articles

img

‘இந்தியா’ வின் ஆட்சி மலரட்டும்! மாநிலங்களின் வாழ்வு செழிக்கட்டும்! - திருச்சி சிவா

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மதுரையில் ஜூலை 23 ஞாயிறன்று மாலை  மாநில உரிமைகள் பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் திமுக சார்பில்  அக்கட்சியின் மாநிலங்களவைக் குழு தலைவர் திருச்சி சிவா உரையாற்றினார்.  மேடையில் சீத்தாராம் யெச்சூரி உள்ளிட்ட தலைவர்கள்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தும் மாநில உரிமைகள் பாதுகாப்பு  மாநாட்டின் தீர்மானங்களை திமுக ஆதரிக்கிறது. அரசியல் கோட்பாட்டைச் சிதைக்கும் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாடாளுமன்ற ஜன நாயகம் மறைந்து ஒற்றை ஆட்சி வந்துவிடும் என்ற அபாயத்தை உணர்ந்து, அதைத் தடுக்கும் முழக்கங்க ளுடன் மார்க்சிஸ்ட் கட்சி நடத்தும் இந்த மாநாட்டை, திமுக சார்பில் வாழ்த்துகிறேன்.

மொழிக்கொள்கை- மாநில உரிமைகள்

இந்தி பொது மொழியாக இருக்கவேண்டும் என்றும், ஆங்கிலம் மற்றும் அந்தந்த மாநில மொழி கள் எனவும் மும்மொழிக் கொள்கையை திணிக்க முயற்சி நடந்தது.  ஆனால்,  தமிழ்நாட்டில் தமிழ், ஆங்கிலம் மட்டும் தான்; இருமொழிக் கொள்கையே கடைப்பிடிக்கப்படும் என்பதில் அண்ணா உறுதியாக இருந்தார். இரு மொழிக் கொள்கையையும் கொண்டு வந்தார். திமுகவின் இன்றைய முக்கியக் குறிக்கோள் என்ன என்று பேரறிஞர் அண்ணாவிடம் 1965-ஆம் ஆண்டு கேட்கப்பட்ட போது, “உண்மையான கூட்டாட்சி மலர இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை திருத்தி அமைத்த லும், மாநிலங்களுக்கு கூடுதலான சுயாட்சி உரிமை யைப் பெறுதலும்’’ என்று சொன்னார். 1969- ஆம் ஆண்டு டாக்டர் பி.வி.ராஜமன்னார் தலை மையில் அப்போதைய  திமுக அரசால் ஆணையம் அமைக்கப்பட்டது. கூட்டாட்சி அமைப்பில் மத்திய மற்றும் மாநிலங்களுக்கு இடையே இருக்க வேண்டிய உறவு தொடர்பான கேள்வியை ஆராய இந்த ஆணை யம் நியமிக்கப்பட்டது. ராஜமன்னார் கமிஷனிடம், ஒன்றிய அரசிடம் குவிந்துள்ள அதிகாரங்களில் எவை எவை; மாநிலப் பட்டியலுக்கு வரவேண்டியவை எவை; மாநில அரசுப்பட்டியலிலிருந்து ஒன்றிய அரசு பட்டிய லுக்கு செல்ல வேண்டியவை எவை; பொதுப்பட்டிய லில் இருக்க வேண்டியவை எவை என்பது குறித்தும் ஆய்வு செய்ய இந்த ஆணையம் பணிக்கப்பட்டது. இந்த ஆணையம் தனது அறிக்கையை 1971-ஆம் ஆண்டு சமர்ப்பித்தது.

