்’ கி. வீரமணி பேசுகையில், இந்தியா கூட்டணி அமைக்கப்பட்டதில் இருந்தே, மோடி அரசு அடுக்கடுக்கான தோல்வியை சந்தித்து வருகிறது. அந்த தோல்வியை எதிர்கொள்ள முடியாமல், அதற்கு பதில் கூற முடியாததால், உண்மையை மக்களிடம் கொண்டு செல்பவர்கள் மீது தாக்குதல் தொடுக்கின்றனர். எந்த ஒரு அரசோ அல்லது ஆட்சியாளர்களோ எப்போது பத்திரிகையாளர்கள் மீது குறி வைத்து தாக்குதல் தொடுக்கிறார்களோ அன்றைக்கே அவர்களுக்கு முடிவுரை எழுதப்படுகிறது என்பதுதான் வரலாறு. ஒரு ஆட்சி தனது இறுதிக்காலத்தில் இருக்கும் போது பத்திரிகையாளர் மீதுதான் கை வைப்பார்கள். ஊடகத்தின் குரல் வளையை நெரிப்பார்கள். அதைத்தான் இன்றைய மோடி அரசு செய்து கொண்டிருக்கிறது என்றார்.

உயிரைக்கொடுத்து செய்திகளைத் தந்தவர்கள் பத்திரிகையாளர்கள் - மு. வீரபாண்டியன்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச்செயலாளர் மு. வீரபாண்டியன் பேசுகையில், “‘நியூக் கிளிக்’ ஊடகத்தின் மீதான தாக்குதல் என்பது கருத்து சுதந்திரத்தின், ஜனநாயகத்தின் மீது தொடுக்கப்பட்ட அப்பட்டமான தாக்குதல். உண்மையை உலகுக்கு தெரிவிப்பவர்கள் பத்திரிகையாளர்கள். இரண்டாம் உலகப் போரின் போது ஆயிரக்கணக்கான பத்திரிகையாளர்கள் தங்கள் உயிரைக் கொடுத்துதான் செய்திகளை உலகுக்கு அளித்தார்கள். இல்லையென்றால் யூதர்களின் துயர் உலகிற்கு தெரியாமல் போயிருக்கும். புலிட்சர் என்ற உயரிய விருதை பத்திரிகையாளர்கள்தான் பெற்றுள்ளனர். ஜனநாயகத்தின் தூண்கள் மட்டுமல்ல பத்திரிகையாளர்கள், அவர்கள் நாட்டின் விடுதலைக்கான தொடர்பாளர்கள். இஸ்ரேலின் அநீதி உலகிற்கு தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக காசா பகுதியில் உள்ள ஊடகத்தின் மீதுதான் இஸ்ரேல் முதல் தாக்குதலை தொடுத்திருக்கிறது. அதே பாணியில்தான் மோடி அரசும் பத்திரிகையாளர்களை குறிவைத்து தாக்குதல் தொடுக்கிறது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு அளிக்கும் மரண அடிதான் ஜனநாயகத்தை பாதுகாக்கும். அந்த பணியை இந்தியா கூட்டணி முன்னெடுத்துள்ளது. மக்கள் இதற்கு முழு ஆதரவு அளிக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.

‘பிஎம் கேர்ஸ்’ நிதி முறைகேடுகளுக்காக பிரதமர் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? - கே. பாலகிருஷ்ணன்

ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்து உரையாற்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், “இங்கே நடப்பது, ‘நியூஸ் கிளிக்’ ஊடகம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்காக மட்டுமல்ல, பிபிசி அலுவலகங்களில் சோதனை நடத்தியது, தொலைக்காட்சி ஆசிரியர்களிடம் இப்படித்தான் செய்தி போட வேண்டும்; குறிப்பிட்டவர்களைத்தான் விவாதத்திற்கு அழைக்க வேண்டும் என்று மிரட்டுவது, என ஏதாவது ஒருவகையில் பத்திரிகை, ஊடகங்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுக் கொண்டே இருக்கும் தாக்குதல்கள் அனைத்திற்கும் எதிரான போராட்டம்தான் இது!” என்றார். தொடர்ந்து அவர் பேசுகையில், “சீனாவுக்காக ‘நியூஸ் கிளிக்’ உளவு வேலை பார்க்கிறது, சீன ஆதரவு செய்திகளை பரப்புகிறது என்று ஒன்றிய ஆட்சியாளர்கள் கூறுகின்றனர். ஆனால் அந்த ஊடக நிறுவனத்தில் பலரும் மூலதனம் செய்துள்ளனர். அதில் அமெரிக்க குடியுரிமை பெற்ற ராய் சிங்கம் என்ற தொழில் அதிபரும் முதலீடு செய்துள்ளார். இவர் சீனா உள்ளிட்ட பல நாடுகளில் தொழில் நடத்தி வருகிறார். தானொரு இடதுசாரி சிந்தனையாளர் என்ற அடிப்படையில், இடதுசாரிக் கருத்துக்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் ‘நியூஸ் கிளிக்’ நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார். ஆனால், அமெரிக்க குடியுரிமை பெற்ற ராய் சிங்கத்தை, அந்த உண்மைக்கு மாறாக ‘சீனாவில் இருக்கும் ராய் சிங்கம்’ என்று திரித்து, அவர் ‘நியூஸ் கிளிக்’ ஊடகத்தில் முதலீடு செய்துள்ளார் என்று மோடி அரசு கூறுகிறது.  இந்த அடிப்படையில் பார்த்தால், பிரதமர் மோடி மீது தான் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ‘பிஎம் கேர்’ நிதியம் என்று கூறப்படுகிறதே அது என்ன ஒன்றிய அரசு நிறுவனமா? ஆனால், பிரதமர் அதற்கு தலைவராக உள்ளார். 4 ஒன்றிய அமைச்சர்கள் நிர்வாகிகளாக உள்ளனர். எந்தவிதக் கட்டுப்பாடும் இன்றி அரசுக்கு தொடர்பின்றி உலகம் முழுவதிலும் இருந்து, ‘பிஎம் கேர்ஸ்’ நிதியத்திற்கு நிதி திரட்டப்படுகிறது. இதை தணிக்கை கூட செய்வது கிடையாது. சீனாவில் உள்ள பல நிறுவனங்கள், ‘பிஎம் கேர்ஸ்’ நிதியத்திற்கு நிதி அளித்துள்ளனவே, அதற்காக ‘பிஎம் கேர்ஸ்’ தலைவர் மோடி மீது, நிர்வாகிகளாக இருக்கும் ஒன்றிய அமைச்சர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? பாஜக-வினர் பொய்யை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை நடத்திக் கொண்டிருக்கின்றனர். பொய்யான தகவலைப் பரப்பி பத்திரிகை சுதந்திரத்தை பறிக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் நோக்கமாக உள்ளது. பத்திரிகையில் விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்து எழுதாமல், சிஏஜி ஊழல் குறித்து எழுதாமல், அரசின் தவறுகளை சுட்டிக்காட்டாமல், மோடி என்ன சாப்பிட்டார், அமித்ஷா என்ன உடை அணிந்தார் என்றா எழுதிக் கொண்டிருக்க முடியும்? 

