articles

img

உணவு கூட சுமையானதா புதுச்சேரி அரசுக்கு? - கோமதி, புதுச்சேரி

1930-ஆம் ஆண்டு பிரெஞ்சு ஆட்சிக் காலத்திலிருந்தே பள்ளிகளில் மதிய உணவு திட்டம் செயல்படுத் தப்பட்ட பெருமை புதுச்சேரியை சேரும். அத்தகைய பாரம்பரியம் கொண்ட  மதிய உணவு திட்டத்தை தனி யாரிடம் தாரைவார்த்து விட்டது புதுவை அரசு. இதற்காக லாஸ்பேட்டையில் அமைந்துள்ள அரசுக்கு  சொந்தமான மத்திய சமையற் கூடத்தை ‘அட்சய பாத்திரா’ பவுண்டேஷனிடம் ஒப்படைத்து நவீன சமையல் கூடம் உருவாக்கப்பட்டு திறப்பு விழாவும் கண்டாயிற்று.  ‘அட்சய பாத்திரா’ தொண்டு நிறுவனம் அர சாங்கம், கார்ப்பரேட் நிறுவனங்கள், கொடையா ளர்கள் மற்றும் பொது மக்கள் ஆகியோரிடமிருந்து நிதி திரட்டி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் ஒரு தனியார் அமைப்பாகும். அரசு பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் திட்டத்தை அரசின் நிதிஉதவி மூலமே இந்நிறுவனம் செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

இவ்வாறு அரசின் நிதியை பெற்று மதிய உணவு வழங்கும் நிறுவனம், தங்களின் மதம் சார்ந்த நம்பிக்கைகளை இத்திட்டத்தில் உட்புகுத்தி வெங்காயம், பூண்டு, முட்டையை தவிர்த்த பார்ப்ப னர் உணவு முறையை திணிப்பது சமத்துவத்திற்கும், சமூக நீதிக்கும் எதிரானது. அதுவும் அரசு துணை யோடு இதனை செய்வது நாடு முழுவதுமே எதிர்ப்ப லையை உண்டு பண்ணியுள்ளது.  தன் சொந்த நிதி ஆதாரத்திலிருந்து செய்யும் தொண்டை அவர்கள் விருப்பப்படி மத நம்பிக்கைக ளுக்குட்பட்டு செய்ய அவர்களுக்கு உரிமை உண்டு. ஆனால், மக்களாட்சியில் மக்களால் தேர்ந்தெ டுக்கப்பட்ட அரசு அளிக்கும் நிதியின் மூலம்  செய்யும் ஒரு திட்டத்தில் அவர்கள் மத நம்பிக்கை களை புகுத்துவது மக்களுக்கு எதிரானது. மேலும், மக்களாட்சியில் மக்களுக்கு செய்ய வேண்டிய கடமையுள்ள அரசு தன் பொறுப்பை கைகழுவி தனி யாரிடம் ஒப்படைக்கும் மனநிலையும் வெறுக்கத் தக்கது.

ஒதுக்கப்படும் நிதி விவரங்கள்

மதிய உணவு திட்டத்தை ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை செயல்படுத்த  ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் 60 க்கு 40 என்ற விகிதத்தில்  நிதியை  பங்கிட்டு வழங்குகின்றன. 2019- 20 ஆம் ஆண்டில் மதிய உணவு திட்டத்திற்காக ஒன்றிய அரசிடமிருந்து 429.70 லட்சங்கள் பெறப்பட்டுள்ளது. மேலும் புதிய சமையல் கூடம் மற்றும் ஸ்டோர் கட்டுவதற்காக உதவித்தொகையாக 2018- 19 ஆம் ஆண்டு ரூ. 94,27,000 ஒன்றிய அரசிடமிருந்து பெறப்பட்டது. ஆனால் புதுவை மாநில அரசு  ஒன்று முதல் எட்டு வகுப்பு மாணவர்களுக்கான  40 சதவிகித  பங்கு சேர்த்து  முன் மழலையர் மற்றும் 9 முதல் 12 வகுப்பு  மாணவர்களுக்கும்  மதிய உணவு திட்டம்  மற்றும் காலை சிற்றுண்டி திட்டத்திற்காக மொத்தம் ரூ.1287.50 கோடி நிதி சென்ற ஆண்டு ஒதுக்கி உள்ளது.  (Source : National programme of MDMS, Annual work plan and Budget 2020- 2021, UT of Pudu cherry)

ஒப்பந்தம் கூறுவதென்ன?

