articles

img

வங்கத்தை மீண்டும் சிவப்பாக்குவோம்! - முகமது சலீம்,

ஏப்ரல் 6 - 10 தேதிகளில் கண்ணூரில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23 ஆவது அகில இந்திய மாநாட்டின் நிறைவாக நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினரும், மேற்குவங்க மாநில செயலாளருமான முகமது சலீம் ஆற்றிய உரை இது. 

காணொலி வழி தொகுப்பு: இரா.சிந்தன்

23ஆவது அகில இந்திய மாநாடு வெற்றிகரமாக முடிந்துள்ளது. நமக்கு பெரும் சவால்கள் இருக்கின்றன. மாநாட்டின் முடிவுகளை நாம் களத்தில் அமலாக்கிட வேண்டும். இந்திய விடுதலையின் 75ஆவது ஆண்டில், நம்முடைய அரசமைப்புச் சட்டத்தின் அடித்தளங்களும், விடுதலைப் போராட்டப் பாரம்பரியமும், மக்களின் ஒற்றுமையும், மதச்சார்பின்மையும், அடிப்படை மனித உரிமைகளும் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளன. இந்தத் தாக்குதலை எதிர்த்து முறியடிப்பதற்கு உறுதி யேற்றுள்ளோம். இந்தப் போராட்டத்தில் நாம் முன் வரிசையில் நிற்போம்.  மோடி அரசாங்கம் மீண்டும் ஆட்சிக்கு வந்த பின்,  ஆர்.எஸ்.எஸ் செயல்திட்டத்தை பாஜக முன்னெடுக்கும் வழிமுறைகள், ஒவ்வொரு நாளும் புதிய புதிய பிரச்சனை களைக் கொண்டுவருகின்றன. மக்களிடையே வெறுப்பினை விதைப்பதும், ஒரு பகுதி மக்களுக்கு எதிராக இன்னொரு பிரிவினரைத் திருப்புவதும் ஒவ்வொரு நாளும் நடக்கிறது. சிறுபான்மை மக்களுடைய தேர்வுரிமை, அது உடை, உணவு, வழிபாடு என அனைத்துமே தாக்குதலுக்கு உள்ளாகிறது. கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் அணிவது ஒரு பிரச்சனையாக ஆக்கப்பட்டது, உ.பி., தேர்தலின் பின்னணியில் தூண்டிவிடப்பட்டது. பெண் கல்வியில் ஒரு  முன்னுதாரணத்தை கேரளம் உருவாக்கியிருக்கும் சூழலில்,  அருகேயுள்ள கர்நாடகத்தில் இஸ்லாமிய இளம் பெண்களு டைய கல்வி உரிமை தாக்குதலுக்கு ஆளானது.

முகமது அக்லக், ஜுனைத் ஆகியோர் கும்பலாக தாக்கிக் கொல்லப்பட்டபோது மாட்டுக்கறி அதற்கு காரணமாகச் சொல்லப்பட்டது. இப்போது நவராத்திரியின் போது, மீன் மார்க்கெட், கறிக்கடைகளை மூட வேண்டும் என்ற பெயரில் வன்முறைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இது தனி  நபர்களுடைய உணவு உரிமையின் மீதான தாக்குதல் அல்லவா?. நாம் சாப்பிடும் உணவை காரணமாகக் கொண்டு நம்மிடையே தாக்குதல்கள் நடக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்.  நான் வங்கத்தில் இருந்து வருகிறேன். திரிபுரா முத லமைச்சர் மாணிக் சர்க்கார் பேசும்போது, திரிபுரா மாநி லத்தின் பாஜக அரசாங்கம் தொடர்ந்து முன்னெடுக்கும் வன்முறை அரசியலைப் பற்றிப் பேசினார். நாங்கள் மேற்கு  வங்கத்தில் இத்தகைய தாக்குதல்களை பத்தாண்டுகளுக் கும் மேலாக அனுபவித்துவருகிறோம்.  நம்முடைய தோழர்கள் கொல்லப்படுவதும், சொத்துக்கள் அழிக்கப்படுவதும், நம் தலைவர்கள் மற்றும் தியாகிகளுடைய நினைவிடங்கள் தாக்கப்படுவதும் ஒவ்வொரு நாளும் நடக்கிறது. பெண்களைக்  கூட  அவர்கள் விட்டுவைக்கவில்லை. இடதுசாரிகள் மட்டுமல்ல, எந்தவொரு விமர்சனக் குரலும் அனுமதிக்கப் படுவதில்லை. ஜனநாயக உரிமைகளை ஒழித்துக்கட்டு வதற்கான ஒரு பரிசோதனைக் கூடமாக மேற்குவங்கம் அமைந்திருக்கிறது. தேர்தல்களில் வேட்பாளர்கள் மனுத்தாக்கல் செய்வதில் தொடங்கி, வாக்கு எண்ணிக்கை வரை ஜனநாயக உரிமைகள் தடுக்கப்படு கின்றன. வெற்றிபெற்ற வேட்பாளர்களை தோற்றதாக அறிவிக்கிறார்கள்.

