நீராளிகள் (octopus) தங்கள் தோல் பாணிகளை (patterns) தூங்கும்போது மாற்றிக் கொள்வது அவை கனவு காண்கின்றன என்பதை எடுத்துக்காட்டுகிறது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இரவு நேர உயிரினங்கள் (nocturnal species) குடும்பத்தைச் சேர்ந்த செபலபாட்ஸ் (cephalopods) வகை உயிரினங்கள் மனிதர்கள் உள்ளிட்ட முதுகெலும்பு உள்ள உயிரினங்களில் தூக்கத்தின் போது நிகழும் கண் அசைவு நிலைகளை (Rapid Eye Movements REM) பெற்றுள்ளன. ஸ்க்விட் (Squid), கட்டில் மீன் (Cuttle fish), நாட்டிலஸ் (nautilus) போன்றவை அடங்கியுள்ள இந்த குடும்பத்தில் நீராளிகள் உள்ளன.
இரண்டு நிலை தூக்கம்
கடல்சார் ஆய்வாளர்கள் மற்றும் கடல்சார் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நீராளிகள் ஒரு சிம்ம சொப்பனமாக இருக்கும்நிலையில் அவை தூங்கும்போது கனவு காண்கின்றன என்று புதிய ஆய்வுகள் கூறுகின்றன. இவை தூக்கத்தின்போது அமைதியான (quiet) மற்றும் செயல் வேகத்துடன் (active) உள்ள தூக்கம் ஆகிய இரண்டு நிலைகளைப் பெற்றுள்ளன. இரண்டாவது நிலையில் உடற்பாகங்களை இழுத்து தங்கள் தோற்பரப்பின் தன்மை, பாணியை மாற்றிக் கொள்கின்றன.
மனிதனைப் போல கனவு காணும் நீராளிகள்
செயல்திறனுள்ள நிலையில் தூங்குவதுடன் மனிதர்கள் உட்பட முதுகெலும்பு உயிரினங்களில் தூக்கத்தில் கனவு காணும்போது நிகழும் கண் அசைவுகள் இவற்றிலும் காணப்படுகின்றன என்று ஜப்பான் ஒக்கினாவா (Okinawa) அறிவியல் மற்றும் தொழில் நுட்பக் கழக (OIST) ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த உயிரினங்கள் கனவு காண்கின்றன என்ற கருத்தையே இது வலியுறுத்துகிறது என்றாலும் இது உறுதி செய்யப்படவில்லை என்று ஆய்வுக்கட்டுரையின் மூத்த ஆசிரியர் பேராசிரியர் சாம் ரீய்டர் (Prof Sam Reiter) கூறுகிறார்.
விழிப்பு நிலையிலும் நல்ல தூக்கத்திலும்
வேட்டையாடுதல், சமூக வெளிப்பாடு, அச்சுறுத்தப் படும்போது வினை புரிதல், வேறுபட்ட சூழ்நிலைகளில் வெளிப்படுத்தும் உருவ மறைப்பு (camouflage) போன்ற விழிப்புநிலை செயல்கள் மறுபடியும் நல்ல தூக்கத்தின் போதும் நீராளிகளிடம் வெளிப்பட்டன. இவை கனவு காண்பதையே இது எடுத்துக்காட்டுகிறது. விழித்திருக்கும் போது இவற்றில் வெளிப்படும் போலியான சீரற்ற நடை அனுபவங்கள் (pseudo random walking) இவற்றின் தூக்கத்தின்போதும் காணப்படுகின்றன.
பகல் நேரத் தூக்கம்
விழித்திருக்கும்போது காணப்படும் உருவ மறைப்பை தூக்கத்தின்போதும் இவை வெளிப்படுத்துவது இதற்குக் காரணமாக இருக்கலாம் என்று நேச்சர் (Nature) என்ற ஆய்விதழில் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள இது பற்றிய இந்த ஆய்வுக்கட்டுரை கூறுகிறது. இந்த ஆய்வின்போது லாக்யூஸ் (Laqueus) என்ற பிரிவைச் சேர்ந்த 29 நீராளிகள் ஆராயப்பட்டன. பகல்நேர வெளிச்சத் தில் தூக்கத்துடன் தொடர்புடைய ஓய்வெடுக்கும் நிலை யைப் பெற எவ்வாறு இவை கண்களை மூடிக்கொள் கின்றன என்று விஞ்ஞானிகள் ஆராய்ந்தனர்.