மதிய உணவு திட்டத்தை அட்சய பாத்திரா நிறு வனத்திடம் புதுவை அரசு ஒப்படைப்பதற்கான ஒப்பந்தம் 2018 ஆண்டு கையெழுத்தானது. அவ்வொப்பந்தத்தின்படி, ஒன்றிய அரசிடமிருந்து மதிய உணவுத் திட்டத்துக்காக பெறப்படும் பணத்தை முழுவதுமாக அட்சய பாத்திரா நிறுவனத்திடம் புதுவை அரசு ஒப்படைக்க வேண்டும். அத்தோடு மாநில அரசு இத்திட்டத்திற்காக ஒதுக்கும்  பணத்தில் ஐம்பது சதவிகிதத்தை  வழங்க வேண்டும். அதாவது ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிய உணவிற்கான நிதியை புதுவை அரசும், முன் மழலை யர் மற்றும் 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்க ளுக்கான மதிய உணவு செலவை  அட்சய பாத்திரா வும் பகிர்ந்து கொள்கின்றன. ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான உணவுப் பொருட்கள் தானியங்களை  ஃபுட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா வில் இருந்து பெற்று புதுவை அரசு அட்சயபாத்திரா நிறுவனத்திடம் ஒப்படைக்கும். எஞ்சியுள்ள வகுப்பு களுக்கு அட்சயபாத்திரா வெளி சந்தையில் இருந்து பொருட்களை வாங்கிக் கொள்ள வேண்டும். இந்த ஒப்பந்த காலகட்டம் முடியும் வரை  சமையல் கூடத்தில் ஆட்களை அமர்த்துவதும், பராமரிப்பதும் அட்சய பாத்திராவின் பொறுப்பாகும். இதுவே ஒப்பந்தம்.

புதுவையின் 300 பள்ளிகளில் 50 ஆயிரம் மாணவர்களுக்கு உணவு வழங்கும் பொறுப்பை இந்நிறுவனம் ஏற்றுள்ளது. இதுவரை மதிய உணவுக்காக செலவழித்து வந்த தொகையில்  75 சதவிகித நிதியை அரசும், மீதமுள்ள 25 சதவிகித நிதியை அட்சய பாத்திரா நிறுவனமும் பங்களிக்கும். ஆனால் பொதுமக்கள் பார்வையில்  தனியார் நிறுவனம் தான் மதிய உணவு வழங்கும் மொத்தச் செலவையும் ஏற்பது போல் தெரியும்.  இது ஒரு பக்கம் இருக்கட்டும்.  மேலோட்டமாக பார்க்கும்போது அட்சயபாத்திரா நல்லதுதானே செய்கிறார்கள் என்று தோன்றும். விதவிதமாக உணவுகள், சிறிய அரிசி, சுடச்சுட உணவு, சீல் செய்யப்பட்ட தட்டுகளில் வந்து சேரும். இதன் மூலமாக அரசு பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். இவை போன்ற கட்டுக்கதைகள் பள்ளிகளில் உலாவி வருகின்றன. மக்களை அவர்கள் வாயாலேயே இது நல்லதுதான் என்ற பேசவைப்பது அவர்களின் சாமர்த்தியம் தான். 

