ஐக்கிய நாடுகள் மன்றம் பிரகடனம் செய்தபடி உலகப் பத்திரிகை சுதந்திர நாள் (The World Press Freedom Day), மே 3 அன்று அனுசரிக்கப்பட்டது. இதனுடன் ஒத்துப்போகக்கூடிய விதத்தில், உலகப் பத்திரிகை சுதந்திரம் எந்த லட்சணத்தில் இருக்கிறது என்பதைக் காட்டும் விதத்தில், ‘எல்லைகளில்லா நிருபர்களால்’ (Reporters without Borders), ‘உலகப் பத்திரிகைச் சுதந்திர அட்டவணை’ அன்றைய தினம் வெளியிடப்பட்டது. அதன்படி, மொத்தம் உள்ள 180 நாடுகளில், 2021இல் 142ஆவது இடத்தில் இருந்த இந்தியா, இந்த ஆண்டு 150க்குத் தள்ளப்பட்டுள்ளது. 2016இல் இந்தியா 133ஆவது இடத்தில் இருந்தது. மோடி அரசாங்கத்தின்கீழ் ஊடக சுதந்திரம் தொடர்ந்து சீர்கேடு அடைந்து வருவதையே இந்த அட்டவணைப் பதிவு செய்திருக்கிறது. ‘எல்லைகளில்லா நிருபர்கள்’ வெளியிட்டுள்ள அறிக்கை இந்தியாவில், ஊடக உடைமையாளர்களும், ஊடகங்களும் பெருமளவில் அரசியல் ரீதியாக ஆட்சியாளர்கள் பக்கம் சாய்ந்திருப்பதால், ஊடகவியலாளர்கள் மீதான வன்முறைத் தாக்குதல்கள் அதிகரித்திருக்கின்றன என்றும் இவ்வாறு பத்திரிகைச் சுதந்திரம் நெருக்கடியில் இருக்கிறது என்றும் குறிப்பிட்டிருக்கிறது.
பொய் வழக்கு, சிறை
மோடியின் ஆட்சியின் கீழ் பத்திரிகை சுதந்திரமும், சுதந்திரமான ஊடகச் செயல்பாடும் கடும் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கின்றன. ஆட்சி யாளர்களால் ஊடகங்கள் மிரட்டப்படுவது முத்திரை பதித்த அம்சமாக மாறியிருக்கிறது. பத்திரிகையாளர்களுக்கு எதிராகவும், பத்திரிகை ஆசிரியர்களுக்கு எதிராகவும் பொய் வழக்குகள் புனையப்படுகின்றன. பாஜக ஆளும் மாநிலங்களிலும், தில்லியை அடிப்படையாகக் கொண்டு இயங்கிடும் ஊடகமும் பத்திரிகையாளர்களை நீதிமன்றங்களில் ஆஜரா கச் சொல்லி அழைப்பாணைகள் அனுப்புவதென்பது வழக்கமான ஒன்றாக மாறிப்போயிருக்கிறது. ஆட்சியதிகாரத்திலிருப்போருக்கு எதிராகச் செய்திகள் அனுப்பிடும் பத்திரிகையாளர்களுக்கு எதிராக தேசத் துரோக வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. ஸ்ரீநகரில் ஃபகத் ஷா வழக்கிலும், உத்தரப்பிரதே சத்தில் சித்திக் கப்பான் வழக்கிலும் பத்திரிகையாளர்களுக்கு எதிராக சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டம் என்னும் கொடுங்கோன்மை சட்டம் பாய்ந்திருக்கிறது. இவர்கள் இன்னமும் இந்தத் தடைச் சட்டத்தின் கீழ் சிறையில் இருந்து வருகிறார்கள்.
முடக்கும் நடவடிக்கைகள், கும்பல் தாக்குதல்கள்
மதவெறிபிடித்த குண்டர் கும்பல்களால், குறிப்பாக பாஜக ஆளும் மாநிலங்களில், ஊடகவியலாளர்கள் மீது நேரடியாகவே தாக்குதல்கள் தொடுக்கப்படுகின்றன. ஆட்சியாளர்களுக்கு அடிபணியாத ஊடக நிறு வனங்கள், அரசாங்கத்தின் பல்வேறு துறையினராலும் பொருளாதா ரக் குற்றங்களுடன் சம்பந்தப்படுத்தப்பட்டு, குறிவைத்துத் தாக்கப் படுகின்றன. இத்தகைய நிறுவனங்களைத் துன்புறுத்திட, வருமான வரித்துறை, அமலாக்கத் துறை மற்றும் இதர ஸ்தாபனங்கள் தங்க ளின் அதிகாரங்களை ஏவுகின்றன. இவ்வாறு அரசாங்கத்தின் கட்டுப் பாடும், தணிக்கையும் ஊடகங்களின் அனைத்துப் பிரிவுகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. புதிதாக சமூகவலைத் தளங்கள் அதிகரித்துள்ளதை அடுத்து, அவற்றையும் கட்டுப்படுத்தக்கூடிய விதத்தில் 2021இல் தகவல் தொழில் நுட்பச் சட்டத்தின்கீழ் புதிய விதிகள் கொண்டுவரப்பட்டன. இந்த விதிகளின் கீழ் அரசாங்கம் எந்த செய்தியையும் ஆட்சேபகரமானது எனக்கூறி நீக்குவதற்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இவை எல்லாவற்றிற்கும் மேலாக, எந்த செய்தி அலைவரிசையையும் ஒரு குறிப்பிட்ட காலத்திற் கோ அல்லது நிரந்தரமாகவோ தடை விதிப்பதன்மூலம் அவற்றை முடக்கு வதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன.
