articles

img

மைதிலி சிவராமன் : புரட்சிகர இயக்கத்தின் அறிவொளி கே.வனஜகுமாரி

மைதிலி சிவராமன்  :  புரட்சிகர இயக்கத்தின் அறிவொளி கே.வனஜகுமாரி

தமிழகத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் பெண் ஆளுமைகளில் தலைநிமிர்ந்து நிற்கும் ஒரு தூண் என்றால் அது மைதிலி சிவராமன் அவர்களைத் தவிர வேறு யாருமில்லை. அமைதியான தோற்றம் கொண்ட இவர், அதிர்ந்து பேசாதவர். ஆனால் ஒவ்வொரு வார்த்தையும் ஒடுக்கப்பட்ட மக்களின் வலியை வெளிப்படுத்தியது. நீண்ட நெடிய போராட்டப் பாதையில் அயராது பயணித்த இந்தப் பெண்மணி, கடைக் கோடி விவசாயத் தொழிலாளி, கல்லுடைக்கும் தொழிலாளி முதல் ஆலைத் தொழிலாளி, நடுத்தர வர்க்கத்தினர், பெண்கள் என அனைவராலும் நேசிக்கப்பட்ட தலைவி. உலக அரங்கில் ஒளிர்ந்த தமிழகத்தின் பெண் தலைவி 1966-68 காலகட்டத்தில், அமெரிக்காவில் உள்ள ஐ.நா சபைக்கான இந்திய நிரந்தர தூதுக் குழுவில் ஆய்வு உதவியாளராக பணியாற்றிய மைதிலி, மூன்றாம் உலக நாடுகளில் தன்னாட்சி அதிகாரம் இல்லாத பகுதிகள் எதிர்கொள்ளும் சிக்கல்கள், காலனி ஆதிக்க சூழல் குறித்த ஆய்வுகளில் ஈடுபட்டார். ஐ.நா சபை பணிக்காலம் முடிந்த பின், இந்திய இடதுசாரி இயக்கத்தில் இணைந்து தன் போராட்ட வாழ்க்கையைத் தொடங்கினார்.

பொதுவுடமை சமூகம் மலர வேண்டும் என்ற கனவு மட்டுமே அவரது இதயத்தில் தீவிரமாக இருந்தது. இந்தியாவில் வினோபாவின் பூமிதான இயக்கம் தீவிரமடைந்து கொண்டிருந்த காலத்தில், வினோபாவின் ஆசிரமத்தில் தங்கினார். ஆனால் தனது பொதுவுடமை சித்தாந்தத்திற்கு இவ்வியக்கம் முழுமையாக துணை நிற்காது என்று உணர்ந்து, அங்கிருந்து வெளியேறினார்.  போராட்டங்களில் மின்னிய மைதிலியின் செயல்வீரம் தஞ்சை கீழ்வெண்மணியில் கூலி விவசாயிகள் கூலி உயர்வு கேட்டு போராடிய காரணத்தால், நில உடமையாளர்கள் தங்கள் அடியாட்கள் மூலம் 44 தலித் மக்களை எரித்துக் கொலை செய்த கொடூரச் சம்பவத்தை உலகின் கவனத்திற்குக் கொண்டு வந்ததில் மைதிலியின் பங்களிப்பு மறக்க முடியாதது. சந்தன கடத்தல் வீரப்பன் வேட்டை என்ற பெயரில், தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வாச்சாத்தி மலைப் பகுதி பெண்களை வனத்துறையினரும் போலீசாரும் பாலியல் பலாத்காரம் செய்து துன்புறுத்திய போது, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, அப்படிப்பட்ட சம்பவம் ஒன்றும் நடக்கவில்லை என்று கூறினார். ஆனால் தோழர் மைதிலி சிவராமன், மாதர் சங்கத்தோடு இணைந்து 1992 ஜூலை 31-இல் அங்கு நேரில் சென்று, பாதிக்கப்பட்ட மலைவாழ் மக்களைச் சந்தித்து, உண்மையை வெளிக்கொணர்ந்து, அந்த அட்டூழியங்களை ஆவணப்படுத்தி, பட்டியல் பழங்குடியினர் ஆணையத்திற்கு அனுப்பினார். வாச்சாத்தி வழக்கில் அவை ஒரு திருப்புமுனையாக அமைந்தன.