புதியதாக திறப்புவிழா கண்ட அந்த சமயல் கூடத்தில் ‘அங்கும், இங்கும், எங்கு திரும்பினும் ஒரே பிரம்மாண்டம்’  என்ற பெருமை பேச்சு வேறு. பெரிய அளவிலான உணவு தயாரிக்கும்  இயந்தி ரங்கள்,  முற்றிலும் சுகாதாரமான முறையில்  பணி புரியும் ஊழியர்கள்,  என்று  ஒரு பிரம்மாண்ட திரைப் படத்தை  விளம்பரப்படுத்தும் விதமாக  அட்சய பாத்திரா திட்டத் துவக்க விழாவை  அரசாங்கம் விளம்பரப்படுத்துகிறது, இது ஏதோ இதுவரை நம்மிடம் இயங்கிவந்த அரசின் மத்திய சமையல் கூடங்கள் தரமற்றதாகவும், சுகாதாரமற்றதாகவும் இருப்பது போன்ற பிம்பத்தை உண்டு பண்ணு கிறது. தனியார் பள்ளிக்கூடங்கள் புதியதாக முளைக்கத் துவங்கிய காலகட்டங்களில் அரசு பள்ளிக்கூடங்களை, சரியாகப் பராமரிக்காமல் விட்டு விட்டு அரசுப் பள்ளிகள்  தரமில்லாதவை  என்ற கருத் துருவாக்கத்தை  மக்கள் மனதில் ஏற்படுத்தியதை மீண்டும் நினைவுபடுத்துகிறது புதுவை அரசு. நவீன இயந்திரங்களை  கொண்டு உரு வாக்கப்பட்ட  மத்திய சமையல் கூடங்கள்  15 ஆண்டு களாக புதுவையில் இயங்கி வருவதை மறைத்து,  ஏதோ தற்போதுதான் நவீன சமையல் கூடத்தை  புதுவை காண்பதுபோல் ஒரு பிம்பத்தை ஏற்படுத்தி  மக்களின்  புத்தியை  மழுங்கடிக்கின்றனர். 

பின்விளைவுகள்

மக்கள் இதில் உள்ள பின்விளைவுகளை யோசிக்க வேண்டும். என்ன பின் விளைவுகள்? அதை  ஒரு  உதாரணத்தின் மூலம் நாம் பார்ப்போம்.  ஒரு அரசு கல்லூரி கேண்டீன் ஆர்டரை ஒரு தனியார் முதலாளி எடுக்கிறார். அந்த முதலாளி சுத்த சைவம் வெங்காயமும் பூண்டும் கூட சேர்த்துக் கொள்ள மாட்டாராம். இதுவரை சைவம், அசைவம் ஆகிய உணவுகளை, நம் கலாச்சாரத்திற்கு ஏற்ப உண்டு வந்த அக்கல்லூரி மாணவர்கள் இனிமேல் கேண்டீன் முதலாளியின் உணவுப் பழக்கத்தைப் பின்பற்ற வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுகிறார்கள். சமுதாயத்திற்காக தனிமனிதன் தன் கொள்கையை மாற்ற மாட்டார்; ஆனால் ஒரு தனிமனிதன் பொருட்டு முழு மாணவ சமுதாயமே தங்களது உணவுப் பழக்கத்தை மாற்றிக் கொள்ளவேண்டும் என்ன நியாயம் இது?  இதுவரை இந்தியாவில் 14 மாநிலங்களிலும் 2 யூனியன் பிரதேசங்களிலும் அட்சய பாத்திரா மூலம் மதிய உணவு திட்டம் அமல் செய்யப்பட்டுள்ளது. இப்பட்டியலில் இனி புதுவையும் வரும். ஏறத்தாழ நாட்டின் பாதி மாநிலங்கள். இன்னும் ஓரிரு ஆண்டு கள் எஞ்சியுள்ள மாநிலங்களும், யூனியன் பிரதேசங்க ளும்  முழுமையாக அட்சயபாத்திராவிடம் ஒப்படைக் கப்பட்டு விடும். 

