articles

img

விபத்தைக் குறைக்க நடவடிக்கையா? மக்களுக்கு தண்டனையா? - கே. ஆறுமுகநயினார்

உலகத்தில் அதிக சாலை விபத்துக்கள் நடைபெறும் நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.  விபத்தைக் குறைக்க வேண்டும் என்பதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது.  சரியான சாலைவசதி செய்யாமல், பொதுப் போக்குவரத்தை முறைப்படுத்தாமல் வாகன உற்பத்தியாளர்களின் வேட்டைக்காடாக நாட்டை மாற்றிவிட்டு விபத்தை தண்டனை மூலம் தடுக்கலாம் என்று கூறுவது வேடிக்கையானது.

மத்தியில் 2014ஆம் ஆண்டு பாஜக ஆட்சியைக் கைப்பற்றி மோடி பிரதமர் ஆனார்.  மோடி ஆட்சிக்கு வந்தது முதல் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாக பல்வேறு  சட்டத்திருத்தங்களை மேற்கொண்டார்.  முதலில் மோடி அரசு கை வைத்தது மோட்டார் வாகன சட்டத்தில். 1988ஆம் ஆண்டு முதல் அமலில் இருந்த மோட்டார்  வாகன சட்டத்திற்குப் பதிலாக “சாலை போக்கு வரத்து பாதுகாப்பு மசோதா” என்ற பெயரில் புதிய  சட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டது. மோட்டார் தொழிலை முற்றிலும் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் அடிப்படையில் கொண்டுவரப்பட்ட இம்மசோதாவிற்கு எதிராக நாடு தழுவிய அளவில் போராட்டம் நடைபெற்றது.  இந்திய  வரலாற்றில் முதல் முறையாக 2015ஆம் ஆண்டு நாடுதழுவிய அளவில் மோட்டார் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் நடைபெற்றது.  3 கோடி தொழிலாளர்கள் பங்கேற்றனர். கடும் எதிர்ப்பை சந்தித்த மோடி அரசு புதிய திருத்தங்களுடன் 4 முறை சாலைப்போக்குவரத்து பாது காப்பு மசோதாவை சட்டமாக்க முயற்சித்தது.  கடும்  எதிர்ப்பு எழுந்த காரணத்தால், மோட்டார் வாகனச் சட்டம் (1988ல்) திருத்தங்களை செய்ய நடவடிக்கை எடுத்தது.  இதற்கும் கடுமையான எதிர்ப்பு ஏற்பட்டது.   போராட்டங்கள் காரணமாக முதல் 5 ஆண்டுகளில் ஒன்றிய அரசால் மோட்டார் வாகன சட்டத்தை திருத்த முடியவில்லை. 2019இல் பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்த வுடன் மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தங்களை செய்தது பாஜக அரசு.

நிறைவேற்றிய சட்டம் முழுமையாக அமலுக்கு வரவில்லை

2019இல் நிறைவேற்றப்பட்ட மோட்டார் வாகனச் சட்டத்தில் 92 திருத்தங்கள் செய்யப்பட்டன.  சட்டம் நிறைவேறி 3 ஆண்டுகள் முடியும் நிலையிலும் முழு  திருத்தங்களும் அமலுக்கு வரவில்லை.  பகுதி பகுதி யாக சட்டத்தை அமலாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.   முழுச் சட்டம் அமலாகும்போது வண்டிகளின் பதிவு, புதுப்பித்தல் சான்று (எப்சி) ஓட்டுநர் உரிமம்  வழங்குவது அனைத்தும் தனியார் கைக்கு சென்று விடும்.  அரசு போக்குவரத்து அழிக்கப்படும்.  ஆட்டோ,  டாக்சி, லாரி, டூரிஸ்ட்வேன், சிறிய சரக்கு வாகனம், பழுது பார்க்கும் பட்டறைகள் ஆகியவற்றை சொந்தமாக வைத்து சுயதொழில்புரிவோர் அனைவரும் கார்ப்பரேட்களின் கூலி அடிமையாக மாற்றப்படுவர்.  தற்போது வாகனம் ஓட்டும் அனைத்து உரிமங்களும் (டிரைவிங் லைசென்ஸ்) ரத்து செய்யப்பட்டு கார்ப்பரேட் நிறுவனங்களிடம் புதிய உரிமம்பெறும் சூழல் கட்டாயம் ஏற்படும்.  இவையெல்லாம் கற்பனை அல்ல.  மோட்டார்  வாகன சட்டத்திருத்தம் (2019) மூலம் மேற்கொண்ட  அனைத்தையும் செய்ய முடியும்.  எனவே  மோடி அரசின் 2019 சட்டத்திருத்தம் அனைத்துப்பகுதி மக்களும் ஒன்றிணைந்து எதிர்க்கவேண்டிய சட்டம்.

