articles

img

இஸ்லாமியர்கள் மீதான திடீர்ப் பாசம் ஆர்எஸ்எஸ்சின் குள்ளநரித் தந்திரமே!

இஸ்லாமியர்களைப் பொறுத்தமட்டிலும் ஆர்எஸ்எஸ் அமைப்பினருடனான உறவு என்பது, இடர் நிறைந்ததாகவும், வலி மிகுந்ததாகவுமே  எப்போதும் இருந்து வந்துள்ளது. வரலாற்றின் வழியெங்கிலும் முட்கள் பல நிரம்பியதாகவே அது காட்சி தருகிறது. இதற்கு மத்தியில் தான், பல பத்தாண்டுகளில் முதன் முறையாக, திடீரென இஸ்லாமியர்கள் மீது ஒரு கரிசனப் பார்வையை தற்போது ஆர்எஸ்எஸ் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது. சர்சங்சாலக் என்று அழைக்கப்படுகிற ஆர்எஸ்எஸ்-இன் தலைமைப்பீடத்தில் அமர்ந்திருக்கும் மோகன் பகவத்தின் சமீபத்திய பேச்சுக்களிலும் முஸ்லிம்கள் மீதான ஒரு மென்மையான அணுகுமுறை தென்படுகிறது. இது நிஜம் தானா? இஸ்லாமியர்கள் மீது வெறுப்பை உமிழ்கிற தன்னுடைய போக்கை ஆர்எஸ்எஸ் உண்மையிலேயே மாற்றிக் கொண்டுவிட்டதா? என்கிற கேள்விகள் எல்லோர் மனதிலும் இயல்பாகவே எழுகின்றன. இது குறித்த தனது எண்ணங்களை, புது டில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் மேனாள் பேராசிரியர் பிரபாத் பட்நாயக், தி டெலிகிராப் நாளிதழுக்கு அளித்துள்ள நேர்காணலில் பதிவு செய்துள்ளார். அதன் விவரம் பின்வருமாறு:

கேள்வி: அண்மையில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், “நாம் ஒவ்வொரு மசூதியின் சுவர்க் கீறல்களுக்குள்ளும் சிவலிங்கங்களைத் தேடிக்கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை” என்று கூறியிருக்கிறார். மேலும், அகில இந்திய இமாம் அமைப்பின் தலைமைப் பொறுப்பில் உள்ள உமர் அகமது இல்யாஸியை, மோகன் பகவத் நேரில் சென்று சந்தித்தது பெரிதாக விளம்பரப்படுத்தப்பட்டது. உமர் அகமதுவும் மிகுந்த பூரிப்புடன் ஆர்எஸ்எஸ் தலைவரை “ராஷ்டிரபிதா (தேசத்தின் தந்தை) “ என்று வர்ணித்தார். இவை எதைக் காட்டுகின்றன? ஆர்எஸ்எஸ் அமைப்பு, இந்தியா முழுவதற்குமான நிலவரத்திற்கிணங்க, முஸ்லிம்களை ஏற்றுக் கொண்டு, அவர்களுக்கும்  நாட்டின் நடவடிக்கைகளில் இடமளிக்கத் தயாராகிவிட்டதாக நாம் எடுத்துக் கொள்ள முடியுமா?