உணவும் கலாச்சாரமும்

உணவு என்பது மக்களின்  வாழ்க்கை முறை யோடு  ஒன்றிணைந்தது. அதுவும் பள்ளிகளில் வழங்கப்படும் மதிய உணவு என்பது அனைவரும் சமம் என்ற சமத்துவஉணர்வை மாணவர்களிடையே விதைக்கும் உன்னத நோக்கம் கொண்டது. ஏற்கனவே அட்சய பாத்திரா மூலமாக மதிய உணவுத் திட்டம் செயல்படுத்தப்படும் கர்நாடகா, அஸ்ஸாம் போன்ற மாநிலங்களிலும் இதற்கு எதிர்ப்பு வந்த வண்ணமே உள்ளது. இவர்கள் கூடங்களில் சமைக்கப்படும் உணவு சாத்வீக உணவாக உள்ளதா கவும், இதனால் மாணவர்கள் உணவை விரும்பி உண்பது இல்லை என்றும் கூறப்படுகிறது. சில நாட்க ளுக்கு முன்  தொலைக்காட்சியில் தோன்றிய  கன்னடச் சிறுமி ஒருத்தி, “எங்கள் உணவை நீங்கள் தீர்மானிக் காதீர்கள்!”, என்று எழுப்பிய குரல் இன்னும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. இவர்களுடைய உணவுப் பட்டியலில் வெங்காயம், பூண்டு, முட்டை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.பள்ளியில் தரப்படும் ஒரு வேளை உணவை மட்டுமே நம்பி பள்ளிக்கு வரும் மாணவர்களின் பசியைப் பயன்படுத்தி ஒற்றை உணவுக் கலாச்சாரத்தை திணிப்பது நியாயமா? 

இல்லாமல் போகும்  அரசு வேலைவாய்ப்பு

மதிய உணவுத் திட்டம் அரசின் கைவசம் இருந்த வரை அத்திட்டத்தின் கீழ் சமையல் ஊழியர்கள், உணவை பள்ளிகளுக்கு அனுப்பும் ஊழியர்கள், மற்றும் சமயற்கூடங்களுக்கு காய்கறி வினியோகம் செய்யும் பாப்ஸ்கோ நிறுவனம், அதன் ஊழியர்கள் என  அரசு  வேலை வாய்ப்புகள்  மூலம்  பல்லாயிரம் குடும்பங்கள் பிழைத்தன. ஆனால் தனியாரிடம் மதிய உணவு திட்டத்தை ஒப்படைக்கும் இம் முடிவின் மூலம்  அத்துணை அரசு வேலைகளும் ஒழித்துக் கட்டப்படுகின்றன  என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும்.  அரசு வேலை என்ற ஒன்றை அனுபவித்த கடைசி தலைமுறையாக நாம் இருந்து விடுவோமோ என்ற அச்சம் மக்கள் மனதில் தோன்ற வேண்டும். 

தனியார்மயமாதலின்  தீமைகள்

இது ஏதோ ஒரு நிறுவனத்தின் மீது உள்ள வெறுப்பு அல்ல.தனியார்மயமாதலின் பின்விளைவுகளை எடுத்துக்கூறும் எச்சரிக்கையாகும். உள்ளே நுழை யும் போது பவ்வியமாக வரும் தனியார் நிறுவனங் கள், அதிகாரம் பெற்ற பின் தன் சுய ரூபத்தைக் காட்டுவார்கள் என்பதற்கு இன்னும் எத்தனை உதாரணங்கள் தேவைப்படுமோ நம் மக்களுக்கு? ‘கூடாரமும்- ஒட்டகமும்’ கதையை கேட்டதில்லையா; அல்லது பல ஆண்டுகளாக ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்ட வரலாறு போதாதா?  சந்தைக்குள் புதியதாக வரும் போது ரிலை யன்ஸ் நிறுவனமான ஜியோ கட்டணமே இல்லை  என்று உள்ளே நுழைந்தது. ஆனால் கொரோனா காரணமாக இணையம் வழியே கல்வி, வீட்டிலிருந்தே வேலை  என்று இணைய சேவை அதிகமாக தேவைப் படும் இக்கட்டான காலகட்டத்தில்,  மக்களுக்கு தன்னல மற்ற சேவையை வழங்காமல்; ‘எரியும் வீட்டில் பிடுங்கிய மட்டும் லாபம்’ என்ற நோக்கில் ரிலை யன்ஸ் உட்பட அனைத்து தனியார் தொலைபேசி நிறுவனங்களும் தங்கள் கட்டணங்களை வெகுவாக உயர்த்தின என்பதை நாம் மறந்து விடக்கூடாது. இவை அனைத்தும் தனியார்மயமாதலின் ஆபத்து களை உணர்த்தும் குறியீடுகள். நம் அரசாங்கத்திடம் உரிமையாக கேட்டுப் பெற வேண்டிய மதிய உணவை தனியாரிடம் பிச்சை எடுத்து பெற வேண்டிய அவலநிலைக்கு நம் அரசு பள்ளியில் படிக்கும் ஏழை மாணவர்கள் தள்ளப்படுவார்கள் என்ற அச்சமும் நம்மை சூழ்ந்துள்ளது.

