குடும்ப வன்முறையைத் தடுக்கச் சட்டம் இயற்றியும் தடுக்க இயலாமல் தவிக்கும் சமூகமாக நாம் இருக்கிறோம். ஏன்? பெண்கள் மீது வன்முறை செலுத்தும் ஒரு பண்பாட்டில் நாம் வளர்க்கப்பட்டிருக்கிறோம். ஆகவே, அது வெகு இயல்பாக நம் அன்றாட வாழ்வின் பகுதியாக இயங்கி வருகிறது. நீண்ட காலப் பழக்கம்தான் பண்பாடாக மாறுகிறது என்பார்கள். குடும்ப வாழ்வில் பெண்கள் மீது வன்முறை செலுத்துவதில் நீண்டகால பழுத்த அனுபவமும் அதில் ஒரு ருசி காண்பவர்களாகவும் நாம் வளர்ந்திருக்கிறோம். நம் சமூகத்தில் எண்ணிறந்து காணப்படும் நாட்டுப்புறப் பெண் தெய்வங்களின் தோற்றக் கதைகளே அதற்குச் சாட்சியாகத் திகழ்கின்றன. நாட்டுப்புறத் தெய்வங்கள் என்பவை நம்மோடு வாழ்ந்து மறைந்த மனிதர்களும் மனுசிகளும்தான். அவர்கள் இறந்த பின் அவர்களின் நினைவாக நடுகல் நட்டோ அல்லது பீடம் எழுப்பியோ வழிபடப்படுபவை.
பெரும்பாலான இப்பெண் தெய்வங்கள் குடும்பத்தாராலேயே கொல்லப்பட்டவர்கள். கொன்ற பாவத்தைத் தொலைக்க அவர்களைத் தெய்வமாக்கித் தலைமுறை தலைமுறையாக வழிபடும் மரபு நம்மிடம் மிகப் பரவலாக உள்ளது. இத்தெய்வங்களைக் ‘‘கொலையில் உதித்த தெய்வங்கள்’’ என்று ஆ.சிவசுப்பிரமணியன் குறிப்பிடுவார். சாதி மறுத்துக் காதலித்த ‘குற்றத்துக்காக’க் கொலை செய்யப்பட்ட மதுரைவீரன், காத்தவராயன். பட்டவராயன் போலப் பல சாமிகள் ஒருபுறம் இருக்க, குடும்பங்களில் அற்பக் காரணங்களுக்காகக் கொல்லப்பட்ட, தற்கொலை செய்து கொண்ட பெண்கள் தெய்வமாக்கப்பட்ட கதைகளும் உண்டு.
இரண்டு கதைகளை இரு சோற்றுப் பதமாக இங்கே பார்க்கலாம். பாளையங்கோட்டை ஒன்றியத்திலுள்ள கொங்கந்தான் பாறை கிராமத்தில் மணிமுத்து என்கிற பெயர் கொண்ட பெண்கள் அதிகம் இருப்பதைக் கண்டு, என்ன கதை என்று கேட்கப் போனோம்.மூன்று தலைமுறைகளுக்கு முன்பாக அந்த ஊரில் மணி முத்தம்மாள் என்றொரு பெண் இருந்தாள். அவள் ஒருநாள் குளத்திற்குக் குளிக்கப் போயிருக்கிறாள். குளித்துவிட்டு ஈரப்புடவையுடன் வீடு திரும்பியிருக்கிறாள். வீட்டுக்குள் அவள் நுழையும் நேரம் நடுவீட்டில் அவளுடைய கணவனும் கொழுந்தனும் உட்கார்ந்து பேசிக் கொண்டி ருந்திருக்கிறார்கள். அவள் படியேறியபோது தன் காலில் ஏதோ ஒட்டிக் கொண்டிருப்பதைக் கவனித்து அதை நீக்குவதற்காகக் காலை உதறியிருக்கிறாள். அதைப்பார்த்த அவள் கணவ னுக்குக் கோபம் இன்னமட்டு என்றில்லாமல் வந்துவிட்டது. அவன் வேகமாக எழுந்து வந்து “இரண்டு ஆண்கள் பேசிக் கொண்டிருக்கும் போது எங்களைப் பார்த்து நீ காலை ஓங்கி என்னையும் என் தம்பியையும் அவமதித்து விட்டாய்” என்று கத்தி, உள்ளே போய் உளியும் கொட்டாப்புளியும் எடுத்துவா என்று சொல்லியிருக்கிறான். கொட்டாப்புளி என்பது 5 கிலோ எடை உள்ள ஆயுதம். அவளும் மறுபேச்சுப் பேசாமல் எடுத்து வந்து கணவனிடம் கொடுக்க, அவன் அதை வாங்கிய கையோடு ஓங்கி அவள் தலையில் அடித்தான். அந்த இடத்திலேயே அவள் கீழே விழுந்து மரித்தாள். சாவதற்கு முன்னால், “இனி ஏழு தலைமுறைக்கு உனக்கும் உன் வம்சத்துக்கும் பெண் குழந்தைகளே பிறக்காது” என்று சொல்லிவிட்டுச் செத்துப் போனாள்.