அமலுக்கு வந்துள்ள  அபராத முறை

இந்த சட்டத்திருத்தத்தில் உள்ளபடிதான் அபராதம்  வசூலிப்பது என தமிழக அரசு முடிவு செய்து 19.10.2022ஆம் தேதி அரசாணை பிறப்பித்துள்ளது.  20.10.2022ஆம் தேதி முதல் புதிய அபராத முறை அமலுக்கு வரும் என அரசாணையில் குறிப்பிட்டுள்ளது.

அபராதத்தை உயர்த்தினால் விபத்து குறையுமா?

விபத்தைக் குறைக்க வேண்டுமெனில் அமெரிக்கா, சிங்கப்பூர், கனடா போல் அபராதத்தை  உயர்த்த வேண்டும் என்று கூறி ஒன்றிய சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின்கட்கரி சட்டத்திருத்த த்தை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தினார். உலகத்தில் அதிக சாலை விபத்துக்கள் நடைபெறும் நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.  விபத்தைக் குறைக்க வேண்டும் என்பதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து இருக்க முடி யாது.  சரியான சாலைவசதி செய்யாமல், பொதுப்  போக்குவரத்தை முறைப்படுத்தாமல் வாகன உற்பத்தி யாளர்களின் வேட்டைக்காடாக நாட்டை மாற்றிவிட்டு விபத்தை தண்டனை மூலம் தடுக்கலாம் என்று கூறுவது வேடிக்கையானது. சிறிய உயிரினம்கூட வாகனத்தின் முன் சென்றால்  விபத்து ஏற்படக் கூடாது என்ற எண்ணத்தில்தான் அனைவரும் வாகனத்தை இயக்குகின்றனர்.  அதையும் மீறி விபத்து நடக்கிறது என்றால் விபத்தைத்  தடுக்க நவீன உத்திகளை அரசு கையாள வேண்டும். தண்டனையை அதிகப்படுத்தினால் விபத்து குறை யும் என்பது விஞ்ஞானத்திற்குப் புறம்பானது.

அதீத தண்டனைகள்

போக்குவரத்து விதியை முறைப்படுத்த தண்டனை வழங்குவது தவிர்க்க முடியாது.  ஆனால்,  இப்போது முன்மொழியப்பட்டுள்ள தண்டனை அநியாயமானது.  பொது இடத்தில் ஆபத்தான முறை யில் வாகனத்தை நிறுத்தினால் அபராதம் ரூ. 1500/-.   ஆபத்தான முறை என்றால் எது என்பதை காவல்துறை யும், போக்குவரத்து அதிகாரிகளும் தான்முடிவு செய்வர்.  அதிகாரி லைசென்ஸ் கேட்டு கொடுக்க முடிய வில்லை என்றால் அபராதம் ரூ. 1500/-, அதிகாரி களுக்கு கீழ்ப்படியாவிட்டால் அபராதம் ரூ. 2000/, வண்டியை வேகமாக ஓட்டினால் ரூ. 10,000/.  இதுபோல் 46 குற்றச்செயல்கள்  வரையறை செய்யப்பட்டு அனைத்திற்கும் தண்டனை முன்மொழியப்பட்டுள்ளது.  குறைந்தபட்சம்  ரூ. 1000/-,  அதிகபட்சம் ரூ. 40,000/- வரை.

குற்றத்தை தீர்மானிப்பவரே தண்டனை வழங்கலாம்  (ஸ்பாட் பைன்)

குற்றம் சுமத்துபவரிடமே தண்டனை வழங்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.  ‘நீ வேகமாக சென்றாய்’  என்று குற்றம் சுமத்தும் ஒரு காவல்துறை அதிகாரி  அவரிடம் அபராதத்தை வசூலிக்க முடியும்.  காவல்துறை அதிகாரிகளும், வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகளும் குற்றத்தைக் கண்டுபிடித்து எவ்வித விசாரணையும் இன்றி உடனே தண்டனை வழங்கும் அதிகாரத்தையும் கொடுக்கின்றது சட்டம். இதுபோன்ற நடைமுறை விபத்தைக் குறைக்காது.  ஊழலுக்கும், முறைகேடுகளுக்குமே வழிவகுக்கும்.  

