கிறிஸ்துமஸ் சமயத்தில் குளிர் காய அமைக்கப்பட்டிருந்த கனல் அடுப்பில் இருந்து வந்த புகை அமெரிக்க விஞ்ஞானிகள் குழு ஒன்றை பழைய நெகிழியைப் பயன்படுத்தி புதிய சோப்பை உருவாக்க உதவியுள்ளது. விஞ்ஞானிகள் பாலி எத்திலீனை கொழுப்பு அமிலமாக மாற்றினர். இந்த அமிலங்களே சோப்பின் ஆதார மூலம். என்றாலும் இது பிளாஸ்டிக்கை ஒழிக்க ஒரே தீர்வாக அமையாது என்று அவர்கள் கூறுகின்றனர். பழைய பிளாஸ்டிக்கிற்கு புதிய வாழ்வு இந்த கண்டுபிடிப்பின் மூலம் விஞ்ஞானிகள் பழைய பிளாஸ்டிக்கிற்கு புதிய வாழ்வை அளித்துள்ளனர். பிளாஸ்டிக்குகள் வேதியல் ரீதியாக கொழுப்பு அமிலங்கள் போன்ற அமைப்பை உடையவை. இந்த அமிலங்களே சோப்புகள் தயாரிக்க பயன்படும் முக்கிய மூலப்பொருட்கள். இந்த ஒற்றுமை பாலி எத்திலீனை கொழுப்பு அமிலங்களாக மாற்றலாம் என்ற எண்ணத்தை விஞ்ஞானிகளுக்கு ஏற்படுத்தியது.
சோப்பாக மாறிய அமிலங்கள்
பிறகு இவை சோப்பாக மாற்றப்பட்டன என்று வெர்ஜீனியா தொழில்நுட்பக் கழகத்தின் வேதியியல் இணைப் பேராசிரியர் மற்றும் சயின்ஸ் (Science) ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ள இது பற்றிய ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர் ஜுயோலியாங் லியு (Guoliang Liu) கூறுகிறார். மூலக்கூறுகளின் அளவு இந்த செயல்முறையில் நெகிழி மூலக்கூறுகளின் அளவு ஒரு சவாலாக இருந்தது. பிளாஸ்டிக் மூலக்கூறுகள் பொதுவாக நீளமானவை. ஒரு மூலக்கூறு 3,000 கார்பன் அணுக்களின் நீளத்திற்கு சமமானது. ஆனால் கொழுப்பு அமிலங்களின் மூலக்கூறுகள் சிறியவை. இதற்கான தீர்வு லியூவிற்கு தற்செயலாகக் கிடைத்தது. புகை கொடுத்த தீர்வு “அன்று கிறிஸ்துமஸ். கனல் எரியும் இடத்தைப் பார்த்துக்கொண்டிருந்தபோது மரக்கட்டைகள் எரிந்து புகை உருவானது. மரத்தின் மிகச்சிறிய துகள்கள் அதில் இருந்தன. இதே முறையில் பிளாஸ்டிக்குகளும் செயல்படுமா என்ற யோசனை ஏற்பட்டது” என்று லியு கூறுகிறார். எரியும் தன்மையுடைய மரங்களில் செல்லுலோஸ் போன்ற பாலிமர்கள் உள்ளன.