இன்றைக்கு இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களுக்கும் உரிமைகள் வழங்கப்பட்டுள்ள தென்றால் அதற்குக் காரணம் திமுக அரசால் நியமிக் கப்பட்ட இராஜமன்னார் ஆணையம் அளித்த பரிந்து ரைகளின் அடிப்படை தான். ‘தில்லியில் குவிந்துள்ள அதிகாரங்களை எல்லாம்  மாநிலங்களுக்கு மாற்றவேண்டும் என்ற தத்துவத்தி லே பிறந்ததுதான் மாநில சுயாட்சி’ என்று  அண்ணா  பேசினார். அதைச் செயல்வடிவத்திற்கு கொண்டுவரு வதற்குள் அண்ணா மறைந்தார். பின்னாளில், ‘அண்ணா கூறிய மாநில சுயாட்சி தான்  அண்ணா வின் உயில்’ என்றார் மறைந்த தலைவர் கலைஞர்.

ஆளுநர் தேவையில்லை 

“ஆட்டுக்குத் தாடியும், நாட்டுக்கு ஆளுநர் பதவி யும் தேவையில்லை” என்று அண்ணா கூறினார். அதை கலைஞர் வழிமொழிந்தார். ஆனால், ஆளுநர் பதவி இருக்கும்வரை அதற்குரிய மரியாதையைக் கொடுக்கவேண்டுமென்றார் கலைஞர். இன்றைக்கு தமிழக அரசின் நடவடிக்கைகளில் அத்துமீறி தலை யிடுகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. அவரைத் திரும்பப் பெற வேண்டுமென திமுக தொடர்ந்து வலியுறுத்துகிறது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மாநில அரசின் செயல்பாட்டை முடக்க சதி செய்கிறார். ஒரு மாநில அரசுக்குத்தான் சம்மந்தப்பட்ட மக்களின் வாழ்நிலை, பண்பாடு, கலாச்சாரம் குறித்துத் தெரியும். சாமானிய மக்களுக்கு என்ன செய்யவேண்டும் என்பதும் மாநில அரசுக்குத் தான் தெரியும். பீகாரில் பிறந்த தமிழக ஆளுநருக்குத் தமிழகத்தின் பண்பாடு, கலாச்சாரம், வரலாறு தெரியாது. ஆளுநர்கள் மாநில அரசுகளின் ஆலோசனைகளை, அமைச்சர்களின் கருத்துக்க ளைக் கேட்க வேண்டியதில்லை என்றால் என்ன ஆகும்? அரசியல் சட்டத்தை அவர்கள் கொன்று வருகிறார்கள். 

முதல்வர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பி னர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள். ஆனால், ஆளுநர் என்பவர் நியமனம் செய்யப்படுப வர். அவருக்கு எந்த அதிகாரமும் கிடையாது. மாநில அரசு நிறைவேற்றும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது தான் அவரது பணி. ஐபிஎஸ் அதிகாரிகள் கூட்டத்தில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, ஒன்றிய-மாநில அரசுகளுக்கு பிரச் சனை என்றால் நீங்கள் ஒன்றிய அரசின் பக்கம் தான் நிற்கவேண்டும் என்கிறார். இது ஆபத்தான பேச்சு. “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப் பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்” என்கிறார் வள்ளுவர்.  பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் எனப் பேசும் ஆளுநர் சனாதனமும் இருக்கும் என்கிறார். தமிழக ஆளுநரின் தவறான நடவடிக்கைகள் குறித்து குடியரசுத் தலைவருக்கு மனு அனுப்பியும் நட வடிக்கை இல்லை. எனவே தான் ஆளுநரின் நட வடிக்கைகளை மக்கள் மன்றத்தில் திமுக வைத்துள் ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சிங்கம் போல் ஆளுநரை எதிர்த்து நிற்கிறார்.

