தமிழ்நாடு சட்டமன்றத்தில் கடந்த 12.4.2023 அன்று தொழிலாளர் துறை அமைச்சர் 1948ம் ஆண்டு தொழிற்சாலைச் சட்டத்தில் சில திருத்தங்களை முன் மொழிந்தார். இந்த சட்டத்திருத்தத்தைக் கைவிட வேண்டுமென சிபிஐ(எம்), சிபிஐ, மதிமுக, காங்கிரஸ், விசிக போன்ற கட்சிகள் கடுமையாக எதிர்த்த பின்பும், 21.4.2023 அன்று இச்சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டுவிட்டது. திமுக அரசு இச்சட்டத்தை நிறைவேற்றியதன் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 40,000-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் அனைவரையும் அடிமைகளைப்போல வேலை வாங்க முதலாளிகளுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர்களின் அபத்தமான விளக்கம்
ஒட்டுமொத்த தொழிலாளர்களையும் பாதிக்கும் இந்தச் சட்டத்தை நிறைவேற்றியதை நியாயப்படுத்தும் அடிப்படையில் அபத்தமான விளக்கங்களை அமைச்சர்கள் அளித்துள்ளனர். தொழிலாளர் அமைச்சர், சட்டத்தை முன்மொழிவதற்கு காரணமாக கூறியுள்ளது அபத்தமானது. ஒன்றிய அரசு நிறைவேற்றியுள்ள தொழிலக பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணி நிலைமைகள் தொகுப்பு சட்டத்தை அடிப்படையாக வைத்து இச்சட்டத்திருத்தத்தை முன்மொழிவதாக கூறியுள்ளார். ஒன்றிய அரசு கடந்த 2019ம் ஆண்டு, நாடு முழுவதும் உள்ள தொழிலாளர்களை பாதிக்கும் அடிப்படையில் 4 சட்டத்தொகுப்புக்களை நிறைவேற்றியது. இந்த சட்டத்தொகுப்புக்களை இடதுசாரி கட்சிகள் எதிர்த்தன. திமுகவும் எதிர்த்தது. இப்போதும் இந்த சட்டத்தொகுப்பிற்கு எதிராக நாடுத ழுவிய அளவில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சட்டத்தொகுப்பு நிறைவேற்றப்பட்டு 4 ஆண்டுகளாகியும் கடும் எதிர்ப்பு காரணமாக, நிறைவேற்றிய சட்டத்தை அமல்படுத்த மோடி அரசு தயங்கி வருகிறது. ஒன்றிய அரசே நிறைவேற்றத் தயங்கி வரும் ஒரு மோசமான சட்டத்தை முன்னுதாரணமாகக் கொண்டு, இச்சட்டத்தை திருத்துவதாக தொழிலாளர் அமைச்சர் கூறுவது மிகவும் அபத்தமானது. அதைவிட அபத்தம், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ள விளக்கம். தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் அவசியத் தேவையையொட்டி இச்சட்டத்தை நிறைவேற்றியதாக கூறியுள்ளார். தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு தொழிற்சாலைகள் சட்டமே பொருந்தாது. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் வர்த்தக நிறுவனங்களாகும். தொழிலாளி விருப்பத்தின்பேரில் மட்டுமே சட்டம் அமலாக்கப்படும் என்றும் கூறியுள்ளது வேடிக்கையானது.
1948 சட்டம் சொல்வது என்ன?
நீண்ட நெடிய போராட்டங்களுக்குப்பின் தொழிற்சாலை சட்டம் 1948ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
* 1948 சட்டம் வேலை நேரம் 8 மணி நேரம் என உறுதிப்படுத்தியுள்ளது.
*வாரத்தில் 48 மணி நேரத்திற்கு மேல் வேலை வாங்கக் கூடாது.
*அவ்வாறு கூடுதல் வேலை வாங்க வேண்டுமெனில், தொழிற்சாலை ஆய்வாளரிடம் முன் அனுமதி பெற வேண்டும்.
*முன் அனுமதி பெற்று கூடுதல் வேலை வாங்கினாலும், 12 மணி நேரத்திற்கு மேல் வேலை வாங்கக் கூடாது.
*கூடுதலாக வாங்கும் வேலை நேரத்திற்கு இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும்.
இந்த சட்டம் அனைத்து தொழிற்சாலைகளுக்கும் பொருந்தும். ஆனால், மாநில அரசாங்கம் அவசியத் தேவை என கருதினால், இந்த சட்டத்திலிருந்து சில பகுதிகளுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கலாம் எனவும், அவ்வாறு விதிவிலக்கு அளிப்பதற்கு பின்வரும் நிபந்தனைகளை பின்பற்ற வேண்டுமெனவும் தொழிற்சாலைகள் சட்டம் பிரிவு 65இல் கூறப்பட்டுள்ளது:
* எந்த சூழ்நிலையிலும் ஒரு நாளைக்கு 12 மணி நேரத்திற்கு மேல் வேலை வாங்கக் கூடாது.
*வேலை நேரமும், இடைவெளி நேரமும் சேர்த்து 13 மணி நேரத்திற்கு மேல் செல்லக் கூடாது.
*ஓவர் டைம் உட்பட வாரத்தில் 60 மணி நேரத்திற்கு மேல் வேலை வாங்கக் கூடாது.
*7 நாட்களுக்கு மேல் தொடர்ச்சியாக வேலை வாங்கக் கூடாது; 3 மாதத்தில் 75 மணி நேரத்திற்கு மேல் ஓவர் டைம் இருக்க கூடாது.
புதிய திருத்தம் என்ன?
இப்படி வரையறுக்கப்பட்டுள்ள தொழிற்சாலைகள் சட்டத்தில் 65(a) என்ற ஒரு புதிய பிரிவை உருவாக்கித்தான் தற்போது சட்டத்திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி பிரிவு 65இல் உள்ள நிபந்தனைகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எனவே, புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இந்த சட்டத்திருத்தம் தொழிலாளர்களை அடிமை போல் நடத்துவதற்கு வழி வகுக்கிறது.
புதிய சட்டம் அமுலானால்...
* வரைமுறையற்று எத்தனை மணி நேரம் வேண்டுமானாலும் வேலை வாங்கலாம்.
*கூடுதலாக வாங்கும் வேலை நேரத்திற்கு மிகை ஊதியம் வழங்க வேண்டியதில்லை.
*இடைவேளை நேரமின்றி எப்படி வேண்டுமானாலும் வேலை வாங்கலாம்.
*இவ்வளவு மோசமான ஷரத்துக்கள் ஒன்றிய அரசின் சட்டத்தொகுப்பில்கூட இல்லை. இது மிக மோசமான சட்டத்திருத்தம். தொழிலாளர்களை அடிமையாக்கும் சட்டத்திருத்தம். திமுகவின் வரலாற்றில் மிகப்பெரும் கரும்புள்ளியாக இச்சட்டத்திருத்தம் மாறிவிடும். ஆனால், தொழிலாளி வர்க்கம் போராடி இதை முறியடிக்கும்.