articles

img

சிங்கமும், புலியும் சண்டையிட்டால்? - கணேஷ்

ஆசிரியர் உள்ளே நுழைந்தவுடன், “சார்.. சார்..” என்று சில குரல்கள் போட்டி போட்டுக் கொண்டு எழுந்தன. 
“என்ன ஆச்சு?”
“சார்.. இவன்தான் முதல்ல அடிச்சான்” என்று ஒரு மாணவன் தொடங்க, மற்றொருவர், “இல்ல சார்..” என்று சொல்ல, வேறு சிலர், “காலைலருந்து சண்டைதான்” என்றனர்.
மாணவிகள் சிலர், “ஆமா... இதுல ஒருத்தன் சிங்கமாம், இன்னொருத்தன் புலியாம்..” சிரிப்பொலிகள் கிளம்பின.
“சிங்கமும், புலியும் சண்டை போட்டா யார் ஜெயிப்பாங்க” என்று ஆசிரியர் கேட்டார்.
சிலர் சிங்கம், சிலர் புலி என்றனர்.
ஒரு மாணவர், “சிங்கம்தான காட்டுக்கு ராஜா.. அதுதான் ஜெயிக்கும்..”
“ராஜானு சிங்கத்துக்குத் தெரியுமா” என்று ஒரு மாணவி கேட்டவுடன் மீண்டும் சிரிப்பொலிகள்.
அதற்குள் சண்டை போட்ட “சிங்கம்” மாணவர், “நான் ஆம்புளை சிங்கம்” என்று சட்டை காலரைத் தூக்கி விட்டுக் கொண்டிருந்தார். 
ஆசிரியர் ஏதோ சொல்லத் தொடங்குவதற்குள், மாணவி ஒருவர் “ஆம்புளை சிங்கம் சோம்பேறி. வேட்டைக்குப் போகாது. பெண் சிங்கம்தான் வேட்டைக்குப் போகும்.. அப்புடித்தான சார்”.
“ஆனா, சூப்பர் ஸ்டார்கூட சிங்கத்தப் பத்திதான் டயலாக் அடிச்சுருக்காரு”... “சிங்கம்” மாணவர்.
“சார்.. நீங்க ஏற்கனவே சொல்லிட்டீங்க... இவன் அன்னிக்கு வீட்டுல சண்டை போட்டுட்டு ஸ்கூலுக்கு வரல..”
தொடர்ந்த மாணவி “அவர் சொன்னது தப்பு... சிங்கம் சிங்கிளா வராது... குடும்பத்தோடதான் வரும்... அம்மா சிங்கம் வேட்டைக்குப் போனா, குட்டிகளும் கிளம்பிரும்..”
அவரே, “ரெண்டும் சண்டை போட்டா யாரு ஜெயிப்பாங்கன்னு சொல்லலியே, சார்..”
“சிங்கமும், புலியும் ஒரு காட்டுல இருக்காது... உலகத்துல இந்தியாவுல மட்டும்தான் ஒரே காட்டுல ரெண்டும் இருக்கு.. மற்றபடி, விலங்குகள் சரணாலயத்துல மட்டும்தான் ரெண்டையும் ஒரே இடத்துல பாக்க முடியும்.”
“புலிதான் நல்லா ஓடும்... என்ன சார்” என்று  “புலி” மாணவர் கேட்டவுடன், “டேய்.. புலி... விட்டா புலிதான் காட்டுக்கு ராஜான்னு சொல்லிருவியே..” பாய்ந்தனர் சிலர். 
“புலிக்குதான் நகம் ரொம்ப வலுவா இருக்கும்... பாய்ஞ்சு பிராண்டுனா சிங்கமே தாங்காது” என்றார் மாணவி ஒருவர்.
“அந்த நகங்கள்தான் புலிகளுக்கு மரம் ஏற உதவுது. மரத்தண்டுகள நல்லாப் பிடிச்சுக்க வசதியா இருக்கும்..”
“ஆமா சார்... புலி மரத்து மேல உக்காந்துருக்குற மாதிரி படங்கள் பாத்துருக்கோம்... ஆனா, சிங்கத்துக்கு அந்த மாதிரி படங்கள் இல்ல..”
“எல்லாப் புலிகளாலயும் மரம் ஏற முடியும்... ஆனா எல்லா சிங்கத்தாலயும் ஏற முடியாது”
“புலி” மாணவர் சிரித்துக் கொண்டே “அப்போ சண்டைனா நான்தான் ஜெயிப்பேன்” என்றார்..
அதைக் கண்டுகொள்ளாத மாதிரி, “ரெண்டும் சண்டை போட்டுச்சோ இல்லையோ... போட்டி மாதிரி ஒண்ணு நடந்துச்சு... நம்ம நாட்டோட தேசிய விலங்கு எது?”
“புலி... வங்கப்புலி”
“ஆமா... அதுக்கு முன்னாடி சிங்கம்தான் தேசிய விலங்கா இருந்துச்சு..” 
“ஓ... நம்ம தேசிய விளையாட்டு ஹாக்கிதான சார்... ஆனா, கிரிக்கெட்டுதான் நிறைய விளையாடுறோம்..”
“அதிகாரபூர்வமா நமக்கு தேசிய விளையாட்டுனு ஒண்ணு இல்ல... தேசிய மலர் தாமரை, தேசிய மரம் ஆலமரம்னு நிறைய சொல்றோம்.”
“சார்... குவிஸ் போட்டில கூட கேட்டாங்க சார்... அப்புடி ஒண்ணு இல்லனு எப்புடி சொல்றது..”
“சில சமயம் அவங்க எதிர்பார்க்குறத சொல்றதுல தப்புல்ல.. ஒரு சினிமாவுல சந்தானம் சொல்வாரு... இது எங்க தாத்தா புலிய வெட்டுறப்ப எடுத்த படம்னு... கார்த்தி நம்ப மாட்டாரு... நானும் முதல்ல நம்பல... நம்புனாத்தான் சோறுனு சொன்னாங்கனு சந்தானம் சொல்வார்..”
“அதுமாதிரி குவிஸ் போட்டில மார்க் வேணும்னா, அவங்க நினைக்குறத சொல்லிரணும்... சரியா சார்” என்றார் “சிங்கம்” மாணவர்.
“பரிசு வாங்குறப்ப மேடைல அதச் சொல்லலாம்” என்று மாணவி சொன்னதை ஆமோதித்தார் ஆசிரியர்.
“சார்... சிங்கமா... புலியா.. எது ஜெயிக்கும்னு சொல்லவேயில்ல..” என்று மாணவி விடாமல் கேட்டபோது, “ரெண்டு பேரும் சண்டையே போட மாட்டோம்.. போதுமா” என்று “சிங்கமும்”, “புலியும்” கை குலுக்கினார்கள்.
மணியும் அடித்தது.