articles

நாமம் போடும் நமோ!

மறந்து கொண்டிருப்பது மக்களின் வியாதி
நினைவு படுத்துவதே நெஞ்சுக்கு நீதி
வருடா வருடம் இருகோடி வேலைஎன
புரூடா விட்டார்கள் புளுகை விற்றார்கள்
இருமடங்காய் உழவர்க்கு 
வருமானம் மாறுமென்றார்
பதினைந்து லட்சம் 
கணக்கிலே ஏறுமென்றார்

ராமர் கோயிலைக் காட்டிக் காட்டிப்
பட்டை நாமம் போடுகிறார்
நாமக் கட்டி செய்யும் ஆலை
நாசிக்கிலே தொடங்குகிறார்

ஐம்பத்து ஆறு இஞ்ச் - நல்ல
வாட்டமாய் இருக்கிறது
கைம்பெண்போல் நாடுமிக
வாட்டமாய் இருக்கிறது
 
அணிலின் முதுகாய் நம் 
நெற்றியை மாற்றினார்
அழகாய் மூன்று 
கோட்டினைத் தீட்டினார்
 
சமையல்எரி வாயுவினால் அடுப்பு எரிகிறது
அதற்குவிலை கேட்டாலோ அடிவயிறு எரிகிறது
கடற்காற்றை கேஸாக  மாற்ற வேண்டும் – நம்
கண்ணீரை டீசலாய்   ஆக்க வேண்டும்

கோமியத்தைப் பெட்ரோலாய் மாற்ற வேண்டும் – இந்தக்
காரியத்தைச் செய்யஒரு ஐன்ஸ்டீன் வேண்டும்
வானகத்து விண்மீனை வசந்தத்துப் பூக்களினை
கானகத்து மானினத்தைக் கானப் பறவைகளை

ஆர்ப்பரிக்கும் கடலை இன்றே பார்த்து ரசியுங்கள்
கார்ப்பரேட்டார் அதற்கும் கட்டணம் விதிக்குமுன்னே
தீட்டுகிறார் விதவிதமாய் நாமம் - அட
காட்டுகிறோம் நெற்றியினை நாமும்!

- வல்லம் தாஜுபால்