பதில்: ஆர்எஸ்எஸ்-இன் இத்தகைய குறிப்பிட்ட சில நடவடிக்கைகளைத் தனியாகப் பிரித்துப் பார்க்காமல், ஒட்டுமொத்தமாக நிலவும் விரிந்த தளத்திலிருந்து  இதை நோக்க வேண்டும். ஆர்எஸ்எஸ் அமைப்பு, எப்போதுமே மாறாத ஒரு நிகழ்ச்சி நிரலைத் தன்னகத்தே கொண்டுள்ளது. இந்திய நாட்டை ஒரு ‘இந்து ராஷ்டிரமாக’ மாற்றிட வேண்டும் என்பது தான் அது. இதன் பொருள், இங்குள்ள பெரும்பான்மை சமூகத்தின் ஆட்சி என்பதல்ல. மாறாக, இந்த நாடானது, ‘ஆர்எஸ்எஸ் அமைப்பினால் வழிநடத்தப்படும்  அரசியல் கட்சியின் (பிஜேபி) முழுமையான சர்வாதிகாரத்திற்கு உட்படுத்தப்பட்டு, இந்துக்களின் பெயரால் இயங்கிட வேண்டும்’ என்பது தான். ‘எதிர்க்கட்சிகளே இல்லாத இந்தியா’  என்றெல்லாம் அவர்கள் பேசுவது இந்தக்  கண்ணோட்டத்திலிருந்து தான். இந்த அடிப்படையில், இஸ்லாமியர்கள் ‘பிறர்’ அல்லது ‘வேறானவர்’ என்றே கருதப்படுவர். இரண்டாம்தரக் குடிமக்களாகத்தான் ‘அவர்கள்’ நடத்தப்படுவர். முஸ்லிம்களை ‘வேறானவர்களாகச்’ சித்தரிப்பது, ஆர்எஸ்எஸ்-இன் நிரந்தரமான குணாம்சம். அது ஒருபுறமிருக்க, ஆர்எஸ்எஸ் தனது இலக்கை நோக்கிச் செல்வதற்கும், நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றுவதற்கும் பலவிதமான சூழ்ச்சிகளையும், தந்திரங்களையும் பின்பற்ற வேண்டியுள்ளது. இன்று நாம் காண்பது, 2024 பொதுத்தேர்தலை மனதிற்கொண்டு ஆர்எஸ்எஸ் செயல்படுத்த முனைகிற ஒரு திட்டமிட்ட காய்நகர்த்தல் நடவடிக்கை. இதைத் தவிர மோகன் பகவத் பேச்சுக்கு வேறு முக்கியத்துவம் இருப்பதாக நான் கருதவில்லை.

சொல்லுக்கும் செயலுக்கும்  தொடர்பில்லை

ஆனால் ஆர்எஸ்எஸ் தலைவர், முஸ்லிம்கள்  பற்றிய தன்னுடைய சமீபத்திய கூற்று மிகுந்த  முக்கியத்துவம் வாய்ந்தது என்று பொதுமக்களும், நடுநிலையாளர்களும் நம்ப வேண்டும் என்று விரும்புகிறார். அவருடைய இப்படிப்பட்ட வார்த்தைகளுக்குப் பெரும் மதிப்பளிப்பதும், அதை நம்பிச் செயல்படுவதும், ஆர்எஸ்எஸ் விரிக்கும் வலைக்குள் மிக எளிதாக சிக்கிக் கொள்வதற்குச் சமம் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ‘மசூதிகளில் சிவலிங்கங்களைத் தேட வேண்டியதில்லை’ என்கிற அவரது பேச்சையே எடுத்துக் கொள்வோம். இவ்வாறு சொல்லும் மோகன் பகவத்தும், ஆர்எஸ்எஸ் அமைப்பும், ஞானவாபி மசூதியை வைத்து சர்ச்சையைக் கிளப்புகிற இந்துத்துவ அமைப்புகளுக்கு எதிராக ஏதாவது கூறியிருக்கிறார்களா? குறைந்தபட்சம், அந்த அமைப்புகளின் நடவடிக்கைகளுக்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றாவது அறிவிக்கத் தயாராக இருக்கிறார்களா? இங்கே நாம் இரண்டு அம்சங்களை நினைவிற்கொள்ள வேண்டும். முதலாவதாக, பொதுவான தன்மையில்  ஆர்எஸ்எஸ் அல்லது பாஜக தலைவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பது ஒரு பொருட்டே அல்ல, ஏனெனில் அவர்களது ஆட்சியில் தலைவர்களின் சொல்லுக்கும், நடைமுறை நிகழ்வுகளுக்கும் எந்தத் தொடர்பும் இருப்பதில்லை. “பெண்களுக்கு அனைத்து நிலையிலும் நிறைய அதிகாரங்கள் அளிக்கப்பட வேண்டும்” என்று வானத்திற்கே கேட்கும் வண்ணம் நமது பிரதமர் உரக்க முழங்கிக் கொண்டிருந்த அதே நாளன்று தான், பில்கிஸ் பானு வழக்கின் கொடூரம் நிறைந்த குற்றவாளிகள், தண்டனைக் காலம் முடியும் முன்பே படாடோபமாக விடுதலை செய்யப்பட்டதும், அவர்களுக்கு சிறை வாசலில் மாலை மரியாதைகளுடன் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டதும் நடந்தது. 