நிறம் மாறும் நீராளிகள்
ஒவ்வொரு நிமிடத்திற்கு ஒரு முறை இவை ஒரு நிமிடம் நீண்டு நிற்கும் வகையில் தங்கள் தோலின் நிறத்தை மாற்றிக்கொள்கின்றன. மூச்சு விடும் வேகம், உடல் அசைவுகள், கண் அசைவுகளுடன் இந்த மாற்றம் நிகழ்கிறது. இவை வாழ்ந்துவந்த தொட்டியைத் தட்டி இவற்றின் பதில் வினைகள் எவ்வாறு உள்ளன என்று ஆராயப்பட்டது. பதில் வினைகள் அவற்றின் அமைதி யான தூக்கநிலை, செயல் திறனுடைய தூக்க நிலையைப் பொறுத்து மாறுபட்டது.
தூக்கத்தை ஒழுங்குபடுத்தும் நீராளிகள்
தூக்கத்தில் குறைவை ஏற்படுத்த வண்ணப்பூச்சு பூசும் தூரிகையால் இவை இரண்டு நாட்கள் தொடர்ச்சி யாகத் தொந்தரவு செய்யப்பட்டபோது அவை மிக விரைவிலேயே செயல் வேகமுள்ள தூக்கநிலையை அடைந்தன. தங்கள் தூக்கத்தைத் தாங்களே ஒழுங்கு படுத்தும் திறனை (homeostatic) இவை பெற்றுள்ள தையே இது எடுத்துக்காட்டுகிறது என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இது தூக்க நிகழ்வின் ஒரு முக்கிய தேவை. நல்ல தூக்கத்தில் இவை ஈடுபடுகின்றன என்பதை இது காட்டுகிறது. இவற்றின் மூளை செயல்பாடுகள் ஆராயப்பட்டது.
விழிப்பு நிலைக்கும் தூக்க நிலைக்கும் தொடர்பு
அப்போது அவற்றின் தூக்கத்துடன் தொடர்புடைய மூளைப்பகுதியில் விழிப்புநிலைக்கும் நல்ல தூக்க நிலைக்கும் இடையில் வலுவான ஒரு ஒருங்கிணைப்பு தொடர்பு இருப்பது தெரியவந்தது. விழிப்புநிலையில் இந்த உயிரினங்கள் தங்கள் தோலின் பாணியை சூழ்நிலைக்கேற்ப மாற்றிக்கொள்கின்றன. இந்த ஆய்வு முடிவுகள் இவற்றின் தூக்கம் பற்றிய முந்தைய ஆய்வின் முடிவை உறுதிப்படுத்தியுள்ளது.
முந்தைய ஆய்வுகள்
சிறிது காலத்திற்கு முன்பு அமெரிக்காவில் இந்த கருத்து பற்றி நடந்த ஆய்வில் ஒரு ஆண் நீராளி தூங்கும்போது தன் நிலையை அவ்வப்போது மாற்றிக்கொண்டதுடன் எதிரிகளின் தாக்குதலை சமாளிக்க எடுக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டது என்று கூறியது. ஒரே ஒரு நீராளியை ஆராய்ந்ததால் இந்த முடிவு தவறாக இருக்காது என்று அந்த ஆய்வுக்குழு கூறியது.
நினைவுகளின் வெளிப்பாடு
ஒரு வேளை இவற்றின் அன்றாட வாழ்க்கை அல்லது கடந்த கால நிகழ்வுகள் பற்றிய நினைவுகளின் (episodic memory) எதிர்மறை வெளிப்பாடாக இது இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர். யார் கண்டது? ஒரு வேளை இவை நம்மைப் போலவே நல்ல கனவையும் கெட்ட கனவையும் காண்கின்றனவோ என்னவோ! கனவு காண்பது மனிதர்களுக்கு மட்டுமே உரிய தனி உரிமை இல்லை. பரிணாம வளர்ச்சியில் தாழ்ந்த நிலையில் இருக்கும் நீராளிகள் போன்ற பல உயிரினங்களும் கனவு காண்கின்றன என்பதையே இது எடுத்துக்காட்டுகிறது!