பிளாஸ்டிக்கில் இருந்து கொழுப்பு அமிலம்
மரத்துண்டுகளின் உள் எரி ஆற்றல் பாலிமர்களை சிறிய சங்கிலிகள் உள்ள பொருட்களாக மாற்றுகிறது. பிறகு முழு ஆக்சிகரணம் அடைந்து கார்பன் டை ஆக்சைடாக இவை மாறும் முன் பாலி எத்திலீனில் உள்ளது போன்ற சிறிய வாயு மூலக்கூறுகளாக மாறுகின்றன. உடையும் பிளாஸ்டிக் கழிவுகள் இதேபோல பிளாஸ்டிக்கில் உள்ள பெரிய பாலி எத்திலீன் மூலக்கூறுகளை அவை முழுமையாக எரிந்து சிறிய கார்பன் டை ஆக்சைடு மூலக்கூறுகளாக உடைவதற்கு முன்பு அந்த வேதிவினையை முழுமையடையாமல் தடுத்து நிறுத்தினால் அவற்றை சிறிய சங்கிலிகளைக் கொண்ட கொழுப்பு அமிலங்களாக மாற்றமுடியும். உலையில் எரியும் பிளாஸ்டிக் பிளாஸ்டிக்குகளை பாதுகாப்புடன் எரிப்பதற்காக லியு குழுவினர் நுண்ணலை அடுப்பு போன்ற உலையை தயாரித்துள்ளனர். உலையின் அடிப்பகுதியில் நிலவும் வெப்பநிலை பாலிமர் சங்கிலியை உடைக்கப் போதுமானது. உலையின் மேற்பகுதி மூலக்கூறுகள் முழுமையாக உடையாமல் இருக்கப் போதுமான குளிர்ந்த, குறைந்த வெப்பநிலையைப் பெற்றிருக்கும். வினை முடிந்தவுடன் கிடைத்த பொருளை விஞ்ஞானிகள் ஆராய்ந்தனர். அது மெழுகின் ஒரு வகையான பாலி எத்திலீனின் சிறிய சங்கிலித்தொடர் என்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். இந்த மெழுகு பிறகு சோப்பாக மாற்றப்பட்டது. உலகில் பிளாஸ்டிக் கழிவில் இருந்து சோப்பு தயாரிக்கப்படுவது இதுவே முதல்முறை. இதன் நிறம் தனிச்சிறப்புடையதாக உள்ளது. என்றாலும் இது மற்ற சாதாரண சோப்புகள் போலவே செயல்படுகிறது.
முக்கிய பிளாஸ்டிக் கழிவுகளில் இருந்து சோப்பு
இந்த முறையில் பாலி எத்திலீன் மற்றும் பாலி புரொப்பலீன் ஆகிய இரண்டு பொதுவான பிளாஸ்டிக் வகைகளில் இருந்து சோப்பு தயாரிக்கமுடியும் என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த இரண்டு வகைகளுமே உலகில் உள்ள பாதிக்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள். உலகில் ஒவ்வொரு ஆண்டும் இவ்வகைக் கழிவுகள் 200 மில்லியன் டன்கள் அளவிற்கு உருவாகின்றன. கழிவுகள் வளமாக மாறும்போது பூமியில் உருவாகும் பிளாஸ்டிக் கழிவுகளில் 80% குப்பைக்கிடங்குகளுக்குச் செல்கின்றன. 10 சதவிகிதத்திற்கும் குறைவானவையே மறுசுழற்சி செய்யப்படுகின்றன. இந்த வகை பிளாஸ்டிக்குகளை வேறு எந்த வழியிலும் மறுசுழற்சி செய்யமுடியாது என்பதால் இக்கழிவுகளின் பயனுள்ள வாழ்வின் முடிவாக (End-of-life) இந்த முறை அமைந்துள்ளது. இது சோப்பு தயாரிக்கும் இம்முறையின் தனிச்சிறப்பு அம்சமாகக் கருதப்படுகிறது.
இது ஒரு சிறிய தீர்வு மட்டுமே
தொழில்ரீதியாக உற்பத்தி செய்யும்வகையில் இந்தமுறை உருவாக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் மாசு உலகளாவிய சவால். மனிதகுலத்தை அச்சுறுத்தும் பெரும் பிரச்சனை. இந்த புதிய முறை பிளாஸ்டிக் கழிவிற்கான ஒரு சிறிய தீர்வு மட்டுமே. ஆய்வுப்பிரிவுகளுக்கும் தொழிற்துறையினருக்கும் இடையில் பயனுள்ள பிளாஸ்டிக்குகள் தயாரிப்பு பற்றிய ஒருங்கிணைந்த செயல்பாடு இன்றைய அவசரத்தேவை. பிளாஸ்டிக்குகளின் பயன்பாட்டை முடிந்த வரை குறைப்பது மிகச்சிறந்தது. பழைய பிளாஸ்டிக்கில் இருந்து புதிய சோப்பு தயாரிப்பது பற்றிய இந்த கண்டுபிடிப்பு இப்பொருட்களின் மறு பயன்பாட்டில் ஒரு புதிய திருப்பமாக அமையும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.