அதன் பிறகு அந்தக்குடும்பத்தில் இருந்த பெண்களுக்கு அடிக்கடி சுகமில்லாமல் போனது.அவள் சபித்ததுபோல அவர்கள் குடும்பத்தில் யாருக்கும் பெண் குழந்தைகளே பிறக்கவில்லை. கவலை கொண்ட குடும்பத்தார் குறி கேட்கப் போனார்கள். குறி சொல்பவர் மூலம் மணிமுத்தம்மாள் வந்து “எனக்கு பீடம் அமைத்து வழிபாடு செய்து கொடை கொடுங்கள். எல்லாம் சரியாகும்” என்று சொல்லியிருக்கிறாள். அதன்படி, ஒவ்வொரு ஆடி மாதம் இரண்டாம் வெள்ளியன்று கொடை கொடுத்து வருகிறார்கள். இப்போது, குடும்பத்தில் பெண் குழந்தைகள் பிறந்து தங்குவதாகக் கூறுகிறார்கள்.
(கதை சொன்னவர் : பெரியசாமி ஆசாரி, கொங்கந்தான் பாறை சேகரித்தவர் : ஹெப்சிபா சாம்)
இரண்டாவது கதை 1980ஆம் ஆண்டு நடந்தது.விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு பகுதியில் சீனியம்மாள் என்னும் இளம்பெண் வாழ்ந்து வந்தாள். ஒருநாள் சீனியம்மாள் வீட்டில் தனியாக இருக்கும்போது, வீட்டிற்கு வெளியே சில அடி தூரத்தில் சில ஆண்கள் கூடி நின்று சிரித்துச் சிரித்து அவர்களுக்குள் பேசிக் கொண்டிருந்திருக்கிறார்கள். அப்போது, வேலை முடிந்து வீடு திரும்பிய சீனி அம்மாளின் அண்ணன் “நல்ல பொம்பளப்பிள்ளை குடியிருக்கிற வீடு மாதிரி இது தெரியலியே. கண்ட கண்ட ஊர்ப்பயக எல்லாம் சிரிக்கிறாப்பிலே இல்ல இருக்கு” என்று கோபமாகவும் சாடையாகவும் பேசியிருக்கிறான். தன்னைத்தான் அண்ணன் இப்படிக் கேவலமாகப் பேசுகிறான் என்பதைப் புரிந்துகொண்டு, மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டாள். பிறகென்ன அவள் இறந்த இடத்தில் வீட்டுச் சுவரில் படம் வரைந்து அவளைத் தெய்வமாக வழிபடத் தொடங்கினர். அவளை வணங்கியதால் நன்மை கிடைப்பதைப் பார்த்துப் பின்னர் ஊராரும் அவளை வழிபடலாயினர். அவள் காப்பியில் சீனி அதிகமாகப் போட்டுக் குடிப்பவளாகையால் அவளுக்குக் கிண்ணத்தில் சீனியையே படையல் பொருளாக வைத்து வணங்க ஆரம்பித்தனர். (சாமிகளின் பிறப்பும் இறப்பும் -2011 : ச.தமிழ்ச்செல்வன்) மேற்சொன்ன இரு கதைகளிலும் ஆண்களின் மனதில் தோன்றிய தப்பான ஒரு எண்ணம் அல்லது சந்தேகம் இப்பெண்களின் கொலை/தற்கொலைக்குக் காரணமாக அமைந்துவிட்டதைக் காண்கிறோம். இதுபோலக் கதைகள் நூற்றுக்கணக்கில் அல்ல, ஆயிரக்கணக்கில் இருக்கின்றன. தொகுக்கத் தொகுக்கப் பலப்பல தொகுதிகளாக வந்துகொண்டே இருக்கின்றன. இக்கதைகளுக்கு ஊடாகத் தமிழ்ச் சமூகத்தில் பெண்களின் வரலாறு ஒன்று ரத்தச் சகதியுடன் மேலெழுந்து வருவதைக் காண முடியும்.
