articles

img

‘வாலிபர் சங்க நோக்கம் வெற்றி பெறும்’ - உதயநிதி ஸ்டாலின்

போதையை ஒழிக்க இணைந்து செயல்படுவோம். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் நோக்கம் வெற்றி பெறும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார். ‘போதையற்ற தமிழ்நாடு’ என்ற முழக்கத்தோடு  ஒரு கோடி கையெழுத்து பெறும் விழிப்புணர்வு இயக்கத்தை பிப்ரவரி 12 ஆம் தேதி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தொடங்கியது. இந்த இயக்கத்தின் நிறைவு விழா ஞாயிறன்று (ஜூலை 16) சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் பெறப்பட்ட கையெழுத்துப் படிவங்களை இளைஞர் நலன், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோரிடம் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.கார்த்திக், மாநிலச் செயலாளர் ஏ.வி.சிங்காரவேலன், பொருளாளர் கே.எஸ்.பாரதி உள்ளிட்ட நிர்வாகிகள் ஒப்படைத்தனர். இந்த நிகழ்வின் போது சங்கத்தின் அகில இந்திய தலைவர் ஏ.ஏ.ரஹீம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், வரவேற்புக்குழுத் தலைவர் எஸ்.கே.மகேந்திரன் உள்ளிட்ட தலைவர்கள் உடனிருந்தனர். இந்த நிகழ்வில் தலைவர்கள் பேசியதன் சுருக்கம் வருமாறு:

நான் படித்த கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பது பெருமையாகவும், நெகிழ்வாகவும் உள்ளது. அரசு நிகழ்ச்சிகள் 3 நாட்களுக்கு  தொடர்ச்சியாக சுற்றுப்பயணம் செல்ல இருந்தேன். அப்போது முதலமைச்சர் அழைத்து, வாலிபர் சங்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டுதான், அடுத்தடுத்த நிகழ்ச்சி களுக்கு செல்ல வேண்டும் என்று கட்டளையிட்டார். திமுக இளைஞர் அணி செயலாளராக இருந்தாலும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் நிகழ்வில் பங்கேற்பதில் பெருமைப்படுகிறேன். போதையற்ற தமிழ்நாடு - ஒரு கோடி கையெழுத்து இயக்கம் எனும் ஆக்கப் பூர்வமான நிகழ்வை முன்னெடுத்த வாலிபர் சங்கத்திற்கு வாழ்த்துக்கள். போதை ஒழிப்பை வலியுறுத்தி சென்னை மாநகர காவல்துறை நடத்திய குறும்பட போட்டி, ஆவடி காவல்துறை நடத்திய மாரத்தான் போட்டிகளில் பங்கேற்று பரிசு வழங்கினேன்.

அதன் தொடர்ச்சியாக இந்த நிகழ்வில் பங்கேற்கிறேன். போதையில்லாத தமிழ்நாடு என்பதே லட்சியம் என்று முதலமைச்சர் அடிக்கடி கூறுவார். அதற்கேற்ப போதைப் பொருட்களுக்கு எதிராக மிகக்கடுமையான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. ‘ட்ரக் ஃபிரி தமிழ்நாடு’ எனும் முழக்கத்தை வைத்து மார்ச் மாதம் ஏராளமான விழிப்புணர்வு நிகழ்வுகளை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். அரசும் காவல்துறையும் இணைந்து போதைப்பொருள் ஒழிப்பிற்காக ஏராளமான உறுதியான நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது. போதைப்பொருள் வழக்கில் கைதானால் முன்பெல்லாம் மிக எளிதாக ஜாமீன் கிடைக்கும். தற்போது, அரசின் முயற்சியால் அந்த நிலை முற்றிலும் மாறியுள்ளது. போதை ஒழிப்பை அரசால் மட்டும் சாத்தியப்படுத்த முடியாது. மக்கள், மாணவர்கள், இயக்கங்கள் இணைந்து  செய்ய வேண்டும். போதை ஒழிப்பு தொடர்பான ஆய்வுக்கூட்டங்களில் முதலமைச்சர் தொடர்ச்சியாக கலந்து கொண்டு காவல்துறைக்கு பல்வேறு ஆலோச னைகளை வழங்குகிறார். போதை ஒழிப்புக்காக கடந்த  மாவட்ட ஆட்சித்தலைவர்கள், காவல் கண்காணிப்பா ளர்கள் கூட்டத்தை முதலமைச்சர் நடத்தினார். அதன்மூலம் போதை ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரப் படுத்தப்பட்டன. கல்லூரி, பள்ளி மாணவர்கள் போதை யின் பாதைக்கு செல்லாமல் தடுக்க அனைவரும் இணை ந்து செயல்படுவோம். இந்த கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டதன் நோக்கம் வெற்றி பெறும்.