குடியுரிமைச்சட்டம்; புறக்கணிப்படும் முஸ்லிம்கள்

நாடாளுமன்றத்தில் நாங்கள், பாஜக அரசின் மிகமோசமான, இடைவிடாத தாக்குதலை, மோச மான சட்டங்களை  எதிர்த்து, கண்துஞ்சாமல் போராட வும், உழைக்கவும் வேண்டியுள்ளது.  குடியுரிமைச் சட்ட  திருத்தத்தில்  இந்துக்கள், கிறிஸ்தவர்கள் , பார்சிகள் பௌத்தர்கள் சேர்க்கப்பட்டனர். ஆனால் முஸ்லிம்கள் சேர்க்கப்படவில்லை. முஸ்லிம்களையும் சேர்க்க வேண்டும்; சட்டதிருத்தத்தில் வங்கதேசம், பாகிஸ் தான் உள்ளிட்ட ஐந்து நாடுகள் சேர்க்கப்பட்டுள்ளது. இதில் இலங்கையையும் சேர்க்க வேண்டும் என்று நாங்கள் கொடுத்த திருத்தத்தை பாஜக அரசு ஏற்க மறுத்தது.   குடியுரிமைச் சட்டத்திற்கு எதிரான வாக்கெடுப் பில் மாநிலங்களவையில் மசோதாவிற்கு ஆதரவாக 125 உறுப்பினர்களும், எதிராக 105 உறுப்பினர்களும்  வாக்களித்தனர். இது ஒன்றும் பெரிய வித்தியாச மில்லை. இந்தச் சட்டத்தை அதிமுக ஆதரிக்க மறுத்து பாஜக-விற்கு வாக்களித்தது. இல்லையெனில் மசோதா தோற்றிருக்கும். குடியுரிமைச் சட்டத்தை ஆதரித்த கட்சிதான் அதிமுக.

நீட் தேர்வு எனும் விஷம்

தமிழகத்தில் பிளஸ் 2  பொதுத்தேர்வில் ஒரு மாணவி 1,200-க்கு 1,169 மதிப்பெண்கள்  பெற்றாலும் மருத்துவக் கல்லூரியில் சேர முடியாது. ஏனெனில் நீட் தேர்வில் வெற்றி பெற வேண்டும். ஒன்றிய அரசிற்கு மாணவி பெற்ற மதிப்பெண் பற்றி கவலையில்லை. நீட் தான் அவர்களது நோக்கம். இதன் மூலம் பூ விற்கும் தொழிலாளியின் மகளோ, கட்டுமானத் தொழி லாளியின் மகனோ மருத்துவப் படிப்பிற்கு செல்லக் கூடாது என்பதில் கவனமாக உள்ளனர். 

தில்லி அரசின் அதிகாரத்தைப் பறிக்க முயற்சி 

தில்லி மாநில அரசின் நிர்வாக அதிகாரத்தைப் பறிக்கும் சட்டத்தை ஒன்றிய அரசு நடப்பு நாடாளு மன்றக் கூட்டத் தொடரில் கொண்டுவர உள்ளது. இதன் மூலம் அந்த மாநிலத்தின் அதிகாரத்தை பறிக்க முயற் சிக்கிறது. இந்தச் சட்டத்தை ரத்து செய்யவேண்டுமென மாநிலங்களவையில் திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சியினரும் போராடுவார்கள். முடிந்தவரை இந்தச் சட்டத்தை தடுக்க முயற்சிப்போம். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஒன்றிய பாஜக அரசை வீழ்த்தி ஜனநாயகத்தைக் காப்பாற்ற வேண்டும். மாநில எல்கைக்குள் அத்துமீறி வருவ தோடு மதச்சார்பின்மைக்கு மாசு ஏற்படுத்தும் வகை யில் மோடி அரசு செயல்படுகிறது.  2024-நாடாளுமன்றத் தேர்தலில் “இந்தியா” கூட்ட ணியை மக்கள் ஆதரிக்க வேண்டும்.  நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிப்பதற்கும் ஜனநாயகத்தை மீட்பதற்கும் நடைபெறும் தேர்தலில் . “இந்தியா” வின் ஆட்சி மலரட்டும். இந்தியா  தனித்தன்மையோடு விளங்கட்டும். 2024-தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிப் பொறுப்பி ற்கு வந்தவுடன் பொதுப்பட்டியலில் உள்ள கல்வி, மாநி லப் பட்டியலுக்கு கொண்டுவரப்படும் என உறுதிய ளிக்கிறேன்.

தொகுப்பு : ச.நல்லேந்திரன்