அரசைத் துதிபாடுதல், மதவெறிப் பிரச்சாரம்
ஊடகங்களின் சுதந்திரமும், நேர்மையும் ஊடக உடைமையாளர்க ளால் இயற்கையாகவே சமரசத்திற்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றன. இன்றையதினம் உள்ள ஊடகங்களில் பெரும்பாலானவை பெரும் கார்ப்பரேட்டுகள் அல்லது வர்த்தக நலன்களை உயர்த்திப்பிடிப்போ ருக்குச் சொந்தமானவைகளாகும். ஒருசில விதிவிலக்குகள் தவிர, எலக்ட்ரானிக் மீடியாக்கள் அனைத்துமே, மோடி அரசாங்கத்தை வானளாவப் புகழ்ந்துகொண்டிருக்கின்றன. இவற்றில் சில மிகவும் மோசமான முறையில் இந்துத்துவா மதவெறிப் பிரச்சாரத்திலும் ஈடுபடத் தொடங்கியிருக்கின்றன. நாட்டிலுள்ள பிரதான ஊடகங்களே இவ்வாறு மாறியிருப்பது, நாட்டில் எந்த அளவிற்கு கார்ப்பரேட்-இந்துத்துவா பிணைப்பு இருக்கிறது என்ப தைப் பிரதிபலிக்கிறது. இது வெகுமக்கள் ஊடகங்கள் மீது, மிகவும் மோசமான அளவிற்குத் தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. இது ஜனநாயகத்தில் ஊடகங்களின் பங்கு மிகவும் கேலிக் கூத்தானமுறையில் மாறியிருப்பதையே காட்டுகிறது. ஆட்சியாளர்களுக்குத் துதி பாடுவதோடு மட்டுமின்றி, ஊடகங்களில் கணிசமானவை ஆட்சியாளர்களின் மதவெறிப் பிரச்சாரத்தை முன்னெ டுத்துச் செல்பவைகளாகவும் மாறியிருக்கின்றன. இதற்கு, தில்லி, ஜஹாங்கீர்புரியில் முஸ்லீம்கள் வாழ்ந்துவந்த பகுதிகள் புல்டோசர் கொண்டு தரைமட்டமாக்கப்படும் செய்தியானது சில இந்தி நிருபர்க ளால் எப்படி சித்தரிக்கப்பட்டது என்பதைப் பார்த்தோம். மேலும், இது போன்ற சமயங்களில் மிகவும் நியாயமாகவும், நேர்மையாகவும் நடந்து கொள்ள முயற்சித்த ஊடகவியலாளர்களுக்கும், அந்நிறுவனங்களுக்கும் எதிராக எந்த அளவிற்கு ஆட்சியாளர்களின் தாக்குதல்கள் ஏவப்பட்டன என்பதையும் பார்த்தோம்.
வரையறுக்கப்பட்டிருக்கும் நீதித்துறையின் தலையீடு
ஊடகங்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான ஒரே வழி, நீதித்துறையின் தலையீடுதான். இப்போது அதுவும்கூட வரையறுக்கப் பட்டிருக்கிறது. ஒருசில வழக்குகளில் மட்டும் தேசத்துரோகக் குற்றப் பிரிவுகள் சுமத்தப்பட்ட பத்திரிகையாளர்களுக்கு நீதிமன்றங்களால் நிவார ணம் அளிக்கப்பட்டிருக்கிற போதிலும், உயர்நீதிமன்றங்களும் உச்ச நீதிமன்றமும் இவ்வாறு சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச்சட்டம் பத்திரி கையாளர்கள்மீது அப்பட்டமாகத் துஷ்பிரயோகம் செய்யப்படுவதைத் தடுத்திடும் விதத்திலோ அல்லது ஊடகங்களின் உள்ளடக்கங்கள் மீது அரசாங்கம் தலையிடுவதைத் தடுத்திடும் விதத்திலோ தலையிட முன்வரவில்லை. அனைத்து ஜனநாயக சக்திகளாலும் பத்திரிகைச் சுதந்திரத்தின் மீதான ஒவ்வொரு தாக்குதலும் எதிர்க்கப்பட்டு, தடுத்து நிறுத்தப்படவேண்டும்.
மே 5, 2022, தமிழில்: ச.வீரமணி