இரண்டாவதாக, பல்வேறு இந்துத்துவ அமைப்புகள், அவை வெவ்வேறு பெயர்களில் இயங்கிக் கொண்டு,  ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத தனித்தனி அமைப்புகளாகத் தங்களைக் காட்டிக் கொண்டாலும், அவை ஒரே அலைவரிசையில் ஒத்த கருத்துடன் செயல்பட்டு வருவதை நாம் கண்கூடாகப் பார்க்க முடியும். ‘பரிவார் ‘ என்கிற சொல்லின் முழு இலக்கணத்திற்கு ஏற்ப, அவை ஒரே மையப் புள்ளியில் இயங்குபவை தான். மகாத்மா காந்தியின் படுகொலையில் எங்களுக்கு எந்த சம்பந்தமும் கிடையாது என்று ஆர்எஸ்எஸ் அடித்துச்சொல்லி சத்தியம் செய்யும். ஆனால் காந்திஜி கொல்லப்பட்ட போது ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் இனிப்பு வழங்கிக் கொண்டாடியதை நேரில் பார்த்த சாட்சிகளே நிறைய உண்டு. ஆகவே, முஸ்லிம்கள் குறித்த தங்களது மனப்போக்கில் மாற்றம் ஏற்பட்டு விட்டதுபோல மோகன் பகவத் பேசிக்கொண்டிருப்பதை நான் பெரிதாக கவனத்தில் எடுத்துக்கொள்ளப் போவதில்லை.

முரண்பாட்டை அணையாமல் வைத்துக்கொள்வதே

கே: ஆர்எஸ்எஸ்-ஐ விமர்சிப்பவர்கள்,  அதன் போக்கில் எந்த மாற்றமும்  நிகழ்ந்துவிடவில்லை என்றே வாதிடுகிறார்கள்.  ஆர்எஸ்எஸ்-இன் முன்னாள் தலைவர் ராம் மாதவ்  முதல் இன்றைய தலைவர் மோகன் பகவத் வரை  அனைவரும், முஸ்லிம்கள் இந்துக்களை ‘காஃபிர்கள்’ (ஏக இறைவனை நிராகரிப்பவர்கள்) என்று அழைப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும், இந்தியாவில் வாழும் முஸ்லிம்கள் தங்களுடைய முன்னோர்களும் மூதாதையர்களும் ‘இந்துக்கள்’ தான் என்று  ஒப்புக் கொள்ள வேண்டும் என்றும் தொடர்ந்து கூறி வருகிறார்கள். இப்படிப்பட்ட பின்புலத்தில் இஸ்லாமியர்களுக்கும், ஆர்எஸ்எஸ்-க்குமிடையே இணக்கமான சூழல் ஏற்படுவதற்கு வாய்ப்பு  இருப்பதாகத் தாங்கள் நினைக்கிறீர்களா?