மேற்குவங்கத்தில், ஒவ்வொரு மாதமும் பெண்களுக்கு எதிரான கொடூரமான வன்முறைகளைப் பார்க்கிறோம். மாணவியர் முதல் வயதான பாட்டி வரையிலும் தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள்.  இப்போதும் கூட, நாடியா என்ற மாவட்டத்தின் எல்லைக் கிராமம் ஒன்றில், மாணவி ஒருவரை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடைய பஞ்சாயத்து உறுப்பினர் உட்பட ஒரு கும்பல் பாலியல் வல்லுறவு கொலை செய்திருக்கிறது. ஆனால் இதுவரை அவர்கள் மீது வழக்கு எதுவும் பதியவில்லை, புகார் பதியவில்லை, மருத்துவப் பரி சோதனை மேற்கொள்ளவில்லை, உடற்கூராய்வு அறிக்கை கூட இல்லை. உடல் இரவோடு இரவாகஎரிக்கப்பட்டுவிட்டது. இதெல்லாம் நடந்தும் எந்த கண்டனக்குரலும் இல்லை.  ஆம், நம் நாட்டில் ‘சவுக்கிதாரே’ திருடராக இருக்கிறார். பொது மக்கள் அச்சுறுத்தலிலேயே வாழும் நிலைமை உள்ளது. மேற்கு வங்கத்தின் காவல்துறையும், நிர்வாகமும் சிதைந்துள்ளது. 

நம்முடைய செந்தொண்டர்கள், இளம் கம்யூனிஸ்டுகள் உடனடியாக களத்திற்குச் சென்றார்கள். இந்தக் கொடூரம் நடந்து 4 நாட்களுக்கு பின், நம்முடைய தலையீட்டின்  காரணமாக பிரச்சனை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இப்போது குற்றத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள் ளார்கள். முதலில் அவர்கள் நம்மை தாக்கத் தொடங்கி னார்கள், இப்போது குறிப்பாக ஒடுக்கப்பட்டவர்கள், சிறுபான்மையினர் மற்றும் பெண்களும்  மாற்றுத்திற னாளிகளும், ஏழைகளும் பாதிக்கப்படுகிறார்கள். நாடியாவில் நடந்த கொடூரமான கொலைபாதகத் தாக்குதலுக்கு ஆளான பெண், நிலமற்ற ஒரு ஏழை விவசாயியின் மகள் ஆவார்.  ஒன்றிய அரசாங்கமோ நம்முடைய பொதுச் சொத்துக் களை விற்பதில் மும்முரமாக இருக்கிறது. மேற்கு வங்கத்தில், மாநில அரசாங்கமோ டிராம் வண்டிப் பாதைகளையும், டிராம் வண்டி நிலையங்களையும் விற்கிறது. இந்தப் போக்கு  ஒவ்வொரு நாளும் நடக்கிறது.

நான் இப்போது ஒரு விசயத்தை உறுதியாகக் குறிப்பிடு கிறேன். நம் முன் இருக்கும் சவால் மிகப்பெரிய ஒன்று.  மேற்குவங்கத்திலும், நாடு முழுவதும் நமக்கு பெரும் சவால்கள் இருக்கின்றன. நாம் நிச்சயமாக நம்முடைய கட்சியை வலுப்படுத்துவோம், நம்முடைய அமைப்பு வலிமை யை கூட்டுவோம், சக்தியை அதிகரிப்போம், மேற்கு வங்கத்தின் இடதுசாரித் தளத்தை மீட்டெடுப்போம். இந்தப் போராட்டத்தில் நாம் நிச்சயம் பெரும் வெற்றியைச் சாதிப்போம் என்ற உறுதியை உங்களுக்கு வழங்குகிறேன். கொரோனா தொற்றுக் காலத்தில் நாம் மக்களுக்கு பேருதவி களைச் செய்தோம்.  மாணவர்கள், விவசாயிகள், தொழிலாளர், பெண்கள் என அனைத்துத் தரப்பு மக்களின் பிரச்சனைகளிலும் நாம் தலையீடு மேற்கொண்டோம். உறுதியான போராட்டத்தை  நடத்திவருகிறோம். நம்முடைய போராட்டம் வெற்றியடைய சில காலம் எடுக்கலாம். ஆனால் நம்முடைய வெற்றி நிச்சயமான ஒன்று.

இந்தக் கட்சியா அல்லது அந்தக் கட்சியா என்பதல்ல, நம் முன் இருக்கும் பிரச்சனை. பிற்போக்கு சக்திகள் அனைத்துமே கைகோர்த்துக்கொண்டு, இடதுசாரி சக்திகளை ஒழித்துக்கட்ட முயற்சிக்கிறார்கள். மேற்கு  வங்கத்தில் இருந்து மார்க்சிஸ்ட் கட்சியை அப்புறப்படுத்த முடியும் என்று நினைக்கிறார்கள். கல்வி நிலையங்கள் தொடங்கி தொழிற்சாலைகள், உள்ளூர் என எங்குமே நம்முடைய நடவடிக்கைகளை முடக்கிப் போடுவதற்கான முயற்சிகள் நடக்கின்றன. அரசியல் நடவடிக்கைகள் தடுக்கப்படுகின்றன. தேர்ந்தெடுக்கப்பட்ட தொழிற்சங்கங் களைச் செயல்பட அனுமதிப்பதில்லை. இதையெல்லாம் செய்து, இடதுசாரிகளை சுவடே இல்லாமல் அழித்திடலாம் என்று முயற்சிக்கிறார்கள். அது நடக்காது. 23ஆவது அகில இந்திய மாநாட்டிற்கு வந்திருக்கும் ஒவ்வொரு பிரதிநிதியும், மிகப்பெரும் உறுதியோடு திரும்புகிறோம். செங்கொடியை யாராலும் வீழ்த்திவிட முடியாது என்ற உறுதியான நம்பிக்கையை இந்த மாநாடு வழங்கியுள்ளது. மக்களின் ஒற்றுமைப்பாடு வெல்லட்டும். புரட்சி வெல்லட்டும். மக்கள் ஜனநாயக புரட்சி வெல்லட்டும்.