கியூபா பயணமும் பொதுவுடமை கனவும் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளியான மைதிலி, அமெரிக்க அரசின் கருப்பின மக்கள் மீதான ஒடுக்குமுறைகளையும், சிறிய நாடான கியூபா தீவிரமாக அவற்றை எதிர்த்த செயல்களையும் கண்டு ஈர்க்கப்பட்டார். அப்போது ஐ.நா. சபையின் இந்தியத் தூதரகத்தில் பணியாற்றிய மைதிலிக்கு, கியூபா புரட்சியால் ஏற்பட்ட சமூக மாற்றங்களை நேரில் பார்க்கும் ஆவல் எழுந்தது. எதிரி நாடாகக் கருதப்பட்ட கியூபாவுக்கு, அமெரிக்காவில் வசித்த மைதிலி செல்வது கடினம். எனினும், அமெரிக்க அதிகாரிகளுக்குத் தெரியாமல், முதலில் மெக்சிகோ வழியாகச் சென்று, அங்கிருந்து கியூபா சென்றார். அதன் செயல்பாடுகள், அவருக்கு மிகுந்த நம்பிக்கையை அளித்தன. மைதிலி சிவராமனின் மனதில் இருந்த பொதுவுடமை சிந்தனை மேலும் சுடர்விடத் தொடங்கியது. தொழிலாளர்  போராட்டங்களின் உறுதுணை சென்னையில் சிம்சன், டி.வி.எஸ், மெட்டல் பாக்ஸ், அசோக் லேலண்ட், டேப்லட் இந்தியா, பாலு கார்மெண்ட்ஸ், பவுண்டேஷன் கார்மெண்ட்ஸ் போன்ற தொழிற்சாலைகளில் நடந்த போராட்டங்களுக்கு, மாநகராட்சித் தலைவராக இருந்து தலைமை தாங்கினார்.

அதேபோல், பல்லாவரம் பகுதி குவாரியில் கல்லுடைக்கும் தொழிலாளர்களின் தலைவராகவும் இருந்தார். அந்தத் தொழிலாளர்கள் பல்வேறு அடக்குமுறைகளைச் சந்தித்தனர். மைதிலி அவர்களோடு தோளோடு தோள் நின்று, உறுதியான போராட்டத்தை நடத்த உறுதுணையாக இருந்தார். அதன்மூலம் 200 பெண்கள் உட்பட 500 தலித் தொழிலாளர்கள் அனைவரையும் நிரந்தரம் செய்யச் செய்தார். பின்னாளில், கல் உடைப்பதற்குத் தடை செய்யப்பட்டபோது, அனைவருக்கும் மாற்று வேலை வழங்குவதற்கான கடுமையான போராட்டம் நடந்தது. பல அடக்குமுறைகளைத் தாண்டி, ஆண், பெண், கர்ப்பிணிப் பெண்கள் உட்பட பலரும் சிறை சென்றனர். அந்தப் போராட்டத்திற்கு மைதிலி சிவராமனும், குமாரதாசனும் தலைமை தாங்கினார்கள். போராட்டம் வெற்றி பெற்று, சாலை போடுவது, காவலாளி வேலை போன்ற மாற்றுப் பணிகள் அரசால் வழங்கப்பட்டன. குடும்பத் தலைவராக  நேசித்த தொழிலாளர்கள் அந்தத் தொழிலாளர்களுக்கு, தொழிற்சங்கத்தின் மீதும், தலைவர்கள் மீதும் மிகப்பெரிய நம்பிக்கை ஏற்பட்டது. மைதிலியை அவர்கள் தங்களின் குடும்பத் தலைவராகவே கருதினர். குடும்பத்தில் நடக்கும் நல்லது-கெட்டது போன்ற காரியங்கள் மைதிலி இல்லாமல் நடக்காது என்ற அளவுக்கு, அவர் அத்தொழிலாளர் குடும்பங்களின் அங்கமாகவே ஆகிவிட்டார். பன்முகத் திறமையின் ஒளிவிளக்கு பன்முகத்தன்மை கொண்ட தலைவராக விளங்கிய மைதிலி, சிறந்த பேச்சாளர், எழுத்தாளர், கட்சியின் மாநில குழுவில் இருந்து செயல்பட்டவர், ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்தியத் தலைவர்களில் ஒருவராக இருந்தவர், தொழிற்சங்கத் தலைவராக விளங்கியவர், பத்திரிகை ஆசிரியராக பணியாற்றியவர் என பல்துறைகளிலும் தடம் பதித்தார். அவர் கட்சிக்காகவும், உழைக்கும் மக்களுக்காகவும் ஆற்றிய பணிகள் என்றும் மறக்க முடியாதவை. அவரது போராட்ட வாழ்வு நமக்கு நம்பிக்கை தரும் விளக்காக என்றென்றும் ஒளிர்ந்து கொண்டிருக்கும்.