தமிழக அரசு இப்போது சட்டத்தை அமலாக்க ஏன் முடிவு செய்தது?

2019ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட இச்சட்டம்  3 ஆண்டுகளாக தமிழகத்தில் அமல்படுத்தப்பட வில்லை.   ஒன்றிய அரசு சட்டத்தை நிறைவேற்றினா லும், மாநில அரசு அரசாணை வெளியிட்டால்தான் அம லுக்கு வரும்.  நாடாளுமன்றத்தில் இச்சட்டத்திருத்தம் முன்மொழியப்பட்டபோது திராவிட முன்னேற்ற கழகம் எதிர்த்து வாக்களித்தது.  தமிழகத்தில் சட்டத்திருத்தத்திற்கு எதிரான போராட்டத்தில் திமுகவின் தொழிற்சங்கப்பிரிவான எல்பிஎப்பும் இணைந்து போராடியது.  அப்படிப்பட்ட பாதிப்பை ஏற்படுத்தும் சட்டத்தை அரசாணை போட்டு அடுத்த  நாளே அமல்படுத்த வேண்டிய தேவை என்ன வந்தது? அரசு கொள்கை ரீதியாக முடிவு செய்ய வேண்டிய பல விஷயங்களை அதிகாரிகள் தான்தோன்றித்தனமாக செயல்படுத்தி வருகின்றனர்.  இது தமிழக மக்களுக்கு மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதுடன், அரசின் மீதான அதிருப்தியை யும் அதிகப்படுத்தும்.  எனவே தமிழக அரசு வெளி யிட்டுள்ள அரசாணையைக் கைவிட வேண்டும்.

அப்பாவிகளுக்கு மட்டும்தான் சட்டமா?

புதிய மோட்டார் வாகன சட்டத்திருத்தங்கள் அமலாக்க உத்தரவிட்டுள்ள அதிகாரிகள் இருக்கும் சட்டத்தை ஒழுங்காக அமலாக்கியுள்ளனரா?  இரு சக்கர வாகனங்கள் சொந்த உபயோகத்திற்கானது.  ஆனால் ரேபிட்டோ நிறுவனம் இதற்கென ஆப் தொடங்கி இருசக்கர வாகனத்தை டாக்ஸி போல்  வாடகை வாகனமாக பயன்படுத்துகிறது.  பகிரங்க மாக செயல்படும் இந்த சட்டவிரோத நடவடிக்கையை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?  ஒப்பந்த ஊர்திகளாகப் பயன்படுத்த வேண்டிய ஆம்னி பேருந்துகள் அரசு பேருந்துகளுக்கு எதிராக டிக்கெட் போட்டு பயணிகளை ஏற்றுவதைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?  ஆட்டோ, டாக்ஸி போன்ற நிறு வனங்களில் கட்டணம் நிர்ணயம் செய்யும் உரிமை அரசுக்கே உள்ளது.  ஓலா, ஊபேர் போன்ற நிறு வனங்கள் கட்டணம் நிர்ணயித்து கமிஷன் கொள்ளை  அடிக்கின்றனர்.  இணையம் மூலம் அக்கிரிகேட்டராக செயல்படும் நிறுவனங்கள் அரசிடம் உரிமம் பெற  வேண்டுமென புதிய சட்டத்திருத்தத்தில் கூறப் பட்டுள்ளது.  ஓலா, ஊபேர் நிறுவனங்கள் உரிமம் பெறா மல் செயல்படுவதை தடுக்க முயற்சித்தார்களா? கார்ப்பரேட் நிறுவனங்களும், பெருமுதலாளி களும் சட்டத்தை எப்படி வேண்டுமானாலும் வளைக்கலாம்.  அப்பாவிகளுக்குத்தான் தண்டனை. எனவே மோட்டார் வாகன சட்டத்திற்கு எதிராக தொடர் போராட்டங்களை முன்னெடுப்போம்.

கட்டுரையாளர் : தலைவர், தமிழ்நாடு சாலைப்போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனம்