நேரு மாமா புகழ்பாடு
நேர்மை அவரின் பண்பாடு!
பேரும் புகழும் அவர்வீடு!
பேசும் இந்தியத் தாய்நாடு!
சொரூப ராணி அன்னைக்கும்
சோர்விலா மோதிலால் நேருவுக்கும்
அருமைப் புதல்வராய்ப் பிறந்தவராம்
அகிலம் போற்றும் நேரவராம்
நாட்டின் முதலாம் பிரதமராம்
நாட்டை உயர்த்திய பிதாமகராம்!
ஏட்டுக் கல்வி அளித்தவராம்
ஏழையின் கல்வியில் ஒளிர்ந்தவராம்!
நாடெலாம் சாலைகள்அமைத்தவராம்!
நாடியே மின்னொளி சமைத்தவராம்!
வீடெலாம் செழிக்கச் செய்தவராம்
விதிகள் செய்த நல்லவராம்!
அணைகள் பலவும் கட்டியவர்
ஆற்றல் உழவுக்கு ஊட்டியவர்!
இணையிலா சமத்துவம் பேசியவர்
இழிசெயல் எதற்கும் கூசியவர்!
விடுதலைப் போரில் களம்கண்டார்
வீரத் தோடு சிறைசென்றார்!
செல்வச் செழிப்பைத் துய்க்காதார்
சிறைக்குச் செல்லத் தயங்காதார்!
குழந்தை உள்ளம் கொண்டவராம்
குழந்தைகள் மனத்தில் நிறைந்தவராம்!
அழகு ரோசா அணிந்தவராம்
அதைப்போல் உள்ளம் உடையவராம்!
மதவெறிக் கொள்கை ஏற்காதவர்
மனித நேயம் மறக்காதவர்!
சுதந்திரக் காற்றைச் சுவைத்திடுவாய்
சூழும் தீமை அகற்றிடுவாய்!