பதில்: ஆர்எஸ்எஸ் ஆக்ரோஷத்தோடு  மேற்கொள்கிற முஸ்லிம் எதிர்ப்பு பிரச்சாரத்திற்கும், மேற்கூறிய அம்சங்களுக்கும் - இந்துக்களை ‘காஃபிர்கள்’ என்று அழைப்பதாகச் சொல்லுவது, தங்கள் மூதாதையர்கள் இந்துக்களே என்று முஸ்லிம்களை ஒப்புக் கொள்ளச் சொல்லுவது போன்ற அம்சங்களுக்கும் - உள்ளபடியே எந்தத் தொடர்பும் கிடையாது. மேற்சொன்ன பிரச்சனைகளுக்குத் தீர்வு காணப்பட்டுவிட்டால், ஆர்எஸ்எஸ் முஸ்லிம்களுடன் இணக்கமான சூழலை ஏற்படுத்திக் கொள்ளும் என்று நம்புவது மிகவும் வெள்ளந்தியான, அப்பாவித்தனமான ஒன்று. அவ்வாறு ஒருவேளை இணக்கமான சூழல் ஏற்பட்டுவிட்டால் அதன் நீட்சியாக, ஆர்எஸ்எஸ்-இன் இந்துத்துவ  அரசியலுக்கு முடிவுரை எழுதப்பட்டுவிடும்.  தேசத்தின் அரசியல் விவாதம், மீண்டும் வறுமை, வேலைவாய்ப்பின்மை, பணவீக்கம், விலைவாசி உயர்வு ஆகியவற்றை நோக்கித் திரும்பிவிடும். இத்தகைய பூதாகரமான பிரச்சனைகளுக்கு, கார்ப்பரேட்  கனவான்களுக்கு வரிச்சலுகைகளை வாரி வழங்கிடும்  நவீன தாராளமயக் கொள்கைகளைப் பிடிவாதமாகப் பின்பற்றுவதைத் தவிர வேறு தீர்வு எதையும் இந்துத்துவா சக்திகள் சிந்திப்பதே கிடையாது.

ஆக, இந்தியாவில் இந்துக்களுக்கும்,  இஸ்லாமியர்களுக்கும் இடையே பிளவும், பிரிவு மனப்பான்மையும் இருப்பதாகக் கூறப்படுவதற்கு  உண்மையான காரணம் மேற்சொன்ன பிரச்சனைகள் அல்ல, அத்தகைய விவாதத்தைப் பெருமளவில் உருவாக்கி இந்துத்துவ சக்திகள் கட்டமைத்து வைத்துள்ள கற்பிதம் தான் என்பதை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும். இத்தகைய  முரண்பாடும் மோதல் போக்கும் இந்துத்துவ அரசியலுக்குக் கட்டாயம் தேவை, ஆதலால் தான் ஆர்எஸ்எஸ்-உம் சங் பரிவாரும் இந்து-முஸ்லிம் மக்களிடையே இணக்கமான சூழ்நிலை ஏற்பட்டு விடக் கூடாது என்பதில்  கண்ணுங்கருத்துமாக இருப்பதோடு, அத்தகைய முரண்பாட்டை அணைந்துவிடாமல் தொடர்ந்து பாதுகாப்பதிலும் தீவிரம் காட்டி வருகின்றன. மேலும், முஸ்லிம்களை அந்நியர்களாக,  வேறுபட்டவர்களாக, பிரித்துக் காட்டுவதன் மூலமே, நாடு முழுவதும் ‘இந்து’ என்ற அடையாளத்தை முன்னெடுத்துச் செல்ல முடியும் என்று ஆர்எஸ்எஸ் உறுதியாக நம்புகிறது. ஆனால் ‘இந்து’ என்பதே இந்தியாவின் பன்னெடுங்கால வரலாற்றில், மிகவும் சமீபமாக எழுந்த ஒரு உருவாக்கமே என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