தாங்கள் நினைத்தபடி தம் வீட்டுப் பெண்கள் இருக்க வேண்டும். அதில் சின்ன மீறல் இருந்தாலும் அவளைக் கொலை செய்யும் உரிமை தமக்கு உண்டு என்கிற சிந்தனை ஆண்களின் மண்டைக்குள் எப்படி ஏறியது? அம்மீறலுக்கு அவள் காரணமாக இல்லாமல் இருக்கலாம்.ஒரு பாவமும் அறியாதவளாகக் கூட அவள் இருக்கலாம். ஆனால் ஆணின் மண்டைக்குள் சந்தேகம் வந்து விட்டதானால் அவளுக்குச் சாவுதான் என்கிற நியாயம், என்னவகை நியாயம்? மணிமுத்தம்மாள் சாவதற்கு முன்னால் “உங்கள் வம்சத்தில் இனிப் பெண் குழந்தையே பிறக்காது” என்று சாபமிட்டுப் போகிறாள். அப்பாவிப் பெண்களால் வேறு என்னதான் செய்துவிட முடிகிறது நம் சமூகத்தில். உயிரோடு இருந்தால் கொஞ்ச நேரம் திட்டலாம்.மண்னை வாரித் தூற்றலாம். அதற்குமேல் ஒன்றும் செய்ய முடியாது.சாவு நிச்சயம் என்று ஆகிவிட்ட தருணத்தில் சாபம்தான் கொடுக்க முடியும். அதுவும் எப்படிப்பட்ட சாபம்? உனக்குப் பெண் வாரிசு கிடையாது என்று. ஏன் அப்படியான சாபம்?
பெண்ணை வைத்து வாழத்தெரியாத ஆண் முண்டமே உனக்கெல்லாம் எதற்கடா பெண் வாரிசு என்கிற வயிறெரிந்த சாபம் அது. இந்தியனாகப் பிறந்த ஒவ்வொரு ஆணின் முகத்திலும் வீசப்பட்ட திராவக வார்த்தைகள் அவை. ஆனாலும் நாம் என்ன கோபப்பட்டுத் திருந்தி விடவா போகிறோம்? பெண்கள் வாழத்தகுதியற்ற நாடு என்கிற பெருமிதத்தை இந்தியா பெற்று மிளிர, தேசத்தை உந்தித்தள்ளிக் கொண்டிருப்போம். சீனியம்மாளைப் போல ஒரு பாவமும் அறியாப் பெண்கள், சாபம் கூட விடத் தெரியாதவர்கள்.தான் உண்மையானவள் என்பதைத் தன் வீட்டு ஆண்களுக்கு நிரூபிப்பதற்காகச் செத்துப்போனவர்கள். சீனியம்மாக்களின் மௌனம் வீட்டாரைக் கொல்வதால் அவளைத் தெய்வமாக்கிச் சாந்தப்படுத்த முயற்சிக்கிறார்கள். மணிமுத்தம்மாளும் சீனியம்மாளும் இட்டுக்கட்டப்பட்ட இதிகாசப் பாத்திரங்கள் அல்லர். சற்று முன்னால் நம்மோடு வாழ்ந்து மடிந்த ரத்தமும் சதையும் உள்ள மனுசிகள். ஏதோ சில பழந்தெய்வங்களின் பழங்கதைகள் இவை என்பதுபோல சாதாரணமாக இவற்றை வாசித்துக் கடக்க முடியவில்லை. அதே சமூகத்தின் தொடர்ச்சிதான் நாம் என்கிற குற்ற உணர்ச்சியில் குறுகிப் போகிறோம். இன்னும் எத்தனை அம்மன்கள்!
எத்தனை சாபங்கள்!