ஜனநாயகத்தின் உயிர் மூச்சு

ஊடகம் என்பது இந்த நாட்டின் ஜனநாயகத்தின் உயிர் மூச்சு. ஊடகம் இல்லையென்றால் பல உண்மைகள் வெளிவராமல் போய் விடும். உலகம் முழுவதும் நடைபெறும் செய்திகளை நம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துவது ஊடகங்கள்தான். எனவேதான், அதற்கு நெருக்கடி கொடுக்கிறார்கள். உலகில் யாரெல்லாம் சர்வாதிகாரத்தை நிலை நாட்ட வேண்டும் என்று நினைக்கிறார்களோ அவர்களது முதல் தாக்குதல் பத்திரிகை மற்றும் ஊடகங்கள் மீதுதான். அதைத்தான் மோடி அரசு செய்து கொண்டிருக்கிறது. இதற்கு எதிராக பத்திரிகையாளர்கள் நாடு முழுவதும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். 40-க்கும் மேற்பட்ட சமூக சிந்தனையாளர்கள் உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளனர். உச்சநீதிமன்றம் தலையிட வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார்கள். மதவெறி பயங்கரவாதிகளை உடன் வைத்திருக்கும் மோடி, பத்திரிகையாளர்களை பயங்கரவாதி என்று கூறுவது என்ன நியாயம்?  ஆட்சியைக் குறித்து, ஆட்சியாளர்கள் குறித்து, அரசியல் கட்சிகள் குறித்து விமர்சிக்கும் உரிமை பத்திரிகைகளுக்கு, செய்தியாளர்களுக்கு உண்டு. அந்த உரிமை பாதுகாக்கப்பட வேண்டும். அதற்கான போராட்டங்களை ஜனநாயக சக்திகளை ஒன்றிணைத்து தொடர்ந்து முன்னெடுப்போம்” என்று கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

பத்திரிகை இல்லாமல் ஜனநாயகம் நிலைக்காது! -  டி.கே.எஸ். இளங்கோவன்

திமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவன் பேசுகையில், மன்னராட்சி முறைக்கும் மக்களாட்சி முறைக்கும் வித்தியாசம் உண்டு. ஏனென்றால் மன்னரை மாற்றும் அதிகாரம் மக்களுக்கு இல்லை. ஆனால், 5 ஆண்டுக்கு ஒருமுறை ஆட்சியை மாற்றும் அதிகாரம் மக்களுக்கு உள்ளது. மன்னர் ஆட்சிக் காலத்தில் மக்கள் மன்னருக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும். அதுபோலத்தான் பாஜக அரசு ஒரு மன்னரை போல் மக்களை அடக்கியாள நினைக்கிறது. அரசின் குறை நிறைகளை சுட்டிக் காட்டுவதுதான் ஊடகத்தின் பணி. அதனால்தான் அதை ஜனநாயகத்தின் 4-ஆவது தூண் என்றார்கள். ஆனால் நீங்கள் 3 தூண்களில் மட்டும் நின்று விடலாம் என நினைத்தால் ஜனநாயகம் சரிந்து போய்விடும் என்பதை மறந்து விடாதீர்கள். 7.5 லட்சம் கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றதாக சிஏஜி அறிக்கை கூறுகிறது. அதற்கு விளக்கம் அளிக்க முடியாமல் சிஏஜி அலுவலகத்தில் இருந்த 3 அதிகாரிகளை மாற்றிவிட்டார்கள். இதுதான் இன்றைய நாட்டின் நிலைமை. இவர்களுக்கு ஜனநாயகத்தின் மீதோ, அரசியல் அமைப்பு சட்டத்தின் மீதோ நம்பிக்கை கிடையாது. அதனால்தான் இப்படிப்பட்ட தாக்குதலை தொடுக்கிறார்கள்” என்று கூறினார்.

போராட்டங்களை ஆதரித்தாலே உபா சட்டம் பாயுமா? - பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா பேசுகையில், “அரசு பயங்கரவாதத்தின் ஒரு நடவடிக்கைதான் ‘நியூஸ் கிளிக்’ செய்தி நிறுவனத்தின் மீதான தாக்குதல். ஆசிரியர்கள் மட்டுமல்லாது அந்த நிறுவனத்தில் பணியாற்றும் ஏராளமான செய்தியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆகியோரது வீடுகளிலும் சோதனை நடத்தியிருக்கிறார்கள். உபா சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சீனாவிடம் இருந்து பணம் பெற்றார்கள் என்று கூறினார்கள். ஆனால் முதல் தகவல் அறிக்கையில், சிஏஏ சட்டத்திற்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவாக, தில்லியில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக செய்தி வெளியிட்டார்கள் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது வேடிக்கையான ஒன்றாக இருக்கிறது. போராட்டத்தை ஆதரித்து செய்தி வெளியிட்டால் உபா சட்டம் பாயும் என்றால் நாடு எங்கே சென்று கொண்டிருக்கிறது?” எனக் கேள்வி எழுப்பினார்.