புகழ்பெற்ற வரலாற்று அறிஞர் ரொமிலா தாப்பர் அவர்களின்  வார்த்தைகளில் சொல்வதானால் “19-ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் கூட, ‘இந்து குழும மதங்கள் (Hindu Group of Religions)’ என்கிற சொல்லாடலே பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இந்து என்கிற ஒற்றை அடையாளம் அதுகாறும் இருந்ததே  இல்லை”. இந்து என்னும் ஒற்றை அடையாளமும், அதே போல முஸ்லிம்களை ‘வேறுபட்டவர்கள்’, ‘ இந்துக்களுக்கு எதிரானவர்கள்’ என்று முத்திரையிடுதலும்  மிகவும் தாமதாக, 20-ஆம் நூற்றாண்டு  துவங்கிய பிறகே உருப்பெற்றது என்பதும்,  இவ்வாறு கட்டமைத்து முன்னெடுத்துச் சென்றதில்  ஆர்எஸ்எஸ்-க்கு மிக முக்கியப் பங்கு உண்டு என்பதும் இவ்விடத்தில் நினைவுகூரத் தக்கது. முஸ்லிம்கள், இந்துக்களை காஃபிர்கள் என்று  அழைப்பது, தங்கள் மூதாதையர்கள் இந்துக்கள் தான் என ஏற்றுக்கொள்ள மறுப்பது போன்ற அம்சங்கள் தான் இந்துக்களையும், முஸ்லிம்களையும் பிரிக்கின்றன என்னும் கூற்றை ஒரு வாதத்திற்கு ஏற்றுக்கொள்வதானால்  “இந்துக்களும், முஸ்லிம்களும் ஒன்றுசேர்ந்து வாழவே  முடியாத வேறுவேறு சமூகங்கள். அவர்களுக்குள் இணக்கமான சூழ்நிலை எந்தக் காலத்திலும் இருந்ததே இல்லை” என்கிற ஆர்எஸ்எஸ்-ஆல் வடிவமைக்கப்பட்ட பொய்யான கருத்தியலை அப்படியே ஒப்புக் கொள்வது போல ஆகிவிடும்.

கரிசனம் காட்டுவது வாக்குகளுக்காகவே

கே: பிரதமர் மோடி அவ்வப்போது ஆரவாரத்தோடு  கூறுகிற ‘சப்கா ஸாத், சப்கா விகாஸ், சப்கா விஸ்வாஸ் (எல்லோரும் இணைந்து, எல்லோருக்குமான வளர்ச்சி, பரஸ்பர புரிதலுடன்)” என்கிற முழக்கமும், முஸ்லிம் சமுதாயத்தோடு நெருங்கிச் செல்லும் ஆர்எஸ்எஸ்-இன் அண்மைக்கால முயற்சிகளும் ஒன்றோடு ஒன்று  பின்னிப் பிணைந்தவை என்று சிலர் வாதிடுகிறார்கள்.  இது, இந்து - முஸ்லிம் சமூகங்களுக்கிடையே காணப்படும், ‘எளிதில் அடங்காத பகைமையுணர்வை’யும், மோதல் போக்கையும் முடிவுக்குக் கொண்டு வந்து முற்றுப்புள்ளி வைத்திடும் என்கிற நம்பிக்கையையும் வெளிப்படுத்துகிறார்கள். இது பற்றிய தங்கள் கருத்து என்ன?

பதில்: பிரதமரின் ‘சப்கா ஸாத், சப்கா விகாஸ், சப்கா விஸ்வாஸ்’ போன்ற முழக்கங்களில் அடுக்குமொழியில் வெற்றிகரமாக வெளிப்படுத்தப்படுகிற பேச்சாற்றல் என்பதைத் தாண்டி வேறெதுவும் இருப்பதாக நான் கருதவில்லை. ஆனால் உண்மையில், 2014-ஆம் வருட நாடாளுமன்றத் தேர்தலுக்குச் சில மாதங்களுக்கு முன்பு, உத்தரப்பிரதேசத்தின் முசாபர் நகரில் ஏற்பட்ட கலவரத்தையடுத்து, மத அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைப்பு. அந்தத் தேர்தலில்  பிஜேபி மக்களவையில் அறுதிப் பெரும்பான்மையை எட்டுவதற்குப் பெரிதும் துணைபுரிந்தது.