பணம் இல்லையேல்  உணவு இல்லை

உலக அரங்கில் கல்வியில் முன்னேறிய பிரிட்டன், யுகே,  பின்லாந்து, நார்வே போன்ற நாடுகளில் மக்க ளுக்கு கல்வியை அளிக்கும் முழு பொறுப்பையும் அரசே ஏற்று நடத்துகிறது.  இதற்கு மாறாக தென்னாப் பிரிக்காவில் கல்வியில் தனியார் தொண்டு நிறுவ னங்களின் (NGO) ஆதிக்கம் மிகுந்து உள்ளது. அதன் விளைவாக அந்நாட்டில் இலவசக் கல்வி என்பது பெயரளவில் மட்டுமே உள்ளது. அரசுப் பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளை படிக்க வைக்க கூட கட்டாயமாக மறைமுகக் கட்டணம் (informal fees) செலுத்த வேண்டிய சூழலில் பெற்றோர்கள் உள்ளனர். ஒட்டு மொத்தமாக பணம் இல்லாமல் கல்வி பெற முடியாத நிலையே தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் உள்ளது. அதுபோல் குறைந்த பட்ச கட்டணம் இல்லாமல் மதிய உணவு இல்லை என்ற நிலை இந்தியாவில் வந்து விடக்கூடாது என்ப தற்கான எச்சரிக்கை தான் இது.

திட்டங்களை தனியாரிடம்  ஒப்படைக்க அரசு எதற்கு?

1991இல் சோதனை முயற்சியாக நவீன இயந்தி ரங்களைக் கொண்டு மத்திய சமையல் கூடம் ஒன்று புதுவையில் உருவாக்கப்பட்டது. 2019ஆம் ஆண்டு 13 மத்திய சமையல் கூடங்கள்; முழுவதும் சமையல் எரிவாயு  இணைப்போடு வெற்றிகரமாக செயல்பட்டு நாட்டிற்கே முன்மாதிரியாக திகழ்ந்தது புதுவை அரசின் மதிய உணவு திட்டம்.  குளறுபடிகளோ, குறைகளோ இல்லாத முன்மாதிரியான திட்டத்தை தனியாரிடம் ஒப்படைக்க என்ன தேவையுள்ளது? இவை அனைத்திற்கும் மேலாக மக்கள் வாக்களித்து மக்களுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிடமிருந்து தான் மக்கள் நலத்திட்டங்கள் வர வேண்டுமே தவிர,  மக்களுக்கு தொடர்பில்லாத ஏதோ ஒரு தனியார் முதலாளி மூலம் நலத்திட்டங்கள் தேவை இல்லை. தரமான மதிய உணவும், கல்வியும் கொடுப்பதை தனியாரிடம் ஒப்படைக்க தான் இந்த அரசு உள்ளதா?அதற்கு எதற்கு அரசாங்கம்? ஆனால் நல்ல தரமான கல்வியும், மருத்துவமும் கொடுத்து மக்களை திடமாக வளர்க்க வேண்டிய அரசு, அவற்றை தனியாருக்கு ஒப்படைத்து பெரும் முதலாளி களை வளர்த்தெடுக்கிறது. 

நாட்டின் எதிர்காலமான மாணவர்களின் உணவு, ஊட்டச்சத்து விஷயங்களை தனியாருக்கு தாரை வார்க்கும் இம்முறையை அரசு உடனடியாக கைவிட வேண்டும்.


 

 



 

;