இதே போன்று. 2019-இல் புல்வாமாவில் நிகழ்ந்த  தீவிரவாதத் தாக்குதல் சம்பவம், பிஜேபி-யின்  வெற்றிக்குப் பின்புலமாய் அமைந்தது. சுருங்கக் கூறின், எப்போதெல்லாம் ‘எளிதில் அடங்காத பகைமையுணர்வு” என்று இவர்களால் வர்ணிக்கப்படுகிற இத்தகு அம்சம் மக்கள் மனதில் மேலெழுத்து வருமாறு செய்யப்படுகிறதோ, அந்த சமயங்களிலெல்லாம் பிஜேபி-க்குத் தேர்தல் அறுவடை அபாரமாகக் கிடைத்துள்ளது. ஆகவே, இவர்கள் அகராதியில் இந்து - முஸ்லிம் மோதல் போக்கை முடிவுக்குக் கொண்டுவருவது என்கிற பேச்சுக்கே இடம் இருக்கப்போவதில்லை. இருப்பினும் ஆர்எஸ்எஸ் அமைப்பு திடீரென்று  முஸ்லிம்கள் பக்கம்திரும்பி, மிகுந்த கரிசனத்தோடு  நேசக் கரம் நீட்ட முனைந்திருப்பது, சிறுபான்மை வாக்கு வங்கியில் சற்றே சிதறல் ஏற்பட்டு, தங்கள் பக்கம்  திரும்பக்கூடும் என்ற எதிர்பார்ப்பில் தான். இதுவும் கூட, தங்களது நீண்டகால தொடர் முயற்சிகளால் பெரும்பான்மை சமூகத்தில் முழுவதுமாக வகுப்புவாத உணர்வு  ஊட்டப்பட்டுத் தங்களது வாக்கு வங்கியாக மாறியிருக்கும் பகுதியினர் எவ்வித மாற்றமும் இன்றித் தங்கள் பக்கமே நிற்பார்கள் என்கிற நம்பிக்கையை உறுதிப்படுத்திய பின்பே மேற்கொள்ளப்படுகிறது.

சிறுபான்மை சமூகத்தினரில், தங்களுக்குத் தீங்கு இழைப்பவரிடமும் அன்பு செலுத்தும் ஸ்டாக்ஹோம்  ஸிண்ட்ரோம் (Stockholm syndrome) மனநிலை சிலரிடம் இருக்கக் கூடும். இவர்களுடைய வாக்குகள் தங்களுக்கு நிச்சயம் கிடைக்கும் என்று பிஜேபி எண்ணுகிறது. மோகன் பகவத்-தின் சமீபத்திய பேச்சுக்களும், தில்லி இமாம் உள்பட முஸ்லிம் மதத் தலைவர்களுடனான அவரது சந்திப்புகளும் தேர்தல் நேரத்தில் பலன் தரும் என்று ஆர்எஸ்எஸ்-உம், பிஜேபி-யும் கணக்கிடுகின்றன என்பது தெளிவு. ஆனால் ஆர்எஸ்எஸ்-இன் இந்தத் திடீர்  முன்னெடுப்பு, காலம் பூராவும் அவர்கள்  கடைப்பிடித்து வருகிற குள்ளநரித் தந்திரத்தின்  ஒரு பகுதியே என்பதை இஸ்லாமியர்கள் உள்பட  அனைத்துத் தரப்பினரும் புரிந்துகொண்டு,  விழிப்புணர்வுடனும், எச்சரிக்கையாகவும்  இருந்திட வேண்டும். ஏமாற்று வித்தைகளுக்கு  இனியும் இடமில்லை என்பதை இந்திய  மக்கள் அவர்களுக்கு உணர்த்த வேண்டும்.

தமிழ் வடிவம்: கடம்பவன மன்னன்